நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

SRI UMA MAHESWARA VIRATHAM..(30/9/2012)....ஸ்ரீ உமா மஹேஸ்வர‌ விரதம்.

அங்கிங் கெனாதபடி  எங்கும் ப்ரகாசமாய்
      ஆனந்த பூர்த்தியாகி
  அருளடு  நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
      அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
       தழைத்ததெது மனவாக்கினில்
  தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
       தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
       எங்கணும் பெருவழக்காய்
  யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
       என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
       கருத்திற் கிசைந்ததுவே
  கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
       கருதிஅஞ் சலிசெய்குவாம்.  
(தாயுமானவ சுவாமிகள்,திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்)
உமையும் உமையொரு பாகனும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து நமக்கு இன்னருள் புரிகிறார்கள். சிவனாரின் மகிமையைப் போற்றி, அவர் அருள் பெற அரிய விரதங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று, புரட்டாசி, பௌர்ணமி தினத்தில் வரும் உமாமகேச்வர விரதம். அம்மையும் அப்பனுமாகி அண்டமெல்லாம் படைத்து, காத்து அருள்சுரந்தருளி, இம்மைக்கும் மறுமைக்கும் தோன்றாத் துணையாய் துலங்கி நிற்கும் உமாபதியின் மகிமை போற்றும் இவ்விரதத்தைக் கடைபிடித்து வேண்டுவன அடையலாம்.

அரியும் அரனும் ஒன்றே. எங்குமாகி நிறைந்த பரம்பொருளே, வெவ்வேறு வடிவம் தாங்கி நின்று நமக்கு அருள் புரிகிறது. நம் மனப்பான்மைக்கு ஏற்றவாறு, தாயாகவோ, தோழனாகவோ, நம் குழந்தையாகவோ, அவரைப் பாவித்து, வழிபட்டு, பிறவிப்பிணி அகற்றும் மார்க்கத்தை அறிதல் பொருட்டே இந்த வெவ்வேறு கோலங்கள் தாங்கி அருளும் கோலாகல விளையாட்டு.

இப்படி வெவ்வேறு வடிவங்கள் தாங்குகையில், ஒரு வடிவத்தை உயர்த்திக் கூறுவதும், மற்ற வடிவங்கள் அந்த வடிவத்தை வழிபாடு செய்ததாகக் கூறுவதும் அந்தக் குறிப்பிட்ட மார்க்கத்தில் நமக்குப் பிடிப்பு ஏற்பட்டு, ஒன்றையே 'சிக்'கெனப் பற்றி உயரவேண்டும் என்பதற்கே. இதற்கு 'நஹி நிந்தா ந்யாயம்' எனப் பெயர்,

இதைப் பற்றி, ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர், 'தெய்வத்தின் குரலில்' அருளியிருப்பதை அப்படியே தந்திருக்கிறேன்.

"ஒரே பரமாத்மா பல தெய்வரூபங்களை எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொருவருக்கும் தங்கள் இஷ்ட மூர்த்தியிடமே அசையாத நம்பிக்கை ஏற்படவேண்டுமல்லவா?"இதுதான் பரமாத்ம ஸ்வரூபம், பரப்பிரம்ம ஸ்வரூபம். இதற்கு மேல் ஒரு சக்தியில்லை"- என்ற உறுதியை அவர்களுக்கு ஊட்ட வேண்டுமல்லவா?அதற்காகத்தான் ஒவ்வொரு ரூபத்திலும் மற்ற ரூபங்களையெல்லாம்விடப் பெரியதாகத் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறது. மற்ற ரூபங்கள் தன்னை பூஜை பண்ணினதாகவும் தன்னிடம் தோற்றுப் போனதாகவும் காட்டியிருக்கிறது.

இவற்றிலே சைவமான புராணங்களில் சிவனின் உயர்வை மட்டுமே காட்டுகிற விஷயங்களாகத் தொகுத்துக் கொடுத்திருக்கும்; வைஷ்ணவமான புராணங்களில் விஷ்ணுவின் உத்கர்ஷத்தை (மேன்மையை) சொல்கிற ஸம்பவங்களை மட்டுமே சேர்த்துத் தந்திருக்கும். இப்படியே அம்பாள், ஸுப்ரமண்யர் முதலிய மற்ற தேவதைகளைப் பற்றிய ஒவ்வொரு புராணத்திலும் அது ஒன்றே முழுமுதல் தெய்வம் என்னும்படியான விருத்தாந்தங்களை மட்டும் கொடுத்திருக்கும்.

