நட்பாகத் தொடர்பவர்கள்

பிடித்த பத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிடித்த பத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 மே, 2014

EN MUTHAL MINNOOL..என் முதல் மின்னூல்!!!

அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!..

இறையருளாலும், பெரியோர்களின் ஆசியாலும், நான் எழுதிய 'மாணிக்கவாசகப் பெருமான் அருளிய ‍பிடித்த பத்து‍‍-- பொருளுரை',  மின்னூல் வடிவம் பெற்று விட்டது. அது குறித்த தகவல்களை கீழே கொடுத்திருக்கிறேன்.. அன்பர்கள் மின்னூலினை தரவிறக்கி, படிக்க வேண்டுமாய், மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..


வெள்ளி, 7 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU.. SONG # 10...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'.. பதிகம் # 10.


பதிகம் # 10.

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்
தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 


பொருள்:

"புன்மையான, நிலையற்ற, மாமிசத்தால் ஆன இந்த உடல், புளகாங்கிதம் எய்தி, பொன்னாலாகிய கோயிலே

வியாழன், 6 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU...SONG # 9... மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 9.


பதிகம் # 9

பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
குழந்தையின் பசி வேளை அறிந்து, காலம் தவறாது பாலூட்டும் தாயை விடவும்


புதன், 5 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU.....SONG # 8...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'...பதிகம் # 8.

Courtesy: Google Images

பதிகம் # 8

அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே சிவபெரு மானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
தந்தையே!...தேவர்களாயும் தேவலோகமாயும் நின்ற முதற்பொருளே!..காலம், இடம் முதலிய எதன் பொருட்டும் முடிவில்லா ஞானவடிவே!,

செவ்வாய், 4 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU... SONG # 7....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 7


பதிகம் # 7

பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
பாசத்தின் வேரை அகற்றுகின்ற, பழமையான முதற்பொருளாகிய தன்னை (சிவனை) அடையும் வழியை அடியேனுக்கு

திங்கள், 3 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU....SONG # 6.....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 6.


பதிகம் # 6.

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்
டளவிலா ஆனந்த மருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட
பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன்
செல்வமே சிவபெரு மானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
ஆதரவில்லாத அடியேனுடைய மனதையே கோயிலாகக் கொண்டு, அளவில்லாத ஆனந்தமாகிய பேரானந்த நிலையை அருளி,

ஞாயிறு, 2 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU..SONG # 5...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'.... பதிகம் # 5.

பதிகம் # 5.

ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொருள்:

தனக்கு ஒருவரும் நிகரில்லாத ஒரே பரம்பொருளே!, அடியேனது உள்ளத்துள் ஒளிர்கின்ற பேரொளிமயமானவனே!...உண்மையான  உயர்ந்த நிலையை அறியாத, பெருமையேதும் இல்லாத எனக்கு உயரிய பேரானந்த வாழ்வளித்த அன்பின் திருவுருவே!, சொல்லால் விளக்குதற்கு அரிய, செழுமையான சுடர்  வடிவினனே!!, அடியார்களின் செல்வமான சிவபிரானே!, இளைத்த இடத்து, உன்னைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன்!.. இனி நீ எழுந்தருளும் இடம் வேறெது?!..

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்...

இறைவன் தனக்குவமையில்லாதான்..ஆகவே 'ஒப்பு உனக்கு இல்லா' என்றார்..

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
 மனக்கவலை மாற்ற லரிது"
- திருக்குறள்,

ஒரே பரம்பொருளான இறைவன் சிவபிரானே.. ஆகையினால் 'ஒருவனே' என்று போற்றுகிறார்!...

ஒருவன் என்னும் ஒருவன் காண்க (திருஅண்டப் பகுதி)

உள்ளன்போடு, இறைவனைத் துதிப்போர் உள்ளமே இறைவன் விரும்பி எழுந்தருளும் திருக்கோயில்..

இறைவனோ தொண்டர்தம் உள்ளத் தொடுக்கம் என்றார் ஔவை..

பரந்து பல் ஆய் மலர் இட்டு, முட்டாது, அடியே இறைஞ்சி,
`இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்' என்னும், அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே! நின் தன் வார் கழற்கு அன்பு, எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே.(திருச்சதகம்)

மெய்யடியார்கள், தங்கள் மனதில் பேரொளி மயமான இறைவனது தரிசனத்தை விடாமல் காண்கின்றனர். ஆதலால், 'உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே' என்றார்..

புகழுக்கும் பெருமைக்கும் உரியவன் இறைவன் ஒருவனே!.. ஆகையால் , தம்மை 'வீறு இலியேற்கு' என்றார்.. மானிடராய்ப் பிறந்தவர் உயரிய சிவபதம் அறிவது இயலாததால் 'மெய்ப்பதம் அறியா' என்றார்.

