நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 20 நவம்பர், 2013

SAUBHAGYA SUNDARI VIRATHAM..(20/11/2013)...சௌபாக்கிய சுந்தரி விரதம்!!


அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்!!!..

நம் பாரத நாட்டில், பெண்கள், கணக்கற்ற விரதங்களை,  கணவன், குழந்தைகள் நலனுக்காகவும், குடும்பம் செழித்து விளங்கவும் தொடர்ந்து பின்பற்றி வந்தார்கள். அவ்வகையில், அன்னை பார்வதி தேவியைக் குறித்துச் செய்யப்படும் ஒரு விரதமே, 'சௌபாக்கிய சுந்தரி விரதம்'. மிகப் பழங்காலத்தில் அனுசரிக்கப்பட்டு வந்த விரதங்களுள் ஒன்று இது. இது 'சௌபாக்கிய கௌரி விரதம்' எனவும் வழங்கப்படுகின்றது...

ஒரு பெண்ணை வாழ்த்தும் போது, 'சௌபாக்கியவதியாக இரு' என்று வாழ்த்துவது வழக்கம். 'சௌபாக்கியம்' என்பது, நல்ல கணவன், குழந்தைகள், பேரக்குழந்தைகளும், எல்லா வகையான செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ்வதே ஆகும்.    அத்தகைய  நிறை வாழ்வு வாழும் பாக்கியத்தைத் தரும் இந்த விரத பூஜையில், அன்னை பார்வதி தேவியை, 'சௌபாக்கிய சுந்தரி' என்னும் திருநாமத்தால், சிவனாருடன் இணைந்த திருக்கோலத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.  இந்த விரதம் இருப்பதால், பார்வதி தேவி மனமகிழ்ந்து, எல்லா நலன்களும் அருள்வாள்.

வாழ்வில் தோன்றும் எல்லா விதமான இன்னல்களையும் நீக்கும் மகிமை பொருந்திய விரதம் இது. இதை முறையாகக் கடைபிடிப்போரின் சகல தோஷங்களும் நீங்கி, நலம் பெருகும்.

இந்த விரதம் அனுசரிப்பது காலமாற்றத்தினால் குறைந்து விட்ட போதிலும், சில பரிகார காரணங்களுக்காக அனுசரிக்கப்படுகின்றது. குறிப்பாக, திருமணத் தடை விலகவும், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் இந்த விரதம் அனுசரிப்பது மிகச் சிறந்த பலனை அளிக்கும். அங்காரக தோஷம் இருக்கும் ஜாதகர்கள், இந்த விரதத்தை தோஷ நிவர்த்திக்காக அனுசரிக்கலாம்.

விரதம் அனுசரிக்கும் தினம்:

கார்த்திகை மாதம், தேய்பிறை திருதியை, அதாவது திருக்கார்த்திகை பௌர்ணமிக்குப் பின் வரும் திருதியை திதியில் இந்த விரதம் அனுசரிக்கப்படுகின்றது. இந்த வருடம் நாளை(நவம்பர் 20ம் தேதி) இந்த விரதம் வருகிறது. இது சித்திரை  மாதம், வளர்பிறை திருதியை அன்றும் அனுசரிக்கப்படுகின்றது.

'அகண்ட வரதானம்' பெற்றுத் தரும் விரதங்களுள் ஒன்றான, இதை, தக்ஷனின் மகளாக அவதரித்த சதி தேவி கடைபிடித்து, சிவனாரை தன் மணாளனாக அடைந்தாள்.

சில காலம் சென்ற பின்னர், சில யோகினிகள், பார்வதி தேவியின் தோழியராகிய ஜயா, விஜயாவிடம், 'பார்வதி தேவியை மகிழ்வித்து வரம் பல பெற்றுத் தரும் சுலபமான நோன்பு எது?' என்று கேட்க, அவர்களும், 'சௌபாக்கிய சுந்தரி விரத'த்தைப் பற்றியும், அதைக் கடைபிடிக்கும் விதம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்கள். இதை முறையாக அனுசரிக்க, வாழ்வின் இன்னல்கள் அனைத்தும் தீரும் என்பதை விளக்கினார்கள். குறிப்பாக, திருமணமான பெண்கள் அனுசரிக்க, குடும்பம் செழித்து விளங்கும் என்று கூறினார்கள்.