ஆக, உத்தேசம் மற்றவற்றை மட்டம் தட்டுவதில்லை. எது ஒருத்தனுக்கு உபாஸ்யமோ அதனிடமே இவன் அனன்ய பக்தி செலுத்தும்படி பண்ணவேண்டும் என்பதே உத்தேசம். அன்னியமாக இன்னொன்றிடம் பக்தி சிதறாமல் இருப்பதுதான் 'அனன்யம்' என்பது. இந்த தெய்வத்தை உயர்த்திக் காட்டி இதன் உபாஸகனை உயர்த்துவதுதான் லக்ஷ்யமேயன்றி, மற்றவற்றை நிந்திப்பது அல்ல. இதை 'நஹி நிந்தா நியாயம்'என்பார்கள்."
இதை ஒட்டியே,சிவனாரின் மகிமை விளக்கும் 'உமாமகேச்வர விரதத்தை'ப் பற்றிய புராணக் கதை அமைந்திருக்கிறது.இது, சிவரஹஸ்யத்தில் அமைந்துள்ளது.

புராணம்
துர்வாச முனிவர் ஒரு சிறந்த சிவ பக்தர். அத்ரி முனிவருக்கும் அனுசூயாதேவிக்கும், ருத்ராம்சமாக அவதரித்தவர். மற்றைய முனிவர்களைப் போல் அல்லாது, அவர் கோபம் கொண்டு சாபமிட்டால், அவர் தவ வலிமை கூடும்.

ஒரு முறை, அவர் சிவனாரை வழிபாடு செய்கையில், உமாபதியான ஈசன், தாம் அணிந்திருந்த வில்வமாலையை அவருக்கு அளித்து அருள் செய்தார். காரணமில்லாமலா இந்தக் காரியம்?. உலக நன்மையை உத்தேசித்து, ஹரியும் ஹரனும் இணைந்தொரு திருவிளையாடல் நடத்த திருவுளம் கொண்டதாலேயே இந்தச் செயல்.

அந்த மாலையை எடுத்துக் கொண்டு வைகுந்தம் ஏகினார் முனிவர். ஸ்ரீ மஹாவிஷ்ணுவிடம் அந்த மாலையை சமர்ப்பித்தார். அவரோ, அதை வாங்கி, கருடன் மேல் எறிய, கோபம் கொண்ட துர்வாசர், "செல்வத்திற்கெல்லாம் தலைவியாகிய ஸ்ரீ மஹாலக்ஷ்மி, உமக்கு மனைவியாக கிடைத்ததால் அல்லவா இந்தக் கர்வம் உமக்கு?. உம்முடைய லக்ஷ்மி பாற்கடலில் வீழ்வாள். கருடனும் மறைவான்' என சாபம் கொடுத்தார். அவ்வாறே ஆயிற்று.

'ஸ்ரீ' இல்லாத ஸ்ரீ வைகுந்தம் எப்படி இருக்கும்?. விஷ்ணு மிக மனத்துயருக்கு ஆளானார். காட்டிலெங்கும் சுற்றி அலைந்தார். அப்போது அவர் முன், கௌதம‌முனிவரின் ஆசிரமம் தென்பட்டது. அவரை அடைந்து நடந்ததைக் கூறினார். உடனே, கௌதம முனிவர்,' ஸ்ரீ உமாமகேச்வர விரத' மகிமையை அவருக்கு உபதேசித்து, பூஜா விதிகளையும் கூறினார்.

மஹாவிஷ்ணுவும், இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து, சிவனருளால், தாம் இழந்த லக்ஷ்மி தேவியையும், கருடபகவானையும் மீண்டும் பெற்று மகிழ்ந்தார். அவரைப் பின்பற்றி இந்திராதி தேவர்களும், முனிவர்களும், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, சிவனருள் பெற்று மகிழ்ந்தனர்.