அவ்விதம் உயரிய நிலை அறியாத போழ்தும், இறைவன் தம் பேரன்பினால், அந்த மேன்மையான பதத்தை அளித்து அருள் செய்த பான்மையினை, ''விழுமிய தளித்ததோ ரன்பே' என்றார்..

இங்கு 'ஓர் அன்பே' என்ற பதம் மிகுந்த பொருளாழமுடையது. இவ்வுலகியல் விஷயங்களின் பால் நாம் கொள்கின்ற அன்பு நிலையானதன்று.. அதைப் போல், நம் பால், நம் உற்றார் உறவினர், நண்பர்கள் முதலானவர்கள் வைக்கும் பற்றுதலும், நிலையானதல்ல... உண்மையான அன்பு என்பது, இறைவன் மேல் நாம் வைக்கும் அன்பும், நமக்கு அன்னையும் தந்தையும் ஆகிய இறைவன் நம் பால் எப்போதும் சுரக்கின்ற பேரன்புமே... 

அந்தப் பேரன்பின் காரணமாகவே, இறைவன் பெருமையேதும் இல்லாத தனக்கு மேலான பதமளித்தமையால், 'ஓர் அன்பே' என்றார்.

இறைவன், அக இருளை நீக்கும் ஞானமாகிய சுடர் வடிவினன்..ஞானமே செழுமையானது..ஆகவே, 'செழுஞ்சுடர் மூர்த்தி' என்றார்....

பாரும் விசும்பும் அறிய வெனைப்
        பயந்த தாயும் தந்தையும் நீ
    ஓரும் போதிங் கெனி லெளியேன்
        ஓயாத் துயருற்றிட னன்றோ
    யாருங் காண வுனை வாதுக்
        கிழுப்பே னன்றியென் செய்கேன்
    சேரும் தணிகை மலை மருந்தே
        தேனே ஞானச் செழுஞ்சுடரே. (செழுஞ்சுடர் மாலை).

என்று வள்ளலார் பெருமான் பாடியருளியதை இங்கு ஒப்பு நோக்கலாம்....

'எய்ப்பிடத்து' என்பது இளைத்த இடத்தில் என்று பொருள்படும்..இளைப்பிற்குக் காரணம்..பலப் பல பிறவிகள் எடுத்தது..

'எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்' என்று சிவபுராணத்தில் வாதவூரார் அருளியிருப்பதை இங்கு பொருத்தி உணரலாம்..

முடிவற்ற பிறப்பிறப்புச் சுழலில் சிக்கி, பல பிறவிகள் எடுத்தும், இறைவனருள் கிட்டாமையினால் இளைத்திருக்கும் இத்தருணத்தில்,  'ஏதாகிலும் சரி, உன்னை  நான் இனி விடேன்' என்று இறைவனை உறுதியாகப் பற்றிப் பிடித்ததன் காரணமாக, இறையருளும் அதன் வழியே முத்தி நிலையும் கை கூடப் பெற்றதால், இனி எம்பிரான் தனித்து எழுந்தருளுவது இயலாது என்று உரைத்தார்.

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 1 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU...SONG # 4.....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 4

பதிகம் # 4
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 

பொருள்

இரக்கம், பரிவுடைய சுடர் போன்றவனே!..  பக்குவ நிலையை அடைந்த கனி போன்றவனே!..பெரும் ஆற்றலை உடைய, அருமையான தவத்தினை உடையவர்க்கு அரசனே!..உண்மைப் பொருளை விளக்கும் நூலாக இருப்பவனே, புகழ்ச்சிக்கு அடங்காத, இன்பமாக இருப்பவனே!..யோகத்தின் மூலம் அடையத் தக்க பொலிவானவனே!... தெளிவினை உடைய அடியார்களது சிந்தையில் புகுந்து உறையும் செல்வமானவனே!.. சிவபெருமானே!..இருள் நிறைந்த இந்த உலகத்தில், உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன்.. இனி நீ எங்கு எழுந்தருளுவது?!!

சற்று விரிவாகப் பார்க்கலாம்..

அருளுடைச் சுடரே ---ஒளி தரும் சுடர் வெம்மையையும் தருவது, தீண்டுவோரைச் சுடுவது.. ஆனால் இறைவன் தாயினும் சாலப் பரிந்து அடியாரைப் பேணுதலால், 'இரக்கம் நிறைந்த சுடர்' என்னும் பொருள் வருமாறு, அருள் நிறைந்த சுடர் என்றார்..இதற்கு மற்றொரு பொருளும் கூறலாம்.. இறைவன் பேரொளி வடிவானவன், ஆயினும் அவனிடமிருந்து வெளிப்படும் ஒளியானது அடியார்களைச் சுடுவதில்லை.. தண்மையே தருகிறது.. ஆகையினாலும் இறைவன் அருளுடைச் சுடர்.

