நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 5 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU.....SONG # 8...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'...பதிகம் # 8.

Courtesy: Google Images

பதிகம் # 8

அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே சிவபெரு மானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
தந்தையே!...தேவர்களாயும் தேவலோகமாயும் நின்ற முதற்பொருளே!..காலம், இடம் முதலிய எதன் பொருட்டும் முடிவில்லா ஞானவடிவே!,



அடியார்கள் உறுதியாகப் பற்றிப் பிடித்து நிற்கும் அருட்செல்வமே!..சிவபிரானே!..பேரருள் உடையவனே!.. உயிர்களெல்லாமுமாக விளங்கியும், அவற்றிலிருந்து நீங்கி, வேறாகவும் நிற்கும் மாயம் உடையவனே!,..உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன்!..இனி நீ எழுந்தருளும் இடம் வேறெது?!!

சற்றே விரிவாக..

இறைவனே உயிர்களனைத்துக்கும் தந்தையாதலினால் 'அத்தனே' என்றார்.

தேவர்களாகவும், தேவர்கள் வாழும் தேவலோகமாகவும் இறைவனே இருக்கின்றான் என்ற பொருள் வருமாறு, 'அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே' என்று குறித்தார்

இறைவனே ஆதி முதல்வன்......மனித நிலையில் இருந்து மேம்பட்டது தேவ நிலை..  மிக உயர் நிலையில் இருக்கும் தேவர்களாக இருப்பவன் என்று இறைவனைச் சொல்வதன் மூலம், தேவ நிலைக்குக் கீழான பிற உயிர்களாகவும் இருப்பவன் இறைவனே என்பது குறிப்பாகப் புலப்படுத்தப்பட்டது. அது போல், தேவர்களின் உலகமாக இருப்பவன் இறைவன் என்று சொல்வதன் மூலம், அனைத்துலகங்களாகவும் விளங்குபவன் இறைவன் என்பதைப் புலப்படுத்தினார்.

இறைவன் முதலும் முடிவும் இல்லாதவன், காலம், இடம் முதலியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவனாக விளங்குபவன். இதனையே 'யாதும் ஈறு இல்லா' என்றார்.. முடிவில்லாத இறைவனே, பிரளய காலத்தில், இப்பிரபஞ்சப் பொருட்கள் அனைத்தும் சென்று சேரும் இடமாக, இறுதியாக விளங்குபவன்.

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறு கோடி நாராயண ரங்ஙனே;
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்;
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே(அப்பர்)

உயிர்கள் அறிய வேண்டிய பொருளாகவும், அறிவு வடிவினனாகவும் இருப்பவன் இறைவன்.. இறைவனது ஞான வடிவினைக் குறிக்கும் பொருட்டு, 'சித்தன்' என்றார்.

அடியார்கள் எப்போதும் உறுதியாகப் பற்றிப் பிடித்திருக்கும் அருட்செல்வம் சிவபெருமான்.

ஆகவே 'பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே' என்றார்....பக்தியில்  மேம்பட்ட அடியார்கள் பற்றிப் பிடித்திருக்கும் செல்வம் சிவபிரான் என்று உரைப்பதன் மூலம், பக்தியினால் பெறப்படும் செல்வம், மெய்ப்பொருளாகிய சிவனே என்பதையும் உணர்த்தினார்.

 'பித்தன்' என்னும் சொல், மிகுந்த பொருளாழமுடையது..

'பித்தா பிறைசூடி..' என்று பாடியருளுகிறார் நம்பியாரூரர் பெருமான்.

இறைவன் பேரருள் உடையவன்.. இறைவனது பேரருள் வழங்கும் தன்மை, பித்தோடு ஒத்ததென்று கூறப்படுகின்றது.

இறைவனது செயல்கள், உயிர்களின் சிற்றறிவுக்கு அப்பாற்பட்டது. பிறர்வயமாகாப் பெரியோனாகிய இறைவன், தன்வயமுடைமையால் செய்யும் செயல்கள், உயிர்களின் சிற்றறிவுக்கு உட்பட்ட காரண காரிய விதிகளோடு பொருந்துவதில்லை... சிவன் செயல்களின் காரணம் சிவனே அறிவான்.. உயிர்களுக்கு, அது நெறிமுறைகட்கு உட்படா பித்தனின் செயல் போலத் தோன்றுவதாலும் இறைவன் பித்தன்.

விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ணா ணலியாகும் பித்தா பிறைசூடீ
எண்ணா ரெருக்கத்தம் புலியூ ருறைகின்ற
அண்ணா வெனவல்லார்க் கடையா வினைதானே.
- சம்பந்தர்

உயிர்களுக்குள் கலந்து உறைகின்றவன் சிவன்..எம்பிரானே அனைத்திலிருந்தும், நீங்கி, அவற்றிலிருந்தும் வேறுபட்ட தன்மையனாகவும் நிற்கின்றான். இறைவனது இயல்புகளுள் இதுவும் ஒன்று..ஆகவே, 'எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லையாய் நிற்கும்' என்றார்.

ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய் 
          ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய் 
     வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய் 
          மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய் 
     அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி 
          அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம் 
     தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான 
          சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே. (திருவருட்பா)

இறைவனது இவ்விதமான இயல்பு(அனைத்துள்ளும் பொருந்துதலும், பின் அவற்றினின்றும் நீங்கி நிற்றலும்) மாயம் போலத் தோற்றமளிப்பதால், 'மாயம் உடையவனே'('எத்தனே) என்றார். சித்தாந்த நெறியில் சிந்தித்தால் வேறொரு பொருளும் தோன்றும்.. 

மாயை,சுத்த மாயை அசுத்த மாயை மிச்சிரமாயை என  மூவகைப்படும். சுத்தமாயையைத் தொழில் படுத்தும்போது சிவபிரான் தானே அயன் அரி அரன் என மூன்று நிலைகளையும் அடைந்து முத்தொழில்களையும் புரிவார்...

அசுத்த மாயையின் கீழ் வரும் பிரகிருதி மாயையைத் தொழிற்படுத்தும் போது, பக்குவப்பட்டு, உயர்நிலையை அடைந்த உயிர்களாகிய, அயன், அரி, அரன் என்பவர்கள், எம்பிரானின் ஆணைப்படி, படைத்தல்,காத்தல் அழித்தல் ஆகியவற்றைச் செய்வர்..

இவ்வாறு, மாயையைத் தொழிற்படுத்தி, உலகங்களின் தோற்றம், நிலைபெறுதல், அழித்தல் ஆகிய செயல்களை, ஒரு மாயம் எனத் தோன்றுவது போலச் செய்தருளுவதாலும் இறைவன் 'எத்தன்'.

'இத்தகைய இயல்பினனான இறைவா!... உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன்.. அதன் காரணமாக‌, நீ உன் பேரருங்கருணையினால் எனக்கு முத்தி அளித்தருளினாய்...இப்பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கும் உன்னோடு என்னையும் இணைத்தருளியமையால், இனி நீ தனித்து, வேறெங்கும் எழுந்தருளுவது இயலாது..' என்னும் பொருள் தோன்ற, 'உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே....' என்றுரைத்தார்.

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. மின்னூலாக்கம் செய்ய வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்.. செயல்படுத்தப்பட்டதும், இங்கு வலைப்பூவில் தகவல் தருகிறேன் ஐயா!..கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடப்போவதால் தாங்கள் தரவிறக்கிக் கொள்ளலாம்!.. தங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..