இந்த விரதம் 16 ஆண்டுகள் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும். அதாவது, 16 ஆண்டுகள், ஒவ்வொரு வருடமும் புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று கடைப்பிடிக்க வேண்டும். சிலர் விரதம் எடுத்த தினத்திலேயே முடித்தும் விடுகிறார்கள்.

சிவனாரை முறைப்படி, விரதமிருந்து பூஜித்து வரவேண்டும். இந்த விரதம் எடுத்து விட்டால், சோமவாரம், பிரதோஷம், சிவராத்திரி போன்ற விரதங்களை எடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த விரத்தை எடுப்பதாலேயே, அவற்றின் பலன்களும் சேர்த்து அடையலாம் என்று கூறப்படுகிறது. ரிஷி பஞ்சமி விரதம் போலவே,இது சற்று, விஸ்தாரமான சம்பிரதாயங்களை உள்ளடக்கியது. விரத தினத்தன்று, முறைப்படி, காலை சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பிறகு, கலசத்தில், ஸ்ரீ உமா மகேஸ்வரரை ஆவாஹனம் செய்து ஷோடசோபசார பூஜையைச் செய்ய வேண்டும்.

ஒரு செம்பு அல்லது குடத்தில், நூல் சுற்றி, அதில் நீர்  நிரப்பி, ஏலம், பன்னீர், பச்சைக் கற்பூரம், போன்ற வாசனைக் கலசத் திரவியங்களைச் சேர்த்து, அதன் மேல் மாவிலையை வைத்து, மஞ்சள் பூசிய தேங்காயை வைக்கவும். கலசத்துக்கு வஸ்திரம் சாற்றி, மலர் மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்.
\
கலசத்தின் முக்கியத்துவம்:
ஒவ்வொரு பூஜைக்கும், கலசம் பிரதான இடம் வகிப்பதைப் பார்த்திருப்பீர்கள். கலசம் என்பது வெறும் நீர் நிரப்பிய குடம் அல்ல. எங்கும் நிறைந்த பரம்பொருளின் உருவகமே அது. குடம் உடலாகவும், நீர்,இரத்தமாகவும், மாவிலை சிகை(தலைமுடி)யாகவும், அதன் மேல் வைக்கப்படும் தேங்காய், தலையாகவும், குடத்தின் மேல் சுற்றப்படும் நூல் நாடி நரம்புகளாகவும்  உருவகப்படுத்தப்படுகிறது. கலசத்தை ஸ்தாபனம் செய்து, மந்திரபூர்வமாகப் பூஜை செய்யும் போது மந்திரத்தின் அதிர்வலைகளை, நீர் உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. ஆகவே, இம்மாதிரி பூஜைகள் நிறைவடைந்தவுடன், அந்த நீரை பூஜித்தவர் அபிஷேகம் செய்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது. அப்போது அந்த மந்திர அதிர்வலைகள் நீர் மூலமாக‌  பூஜித்தவரைச் சேர்ந்து, அவருக்கு நலன்களைச் செய்யும்.

கர்ப்பமாக இருப்பவர்களுக்கு, சீமந்தத்தன்று, இது போல் ஜபித்து,அபிஷேகம் செய்யும் வழக்கமும் அறிந்திருப்பீர்கள். குழந்தை மந்திர அதிர்வலைகள் மூலமாக நலம் பல பெற்று பல்லாண்டு வாழ வேண்டியே இம்மாதிரி செய்கிறோம்.

இந்த பூஜையிலும் நோன்புச் சரடு முக்கியத்துவம் பெறுகிறது. பதினைந்து முடிச்சுக்களிட்ட நோன்புச் சரட்டை, பூஜித்து, விரதம் இருப்பவர் அணிந்து கொள்ள வேண்டும். மறு வருடம் தான், புதிய சரட்டை அணிந்து கொண்டு, பழைய சரட்டை எடுக்க வேண்டும்.
பூஜை:
நோன்புச் சரட்டை கலசத்தின் மேல் வைத்து, கலசத்திற்கு ஷோடசோபசார பூஜைகள் செய்ய வேண்டும். சிலர் உமா மகேஸ்வரரின் பிரதிமையைச் செய்து, அதற்கும் பூஜைகள் செய்து, பதினாறாவது வருட முடிவில், அந்தப் பிரதிமையை, அருகிலிருக்கும் சிவாலயத்திற்கு அர்ப்பணம் செய்து விடுகிறார்கள். பின் சரட்டிற்கு பூஜை செய்து, கலசத்திற்கு எதிரில் ஒரு மஞ்சள் பிம்பத்தில் நந்திகேஸ்வரரைப் பூஜிக்க வேண்டும். பின், சரட்டை பக்தியுடன் அணிந்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