அளிந்ததோர் கனியே--நன்கு கனிந்து பக்குவமடைந்த கனி போன்றவன் இறைவன்..காயானது நன்கு பழுத்து கனிந்த பின்னரே சுவை தருவது நாம் காயினை உண்ணுவதை விடவும் கனியினை உண்ணுதலையே விரும்புவோம். இறைவன் அவ்வாறான சுவை மிகுந்த கனி போன்றவன்.. .  

இதற்கு வேறொரு பொருளும் கூறலாம்.. அடியார்கள் பரிபக்குவ நிலையை அடைந்த பின்னரே இறைவன் அவர்களுக்கு அருள் சுரப்பான்.. பரிபக்குவ நிலையை அடைந்த அடியார்களை இறைவன் மிக உயர்ந்த பரிபக்குவ‌(தன் ) நிலைக்கு உயர்த்துதல் எளிது ஆகையால், இறைவனைப் பக்குவமடைந்த, கனிந்த, கனி என்றார்..

பெருந்திறல் அருந்தவர்க் கரசே--தவநெறியின் மேன்மை இங்கு விளக்கப்படுகின்றது.. பேராற்றல் தவத்தினால் கிட்டும்..முனிவர்களது தவ ஆற்றலின் மேன்மை நாம் அறிந்ததே!.. இறைவனை அடையும் பொருட்டு, உயர்வான தவநெறியில் சென்று, மிகக் கடுமையான 'பஞ்ச தவம்' முதலானவைகளைச் செய்யும் அடியார்களுக்கு அருள் மழை பொழிபவன் இறைவன்..   ஆகையால், பெரும் திறன் படைத்த, அருமையான(அரிய, கடினமான) தவ நெறியில் செல்வோரின் அரசரே! என்றார்.

இதை இன்னொரு முறையிலும் விளக்கலாம்... பேராற்றலாவது உள் மனதின் ஆற்றலே ஆகும்.. கடினமான தவநெறியில் செல்வது, மிகுந்த மனோபலமுள்ளவர்களாலேயே இயலும்..அவர்கள் மேற்கொள்ளும் நெறிகள், மேலும் மேலும் அவர்களது உள் ஆற்றலைப் பெருக்கி, தவநெறியின் குறிக்கோளான இறைவனை அடைவிக்கும்..அத்தகைய பேராற்றல் வாய்ந்த தவசீலர்களின் அரசர் என்று இறைவனைப் போற்றுகின்றார் வாதவூரார்.

அருந்தவ மாமுனி வர்க்கரு 
ளாகியோர் ஆலதன்கீழ்
இருந்தற மேபுரி தற்கியல் 
பாகிய தென்னைகொலாங்
குருந்தய லேகுர வம்மர 
வின்னெயி றேற்றரும்பச்
செருந்திசெம் பொன்மல ருந்திரு 
நாகேச் சரத்தானே(சுந்தரர் பெருமான்)

\பொருளுடைக் கலையே---இங்கு பொருள் என்பது மெய்ப்பொருளையே குறிக்கும்.. வெளிப்படையாகப் பார்க்கும் போது, மெய்ப்பொருளை விளக்கும் நூலாக இருப்பவன் இறைவன் என்று பொருள்படுகிறது இது..அதாவது, உயிர்கள் அடைய வேண்டிய, அடையத் தகுந்த மெய்ப்பொருள் இறைவன் ஒருவனே!.. அவனை அடையத் தகுந்த வழியும் அவனருளாலேயே கிட்டும்!.. இன்னும் விரிவாகப் பார்ப்போமானால், அவனே அந்த வழியாகவும் இருக்கிறான்...இதை நுட்பமாக விளக்குவது கடினம்..

வீணான, மற்ற உலகியல் விஷயங்களைத் தவிர்த்து, மெய்ப்பொருளான இறைவனையே சிந்திக்க வேண்டும் என்பதைக் குறிப்பாக இவ்வரி உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே----இறைவனது மகிமையை, புகழை, ஓதி முடித்தல் என்பது இயலாது.. அவனது மகிமைக்கு அளவில்லை.. ஆதலால், 'புகழ்ச்சியைக் கடந்த' என்றார்.. சிற்றின்பமாகிய உலகியல் இன்பங்கள் யாவும் உண்மையில் போகமல்ல. இறைவனோடு கலந்திருத்தலாகிய பேரின்பமே 'போகம்' என்று கொள்ளத் தக்கது.. அதுவே உயிர்களுக்கு எந்நாளும் நன்மை செய்யக் கூடியது.. ஆகவே 'போகமே' என்றார்.

