அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்!!
தீபாவளியை அடுத்து வரும் சுக்ல பக்ஷ சஷ்டி திதி, தமிழகத்தில் ஸ்கந்த சஷ்டித் திருவிழாவாக, குன்று தோறும் குடிகொண்டருளும் குமரக் கடவுள் சூரனை வதைத்த தினமாக, சூரசம்ஹாரப் பெருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.
இந்த சுக்ல பக்ஷ சஷ்டியை, பெரும்பாலான வட இந்தியர்கள், சூர்ய சஷ்டி / சட் பூஜாவாகக் கொண்டாடுகின்றார்கள்.
இந்த விரதம், சூரிய சஷ்டிக்கு இரு நாட்கள் முன்பே துவங்கி, சஷ்டிக்கு மறுநாள் சப்தமியன்றே நிறைவுறுகிறது. ஆயினும், சூர்ய சஷ்டி தினமே, முக்கிய விரத தினம் என்பதால் சூர்ய சஷ்டி முக்கியத்துவம் பெறுகிறது.
நான்கு தினங்களை உள்ளடக்கிய இந்த விரதம் பெரும்பாலும் பீகாரிகளால் கொண்டாடப்பட்டாலும், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒரிசா, அஸ்ஸாம் மாநிலங்களிலும், மொரிஷியஸிலும் கூட கொண்டாடப்படுகின்றது. போஜ்புரி மொழி பேசும் மக்களாலும் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
இந்த விரத பூஜையின் முக்கிய வழிபடு தெய்வம், பிரத்யக்ஷ தெய்வமான சூரியன். இங்கு ஒரு விஷயத்தை நாம் ஒப்பு நோக்கலாம்... சூரியனின் உள்ளிருப்பது பிரகாசமான ஒளி தரும் அக்னி பகவானே... ஆறு தீப்பொறிகள் சரவணப் பொய்கை சேர உதித்தருளியவன் ஞானப் பேரொளிப் பிழம்பான ஆறுமுகப் பெருமான்.. கார்காலமான இந்த காலக்கட்டத்தில், ஒளி வழிபாடே தீபாவளி, சட் பூஜை, திருக்கார்த்திகை தீபம் என பல்வேறு விதமாகப் பரிணமித்திருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
சூரிய பகவான், அவரது மனைவியரான உஷா, பிரத்யுஷா தேவியருடன் இணைத்துத் துதிக்கப்படுகின்றார். உஷா தேவி சத் மையா என்றே வணங்கப்படுகிறாள். உஷா என்பது சூரிய பகவான் உதிக்கும் போது அவரிடமிருந்து தோன்றும் முதல் ஒளிக்கதிர் எனவும், பிரத்யுஷா, சூரியன் மறையும் போது வெளிப்படும் கடைசி ஒளிக்கதிர் எனவும் கருதுகிறார்கள். நான்காம் நாள் சூர்யோதய அர்க்ய தினத்தில் உஷா தேவியும், மூன்றாம் நாள் சந்த்யா அர்க்ய தினத்தில் பிரத்யுஷா தேவியும் பிரார்த்திக்கப்படுகின்றார்கள்.
சட் பூஜா சம்பந்தமான புராணக் கதைகளை முதலில் நாம் காணலாம்..
புராணக் கதைகள்:
இந்த பூஜை, மஹாபாரத காலத்திலிருந்தே துவக்கப்பட்டதாகத் தெரிகிறது. திரௌபதி, சூர்ய பகவானின் பக்தை. தௌம்ய மஹரிஷியின் அறிவுரைப்படி சூர்ய சஷ்டி விரதத்தை தவறாமல் அனுஷ்டித்து, பெரும் நோய்களைத் தீர்க்கும் சக்தி பெற்றிருந்தாளாம் திரௌபதி.
அது போல் தான வீரனான கர்ணன், சூர்ய சஷ்டி விரதத்தை தவறாது அனுஷ்டித்து, ஒப்பில்லாப் புகழ் பெற்றான்.
செல்வம், ஆரோக்கியம்,புகழ் என அனைத்து நலங்களும் வழங்கும் மகிமை பொருந்திய விரதமாகத் திகழ்கிறது சட் பூஜா.
இந்த விரதம் சம்பந்தமான கர்ண பரம்பரைக் கதை:
முற்காலத்தில், பிந்துசார நகரில் மஹிபாலன் என்பவன் வாழ்ந்து வந்தான். தெய்வ நம்பிக்கை இல்லாத அவன், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை இகழ்ந்தும், இறைவழிபாடுகளைக் கேலி செய்தும் வாழ்ந்து வந்தான்.
உலகிற்கு ஒளி தந்து வாழ வைக்கும், சூரிய சந்திரர்களுக்கு நேராக, இயற்கை உந்துதல்களை தீர்க்கக் கூடாதென்பது விதி. ஆனால் மஹிபாலன், வேண்டுமென்றே அவ்வாறு செய்தான். அதனால் கோபம் கொண்ட சூரிய பகவான், அவன் கண்பார்வை நீங்குமென சபித்து விட்டார்.
