நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 16 ஜூன், 2012

கடல் சம்பந்தப்பட்ட சில புராண நிகழ்வுகள்



நான் எழுதி, திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை',மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திரு.SP.VR.சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றி.


'ஆழி சூழ் உலகு'என்றும் 'நீரின்றி அமையாது உலகு' என்றும் போற்றப்படுகின்ற கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் தானே நாமும் வாழ்கிறோம்!!!. கடலை மையமாக வைத்து நடந்த காவியச் சம்பவங்கள், புராணங்கள் எத்தனை......எத்தனை. அகத்திய மாமுனி கடலைக் குடித்த கதை நாம் யாவரும் அறிந்ததே.

நாரம் என்றால் நீர். அயனம் என்றால் மிதப்பது. பகவான் ஸ்ரீமந் நாராயணன் பாற்கடலில் பள்ளிகொண்ட காரணத்தாலேயே அவருக்கு அப்பெயர் ஏற்பட்டது.

இப்படி எத்தனை......எத்தனை, சிறப்புகள்?. நாம் இக்கட்டுரையில் கடல் சம்பந்தப்பட்ட சில புராண நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

திருமாலின் பத்து அவதாரங்களுக்கும் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
    • மச்ச அவதாரம் --- (மீன், நீரில் வாழ்வது)
    • கூர்ம அவதாரம் --- (ஆமை, நீரிலும் நிலத்திலும் வாழ்வது)
    • வராக அவதாரம் --- ( பன்றி, நிலத்தில் வாழ்வது)
    • நரசிம்ம அவதாரம் --- ( மனிதனும், மிருகமும் கலந்த தோற்றம்)
    • வாமன அவதாரம் --- (குள்ள உருவமுள்ள மனிதன்)
    • பரசுராம அவதாரம் --- ( ரஜோகுணம், கோபமுள்ள மனிதன்)
    • பலராம‌ அவதாரம் --- (சாதாரண மனிதன்)
    • ஸ்ரீராம அவதாரம் --- (சத்வ குணமுள்ள தெய்வீகமான மனிதன்)
    • ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் --- ( தெய்வத்தன்மை நிறைந்த‌ பரிபூரண அவதாரம்).
திருமாலின் முதல் அவதாரமான மச்ச அவதாரம், பிரளய காலத்தில், கடலில் நிகழ்ந்தது.

சோமுகாசுரன் என்ற அசுரன் அக்கினி மத்தியிலே சிவனை வேண்டி தவம் செய்து வரங்கள் பல பெற்றவன். அயக்கிரீவன் என்பது இவனது மற்றொரு பெயர். ஒரு நாள் சத்தியலோகத்தில், பிரம்மதேவன் சோர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த சமயத்தில் அவர் வாயிலிருந்து வேதங்கள் தாமாக வெளிவந்து கொண்டிருந்ததைப் பார்த்த அவன், வேதங்களைத் தன் யோகசித்தியினால் கவர்ந்து கொண்டுபோய் கடலடியில் ஒளித்து வைத்தான். வேதங்கள் இல்லாமல், பிரம்மன் சிருஷ்டிகள் செய்ய இயலாது.

தேவர்கள் இதனைக் கண்டு பயந்து போய், திருமாலிடம் முறையிட்டனர். அவர், தாம் அவர்களைக் காப்பதாக, அபயம் அளித்தார்.

அப்போது பிரளய காலம். கடல்தாய் கடவுள் ஆணைப்படி, பரந்த இவ்வுலகங்களை தன் அலைக்கரத்தால் அணைக்கத் துவங்கினாள். அனைத்துலகங்களும் மூழ்கத்துவங்கின. அப்போது, திராவிட (தமிழ்) தேசத்தின் அரசனாக இருந்தவன் சத்தியவிரதன் என்னும் திருமால் பக்தன்.