யோக நெறியில் நிற்போர், தங்கள் யோக சாதனைகளின் மூலம் எம்பெருமானை  மகிழ்வித்து, அவரோடு ஒன்றி நிற்றலாகிய முத்தி நிலையைப் பெறுகின்றனர்.. யோகியருக்கே அவர்களது சாதனைகளின் பலன் அனுபவ ரீதியாகப் புலப்படும்...அந்த அனுபவத்தின் வாயிலாக, அகக்காட்சியில் மட்டுமே காணக் கிடைப்பவன் ஆதலால், ' பொலிவே' என்றார். யோகியருக்கு உள்ளூரப் பொலிபவனாக விளங்குபவன் இறைவன்.

தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே---அவ்வாறு யோக நெறியில் நிற்பவரது சித்தம் தெளிவுடையது.. அடைய வேண்டிய பொருள், அதற்குச் செல்ல வேண்டிய மார்க்கம் என அனைத்திலும் தெளிந்த சிந்தனை உடையவர்களாக, தம் சாதனைகளில் ஈடுபடுபவர்கள் யோகிகள்.. ஆகவே, தெளிந்த சிந்தனையுள்ள அவர்களது சிந்தையில் புகுந்து அருளும் செல்வமே என்றார்..

இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. ---இருள் இடம் என்று இங்கு சொல்லப்படுவது, இவ்வுலகமே...  மாயையாகிய இருள் படர்ந்து விளங்குவதால் இவ்வுலகம் இருளின் இடமாக இருக்கிறது.. இருளை அகற்றும் மெய்ஞ்ஞானச் சுடர் இறைவனே!..

 வல்வினையேன் றன்னை. மறைந்திட மூடிய மாய இருளை.
 (சிவபுராணம்)..

தம் அகத்தே மூடிய மாய இருள் நீங்கும் பொருட்டு, தாம் இறைவனை உறுதியாகப் பற்றிப் பிடித்ததால், பெருங்கருணைப் பேராறாகிய இறைவன், முத்தி நிலையை அருளி விட்டான்.. தாம் சிவத்தோடு கலந்து விட்டதால், இனி, எம்பிரான், தனித்து வேறெங்கும் எழுந்தருள இயலாது என்று உரைக்கிறார்.

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

PIDITHTHA PATHTHU.. SONG # 3....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'...பதிகம் # 3.



பதிகம் # 3

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொருள்:
"தாயும் தந்தையும் ஆனவனே!.. நிகரில்லாத மாணிக்கமே!..அன்பாகிய கடலில் விளைந்த ஆரமுதே!..பொய்யான, வீணான செயல்களையே செய்து, வாழ்நாளை பாழாகக் கழிக்கின்ற, புழுக்களை இடமாக உடைய உடலைக் கொண்ட கீழ்மையேனுக்கு, மிக உயர்ந்த சிவபதத்தை அளித்தருளிய, பக்தர்களின் உண்மையான செல்வமாகிய சிவபெருமானே, இப்பிறவியிலேயே, நான் உய்யும் பொருட்டு, உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன்.. இனி நீ எழுந்தருளும் இடம் வேறேது?."

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்..

இறைவனே நமக்கு அன்னையும் தந்தையும்.. நம் பால் வரம்பில்லாத அன்போடு  இருப்பவன் ஆதலினால் இறைவனே அன்னை, தீமையான நெறியிலிருந்து நம்மை விலக்கி, நன்னெறி காட்டுதலால் இறைவனே நமது தந்தை என்கிறார் வள்ளலார் பெருமான்..

     திருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற் 
     குருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும் 
     பொருவில் அன்னையும் போக்கது தந்தையும் 
     தரும வெள்விடைச் சாமிநின் நாமமே(திருவருட்பா)

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ 
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ

என்று,  திருத்தாண்டகத்தில் அப்பர் பெருமான் அருளியிருப்பதையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.

'ஒப்பிலா மணியே' என்பது, 'நிகரில்லா மாணிக்கமே' என்பதாக, இங்கு பொருள் கொள்ளப்படுகின்றது.... 

'மாணிக்கம்' என்கின்ற சொல், எம்பிரானைப் போற்றும் பல பதிகங்களில் பயன்படுத்தப்படுவதால், இது சிறப்பு வாய்ந்ததெனப் புலனாகிறது..

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே என்று சுந்தரர் பெருமானும்,

தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.என்று அப்பர் பெருமானும்,

வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா 
     மாணிக்க மேகருணை மாகடலே ‍ என்று வள்ளலார் பெருமானும் பாடிப்பரவுகின்றார்கள்.

