நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 2 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU..SONG # 5...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'.... பதிகம் # 5.

பதிகம் # 5.

ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொருள்:

தனக்கு ஒருவரும் நிகரில்லாத ஒரே பரம்பொருளே!, அடியேனது உள்ளத்துள் ஒளிர்கின்ற பேரொளிமயமானவனே!...உண்மையான  உயர்ந்த நிலையை அறியாத, பெருமையேதும் இல்லாத எனக்கு உயரிய பேரானந்த வாழ்வளித்த அன்பின் திருவுருவே!, சொல்லால் விளக்குதற்கு அரிய, செழுமையான சுடர்  வடிவினனே!!, அடியார்களின் செல்வமான சிவபிரானே!, இளைத்த இடத்து, உன்னைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன்!.. இனி நீ எழுந்தருளும் இடம் வேறெது?!..

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்...

இறைவன் தனக்குவமையில்லாதான்..ஆகவே 'ஒப்பு உனக்கு இல்லா' என்றார்..

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
 மனக்கவலை மாற்ற லரிது"
- திருக்குறள்,

ஒரே பரம்பொருளான இறைவன் சிவபிரானே.. ஆகையினால் 'ஒருவனே' என்று போற்றுகிறார்!...

ஒருவன் என்னும் ஒருவன் காண்க (திருஅண்டப் பகுதி)

உள்ளன்போடு, இறைவனைத் துதிப்போர் உள்ளமே இறைவன் விரும்பி எழுந்தருளும் திருக்கோயில்..

இறைவனோ தொண்டர்தம் உள்ளத் தொடுக்கம் என்றார் ஔவை..

பரந்து பல் ஆய் மலர் இட்டு, முட்டாது, அடியே இறைஞ்சி,
`இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்' என்னும், அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே! நின் தன் வார் கழற்கு அன்பு, எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே.(திருச்சதகம்)

மெய்யடியார்கள், தங்கள் மனதில் பேரொளி மயமான இறைவனது தரிசனத்தை விடாமல் காண்கின்றனர். ஆதலால், 'உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே' என்றார்..

புகழுக்கும் பெருமைக்கும் உரியவன் இறைவன் ஒருவனே!.. ஆகையால் , தம்மை 'வீறு இலியேற்கு' என்றார்.. மானிடராய்ப் பிறந்தவர் உயரிய சிவபதம் அறிவது இயலாததால் 'மெய்ப்பதம் அறியா' என்றார்.

அவ்விதம் உயரிய நிலை அறியாத போழ்தும், இறைவன் தம் பேரன்பினால், அந்த மேன்மையான பதத்தை அளித்து அருள் செய்த பான்மையினை, ''விழுமிய தளித்ததோ ரன்பே' என்றார்..

இங்கு 'ஓர் அன்பே' என்ற பதம் மிகுந்த பொருளாழமுடையது. இவ்வுலகியல் விஷயங்களின் பால் நாம் கொள்கின்ற அன்பு நிலையானதன்று.. அதைப் போல், நம் பால், நம் உற்றார் உறவினர், நண்பர்கள் முதலானவர்கள் வைக்கும் பற்றுதலும், நிலையானதல்ல... உண்மையான அன்பு என்பது, இறைவன் மேல் நாம் வைக்கும் அன்பும், நமக்கு அன்னையும் தந்தையும் ஆகிய இறைவன் நம் பால் எப்போதும் சுரக்கின்ற பேரன்புமே... 

அந்தப் பேரன்பின் காரணமாகவே, இறைவன் பெருமையேதும் இல்லாத தனக்கு மேலான பதமளித்தமையால், 'ஓர் அன்பே' என்றார்.

இறைவன், அக இருளை நீக்கும் ஞானமாகிய சுடர் வடிவினன்..ஞானமே செழுமையானது..ஆகவே, 'செழுஞ்சுடர் மூர்த்தி' என்றார்....

பாரும் விசும்பும் அறிய வெனைப்
        பயந்த தாயும் தந்தையும் நீ
    ஓரும் போதிங் கெனி லெளியேன்
        ஓயாத் துயருற்றிட னன்றோ
    யாருங் காண வுனை வாதுக்
        கிழுப்பே னன்றியென் செய்கேன்
    சேரும் தணிகை மலை மருந்தே
        தேனே ஞானச் செழுஞ்சுடரே. (செழுஞ்சுடர் மாலை).

என்று வள்ளலார் பெருமான் பாடியருளியதை இங்கு ஒப்பு நோக்கலாம்....

'எய்ப்பிடத்து' என்பது இளைத்த இடத்தில் என்று பொருள்படும்..இளைப்பிற்குக் காரணம்..பலப் பல பிறவிகள் எடுத்தது..

'எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்' என்று சிவபுராணத்தில் வாதவூரார் அருளியிருப்பதை இங்கு பொருத்தி உணரலாம்..

முடிவற்ற பிறப்பிறப்புச் சுழலில் சிக்கி, பல பிறவிகள் எடுத்தும், இறைவனருள் கிட்டாமையினால் இளைத்திருக்கும் இத்தருணத்தில்,  'ஏதாகிலும் சரி, உன்னை  நான் இனி விடேன்' என்று இறைவனை உறுதியாகப் பற்றிப் பிடித்ததன் காரணமாக, இறையருளும் அதன் வழியே முத்தி நிலையும் கை கூடப் பெற்றதால், இனி எம்பிரான் தனித்து எழுந்தருளுவது இயலாது என்று உரைத்தார்.

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..