நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 15 அக்டோபர், 2012

PART 3, NAVARATHIRI GOLU (16/10/2012 TO 24/10/2012)....நவராத்திரி கோலங்களும் நிவேதனங்களும்.



சென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சி.............


நவராத்திரி 9 தினங்களும் இச்சாசக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி ஸ்வரூபிணியான அம்பிகையைப் பூஜிப்பதால் கிடைக்கும் பலன்கள் அளவிடற்கரியது. தினமும் பூஜை செய்வதோடு, இயன்றவர்கள்,தாம்பூலத்தில் கீழ்க்கண்டவற்றை வைத்துத் தருவது சிறப்பு:

ஒன்பது நாளும், தாம்பூலத்தில், வாழை, மா, பலா, கொய்யா, மாதுளம்பழம், நாரத்தை, பேரீச்சம்பழம், திராட்சை முதலிய பழங்களை வைத்துத் தரலாம்.

இரண்டு, மூன்று வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, முறுக்கு, சூரணம், திரட்டுப்பால், வடகம், வறுவல் ஆகியவற்றைத் தந்து உண்ணச் செய்வது, தேவி ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியை மகிழ்வித்து எல்லா நலன்களையும் பெற்றுத் தரும். 

நவராத்திரி முதல் மூன்று தினங்கள் ஸ்ரீ துர்க்கையாகவும், அடுத்த மூன்று தினங்கள் ஸ்ரீ லக்ஷ்மியாகவும், நிறைவான மூன்று தினங்கள் மஹாசரஸ்வதியாகவும் அம்பிகை பூஜிக்கப்படுவதை நாம் அனைவரும் அறிவோம். நவராத்திரி முதல் நாள், அஸ்த நட்சத்திரம் சேர்ந்து வந்தால், அன்றைய தினம் அம்பிகையை பூஜிப்பது மிகுந்த புண்ணிய பலன்களைத் தரவல்லது என்று 'தேவி பாகவதம்' சொல்கிறது. மூல நட்சத்திரம், ஸ்ரீ சரஸ்வதிக்குரியதென்பதால் அன்றே சரஸ்வதி ஆவாஹனம் செய்வது வழக்கம்.

நவராத்திரி பூஜையின் போது ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரியின் அர்க்கள ஸ்தோத்திரம் சொல்வது மஹாஸ்தோத்திரம் படித்த நன்மையைத் தரும் என்று பலஸ்ருதி கூறுகிறது. ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.


பூஜையின் போது,புனுகு கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தன‌ம், அகில்பட்டை, பன்னீர் ஆகிய வாசனைப்பொருட்களை சமர்ப்பிப்பது சிறப்பு. இவையே 'அஷ்டகந்தம்' என்று சிறப்பிக்கப்படுகின்றன. இவற்றை, வீட்டுக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு தருவது பல மடங்கு நற்பலன்களைத் தரும். நவராத்திரி விரதம் இருக்க நினைப்பவர்கள், ஒரு வேளை மட்டும் உணவு அருந்தலாம். மஹா நவமி அன்று பால் பழம் மட்டு அருந்தி, விஜய தசமி அன்று, பூஜை முடித்த பிறகு, விருந்தினர்களுக்கு உணவளித்து விட்டு உணவு கொள்வது சிறப்பு.

நவராத்திரி ஒன்பது நாளும் போட வேண்டிய கோலங்கள், செய்ய வேண்டிய நிவேதனங்கள் இவற்றைப் பார்க்கலாம்.
 முத்தாரத்தி என் கைவண்ணத்தில்


   நாள்        கோலம்
முதல் நாள் அரிசி மாவினால் புள்ளிக் கோலம்.
இரண்டாம் நாள் கோதுமை மாவினால் கட்டங்கள் கோலம்.
மூன்றாம் நாள் முத்து கொண்டு மலர்க்கோலம் .
நான்காம் நாள் அக்ஷதையினால் படிக்கட்டுகள் கோலம்.
ஐந்தாம் நாள் கடலையினால்  பறவைக் கோலம்.

ஆறாம் நாள் துவரம் பருப்பினால் தேவியின் திருநாமம்.
ஏழாம் நாள் பூக்களினால் திட்டாணிக் கோலம்.
எட்டாம் நாள் காசுகளினால் பத்மக் கோலம்.
ஒன்பதாம் நாள்  கற்பூரத்தால் ஆயுதக் கோலம்.
இவற்றில் முத்துக்களினால் மலர்க்கோலம் இப்போது இயலாத ஒன்று (இயன்றவர்கள் செய்யலாம்). எனவே, அதற்குப் பதிலாக, பாசிமணி முத்துக்களாலோ, அல்லது ஊற வைத்த ஜவ்வரிசி கொண்டோ கோலமிடலாம்.     

ஒரு சுத்தமான தாம்பாளத்தில், கோலத்தை வரைந்து கொண்டு, காது குடையும் பட்சினால் (buds),  ஜவ்வரிசிப் பசையை லேசாகத் தடவ வேண்டும். பின், ஊற வைத்த ஜவ்வரிசியை கோணி ஊசியால் ஒவ்வொன்றாக எடுத்து கோலத்தின் மேல் வைக்க வேண்டும். நன்றாக ஒட்டிக் கொள்ளும். காய்ந்த பின், விருப்பமானால் கலர் கொண்டு அலங்கரிக்கலாம்.  இவ்வாறு மலர்க் கோலம் போட்டு, அதன் நடுவில் கற்பூரம் வைத்து ஏற்றி, ஆரத்தி காண்பிப்பது சிறப்பு.