இதற்கு ஒரு அருமையான விளக்கம் கேட்கப் பெற்றேன்..முத்தி நிலையாவது, சிவத்தினுள் கலந்து சிவமாகவே ஆகும் நிலை...மாணிக்கத்தோடு பளிங்கை இணைத்து வைத்தால், வெண்ணிறப் பளிங்கு, மாணிக்கத்தின் சிவந்த நிறத்தைப் பெற்று, அதுவும் மாணிக்கமே என்று சொல்லத் தகுமாறு தோன்றும்... அதைப் போல், சிவத்தினுள் கலந்து சிவமாகவே ஆகும் நிலையை உயிர்கட்கு அருளுதலால், எம்பிரானை 'மாணிக்கம்' என்கிறார்கள்.

அன்பினில் விளைந்தஆ ரமுதே===பாற்கடலைக் கடையும் போது வந்த ஆலகால விஷத்தை உண்டு, உயிர்கட்கு நலமருளியவன் எம்பிரான்..  ஐயனின் அருளால் அன்றோ அமுதம் கிடைத்தது!... பக்தர்கள், எம்பெருமான் மீது கொண்ட கடல் போன்ற பேரன்பில் தோன்றும் அமுதமே சிவம்!..'அமுதம்' இங்கும் முத்தி நிலையைக் குறிக்கும் குறியீடாகவே கொள்ளப்படுகின்றது.

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்====உயிருக்கு நன்மை தருவது, எம்பிரானின் கழலிணைகளை இடையறாது சிந்தித்தலாம்.. அதை விடுத்து, உலகியல் விஷயங்களில் சிந்தனையை உழல விடுவது வீண் காலம் கழித்தலேயாகும்..பிறவியின் நோக்கமே பெருமானை அடைதல் என்றிருக்க, அதற்கு உதவாத செயல்களைச் செய்தல் பொய்ம்மையைப் பெருக்கி, பொழுதைச் சுருக்குதலேயாம்.. இங்கு 'பொழுது' என்பது வாழ்நாளைக் குறிக்கும்.. வீணே காலம் கழித்தலால், நம் வாழ்நாள் சுருங்கி, பெருமானை நினைத்து உய்வு பெறும் கால அவகாசம் குறைகிறது..

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. (அப்பர் பெருமான்)

புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த====இவ்வரிகளின் மூலம், இவ்வுடலின் நிலையாமை புலப்படுத்தப்படுகின்றது... நிலையாத இவ்வுடல் எடுக்கும் பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுவிக்கும் பொருட்டு, எம்பிரான், மிக உயர்ந்த சிவபதம் அருளியமை பகன்றார் வாதவூரார்.

'செல்வமே சிவபெரு மானே'===அடியார்களின் பெருநிதியம் சிவபிரான். ஆகவே 'செல்வமே' என்றார்.

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.== இப்பிறவியிலேயே உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன் என்றருளுகிறார் வாதவூரார்.. இறைவனை அடைய, வேறொரு பிறவி அவசியமில்லை.. இப்பிறவியில், வினைகளால் சூழப்பட்ட இவ்வுடலில் இருப்பதால், இறைவன் அருள மாட்டான் என்பதில்லை..உள்ளன்போடு, உறுதியோடு சிவனை நினைந்தால், கட்டாயம் அவன் கழலிணைகள் அடையலாம். அடியார்கள், தமது பக்தியால் பரமனடி தொழுது வேண்ட, இம்மையிலேயே அவன் கட்டாயம் அருள் செய்வான் என்று திண்ணமாகக் கூறுகிறார்..

இவ்வாறு இறைவன் கழலிணைகளை உறுதியாகப் பற்றிப் பிடிக்க, இறைவன், தன் திருவடிகளைத் தந்து, முத்திநிலை அருளுவான்..சிவத்தோடு கலந்த பின்பு, எம்பிரான் தனியாக எழுந்தருளுவதெங்கே!.. ஆதலினால், 'எங்கெழுந்தருளுவது இனியே?!' என்றார்.

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

PIDITHTHA PATHTHU..SONG # 2....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'..பதிகம் # 2


பதிகம் # 2
விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
இடப வாகனத்தை விடாது மிக விரும்பிய விண்ணவர் அரசே!, வினைகளினால் சூழப்பட்டவனாகிய நான் உணர்ந்த உண்மைப் பொருளே!, அடியேன்,  நாற்றம்  நீங்காத‌,   முழுவதும் புழு நிரம்பிய இவ்வுடற் கூட்டினிலே கிடந்து, முதுமையின் காரணத்தால், மண்ணிலே மறைந்து கீழ்மையடையும் நிலையைத் தாராது, எம்மைக் காத்து ஆண்டருளிய கடவுளே!.. கருணைப் பெருங்கடலே!..இடைவெளி இல்லாது, உன்னைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன்..நீ இனிமேல் எங்கு எழுந்தருளுவது?!

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்..