நிவேதனங்களாக இயன்றதை வைக்கலாம். பதினாறு வருடங்கள் பூஜை செய்வதாக இருந்தால் முதல் வருடம் அதிரசம் கண்டிப்பாகச் செய்யவேண்டும். மற்ற வருடங்கள் இயன்றதைச் செய்யலாம்.

பூஜை முடிவில் பாராயணம் செய்ய ஸ்ரீ உமா மகேஸ்வர ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.

பூஜை  நிறைவடைந்ததும், பதினாறு வைதீகர்களுக்கு வாயன தானம் செய்ய வேண்டும். அதற்கு, பதினாறு மூங்கில் தட்டுக்கள் அல்லது ட்ரேக்கள் வாங்கி, அதில், இயன்ற பழங்கள், ஒரு இனிப்புப் பட்சணம், ஒரு உப்புப் பட்சணம், தேங்காய், வெற்றிலை, பாக்குத் தாம்பூலம், தட்சணை முதலியவற்றை வைத்துக் கொடுக்க வேண்டும். தட்டுக்கள் வாங்க வசதிப்படாவிட்டால் தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்து விட்டு, தாம்பாளத்தை எடுத்துக் கொண்டுவிடலாம்.பிறகு, அவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் உணவளிக்க வேண்டும். விரதம் எடுத்தவர்கள், பால், பழம் மட்டும் உட்கொள்ளலாம்.
விரதத்தை நிறைவு செய்யும் முறை:
பதினாறாவது வருட முடிவில், பதினாறு கலசங்களை ஸ்தாபனம் செய்து, அவற்றின் மேல் வெள்ளித் தகட்டாலான பிரதிமைகளை வைத்து, நான்கு கால பூஜைகளைச் செய்ய வேண்டும். நான்கு கால பூஜைகளுக்கும், இயன்ற நிவேதனங்களைச் செய்து நைவேத்தியம் செய்த பிறகு, நிவேதனங்களை, நான்கு வைதீகர்களுக்குத் தானம் செய்வது சிறப்பு. மறு நாள் புனர் பூஜை செய்து, கலச நீரை அபிஷேகம் செய்து கொண்ட பிறகு, கலசங்களை 16 வைதீகர்களுக்குத் தானம் செய்ய வேண்டும். பின், சௌகரியம்போல், பஞ்சதானம், தச தானம் இவற்றைச் செய்யலாம். சிலர் விசேஷமாக, பதினாறு வித தானம் செய்கிறார்கள். அவரவர் வசதியைப் பொறுத்துச் செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு வருட முடிவிலும், தம்பதி பூஜை செய்வது சிறப்பு. சிலர் பதினாறாவது வருட முடிவில், பதினாறு தம்பதிகளை வைத்துப் பூஜிப்பார்கள். இயலாதவர்கள், முதல் வருடத்திலும், நிறைவு செய்யும் வருடத்திலும் தம்பதி பூஜையைச் செய்யலாம். (தானங்களுக்கும் தம்பதி பூஜைக்கும் தேவையானவை, ரிஷி பஞ்சமி விரதத்திற்கு செய்வது போல்தான்).

பின், விரதத்தில் பங்குபெற்றோர், விருந்தினர்கள் அனைவரும் உணவு உண்ட பிறகு, விரதம்  எடுத்தவர்கள் உணவு உண்ணலாம். உமா மகேஸ்வர விரதத்தைக் கடைப்பிடித்து, ஸ்ரீ உமா மகேஸ்வரரைப் பூஜித்து,


வெற்றி பெறுவோம்!!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..