இவன் ஒரு நாள் 'கிருதமாலா' என்னும் ஆற்றில் அர்க்கியம் விட்டுக் கொண்டிருந்தான். அவன் நீரை கையில்அள்ளி அர்க்கியம் விடும் போது ஒரு மீன்குஞ்சு அவன் கையில் வந்தது. உடனே அவன், அதை நீரில் விட்டு விட்டு, திரும்பவும் நீரை முகந்தான். மீண்டும் அவன் கையில் மீன் குஞ்சு!!!!. அது மன்னனிடம் பேசியது!!!!. "மன்னா, உன் உயர்ந்த குணங்களை நான் அறிவேன். நீ என்னைத் திரும்பவும் ஆற்றில் விட்டால், பல பெரிய மீன்கள் என்னை விழுங்கிவிடும். ஆகவே என்னைத் திரும்பவும் ஆற்றில் விடாதே!!" என்றது.

அதிசயித்த மன்னன். அதைத் தன் கமண்டலத்துக்குள் விட்டுக் கொண்டு, தன் அரண்மனை வந்தான். வந்ததும் அதிர்ச்சி, அந்த மீன், அவன் கமண்டலத்தை அடைக்கும் அளவு பெரிதாகியிருந்தது. உடனே அதை ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் விட்டான். உடனே அது மேலும் பெரிதாகி, பாத்திரத்தையும் அடைத்துக்கொண்டது.உடனே அதை ஒரு பெரிய கிணற்றில் விட்டான். அது மேலும் வளர்ந்து பெரிதாகியது. பின், தன் வீரர்கள் துணையுடன் அதை ஒரு குளத்திலும் பின் ஒரு ஏரியிலும் விட்டான். அவற்றையும் அடைத்துக் கொண்டு மீன் வளர்ந்தது.

இது, 'கடவுளின் சோதனை' என்று கருதிய மன்னன், பின் அதைக் கொண்டு போய் சமுத்திரத்தில் விட்டான். அந்த மீன் மிகப்பெரும் உருவம் கொண்டு வளர்ந்தது.



"இது சாதாரண மீன் அல்ல" என்று உணர்ந்த அவன், மீனாக வந்தது இறைவனே என உணர்ந்து வணங்கினான்.

வானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம், வலியுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்டா மரைக்கண்ணன்,
ஆனா வுருவி லானாயன் அவனை யம்மா விளைவயலுள்,
கானார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே ------- எட்டாம் திருமொழி

என்று திருமங்கையாழ்வார் மச்சாவதாரம் எடுத்த திருமாலைப் பாடுகிறார்.

'இறைவனே, தாங்கள் தங்கள் தொண்டனுக்கு (எனக்கு) இடும் கட்டளை என்ன?' என்று சத்தியவிரதன் கேட்க,

திருமால்,"இப்பொழுது பிரளய காலம். பூ மண்டலத்தை நீர் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று முதல் ஏழாம் நாள், நீ வாழும் இடமும் நீரில் மூழ்கிவிடும். அதனால், நான் சொல்வதைப் போல் செய்வாயாக. உன் நாட்டில் வாழும், முனிவர்கள், குருமார்கள், பற்பல தானிய வித்துக்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள் மற்றும் உன் குலத்தோர் யாவரையும் விரைந்து ஒன்று கூட்டுவாய். உன் முன் பெரிய தோணி ஒன்று தோன்றும். அதில் அனைவரையும் ஏற்றி, அனைத்துப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு ஏறுவாயாக. அத்தோணி பிரளய வெள்ளத்திலும் மிதக்கும் தன்மை உடையது. பிரளய காலத்தில் இருள் சூழ்ந்திருக்கும். எனவே அந்தத் தோணியில் சப்த ரிஷி களும் ஒளிவடிவமாக இருந்து வழிகாட்டுவார்கள். பின், நான் மீண்டும் தோன்றுவேன். என் மூக்கில் உள்ள கொம்பில் அந்தத் தோணியைக் கட்டுவாயாக. பிரம்மனின் இரவுப்பொழுது முழுவதும் நான் தோணியுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பேன். அதன்பின் என் பெருமையை நீ அறிவாய்", என்றார்.

(சப்த ரிஷிகள்:அத்திரி, ப்ருகு, குப்தர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கீரசர் ஆகிய ஏழு முனிவர்களும் சப்த ரிஷிகள் ஆவர்).

சத்தியவிரதன் அவர் சொன்னது போல் செய்துவிட்டுத் தோணிக்காக, கடற்கரையில் காத்திருந்தான்.

