நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 30 ஜூலை, 2013

PARANKUNDARATHU PERUMAN (AADI KIRUTHIGAI (31/7/2013) SPECIAL POST).....பரங்குன்றத்துப் பெருமான்(ஆடி கிருத்திகை (31/7/2013) சிறப்புப் பதிவு)

பொன்னியல் கொன்றை பொறிகிளர் நாகம் புரிசடைத்
துன்னிய சோதியாகிய ஈசன் தொன்மறை
பன்னிய பாடல் ஆடலன்மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே". (சம்பந்தர்)

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். ஆடி கிருத்திகை சிறப்புப் பதிவுக்கென எழுத அமர்ந்த போது,   'நம் ஊரைப் பற்றி ஓர் தனிப்பதிவு இடலாமே...' என்று உறவினர் ஒருவரால் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இறைவன் திருவுளம் இது எனத் தோன்றவே இம்முறை, திருப்பரங்குன்றம் திருத்தலத்தைப் பற்றிய சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். சென்ற வருடம், ஆடி கிருத்திகை சிறப்புப் பதிவான கௌமாரம் பதிவிற்கு இங்கு சொடுக்கவும்.

மிக முன்பே பல்வேறு பதிவுகளில் பரங்குன்றம் மேவிய பிரானைப் பற்றி எழுதியிருந்தாலும் தனிப்பதிவு எனச் செய்ததில்லை. எழுத நினைத்து தகவல்களைச் சேகரித்தால் மலைத்துப் போனேன்.... ஒரு பதிவு நிச்சயம் போதாது. ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாய் எழுதி அளிக்கிறேன். பரங்குன்றநாதர் எனக்கு அந்த ஆற்றலை அருள்வாராக.

பெயர்க்காரணம் 
முதலில் 'திருப்பரங்குன்றம்' பெயர்க்காரணத்தைப் பார்க்கலாம். திரு + பரம் + குன்றம் எனப் பிரித்தால், பரம்பொருளாகிய எம்பெருமான் உறையும் குன்றம் எனப் பொருள்படும். 'திரு' என்பதை, சிறப்பைக் குறிக்கும் அடைமொழி எனவும் கொள்ளலாம். திரு, அதாவது அழியாப் பெருஞ்செல்வமாகிய பரம்பொருள் உறையும் குன்றம் எனவும் பொருள் கொள்ளலாம்.

திருப்பரங்குன்றம் கோயில் அமைப்பு:
இது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் முதலாவதாக அறியப்படுகின்றது.  மலையே சிவமாக அமைந்த பெருமையுடையது.

நம் உடலில் அமைந்துள்ள ஆதார சக்கரங்களுள் மூலாதார சக்கரத்திற்கான திருத்தலமாக விளங்குகிறது இது. முருகப்பெருமான், தெய்வானை அம்மை திருக்கல்யாணம் நடந்த திருத்தலம். ஆகையால் முருகன் எப்போதும் திருக்கல்யாண கோலத்தில், புன்னகை மிளிரும் திருவதனத்துடன், சந்தோஷம் பொங்கக் காட்சியளித்து, வேண்டுவோருக்கு வேண்டுவன அருளுகிறார். மன மகிழ்வே ஆனந்தமயமான‌ ஆண்டவனை அடைய முதல்படி.  ஆகவே, திருக்கல்யாணக் கோலத்தில் மன மகிழ்வோடு இருக்கும் கந்தப் பெருமான் அருளும் இத்தலம் மூலாதாரத்தலம் என்று கூறப்படுகின்றது.

இது குடைவரைக் கோயில் வகையைச் சேர்ந்தது. ஆகவே, இத்திருக்கோயிலில் பிரகாரம் இல்லை. மேலும் மூல மூர்த்தங்களுக்கு அபிஷேகம் இல்லை. வேலுக்கே அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றது.