இங்கு 'விடை என்பது இடபவாகனத்தைக் குறித்தாலும், தர்ம தேவதையே சிவபிரானின் இடபவாகனமாகக் கருதப்படுவதால், இறைவன் விடாது தர்மத்தையே விரும்புவது உணர்த்தப்படுகின்றது.... இப்பதிகத்திலும் இறைவன், 'விண்ணோர்களுக்கு அரசன்' என்றே போற்றப்படுகின்றார்...மனித நிலையிலும் மேம்பட்டது தேவர்களின் நிலை.. இறைவன் தேவாதி தேவன்.. பதிகங்கள் முத்திக்கலப்புரைக்கும் அனுபவத்தைக் கூறுதலாலும், முத்தி, மிக மேலான உயரிய நிலை என்பதாலுமே இறைவன் இவ்வாறு போற்றப்படுகின்றார் என்று கொள்ளலாம்..

இடபத்தை, சித்தாந்த நோக்கில் 'பசு' எனக் கருதினாலும், பசுவாகிய உயிர்களை விடாது விரும்பி, அவை உய்வு பெற்று, தம்மை வந்தடைதலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார் எம்பிரான் எனவும் பொருள் கொள்ளலாம்.

விடை வாகனனான எம்பெருமானை, உருவ நிலையின் குறியீடாகக் கருதுவது மரபு,

'தோடுடைய செவியன் விடையேறி' என்ற சம்பந்தப் பெருமானின் பதிகப் பொருளின்படி, 'விடையேறி' என்பது உருவ நிலையையும், 'பொடி பூசி' என்பது அருவ நிலையையும், 'உள்ளங்கவர் கள்வன்' என்பது அருவுருவநிலையையும் குறிப்பிடுவதாகக் கருதப்படுகின்றது..

'வினையனே னுடையமெய்ப் பொருளே' என்பதில், உடைய என்னும் சொல்லின் பொருள் வெகு அருமையானது.. இறைவன், முத்தர்களுக்கும் பக்தர்களுக்கும் மட்டுமே உடையவனல்ல.. கர்மவினைகளால் சூழப்பட்டு, துன்புறும் ஒவ்வொரு உயிருக்கும் சொந்தமானவன்.. அவ்வுயிர்களைத் தம் கருணையால் ஆள்பவன்.. ஆகவே, நமது வினையின் காரணமாக, இறைவன் நம்மை விரும்பார் என்பது இல்லை.. அவனே நமது அன்னையும் தந்தையும் ஆதலினால் உண்மைப் பரம்பொருளாகிய அவன் கருணை நமக்குக் கட்டாயம் கிட்டும் என்பது குறிப்பால் இவ்விடத்தில்  உணர்த்தப்படுகின்றது.

'முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து'

முடை என்பதை இவ்விடத்தில் நாற்றம் என்பதாய் பொருள் கொண்டால், நாற்றம் நீங்காது இருக்கும் இவ்வுடலைக் குறிப்பதற்காகச் சொல்லப்பட்டதாகக் கொள்ளலாம். குரம்பை என்பது, உடலையே குறிக்கும். 'மூத்தற' என்பதை, 'அற மூத்து' என மாற்றிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்..

வயதின் காரணமாக, முதுமை எய்தி, நாற்றம் நீங்காத இவ்வுடல் மரணித்து, மண்ணில் வீழ்ந்து, புழுக்களால் உண்ணப்படும் நிலையைத் தாராது , எம்மை ஆட்கொண்டாய் என்று இறைவனைப் போற்றுகிறார் மாணிக்கவாசகப் பெருமான்..

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
        எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
        குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல   சுகமாலக் (திருப்புகழ்)

முதுமை எய்தாத நிலை, அதாவது என்றும் இளமையோடு இருக்கும் நிலையாவது இறைவனோடு கூடியிருக்கும் நிலை.. பிறப்பிறப்பிலா முத்தி நிலை..

இங்கு 'நாற்றம்' என்பதை, 'வாசனா மலமாகவும் பொருள் கொள்ளலாம்.

'அடியேன் முடை நாய்த் தலையே' என்ற அபிராமி பட்டரின் வாக்கும் இங்கு நினைவில் கொள்ளத் தக்கது.

இப்போது முடை என்பதைத் 'தடை' என்னும் பொருளில் பார்க்கலாம். வினைகள், இறையருளைப் பெற  முடியாதபடி தடை செய்கின்றன.. அத்தகைய குறைபாடுகள், தடைகள் விடாத அடியேனாகிய தம்மையும் ஆட்கொண்டார் எம்பிரான் என்கிறார் வாதவூரார்.

இவ்வாறு, தம்மை கீழ்மையிலாழ்த்தாது, அதாவது பிறவிச் சுழலில் சிக்க வைக்காது, தமது கடல் போன்ற கருணையினால் ஆட்கொண்ட இறைவனை, இடைவிடாது எந்நேரமும் தாம் உறுதியாகப் பற்றிப் பிடித்திருப்பதால், அவர் தமது இதயத் தாமரையிலேயே எப்போதும் எழுந்தருளியிருக்கிறார் என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்..