திட்டாணி என்பது, மரத்தைச் சுற்றி அமைக்கப்படும் வட்ட வடிவ மேடை. அந்த வடிவத்தில் கோலமிடுவதே திட்டாணிக் கோலம்.

நவராத்திரி ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய நிவேதனங்களை, கிழமை வாரியாகவும், திதி வாரியாகவும் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். சௌகர்யப்படி செய்து கொள்ளவும். எந்த அட்டவணையைப் பின்பற்றினாலும் அதையே முறையாகப் பின்பற்றவும்.

கிழமை நிவேதனம்
திங்கள்   அக்காரவடிசல்
செவ்வாய்  ஜவ்வரிசி பாயசம்.
புதன் புதினா, கொத்துமல்லி சாதம்
வியாழன் எலுமிச்சை சாதம்.
வெள்ளி ரவா லட்டு, அவல் பாயசம்
சனி  எள் சாதம்
ஞாயிறு கோதுமை அல்வா/ போளி


இந்த வருடம், நவராத்திரி, செவ்வாயன்று தொடங்குகிறது. ஆகவே, மற்றொரு செவ்வாய் கிழமை மஹா நவமியன்று சரஸ்வதி பூஜை. அன்று முப்பருப்பு வடை, எல்லா வகையான‌ கலவை சாதங்கள் செய்வது வழக்கம். சில வீடுகளில்,  விஜய தசமியன்று, மஹாநைவேத்தியமும், வெண்ணை, இலை வடகம் ,சுக்கு வெந்நீரும் நிவேதனமாக வைக்கிறார்கள்.


திதி நிவேதனங்கள் சுண்டல்
பிரதமை நெய் சாதம், வெண்பொங்கல் மூக்குக் கடலை சுண்டல்
துவிதியை வெல்லப் பாயசம், சர்க்கரைப் பொங்கல் பாசிப்பருப்பு சுண்டல்
திரிதியை புளியோதரை, பால் பாயசம். கடலைப்பருப்பு சுண்டல்
சதுர்த்தி கற்கண்டு சாதம், பிடி கொழுக்கட்டை. மொச்சை சுண்டல்
பஞ்சமி தயிர் சாதம், பஞ்சாமிர்தம். வேர்க்கடலை சுண்டல்
ஷஷ்டி எள் சாதம், தேன் சேர்த்த நிவேதனம். எள் பொடி
சப்தமி தேங்காய் சாதம், பனங்கற்கண்டு சேர்த்த பால். (வெண்) காராமணி சுண்டல்
அஷ்டமி எலுமிச்சை சாதம், சொஜ்ஜி அப்பம். பாசிப்பயறு சுண்டல்
நவமி பால் சாதம், கோசுமல்லி, நீர் மோர் பட்டாணி சுண்டல்
தசமி நவதானிய வடை/அடை, மாவிளக்கு


இரண்டு நிவேதனங்கள் குறிப்பிடப்பட்ட இடத்தில், சௌகரியத்தைப் பொறுத்து, இரண்டுமோ அல்லது ஒன்று மட்டுமோ செய்து கொள்ளலாம்.

ஒன்பது நாளும் பூஜிக்க வேண்டிய பூக்கள், ரத்தினங்கள், அதற்கு மாற்றாகக் கொடுக்க வேண்டியவற்றைக் கீழே கொடுத்திருக்கிறேன். ரத்தினங்கள் கொடுப்பது இப்போது இயலாது. ஆகவே, அவை உங்கள் தகவலுக்காக. ரத்தினங்களுக்கு மாற்றுப் பொருட்களை, இயன்றவர்கள், ஒருவருக்கேனும் வைத்துக் கொடுப்பது நல்லது.

நாள்  மலர்கள்  ரத்தினங்கள்  ரத்தினங்களுக்குப் பதிலாக‌
முதல் நாள்
மல்லிகை, வில்வம் மாணிக்கம் சோழி
இரண்டாம் நாள்  துளசி, முல்லைப்பூ முத்து குன்றிமணி
மூன்றாம் நாள் செண்பகப்பூ, மரு பவழம் தட்டைப்பவளம்
நான்காம் நாள் ஜாதி மரகதம் கிளிஞ்சல்
ஐந்தாம் நாள் வாசனைத் தைலங்கள் கனக புஷ்பராகம் செப்பு
ஆறாம் நாள் பாரிஜாதம், செம்பருத்தி வைரம் பதுமை
ஏழாம் நாள் தும்பை நீலம் அம்மானை
எட்டாம் நாள் மருதோன்றி கோமேதகம் பந்து 
ஒன்பதாம் நாள். தாமரைப்பூ வைடூரியம் கழற்சிக்காய்.


அடுத்த பதிவில்,   இவ்வாறு நவராத்திரி தினங்களில், அம்பிகையை முறையாகப் பூஜிப்பதால்    ஏற்படும் நற்பலன்களைப் பார்க்கலாம்.

வெற்றி பெறுவோம்!!!!

2 கருத்துகள்:

  1. தங்கள் இல்ல கொலுவிற்கு
    தந்த அழைப்பிற்கு நன்றிகள்..

    தொடரட்டும்..
    தொடருகிறோம்

    பதிலளிநீக்கு
  2. ////அய்யர் said...
    தங்கள் இல்ல கொலுவிற்கு
    தந்த அழைப்பிற்கு நன்றிகள்..

    தொடரட்டும்..
    தொடருகிறோம்////

    தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..