இங்கே முருகப்பெருமான் மட்டும் தனிச்சந்நிதியில் அருளவில்லை. அருகே, அம்மை, அப்பன், மாமன், அண்ணன் என்று அனைவரோடும் சேர்ந்தே அருளுகிறார். தெற்கு நோக்கிய‌ மூலஸ்தானத்திற்குள் சென்றால், நடுநாயகமாக, மகிஷன் தலைமேல் விஷ்ணு துர்க்கை அருட்கோலம் தந்து ஆட்கொள்ளுகிறாள். அம்மையை வன துர்க்கை என்றும் கூறுவதுண்டு. ஆயினும் திருக்கரங்களில் சங்கு, சக்கரம் முதலியவை தாங்கி அருளுகின்றாள். துர்க்கையின் இடப்புறத்தில் விநாயகப் பெருமான் கற்பக விநாயகர் என்ற திருநாமத்தோடு அருளுகின்றார். விநாயகரின் வலது கீழ்ப்புறத்தில், அனுமன் அருளுவது சிறப்பு. ஆதி அந்த மூர்த்தியாக அமைந்தருளுகிறார்.

விநாயகரின் இடப்புறத்தில் கிழக்கு நோக்கி, சத்தியகிரீஸ்வரப் பெருமான் என்று வடமொழியிலும், பரங்கிரிநாதர் என்று தமிழிலும் போற்றப்படும் எம்பெருமான் லிங்க உருவில் அருளுகின்றார். அவருக்குப் பின் புடைப்புச் சிற்பமாக, சோமாஸ்கந்தர் அமைந்தருகின்றார். சம்பந்தப் பெருமானும், சுந்தரரும் பரங்கிரிநாதரை பதிகங்கள் பாடிப் போற்றியுள்ளனர். இறைவியின் திருநாமம் கோவர்த்தனாம்பிகை(ஆவுடைநாயகி). அம்மை, மூலஸ்தான மண்டபத்திற்கு கீழே,  தனி மண்டபத்தில் சந்நிதி கொண்டருளுகிறாள்.

சிவனாருக்கு நேர் எதிர்புறம், ஸ்ரீலக்ஷ்மி உடனுறை பவளக்கனிவாய்ப் பெருமாள் அருளுகின்றார்.

துர்க்கைக்கு வலப்புறம், வடிவேல் தாங்கி வரமருளும் முருகன், தெய்வானை, நாரத முனிவர் உடனிருக்க அருளுகிறார். முருகப் பெருமானின் திருக்கோலம் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. திருமணக் கோலமெனினும், முருகன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, அவரது இடப்புறம், தெய்வானை அம்மை, முழங்காலிட்டு அமர்ந்தருளுகிறார். அவ்வண்ணமே வலப்புறம் நாரத முனிவர் அமர்ந்திருக்கிறார்.

முருகனுக்கு மேலே இரு புறமும், சூரியர் சந்திரர், கீழே  ஐராவதம், முருகனின் வாகனங்களுள் ஒன்றான ஆடு (இது குறித்து, கீழே விளக்கியிருக்கிறேன்), அண்டராபரணர்,  உக்கிரமூர்த்தி என்னும் திருநாமங்களுடைய துவாரபாலகர் ஆகியோரின் திருவுருவங்கள் அமைந்துள்ளன.

மூலஸ்தான மண்டபத்தின் கீழ், அர்த்த மண்டபத்தின் இரு புறமும், ஸ்ரீமஹாலக்ஷ்மி, ஸ்ரீஅன்னபூரணி தேவி ஆகியோரின் சந்நிதானங்கள் இருக்கின்றன.

இத்திருத்தலத்தில் நவக்கிரகத்திற்கென தனியாக சந்நிதி இல்லை. ஆயினும், மூலஸ்தான மண்டபத்திற்கு கீழ்,   அர்த்த மண்டபத்தில், சுற்றாக அமைந்திருக்கும் இறை மூர்த்தங்களில், சூரியன், சந்திரன், தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் அருளுகின்றனர். செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகியோரின் அதிதேவதைகள் மூலஸ்தானத்தில் (முருகன், அம்பிகை, பெருமாள்) அருளுகிறார்கள். சனி பகவான், தனியாக  சந்நிதானம் கொண்டருளுகிறார். அவரருகில் ராகுபகவானும் கேது பகவானும் நாக உருவில் அருளுகிறார்கள்.