'ஏ ,சமுத்திரமே...... பிரளய காலத்தில் நீயா உலகத்தை மூழ்கடிக்கப் போகிறாய் ? '

நீ அதிகாலையில் அமைதியின் அழகு
அந்திமாலையில் அலையோடு அழகு
நள்ளிரவில் ஆர்ப்பரிப்போடு அழகு (கவிஞர் தனுசு)

நீ எப்போது வெகுண்டு பொங்குவாய் என்று யார் அறிவார்? என்று நினைத்திருந்த வேளையில் அழகான பெரிய தோணி ஒன்று தோன்றியது. அதில் அனைத்தையும் ஏற்றியதும், மீண்டும் இறைவன் தங்க நிற‌த் திமிங்கலமாக‌த் தோன்றினார். அவர் உடலில் கொம்பு போல் ஒன்று நீண்டு இருந்தது..அவர் கூறியபடி, அந்தக் கொம்பில், தோணியைச் சேர்த்துக் கட்டியதும், கடல் பொங்கத் துவங்கியது. மீனாக இருந்த பரமன் அந்தத் தோணியோடு, வெள்ளத்தில் மிதந்தபடி, மச்சாவதாரப் புராணத்தை சத்திய விரதனுக்கு உபதேசித்தார்.

பிரம்மனின் இரவுக்காலம் கழிந்து இருள் நீங்கி, மழையும் நின்றது. கடலும் ஓய்ந்தது.

பிரம்மனின் இரவுக்காலம் பற்றி இங்கே ஒரு தகவல் :

கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இவை நான்கும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம். ஒரு மகாயுகம் 43,20,000 மனித வருடங்கள். ஒரு மன்வந்திரம் 71 சதுர்யுகங்களை உள்ளடக்கியது. 14 மன்வந்திரங்கள் ஒரு கல்பம். அதாவது, ஒரு கல்பம் என்பது ஆயிரம் சதுர்யுகம். ஆயிரம் சதுர்யுகம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு பகல். அதேபோல், ஆயிரம் சதுர்யுகம் சேர்ந்தது ஒரு இரவு. அவருக்கும் (அவர் கணக்கில்) 365 நாள் ஒரு வருடம். 100 வருடம் அவர் ஆயுள்.

ஸஹஸ்ரயுகபர்யந்தமஹர்யத்ப்ரஹ்மணோ விது:
ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தேऽஹோராத்ரவிதோ ஜநா: (பகவத் கீதை, எட்டாம் அத்தியாயம், அக்ஷரப்ரஹ்ம யோகம்)

ஒவ்வொரு மன்வந்திரமும் ஒரு மனுவின் ஆதிபத்தியத்தில் நடைபெறுகிறது. 

நாம் இருப்பது வைவஸ்வத மன்வந்திரத்தில் நான்கு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் வருடங்கள் கொண்ட கலியுகத்தில்.

சத்தியவிரதனே, திருமாலின் கட்டளைப்படி, வைவஸ்வத மனுவாக ஆனான்.


மச்சாவதார மூர்த்தி தோணியைக் கரை சேர்த்தார். பிரம்மன் உறக்கம் நீங்கி எழுந்து, வேதங்கள் களவு போனதை அறிந்து நாராயணனை வேண்ட, மச்சாவதார மூர்த்தியாக இருந்த மஹாவிஷ்ணு அந்த உருவிலேயே சோமுகாசுரனுடன் போர் புரிந்து வென்று, வேதங்களை மீட்டுக் கொடுத்து, பிரம்மனை மீண்டும் சிருஷ்டியைத் தொடங்கப் பணித்தார்.

சத்திய விரதன் பாண்டிய மன்னனெனவும் அவன் காலத்தில் மச்சாவதாரம் நிகழ்ந்ததாலேயே பாண்டியர்கள் கொடிச் சின்னம் மீன் ஆயிற்று எனவும் ஒரு கூற்று உண்டு.

இந்தப் புராணம் ,பைபிளில் வரும் நோவாவின் கதையை ஒத்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இறைவன் ஒருவனே. அதனால், அவரைப் பற்றிய செய்திகளும் ஒன்றுபோல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

இன்னொரு நிகழ்வைப் பார்க்கலாம்.