இங்கு 'கடவுளே' என்ற பதம் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.. உள் கடந்து ஒளி உருவாய் நிற்பவன் இறைவன் என்பதாலும், தொடர்ந்து தாம்,தமது நெஞ்சகத்தில் இறைவனை இருத்தி சிந்திப்பதைப் புலப்படுத்தும் பொருட்டும், இவ்வாறு உரைத்திருப்பதாகக் கொள்ளலாம்..

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

புதன், 26 பிப்ரவரி, 2014

PIDITHTHA PATHTHU, SONG # 1...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய., 'பிடித்த பத்து' பதிகம் -1


அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!..

சிவராத்திரியை முன்னிட்டு, மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகங்களுக்கு, சிவனருளால் என் சிற்றறிவுக்கு எட்டியவரை பொருள் எழுத முயன்றிருக்கிறேன்.. தினமொரு பதிகமாக கூடுமானவரை எழுத எண்ணம்...அரனருள் சிறக்கப் பிரார்த்திக்கிறேன்....

சிவராத்திரியை ஒட்டிய சென்ற வருடப் பதிவு, தங்களின் மேலான பார்வைக்காக...


மாணிக்கவாசகப் பெருமான், 'பிடித்த பத்து' பதிகங்களை திருத்தோணிபுரத்தில்(சீர்காழி) அருளினார்..இறைவனைத் தாம் விடாது பற்றிப் பிடித்த பான்மையைக் கூறும் பதிகங்களாதலால் இவை 'பிடித்த பத்து' எனப் பெயர் பெற்றன. இறைவனோடு தாம் முக்தியில் கலந்த அனுபவத்தைக் கூறும் பதிகங்களாதலால் 'முத்திக் கலப்புரைத்தல்' எனப்பட்டது...

பிடித்த பத்து (முத்திக் கலப்புரைத்தல்)

உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊத்தையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவபெரு மானே
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொருள்: உம்பர்‍- தேவர்..'தேவர்கட்கு அரசரே!,அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற கலந்திருப்பவனே!, அழுக்கினை உடைய உடல் தரித்த எனக்கு, புதிய பொருள் போலத் தோன்றி வந்து, என் குடி முழுவதும் ஆண்டு, மாயையினால் ஆன இவ்வுலக வாழ்வு நீங்குமாறு, பேரின்ப வாழ்வு தந்தருளிய அமுதம் போன்றவனே!.. 'செம்மையான, மெய்ப்பொருள் நீயே' என்று துணியப்படுபவனே!...சீர்மை பொருந்திய கழலிணைகள் உடையவனே!..நிலையான பேரின்ப நிதியாகிய செல்வமே!.. சிவபெருமானே!...யாம் உய்யும் பொருட்டு, உம்மைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன்!...நீ இனிமேல் என்னை விட்டு எங்கெழுந்தருளிச் செல்வது?....'

சற்றே விரிவாக...

இங்கு 'யோகம்' என்ற சொல், 'சேர்ந்திருப்பது', 'கலந்திருப்பது' என்னும் பொருளில் அறியப்படுகின்றது.. எம்பெருமான் இப்பிரபஞ்ச முழுதும் நீக்கமற நிறைந்து நிற்கும் இயல்பினன் ஆதலின், 'ஒழிவு அற நிறைந்த யோகமே' என்றார்... 

'ஊத்தையேன்' அல்லது 'ஊற்றையேன்' என்பது, 'அழுக்கான உடல் தரித்த என்னை' என்று பொருள் தரும்.. இதில் அழுக்கு என்பது புற அழுக்கு மட்டுமல்லாது, மும்மலங்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம்..

பாம்பாட்டிச் சித்தரின்

ஊத்தைக் குழிதனிலே மண்ணையெடுத்தே 
உதிரப் புனலிலே யுண்டை சேர்த்தே 
வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம் 
வறையோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே’

என்ற பாடலையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.

'வம்பெனப் பழுத்த' என்ற சொல்லின் பொருள் மிக ஆழமானது.. இருப்பினும் மிகச் சுருக்கமாகப் பார்க்கலாம்.. இறைவன் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருள்.. பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியன்..
இறைவன், புதிய பொருள் போலத் தோன்றி தம் குடி முழுதும் ஆண்டு கொண்டான் என்கிறார்....