திருப்பரங்குன்றத்தின் சிறப்புகள்:

மூர்த்தி, தலம் தீர்த்தம் இம்மூன்றாலும் பிரசித்தி பெற்ற தலம் இது. இத்திருத்தலத்தில் தீர்த்தம் லக்ஷ்மி  தீர்த்தம் மற்றும் ஓம் வடிவில் அமைந்துள்ள, முருகப் பெருமான் தன் வேல் கொண்டு உருவாக்கிய சரவண ப் பொய்கை. இதற்கு பிரம்ம கூபம் என்னும் பெயரும் உண்டு. சரவணப் பொய்கை அருகே, நக்கீரர் பெருமானை முருகன் அடைத்து வைத்த 'நக்கீரர் குகை' உள்ளது. இங்கிருந்தே நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடி முருகனருள் பெற்றார் என்பர்.  ல‌க்ஷ்மி தீர்த்தம் திருக்கோவிலின் உள்ளேயே அமைந்துள்ளது. சரவணப் பொய்கை, கிரி வலப் பாதையில் அமைந்திருக்கிறது.

அக்னி ஸ்வரூபமாக முருகப்பெருமான் அருளுவதால் முருகப்பெருமானுக்கு அஜ(ஆடு)வாகனம் சிறப்பு.  இத்திருத்தலத்தில், தனிச் சந்நிதியில் அருளும் ஆறுமுகப் பெருமான் ஐம்பொன்னால் அமைந்த திருவுருவாயினும் அவரே அக்னி ஸ்வரூபம். வருடத்திற்கொரு முறை, வைகாசி விசாகப் பெருவிழாவின் போது மட்டும், அவரை கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் சாரி சாரியாக ஏந்தி வரும் பாற்குடங்களால் அபிஷேகித்து, குளிர்விக்கின்றனர்.

தேவேந்திரன் மகளாகிய தேவசேனையை(தெய்வானை)மணந்து, தேவசேனாபதியாக அருளுவதால், இந்திரனின் வாகனமான ஐராவதம் முருகப்பெருமானின் வாகனமாகவும் இருக்கிறது. இத்திருத்தலத்தின் பிரம்மோற்சவமான பங்குனித் திருவிழா ஐந்தாம் நாள், யானை வாகனம், கை பாரம் பிரசித்தி பெற்றது.

படம் நன்றி: தினமலர்.காம்
ஐந்தாம் நாள் விழாவின் போது, முருகப்பெருமானை, மிகுந்த எடையுடன் கூடிய வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளச் செய்து, பலர் சேர்ந்து, கைவரல்களை மட்டும் பயன்படுத்தி, யானை வாகனத்தைத் தூக்கி வருவார்கள். முருகப்பெருமானின்  திருக்கோவில் முன்பாக, யானை வாகனத்தை முன்னும் பின்னுமாக விரல்களால் தூக்கி ஆடியவாறே, 'வாகனம், வாகனம் கனத்த வாகனம்' என்று துவங்கும் பாடலை உற்சாகத்துடன் பாடுவார்கள். அதிக அளவிலான மக்கள் இந்தக் கோலாகலத்தைப் பார்க்கக் கூடுவார்கள்.

ஆறுமுகப் பெருமானின் அருகே நாயன்மார்களுடன் அமர்ந்தருளும் வித்யா கணபதி, மிகுந்த பிரசித்தி பெற்றவர். தேர்வுக்கு முன்னால் இவரை வழிபட, பெரும் சிறப்புகளுடன் கூடிய வெற்றி நிச்சயம். அது போல் சனிபகவானுக்கு அருகே அருளும் ஜூர தேவரும் மிகுந்த சாந்நித்யம் உடையவர். நோய் தீர்க்கும் பிரான்.

கோயிலின் க்ஷேத்ர பாலகர் கருப்பண்ண சாமி. இவருக்கு கட்டுச் சோறு கட்டி வைத்த பின்பே எந்த ஒரு நல்ல காரியமும் துவங்கும் வழக்கம் பல குடும்பங்களில் இருக்கிறது.  ஆஸ்தான மண்டபத்தில், முதலில் இவரையே தரிசிக்க வேண்டும்.

கோயில் வரலாறு
சிவனார், உமாதேவியாருக்கு பிரணவப் பொருளை உபதேசிக்கும் பொழுது, உமாதேவியாரின் மடியில் முருகன் அமர்ந்திருந்ததால், அவரும் பிரணவப் பொருளை அறிந்தார். இறைவனும் முருகனும் வேறு வேறு இல்லாவிட்டாலும், முறையாக உபதேசம் பெறாமல், பிரணவப் பொருளை அறிந்ததற்கு பிராயச்சித்தம் தேடி, இத்திருத்தலத்தில் முருகன் தவமியற்றினார். மைந்தனின் தவத்திற்கு மெச்சிய இறைவன், அவர் முன் தோன்றி அருளினார் (ஆகவே, இங்கு, முருகனைத் தரிசிப்பதற்கு முன்னால் சத்தியகிரீஸ்வரரைத் தரிசிக்க வேண்டும்).