அழகிய திருமதுரை. மீனாட்சிஅம்மைக்கும், சோமசுந்தரக்கடவுளுக்கும் மகனாகப் பிறந்த ஸ்ரீ உக்கிரபாண்டியனின் ஆட்சிக்காலம். 100 அஸ்வமேத யாகம் செய்தால் இந்திரப் பதவி கிடைக்கும். மன்னன், 96 யாகங்களை முடித்திருந்தான். பதவி ஆசை அவனுக்கில்லை. ஆனாலும், இந்திரப் பதவி கிடைத்தால், மாதம் மும்மாரி பொழிய வைத்து மக்களை வாழ்விக்கலாமே என்ற நல்லெண்ணம் அவனுக்கு. இந்திரன் சினம் கொண்டான். வருணனை அழைத்து "ஏழு கடல்களையும்பொங்கச் செய்து, மதுரையை அழிக்கச் சொன்னான்.

பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என
இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள்
ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து
அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்
(திருவிளையாடற்புராணம், கடல் சுவற வேல் விடுத்த படலம்)

ஏழு கடல்கள் (புராண காலத்தில்):

1. பாற்கடல் 2. கருப்பஞ்சாற்றுக்கடல் (இக்ஷு சமுத்திரம் ) 3. லவண(உப்பு) சமுத்திரம் 4. சுரா (கள்) சமுத்திரம் 5. சர்ப்பி (நெய்) சமுத்திரம்
6.ததி (தயிர்) சமுத்திரம் 7. சுத்தோதக (நல்ல நீர் ) சமுத்திரம்.

ஏழு கடல்கள் ( தற்காலத்தில் ):

1. ஆர்க்டிக் 2. அண்டார்டிக்(சதர்ன்) 3.வடக்கு பசிஃபிக் 4.தெற்கு பசிஃபிக் 5.வடக்கு அட்லாண்டிக் 6.தெற்கு அட்லாண்டிக் 7.இந்துமகா சமுத்திரம்.


மன்னனின் கனவில் சித்தர் உருவில் வந்த இறைவன், இந்திரன் சூழ்ச்சியை உணர்த்த, திடுக்கிட்டு எழுந்த மன்னன், அமைச்சர் மற்றும் படைகளுடன் சென்று பார்க்கும்போது, ஏழு கடல்களும் உக்கிரமாகப் பொங்கி மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தன. உடனே தன் வேலை எடுத்து எறிந்தான். அந்த வேல் முனை பட்டதும் ஏழு கடல்களும் வற்றிப் போயின்.

எடுத்த வேல் வலம் திரித்து எறிந்த வேலை வேல் முனை
மடுத்த வேலை சுறெனவ் அறந்தும் ஆன வலி கெட
அடுத்து வேரி வாகை இன்றி அடி வணங்கும் தெவ்வரைக்
கடுத்த வேல் வலான் கணைக் காலின் மட்டது ஆனதே.
(திருவிளையாடற்புராணம்)

மக்கள் மகிழ்ந்து மன்னனையும் மகேசனையும் போற்றினர்.

செல்வத் திருமகளான மகாலக்ஷ்மியின் மலர் மாலையை துர்வாச முனிவர் தரும்போது அதை இந்திரன் மதிக்கவில்லை. மகரிஷியின் சாபத்தால் செல்வங்கள்அனைத்தையும் இழந்தான் தேவேந்திரன். காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம், அரம்பையர் அனைத்தும் அவனை விட்டகன்றன. நவநிதி களும் மண்துகளாயின. அசுரர்கள் ஆதிக்கம் ஓங்கியது.

நவநிதிகள்:  
சங்கநிதி , பதுமநிதி , மஹாபதும நிதி , மகரநிதி , கச்சபநிதி, நந்த நிதி, நீல நிதி, கர்வ நிதி, மற்றும் முகுட நிதி.

பிரம்மனின் யோசனைப்படி, தேவர்களும் தேவேந்திரனும் மஹாவிஷ்ணுவைச் சரணடைந்தனர். அவர் மந்திரகிரியை மத்தாகவும் அஷ்டமாநாகங்களில் தலையாயதான வாசுகியைக் கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடையும்படி சொன்னார்.