அஞ்ஞான இருள் நீங்கி, என்றும் புதிதான ஞான ஆதித்தன் (இறைவன்) உதித்து, தம் ஆன்மாவை முழுவதுமாகத் தனதாக்கிக் கொண்ட இயல்பையே வியந்துரைக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான். இங்கு 'குடி' என்னும் சொல், உற்றார், உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட குடும்பத்தைக் குறிப்பதாகவே பெரும்பான்மையான உரையாசிரியர்கள் கொள்கின்றனர். இவையெல்லாம் நிலையானவை அல்ல என்பது வாதவூரார் அறியாததல்லவே!!.. பல பிறவிகளின் கர்ம மூட்டையால் பிணிக்கப்பட்டுள்ள ஆன்மாவை, இறைவன் அருள் தந்து அவனுடையதாக்கிக் கொள்ளலையே 'குடி முழுதும் ஆண்டு' என்றார்... தம்மை முற்றாக, முழுமையாக இறைவன் ஏற்றுக்கொண்டதையே அவர் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம்..

அடுத்து வரும் 'வாழ்வு அற' என்ற வரியும் இதை உறுதி செய்கிறது.. இறைவனது அருள் பெற்ற உயிர்,மீண்டும் பிறவா நிலையை அடைகிறது.. பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுபடுகிறது...

'வாழ்வு அற வாழ்வித்த மருந்தே' என்பதால், இவ்வுலகத்தில் பிறவி எடுத்தல் என்னும் நிலை நீங்குமாறு பேரின்ப வாழ்வளித்து அருள் செய்தான் இறைவன் என்பதைச் சொல்கிறார்.. மருந்தே என்பது இங்கு அமுதமே என்பதாகப் பொருள்படும்.. இறவா நிலை தரக் கூடியது அமுதம்.. இறைவன் பிறப்பிறப்பு நீக்கி சாயுஜ்ஜிய நிலையை அருளியதைச் சுட்டுவதாக, இதனைக் கொள்ளலாம்.

செம்பொருள் என்பது, உண்மையான பொருள் என்பதாகப் பொருள்படும்.. உண்மையான பொருள் எது என்னும் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர், இறுதியாக, சிவமே மெய்ப்பொருள் என்று துணிவர்.. ஆகவே, 'அத்தகைய உண்மையான பொருள் நீயே' என்று துணியத் தக்கவனே என்றார்..

சீருடைக் கழலே என்பதில் கழல் என்பது ஒலிக்கும் கழல்களை அணிந்த திருவடிகளைக் குறிக்கின்றது.. உண்மையான சிவப்பரம்பொருளின் திருவடிகளை அடைவதே மானிடப் பிறவி எய்தியதன் நோக்கம்... 

தில்லை மூதூர் ஆடிய திருவடி 
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி 

என்று கீர்த்தித் திருஅகவலில் மாணிக்கவாசகப் பெருமான் அருளியதை இங்கு ஒப்பு நோக்கிப் பொருள் கொள்ளலாம்.

'எம்பொருட்டு' என்றது, பதிகங்களைப் பாடும் நமக்கு அறிவுறுத்தியது.. நம் பொருட்டு,  நாம் உய்ய வேண்டுமெனில், எம்பெருமானின் திருவடிகளைப் பற்றிப் பிடிக்க வேண்டும்..  இதனைச் செய்வதால் பலனடைவோர் நாம் தான் அல்லவா?!.. சிக்கெனப் பிடித்தல் என்பது, நம்மை முற்றாக இறைவனது திருவடிகளில் சமர்ப்பித்து..'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்பதற்கிணங்க,  இறைவனை மிக உறுதியாகப் பற்றிப் பிடித்தலாகும்.. 'சிக்கென' என்பதன் மூலம் தளராத உறுதிப்பாடு கூறப்பட்டது..உறுதியாக, 'நீயே கதி' என இறைவனைப் பற்றிப் பிடிப்போரின் இதயத் தாமரையில் இறைவன் நிரந்தரமாக எழுந்தருளுவான் ஆதலின், 'எங்கெழுந்தருளுவது இனியே..' என்றார்.. சித்தம் சிவலோகமாக மாறிய பின், எங்கும் அதுவே காணுதலால், அவர் பிறிதோரிடத்து தோன்றுதல் என்பது கிடையாது.. ஆகவே 'தாம் வேறெங்கும் எழுந்தருளுவது இயலாது...' என்று உரிமையுடன் உரைத்தார்...

இவ்வாறு, தாம், இறையனாரின் இணையடிகளை உறுதியாகப் பற்றிப் பிடித்தமையும் அதன் காரணமாக, இறைவன், தம் ஆன்மாவின் மலங்கள் நீங்குமாறு செய்து, பேரின்ப வாழ்வளித்தமையையும் உரைக்கிறார் பெருமான்...'முத்திக் கலப்புரைத்தல்' சொல்லும் பதிகங்களில், முதற் பதிகத்தின் பொருள் இவ்வாறு அமைந்ததாகக் கொள்ளலாம்.

திருச்சிற்றம்பலம்

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!..

வெற்றி பெறுவோம்!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.