விரதம் அனுசரிக்கும் விதம்:

குடும்ப ஒற்றுமை மற்றும் திருமணத் தடை நீக்கும் விரதமாதலால், சிவன், பார்வதி இருவரையும் சேர்த்தே வழிபாடு செய்ய வேண்டும். 

விரத தினத்தில் அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். முறையாக, விரத சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

மலர் மாலைகள், பூஜைப் பொருட்கள் அனைத்தையும் தயார் செய்து கொள்ள வேண்டும். நிவேதனத்திற்காக, இனிப்புப் பதார்த்தங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும்.

திருமணமான பெண்களுக்கு, முக்கியமானவையாகச் சொல்லப்படும் பதினாறு வகையான மங்கலப் பொருட்களால் (மஞ்சள், குங்குமம், மருதாணி, கண்மை, தாம்பூலம், சேலை, ரவிக்கைத் துணி, கொலுசு, மெட்டி, போன்றவை) 

அம்பிகையை ஆராதிக்க வேண்டுவது முக்கியம். ஆகையால் அவற்றையும் தயாராக வைக்க வேண்டும்.

பூஜையை, காலையில் அல்லது மாலையில் செய்யலாம். மாலையில் செய்வது சிறப்பு..

பூஜை செய்யும் இடத்தில், ஒரு பலகை அல்லது தாம்பாளத்தில், சிவ, பார்வதி விக்கிரகங்களை அல்லது படத்தை, சிவப்பு வஸ்திரத்தால் அலங்கரித்து வைக்க வேண்டும். அகல் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும்..

முதலில் விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். அதன் பின், இயன்றால் நவக்கிரக பூஜையும் செய்ய வேண்டும்.

இறைவனுக்கும் இறைவிக்கும் தூப தீபங்களுடன், ஷோடசோபசார பூஜைகள் செய்ய வேண்டும். விக்ரகங்களாயின், பால், தயிர் முதலியவற்றால் அபிஷேகம்  செய்து பூஜிக்கலாம்.. நிவேதனங்களை பக்தியுடன் அர்ப்பணம் செய்ய வேண்டும். தாம்பூலத்துடன், உலர் பழங்களும் நிவேதனம் செய்ய வேண்டும்.

பூஜையின் நிறைவில் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்ய வேண்டும்.

யாரேனும் ஒருவருக்கு உணவளித்து, தக்ஷிணையுடன் தாம்பூலம் அளிக்க வேண்டும்.

அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறந்தது. இரவில், பால், பழம் அருந்தலாம். இயலாதவர்கள், பூஜை நிறைவுறும் வரையிலாவது உபவாசம் இருக்கலாம்.

மிகக் கடுமையான தோஷங்களுக்கும் இந்த விரதம் மிகச் சிறந்த பரிகாரமாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. உமையும், உமையொரு பாகனும், தம்மை வணங்குவோர் வாழ்வில் நலம் சிறக்க நல்லருள் புரிவது திண்ணம்...

இறையருளால்,

வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன், பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

3 கருத்துகள்:

  1. எல்லாம் பெற்று வாழ்வது
    எப்போதும் பாக்கியம், அதை

    அனுபவிப்பதே சௌபாக்கியம்
    அதில் மாற்றுக் கருத்தில்லையே

    வகுத்தான் வகுத்தத வகையல்லால் என
    வள்ளுவம் இதைத்தானே சொல்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அற்புதம் ஐயா!!.. மிக்க நன்றி!!..'தொகுப்பு' வலைப்பூவுக்கும் நேரமிருக்கும் போது வருகை தாருங்கள் ஐயா!!.. உயர்திரு.சுப்புத் தாத்தா, என் பாடலொன்றை மிக அருமையாகப் பாடி அளித்திருக்கிறார்!!..

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..