பின், சூரனை வதைத்ததும், தேவசேனையை இத்திருத்தலத்திலேயே மணம் கொண்டருளினார் முருகப் பெருமான். கந்த புராணத்தோடு, நிரம்ப அழகிய தேசிகர் அருளிய திருப்பரங்கிரி புராணமும் இந்நிகழ்வுகளை அழகாக எடுத்துச் சொல்கிறது.

திருமுருகன் திருக்கோவிலாக பொதுவாக இது அறியப்பட்டாலும், வரலாறு கூறும் செய்திகளை கூர்ந்து நோக்கினால், இது சிவன் கோவிலாகவும் அதற்கு முன்னர் சக்தியின் திருத்தலமாகவும் விளங்கியிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு.

பிரகாரங்களில்லாத, அடுக்கடுக்காக அமைந்த மண்டபங்களுடன் (ஆஸ்தான மண்டபம், திருவாசி மண்டபம், கம்பத்தடி மண்டபம், அர்த்த மண்டபம், மூலஸ்தானம் என்கிற அமைப்பில்) கூடிய கட்டுமான அமைப்பு, சக்தியின் கோவில்களுக்கான பிரத்தியேக அமைப்பாகக் குறிப்பிடப்படுகின்றது. நடுநாயகமான தெய்வமாக துர்க்கை அமைந்திருப்பதும் இக்கருத்திற்கு வலுச்சேர்க்கிறது. ஆக இது முதலில் சக்தியின் திருக்கோவிலாக அமைந்து, பின் சைவம் தழைத்தோங்கிய காலத்தில் சிவனாரின் தலமாக மாறியிருக்கலாம்.

அது போல‌ சேவற்கொடியோனாகிய சுப்பிரமணியப் பெருமானின் இந்தத் தலத்தில், விழாக்கள் தோறும் சிவனாருக்குரிய ரிஷபக் கொடியே ஏற்றப்படுகின்றது.

சத்தியகிரீஸ்வரப் பெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமி தோறும் நடைபெறும் அன்னாபிஷேகம் காணக் கண் கோடி வேண்டும். சிவராத்திரி பெருவிழா பெரும் சிறப்பு. இத்திருக்கோயிலின் முன்பாக இருக்கும் சொக்க நாதர் கோயிலில் முதல் ஜாம பூஜை, கிரிவலப் பாதையில் இருக்கு பால்சுனை கண்ட நாதருக்கு இரண்டாம் ஜாமப் பூஜை, மலைமேல் இருக்கும் திருக்கோவில் ஸ்வாமிக்கு மூன்றாம் ஜாமப் பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. சத்தியகிரீசருக்கு நான்கு ஜாமங்களிலும் பூஜை நடைபெறுகிறது. இப்படி கோயிலைச் சுற்றிலும் சிவத்தலங்கள் அமைந்திருப்பது பெரும் சிறப்பே.

பால்சுனை கண்ட நாதர், சித்தர்க‌ள் வழிபடும் பெருமான். நானறிந்து இவர் நடத்திய ஒரு உன்னத அற்புதத்தை மிக விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். இறைவனின் சாந்நித்யத்தை கண்முன் கண்ட அனுபவம் அது.

தென்பரங்குன்றம்
முருகனுக்குரிய விழாக்களில், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, ஐப்பசி மாதம் கந்தசஷ்டி பெருவிழா, திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தைபூசம்(தெப்பத் திருவிழா), தை  கிருத்திகை, பங்குனி பிரம்மோற்சவம் போன்றவை பெரும் சிறப்பு. இவை தவிர, மாதந் தோறும் விழாக்கள் நடைபெறுகின்றன. தற்போது ஒவ்வொரு பௌர்ணமிக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர்.  ஆடி கிருத்திகை தினத்தில் பெருமானின் திருவீதி உலா சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவுக்கென்றே உள்ள மண்டபத்தில் மண்டகப்படியும் நடைபெறுகிறது.

