நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI.. SONG # 13.....திருவெம்பாவை.... பாடல் # 13


பாடல் # 13

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

இந்தப் பாடலில், நீராடும் பொய்கையையே உமையாகவும் சிவனாகவும் உருவகப்படுத்திக் கூறுகிறார் அடிகள்.

'பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்===' கரிய குவளை மலர்களாலும், செந்தாமரை மலர்களாலும் பொய்கை நிரம்பி இருக்கிறது. இது உமையம்மையின் சியாமள நிறத்தையும், சிவ னின் சிவந்த நிறத்தையும் குறிக்கிறது..குவளை மலர்கள் அம்மையின்  திருவிழிகளையும், தாமரை மலர் சிவனின் திருவிழிகளையும் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

'அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்'======= பொய்கையில்  ஆங்காங்கு நாரை முதலான நீர்ப்பறவைகள் சத்தமிடுகின்றன...  நீராடுவோர், நீராடும் போது ஏற்படும் ஒலி, அவர்கள் அணிந்துள்ள ஆபரணங்கள் ஏற்படுத்தும் ஒலி, ஐந்தெழுத்தை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலி இவ்வாறாக, மேலும் மேலும் எழும்பும் ஒலியலைகளாலும் நிரம்பி இருக்கின்றது பொய்கை .

இதையே  'அங்கு அங்கு உருகும் இனத்தால்'  என்று விரித்து, பொய்கையில் , ஆங்காங்கே பக்தி  மேலிட உருகி நிற்கும் தொண்டரினத்தால் என்றும் பொருள் கொள்ளலாம்..

'குருகு' என்பது உமையம்மையின் 'வளையலை'யும் குறிக்கும். 'பின்னும் அரவத்தால்' என்பதை, பெருமானின் திருமேனியெங்கும் ஆபரணமாக ஊர்ந்து விளையாடும் நாகங்களையும் குறிக்கும்.

'தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்'===மலம் என்பது இவ்விடத்தில்  'அழுக்கு' எனப் பொருள்படும்.. தங்கள் அழுக்குகளை நீக்கிக் கொள்ள குளத்தில் மூழ்குதற்காக வந்து சேர்கிறார்கள் மானிடர்கள்.

மும்மலங்களாகிய, 'ஆணவம், கன்மம், மாயை' ஆகியவற்றை நீக்குதற் பொருட்டு, அம்மையப்பனின் இணையடி சேர்பவர்களையும் இது குறிக்கிறது.. சிவபெருமானின் எட்டு வீரச்செயல்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படும் 'திரிபுர சம்ஹார'த்தின் தத்துவ விளக்கம் இதுவே!!.

'எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த' இவ்வாறான ஒற்றுமைகளினால், குளமானது, அம்மையைப்பனை ஒத்திருக்கிறது.

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்

ஊற்றிலிருந்து பொங்கும் நீரானது, மேலும் மேலும் அலையலையாய்  எழும்பி வரும் மடுவில், நாம் மூழ்கி, நம் சங்கு வளையல்களும், சிலம்பும் சேர்ந்து ஒலிக்கும் படியாக,

'கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.'=== இறைவனது நினைவால் நம் மார்புகள் பூரித்து விம்ம, பொங்கி வரும் நீரையும் தாமரை மலர்களையும் உடைய இந்தப் பொய்கையில் நாம் மூழ்கி நீராடுவோமாக.

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்!!.. பிரபஞ்ச இயக்கம் இறைவனாரின் திருக்கூத்து.. இறைவனும் இறைவியுமாக, இந்தக் கூத்தில் பங்காற்றுகிறார்கள்..
 
கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.(திருமந்திரம்)

ஆகவே, அம்மையையும் அப்பனையும் சேர்ந்தே துதிக்கின்றனர் பாவை மகளிர்.

இப்பாடலும் யோகநெறிகளுள் சிலவற்றைத் தன்னகத்தே மறைபொருளாகக் கொண்டிருக்கிறது..

'பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்' என்றது ஆழ்ந்த தியான நிலையில் ஈடுபடுதலைக் குறித்தது. இவ்வாறு ஈடுபட்டு, சிவனருளால் மும்மலங்கள் நீங்கப் பெறுதல் வேண்டும்.

'வளை' என்பது முன் சொன்ன பாடலில் சொன்னது போல் உடல் உணர்வையும், 'அரவம்' குண்டலினி சக்தியையும் குறிக்கிறது..குண்டலினி,ஒவ்வொரு சக்கரத்தை அடையும் போதும் ஒவ்வொரு வித ஒலி கேட்கும்...

'கொங்கைகள்' என்று குறித்தது, மார்பில்  இருக்கும் 'அநாஹத'. சக்கரத்தை.

அநாஹத மையம், அன்பு, இரக்கம், படைப்பாற்றல்,சேவை மனப்பான்மை போன்ற நேர்மறை எண்ணங்களின் ஆதாரச்சக்கரமாகும். இந்தச் சக்கரம் தூண்டப்படும் போது, நம் எண்ணங்கள் நம் கைக்குள் வந்து, அன்பு, இரக்கம் போன்ற நேர்மறை உணர்வுகள் வலுப்பெறும். புலனடக்கம் சித்தியாகும். ஆன்மீக வளர்ச்சிக்கு இந்தச் சக்கரமே அடிப்படை.  அந்நிலையை எட்டும் பொழுது, பார்க்குமொரு இடமெங்கும் பரமனையே காணுதல் இயல்பு..அத்தகைய பக்தியின் மிகுதியால், நீராடும் பொய்கையையும் சிவசக்தி ஸ்வரூபமாகவே காண்கின்றனர் மகளிர்.

இந்தச் சக்கரத்தில் எந்நேரமும் கடல‌லைகளின் பெருமுழக்கம் போன்ற ஒலி கேட்பதாகவும் " ஓம் " எனும் ஓங்காரமே அவ்வாறு ஒலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. 'பின்னும் அரவம்' என்றும், 'பொங்குதல்' என்றும் அலையலையாகப் பொங்கும் இந்த ஒலியே இங்கு குறிக்கப்படுகின்றது.

அநாஹதத்திற்கு குண்டலினி வந்து விட்டால், அதற்கு மேல் கீழிறக்கமில்லை.  அநாஹதத்தை, முறையான பயிற்சியின் மூலம் அடைந்துவிட்டால், சாதகனின் செயல்கள், விதி கர்மம் இவற்றின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட நிலையை அடையும்.

அநாஹதச் சக்கரத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, இங்கு சொடுக்கவும்!!

பங்கயமாகிய சஹஸ்ராரத் தாமரையில் குண்டலினி சேரும் போது, சிவசக்தி ஐக்கிய நிலையைத் தரிசிக்கும் பேறு கிட்டும்.

சஹஸ்ராரத் தாமரையிலிருந்து பொழியும் அம்ருத தாரையே 'பங்கயப் பூம்புனல்'.

அநாஹத நிலையை அடைந்த சாதகர்கள், மேன்மேலும் முயற்சித்து, சஹஸ்ராரத் தாமரையை அடையவேண்டுமென்பதையே 'பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர்' என்றருளினார்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!..

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

2 கருத்துகள்:

  1. அன்புள்ள ல்லிதாவிற்கு,என்ன சொல்வது எப்படிச் சொல்வது எனத்திகைக்கிறேன்.தொடர்ந்து உன் கருத்துகள் பரவட்டும்.அன் பு நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..