அஷ்டமா நாகங்கள்:
ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், தனஞ்செயன், காளியன், தாகபுராணன், புஞ்சன்


மேலும் 66 கோடி அசுரர்களையும் துணையாகக் கொள்ளுமாறு சொன்னார். சாகாநிலை தரக் கூடிய அமுதம் கிடைக்கும் என்றதும் அசுரர்கள் ஒப்புக் கொண்டனர். தேவர்கள் வாசுகியின் வால்பக்கமும் அசுரர்கள் தலைப்பக்கமும் பிடித்துக் கொள்ள, பாற்கடல் கடையப் பெற்றது. வாசுகியின் மூச்சுக்காற்றால்,திணறிய அசுரர்கள் பலம் குன்றியதால், மந்திரகிரி ஒரு பக்கமாகச் சாயத்துவங்க, திருமால், பொங்கி ஆர்ப்பரிக்கும் கடலின் உட்புகுந்து, கூர்மாவதாரம் எடுத்து, மந்திரகிரியைத்தன் முதுகில் தாங்கினார்.


மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக அங்கோர் வரைநட்டு
இலங்கு சோதி யாரமுதம் எய்து மளவோர் ஆமையாய்,
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை,
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.

என்று திருமங்கையாழ்வார் கூர்மாவதார மஹாவிஷ்ணுவைப் பாடுகிறார். மேலும் அவர் தன் சிறிய திருமடலில்,

"ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காராய் வரை நட்டு நாகம் கயிறாக
பேராமல் தாங்கிக் கடைந்தான்" என்று போற்றுகிறார்.

பாற்கடலில் இருந்து முதலில் ஆலாகால விஷம் தோன்ற, பரம தயாளனான சிவபெருமான், தன் கருணையால்,அதைப் பருகினார். உமாதேவி, சிவன் கழுத்தில் கைவைத்து, விஷத்தை நிறுத்தியதால் அவருக்கு "நீலகண்டன்"என்ற பெயர் ஏற்பட்டது.

பின், காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம், அரம்பையர், சங்கநிதி, பதுமநிதி, முதலிய அனைத்து செல்வங்களும் வெளிவந்து இந்திரனை அடைந்தன. பின்னர் சந்திர பகவான,தோன்றினார்.. அதன் பின், பேரொளியுடன் கூடிய அழகுமிக்க வடிவம் தாங்கி, உலகனைத்திற்கும் அன்னையாகிய ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றினாள். தேவர்கள் ஸ்ரீ ஸுக்தத்தால் அவளைத் துதித்தனர். "அஷ்டதிக்கஜங்கள்" புனித நீரால் அன்னையை அபிஷேகம் செய்தன.


அஷ்டதிக்கஜங்கள்:
கஜம் என்றால் யானை. எட்டுத் திசைகளிலும் இப்பூவுலகை யானைகள் தாங்குவதாக ஐதீகம். அவையாவன, ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம்.


சமுத்திரமும், விஸ்வகர்மாவும் தாமரை மாலையையும், ஆபரணங்களையும் தேவிக்கு அளித்தனர். ஸ்ரீமஹாலக்ஷ்மி , ஸ்ரீமந் நாராயண னுக்கு மாலையிட்டு, அவர் திருமார்பில் குடிபுகுந்தாள். தேவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

(மஹாகவி பாரதியாரின் அலைமகள் துதிப்பாடலுக்கு இங்கு சொடுக்கவும்)

தேவேந்திரன், இழந்த செல்வமனைத்தும் திருமகள் அருளால் பெற்று, பேரானந்தமடைந்தான். நன்றிப் பெருக்கில் திருமகளை வணங்கி,

இத்தனை தந்தென்னை காப்பவளே - இனி
எத்துனை நான் இங்கே கேட்பது?
என் உடல் பொருள் ஆவி அத்தனையும்
உன் தடம் அருள் தூவி நிற்பதன்றோ. (கவிஞர் தனுசு)


என்று ஆனந்தக் கண்ணீர் பெருக ஸ்ரீலக்ஷ்மியையும் ஸ்ரீநாராயணனையும் வணங்கினான்.

வெற்றி பெறுவோம்!!!!!

3 கருத்துகள்:

  1. அறிய வேண்டிய‌ தெளிவுகள் நிறைந்த பதிவு

    பதிலளிநீக்கு
  2. அறிய வேண்டிய‌ தெளிவுகள் நிறைந்த பதிவு

    பதிலளிநீக்கு
  3. தங்களின் பாராட்டுக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி சகோதரரே!!!

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..