மெல்ல மெல்ல அவன் கண்பார்வை மங்கலாயிற்று. மிகவும் மனமுடைந்த மஹிபாலன், கங்கையில் குதித்து உயிர் விடத் திட்டமிட்டான். அவ்வாறே செய்ய, கங்கையை நோக்கி நடந்த வேளையில், அவன் எதிரே நாரத முனிவர் வந்தார். யாரோ வரும் ஓசை கேட்டு, மஹிபாலன் ஓசை வந்த திசையை வணங்கினான். நாரதமுனிவர், மஹிபாலனின் நிலை கண்டு இரங்கி, ஞானதிருஷ்டி மூலம் நடந்தது அனைத்தையும் அறிந்தார். மஹிபாலனத் தேற்றி, அவனை சூரிய சஷ்டி விரதம் இருக்குமாறும், அதன் மூலம் கண்பார்வையைத் திரும்பப் பெறலாம் என்றும் கூறினார். சூரிய பகவானிடம், மனமுருகி மன்னிப்புக் கேட்குமாறும் சொன்னார்.
சூரிய சஷ்டி தினத்தன்று முறைப்படி உபவாசம் இருந்து, சூரிய பகவானை வணங்கினான் மஹிபாலன். அதன் பலனாக, கண்பார்வையை திரும்பப் பெற்றான்.
சூரிய சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை;
இந்த விரதம் ஒரு வருடத்தில் இரண்டு முறை அனுசரிக்கப்பட வேண்டும் என்பது விதி. கோடை காலமான சித்திரை மாதத்திலும் கார்காலமான தீபாவளியை அடுத்து வரும் சுக்ல சஷ்டியிலும் இந்த விரதம் அனுசரிக்கப்பட வேண்டும். தற்போது, கால மாற்றத்தால், தீபாவளியை அடுத்து வரும் சுக்ல சஷ்டியிலேயே இது அனுஷ்டிக்கப்படுகிறது.
முற்காலத்தில் பெரும் ரிஷிகள் இந்த விரதத்தை கடைபிடித்தனர். ஸ்தூல உணவு இல்லாமல், பிரபஞ்ச வெளியில் இருந்து உடல் இயங்கத் தேவையான சக்தியைப் பெறும் ஒரு மார்க்கமாகவே இந்த விரதத்தைக் கருதினர். இந்த வழிமுறைப்படியும் உயிர்கள் வாழ இயலும் என்கிற மகத்தான உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் முகமாகவும் இந்த நீண்ட 36 மணி நேர விரதம் இன்றளவும் கடைபிடிக்கப்படுகின்றது.
பீகாரில் பெண்களே விரதம் இருக்கின்றனர். தரையில் படுத்து உறங்குவது உள்ளிட்ட விதிகளை தவறாது நியமத்துடன் பின்பற்றுகின்றனர். ஆண்களும் விருப்பமெனில் விரதம் கடைபிடிக்கின்றனர்.
இந்த விரதம், நான்கு தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. முதல் தினம் நாஹா கா அல்லது நஹாய் காய் என்று வழங்கப்படுகிறது. அன்றைய தினம், வீடு மற்றும் சுற்றுப்புறங்கள் தூய்மை செய்யப்படுகின்றன.
அன்று, சூரியோதயத்திற்கு முன்பாக, நதிகளில் ஸ்நானம் செய்து, நீர் எடுத்து வந்து உணவு தயாரிக்கின்றனர். அரிசி, சன்னா (கொண்டைக்கடலை), சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகள் சேர்த்து சமைக்கப்பட்ட உணவை உட்கொள்கின்றனர். ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்கின்றனர்.
இதன் நோக்கம், விரதத்திற்கு உடலை தயார் செய்வதாகும். இந்த காலநிலையில் கிடைக்கக் கூடிய காய்கறிகளை வைத்து சமைக்கப்படும் உணவு, சத்து மிகுந்ததாக, எளிதில் ஜீரணமாகக் கூடியதாக இருப்பதோடு, 36 மணி நேர விரதத்திற்கு உடலை தகுதிப்படுத்துகிறது.
மெய் ஞானம் நிரம்பிய முன்னோர்கள், இந்த விரதத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்ன காய்கறிகளுக்கு விஞ்ஞான அடிப்படையிலான காரணங்களை தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்!!!
சுரைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது. உடலில் சோடியம்,பொட்டாசியம் சமநிலையை விரத தினங்களில் தக்கவைப்பதற்காக. விட்டமின் சி நிரம்பிய காய்கறிகள் நெடுநேரம் நீரில் நின்று பிரார்த்திக்கும் பக்தர்களுக்கு, ஜலதோஷம், இருமல் முதலியவை வராமல் காப்பதற்காக. நீர்ச்சத்து நிரம்பிய பூசணி, பக்தர்களுக்கு விரதத்தினால் உடலில் நீர்ச்சத்து இழப்பு வராமல் காப்பதற்காக என்று அறிஞர்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
விரதத்தின் இரண்டாவது நாள், கர்னா என்று வழங்கப்படுகிறது. சூரிய உதயத்தில் ஆரம்பிக்கும் உபவாசம், அன்று மாலை சூரிய அஸ்தமனத்தோடு நிறைவடைகிறது. சூரிய சந்திரரை வழிபாடு செய்து, அரிசி பாயசம், பூரிகள், இனிப்புகள், பழங்கள் என்று பலவும் நிவேதனமாகப் படைக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களிடையே பிரசாதமாக விநியோகிக்கப்பட்டு உட்கொள்ளப்படுகின்றன.