மலையின் பின்னால், தென்பரங்குன்றத்தில், கல்வெட்டுக்களுடன் கூடிய குகைக் கோயில் உள்ளது. இறையுருவங்கள் சிதிலமான நிலையில் உள்ளன.

பங்குனி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில், முக்கிய நிகழ்வு, திருமுருகன் திருக்கல்யாணம். இதுவே  திருப்பரங்குன்றத்தில் பெரும் சிறப்பு வாய்ந்த நிகழ்வு. இங்கு பங்குனி சுவாதி நக்ஷத்திரத்தில் திருக்கல்யாணமும், விசாகத்தன்று தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. திருக்கல்யாண தினத்தில், சுவாமியும் அம்பாளும் சந்திப்பு மண்டபத்தில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரரை வரவேற்று, எதிர்கொண்டு கோவிலுக்கு அழைத்து வருகின்றனர். அதன் பின்பே திருமஞ்சனம் ஆகி கன்னி ஊஞ்சல் நடைபெறுகிறது.  இறைவனின் திருமுன்பாக திருக்கல்யாணம் நடைபெற்று, பின், அன்றிரவு, சுப்பிரமணியர் வெள்ளி ஹௌதா யானை வாகனத்திலும், தெய்வானை அம்மை ஆனந்தராயர் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி, பதினாறு கால் மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு பிரியா விடை கொடுக்கின்றனர். 'சொக்கர் ராத்தங்கார்' என்பதால் இரவே மதுரைக் கோயில் திரும்புகிறார். அற்புதமான நிகழ்வு இது.

திருப்பரங்குன்றம் அமைவிடம்:
மதுரையிலிருந்து எட்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருமங்கலம், திருநகர் செல்லும் பேருந்துகளும், திருப்பரங்குன்றம் வழி செல்லும். புகைவண்டி நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதிகள், தங்குமிடங்கள் உள்ளது.

அன்பர்கள் இயலும் போது  இத்திருத்தலம் சென்று, முருகப்பெருமானின் திருவருள் பெற வேண்டுகிறேன்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

வெற்றி பெறுவோம்!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

7 கருத்துகள்:

  1. ராஜபாளையத்தில் படித்துக் கொண்டிருந்த போது அடிக்கடி செல்ல வாய்ப்பிருந்தது... இப்போது உங்கள் பகிர்வின் மூலம் சென்று வந்த திருப்தி... நன்றிகள்...

    திருப்பரங்குன்றத்தின் பெயர்க்காரணம், கோயிலின் அமைப்பு, வரலாறு என அனைத்தும் சிறப்புகள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வலைப்பூவை மின்னஞ்சலில் தொடர்கிறேன். ஆதலால் கண்டிப்பாகப் பார்த்து விடுவேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. திருப்பரங்குன்றம் பற்றி
    சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றி அம்மா!!.

      நீக்கு
  4. ஆமாம்..
    அருமை..

    தொடர்ந்து நம்மை
    தொட்டு வ(ள)ரும் ஆடி பண்டிகையொட்டி

    ஆன்மிக சுற்றுலா
    அதில் திருப்பரங்குன்றமும்

    ஆடிகிருத்திகையன்று
    அய்யர் பழனியில்..

    அமாவாசைக்கு முன் இராமேஸ்வரம்
    ஆடி திருக்கல்யாண வைபவத்தை மனதில் எண்ணி

    இல்லம் திரும்புவதாக
    இப்படி ஒரு ஏற்பாடு

    இதனை தொடர்ந்து
    இந்தாண்டிற்கான காசி பயணம்

    அய்ப்பசி
    அண்ணாபிஷேகத்தில்

    ஆண்டுதோறும் கேதாரில் என
    அப்படி ஒரு பழக்கம்..

    முருகனை பற்றி சொன்னதும்
    முழுவதும் சொல்ல வைத்தது

    மன்னிக்க நீண்டு எழுதும்படி நேர்ந்தது இம்
    மன்றம் புனிதமானதல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வ‌ருகைக்கும் மிக நீண்ட கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி ஐயா!!. இந்தாண்டிற்கான தங்கள் புனித யாத்திரைகள் சிறப்புடன் அமைய என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..