அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்!
ஸ்ரீலக்ஷ்மி புராணம்:
இதை குருவார விரத பூஜை நிறைவுற்றதும் படிக்க வேண்டும். குருவார விரத பூஜை பற்றிய தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்..
ஸ்ரீலக்ஷ்மி புராணத்தை இயற்றியவர், ஸ்ரீபலராம தாஸர். இவர் ஒரிய மொழி இலக்கியத்தின் தன்னிகரற்ற பெரும் கவிஞர்.
இந்தப் புராணம், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உயரிய நெறியை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. ஒரிசாவில் இருக்கும் பூரி ஜகந்நாதர் ஆலயத்தோடு தொடர்புடையதாகவும் அமைந்துள்ளது. தெய்வங்கள், மானிடர்களைப் போல் லீலைகள் புரிவது எல்லாம், நமக்கு நல்வழி காட்டவே அல்லவா!!.. இந்த பேருண்மையை உணர்த்தும் விதமாக, ஸ்ரீஜகந்நாதராகிய கிருஷ்ண பரமாத்மா நடத்தியதொரு லீலையே இந்தப் புராணம். இது, ஸ்ரீலக்ஷ்மி தேவியின் கருணையை விளக்குவதாக அமைந்திருப்பதால், ஸ்ரீலக்ஷ்மி புராணம் என்றே வழங்கப்படுகின்றது.
ஸ்ரீலக்ஷ்மி புராணத்தின் சாரத்தை இங்கு தந்திருக்கிறேன். பூஜையின் நிறைவில் இதைக் கட்டாயம் பாராயணம் செய்ய வேண்டும்.
நாரத முனிவரும், பராசர முனிவரும், ஒரு நாள் இணைந்து தேச சஞ்சாரம் மேற்கொண்டனர். அப்போது இருவரும் ஒரு கிராமத்தின் வழியாக வருகையில், அங்கு அனைவரும் எவ்வித பேதமும் இன்றி இணைந்து, ஸ்ரீலக்ஷ்மி தேவியைத் துதித்து பூஜைகள் செய்வதைப் பார்த்தனர்.
அப்போது நாரதர், பராசரரிடம், 'இன்று என்ன விசேஷம்?' என்று வினவ, 'இன்று (வட இந்தியர்களின்) மார்கழி மாத குரு வார லக்ஷ்மி விரதம்' இது என்று கூறி விட்டு, இந்த விரதம் தோன்றியதைப் பற்றி விவரித்துக் கூற ஆரம்பித்தார்.
ஒரு நாள் லக்ஷ்மி தேவி, ஜகந்நாதரிடம், 'இன்று என் விரத தினமானதால் (அன்று வியாழக்கிழமை, வட இந்தியர்களுக்கு, வியாழக்கிழமையே, ஸ்ரீலக்ஷ்மி பூஜைக்கு உகந்த தினம்), தேச சஞ்சாரம் செய்து விட்டு வருகிறேன்!' என்று அனுமதி கேட்டாள். ஸ்ரீலக்ஷ்மி தேவியின் மூலமாக ஒரு லீலையை நடத்தத் திட்டமிட்டிருந்த பெருமாளும் அதற்கு அனுமதித்தார். அதன் பின், ஒரு முதிய சுமங்கலி உருவத்தில், தேவி, தேச சஞ்சாரம் செய்யத் துவங்கினாள். முதலில் ஒரு வணிகரின் வீட்டுக்குச் சென்றாள். அங்கு விரதத்திற்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. அதைக் கண்ட தேவி, அந்த வணிகரின் மனைவியிடம், விரதம் மேற்கொள்ளும் முறைகளை உபதேசித்து, அவ்வாறு விரதமிருப்போருக்கு அஷ்ட ஐச்வரியங்களும் கிடைக்கும் என்று அருளினாள்.
மேலும், விரதம் இருக்கும் காலத்தில், மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் (வீட்டையும் சுற்றுப் புறங்களையும் சுத்தமாக வைக்க வேண்டும். சமையல் பாத்திரங்களை சுத்தமாகத் தேய்த்துக் கழுவ வேண்டும், படுக்கையை நேராக மடித்து வைக்க வேண்டும், கணவனிடம் பிரியமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும், வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்கக் கூடாது என்பன போன்ற விதிமுறைகள்).
அதன் பின், லக்ஷ்மி தேவி,தாழ்த்தப்பட்ட இனம் என்று அந்தக் காலத்தில் அறியப்பட்ட ஒரு இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் இல்லத்திற்குச் சென்றாள். ஸ்ரியா என்ற பெயருடைய அந்தப் பெண், அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாள். தன் பக்தியின் சக்தியால், ஸ்ரீலக்ஷ்மி தேவியை அடையாளம் கண்டு கொண்ட அந்தப் பெண், தேவியை இன்முகத்துடன் வரவேற்று, தன் பூஜையை ஏற்றுக் கொள்ள வேண்டினாள்.
மனமகிழ்ந்த லக்ஷ்மி தேவி, அவள் கோரிய வரங்களை அளித்து, அவள் அன்போடு அளித்த நிவேதனங்களையும் ஏற்றுக் கொண்டாள்.
இதை அறிந்த, லக்ஷ்மி தேவியின் மைத்துனர் பலராமர், மிகக் கடுமையான கோபம் கொண்டார், அவர், ஜகந்நாதரிடம், ' உன் மனைவி, எப்படி அவர்களின் இல்லத்திற்குச் சென்று உணவு ஏற்கலாம்?' என்று கடிந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட ஸ்ரீஜகந்நாதர், லக்ஷ்மி தேவியை, இல்லத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கவில்லை. மன வேதனையடைந்த லக்ஷ்மி தேவி, தன் தந்தையின்(வருணன்) இல்லத்திற்குச் சென்றாள். செல்லும் முன்பு, ஸ்ரீஜகந்நாதரும், பலராமரும் உண்ண உணவும், நீரும் இல்லாமல், பன்னிரண்டு ஆண்டுகள் துன்புறுவார்கள் என்று சாபமிட்டு விட்டுச் சென்றாள். அதன்படி, லக்ஷ்மி தேவி விலகியதும், ஜகந்நாதரும், பலராமரும், மிகவும் துன்பங்கள் அனுபவித்தனர். அதன் பின், லக்ஷ்மி தேவியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பிரார்த்தனை செய்தனர். அதன் பலனாக, ஸ்ரீலக்ஷ்மி தேவி, அவர்களை மன்னித்து, தம் இல்லம் சேர்ந்தார்.
இந்தப் புராணத்தைப் படித்தாலும் கேட்டாலும், பாவங்கள் அனைத்தும் நீங்கும். வெற்றிகள் குவியும். கோடிக்கணக்கான பசுக்களைத் தானம் செய்த பலன் கிட்டும். தொடர்ந்து இந்தப் புராணத்தைப் பாராயணம் செய்பவர்கள், திருமகள் அருளால் முக்தியை அடைவார்கள்.
இவ்வாறு, பராசரர், நாரதருக்கு எடுத்துரைத்தார்.
ஸ்ரீலக்ஷ்மி தேவியைப் பூஜித்து, வேண்டும் வரங்களைப் பெற்று,
வெற்றி பெறுவோம்!!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.