ARGYA |
அதன் பின், 36 மணி நேர விரதம் துவங்குகிறது. நீர் கூட அருந்தாமல் நியமத்துடன் விரதம் இருக்கின்றனர். மறு நாள் படைக்க வேண்டிய நிவேதனங்களை சிரத்தையாகச் செய்கின்றனர். மூன்றாம் நாள் இரவு, நதி நீரில் நின்றுகொண்டு, பால் மற்றும் நீரால் சத் சந்த்யா அர்க்யம் சமர்ப்பிக்கின்றனர். சூர்யபகவானுக்கு தீபங்கள் ஏற்றி, நதிகளில் மிதக்க விட்டு வழிபாடு செய்கின்றனர்.
நான்காம் நாள் காலை, சூரியோதயத்திற்கு முன்பாக, மக்கள் சாரி சாரியாக, நதிக்கரையை நோக்கிச் செல்கின்றனர். கோதுமை, பால், கரும்பு, வாழைப்பழம், தேங்காய், காய்கறிகள், பாயசம், இனிப்புகள், பூரிகள், முதலிய நிவேதனங்கள் சூரிய பகவானுக்குப் படைப்பதற்காக எடுத்துச் செல்கின்றனர். வெங்காயம், பூண்டு, உப்பு முதலியவை நிவேதனங்களில் சேர்க்கப்படுவதில்லை.
அதிகாலை நேரத்தில், கூப்பிய கரங்களுடன், பொன்னொளி வீசும் பகலவனை தரிசிக்கக் காத்திருக்கின்றனர். சூரியபகவானுக்கு, பால், மற்றும் நீரால் சத் சூர்யோதய அர்க்யம் சமர்ப்பித்து, பூஜைகள் செய்கின்றனர். நிவேதனங்களை சமர்ப்பித்து வணங்குகின்றனர். அதன் பின், நிவேதனங்கள், உறவினர்கள் நண்பர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. விரதம் இருந்தோரும் பிரசாதத்தை உண்டு விரத நிறைவு செய்கின்றனர்.
சத் பூஜா பிரசாதம் மிக விசேஷமானதாகக் கருதப்படுகின்றது. ஆகவே, விரதம் இருப்போருடன், அவர்களது உறவினர்கள் நண்பர்களும் நதிக்கரைக்குச் சென்று, பிரசாதம் பெறுவது வழக்கம்.
இந்த பூஜையும் விரதமும் தலைமுறையாக விடாது செய்வது முக்கியமாகக் கருதப்படுகின்றது. இந்த விரதம் துவங்கி விட்டால், அதன் பின், குடும்பத்தினர் இதை விடாது செய்ய வேண்டும் என்கின்றனர்.
சட் பூஜா, சூரிய பகவானின் பெருங்கருணையைப் பெற்றுத் தந்து, அதன் காரணமாக, மானிட வாழ்வில் ஏற்படும் இன்னல்கள், கொடுந்துயரங்கள் முதலியவற்றை விலக்குவதோடு, பெரும் நோய்கள், கண் பார்வைக் குறைபாடு முதலியவற்றையும் நீக்கி, எல்லா நலமும் வளமும் பெருக்கும்..
இந்த மகத்தான தினத்தில் தவறாது இறைவழிபாடு செய்து,
இந்த மகத்தான தினத்தில் தவறாது இறைவழிபாடு செய்து,
வெற்றி பெறுவோம்!!!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
நன்றி சகோதரி..
பதிலளிநீக்குநலமுடன் வாழ்க
இஸ்லாமியர் வைக்கும்
இந்த ரம்ஜான் நோன்பு
இங்கிருந்து தான் போயிருக்கின்றதோ
இருக்கட்டும் இருக்கட்டும்
தங்கள் வாழ்த்துக்கு நன்றி!!. தாங்கள் அறியாததில்லை.... எல்லா மதத்தினரும் என் சகோதர சகோதரியரே!!...எல்லா மதமும் எனக்கு ஒன்று போல் தான். எனக்குத் தெரிந்ததை, நான் எழுதி வருகிறேன்..இங்கு மத பேதமின்றி அனைவரும் வருகை தருகின்றனர். தயவு செய்து இம்மாதிரியான கருத்துரைகள் இட்டு, மாற்று மதத்தினரை சங்கடப்படுத்த வேண்டாம் என்று தங்கள் தாள் பணிந்து கேட்டுக் கொள்கிறேன். தங்கள் புரிதலுக்கு நன்றி!!!
நீக்குஉணர்வுகளை மதிக்கும்
பதிலளிநீக்குஉறவே..
அவர்களை குறையாக சொல்லவில்லை எனினும்
அப்படியே செய்கிறோம் உங்கள் அன்பு கட்டளை படி
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா..
நீக்கு