நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

SEETHA ASHTAMI..சீதா அஷ்டமி...(23.2.2014)...


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..

இந்தப் புண்ணிய பாரத பூமியில் தினந்தோறும் திருநாளே!.. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் சிறப்புப் பெற்றதாகவே விளங்குகிறது.. 

இன்றைய தினம் 'சீதா அஷ்டமி'.. பூமியின் புதல்வியாகிய அன்னை, தான், ஜனகனின் திருமகளாகப் போற்றப்பட திருவுளம் உவந்த‌ புண்ணிய தினம் இன்று...

ஜனக மகாராஜன், பொன்னேர் பூட்டி உழத் தொடங்கிய நன்னாளில், பூமியிலிருந்து கிடைத்த பெட்டியில் கண்டெடுத்தார்.  ஒரு பெருங்கருணைப் பொக்கிஷத்தை..

ஜனக மகாராஜன், ஒரு வேள்வி செய்ய விரும்பி, அதற்கான நிலத்தைத் தேர்ந்தெடுத்தார்... யாகபூமியை சமம் செய்வதற்காக, முறைப்படி வழிபாடுகள் செய்து, எருதுகளில் தங்கக் கலப்பையைப் பூட்டி, உழ ஆரம்பித்தார்..அப்போது, ஓரிடத்தில், ஏர் முனை நகராது போகவே, அதை ஆராய்ந்து பார்த்ததில், ஒரு பெட்டி கிடைத்தது...பெட்டியில் சிறு குழந்தையாகத் திருமகள் தோன்றியருளினாள்

கம்ப இராமாயணம், பால காண்டம், கார்முகப் படலம், பாடல்கள்  16,  17 &  18. இந்த நிகழ்வை மிக அழகுற விவரிக்கின்றன. 'கொழுமுகத்தின் முனையில், சூரியன் உதயமாவதுபோல் ஒளி தோன்றியது'.  என்று சீதையின் திருஅவதார நிகழ்வை விவரிக்கின்றார் கம்பர் பெருமான்.

இரும்பு அனைய கரு நெடுங் கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து, அதனோடு அணைத்து ஈர்க்கும்
வரம்பு இல் மணிப் பொன் - கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு
உரம் பொரு இல் நிலம், வேள்விக்கு, அலகு இல் பல சால் உழுதேம்

'உழுகின்ற கொழு முகத்தின், உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற, புவி மடந்தை திரு வெளிப்பட்டென, புணரி
எழுகின்ற தெள் அமுதொடு எழுந்தவளும், இழிந்து ஒதுங்கித்
தொழுகின்ற நல் நலத்துப் பெண் அரசி தோன்றினாள். 

'குணங்களை என் கூறுவது? கொம்பினைச் சேர்ந்து, அவை உய்யப்
பிணங்குவன; அழகு, இவளைத் தவம் செய்து பெற்றதுகாண்;
கணங் குழையாள் எழுந்ததற்பின், கதிர் வானில் கங்கை எனும்
அணங்கு இழியப் பொலிவு இழந்த ஆறு ஒத்தார், வேறு உற்றார்

அன்னையைப் 'பெண்ணரசி' என்று போற்றுகிறார் கம்பர்.. சீதையின் தூய குணங்களைச் சிந்தித்தால், அதுவே நம் உள்ளத்தைப் பண்படுத்தும்...

இராமாயணத்தில் இரு நிகழ்வுகள், சீதையின் உயர்ந்த குணத்தைப் புலப்படுத்துகின்றன..

சீதா தேவி, அனைவரிடமும் சமமாக அன்பு செலுத்துபவர்... மன்னன் மகளாயினும், அனைவருக்கும் மதிப்பளித்து, அதன் பலனாக, குடிமக்களின் பேரன்பைப் பெற்றவர்..

ஸ்ரீராமர், சுயம்வரத்தில் வென்றதும், ஜனகர், இது குறித்து, தம் தூதர்கள், புரோகிதர் மூலம் தசரதருக்கு செய்தி அனுப்புகிறார்.. செய்தியைக் கேட்டு மகிழ்ந்த தசரதர், செய்தியைக் கொண்டு வந்தவருக்கு முத்து மாலை பரிசளிக்கிறார்.

ஆனால் செய்தி கொணர்ந்த புரோகிதரோ அதை வாங்கிக் கொள்ளப் பணிவுடன்  மறுத்து, கீழ்க்கண்டவாறு கூறுகின்றார். '

சீதா தேவி, தன் தந்தைக்குச் சமமாக, என்னையும் மதித்து நடக்கிறார். ஆகவே, நான் இப்போது மணப்பெண் வீட்டுக்காரன். நாங்கள் சீதனங்களைத் தரலாமே  அன்றி, பெற்றுக் கொள்வது முறையல்ல' என்று அன்புடன் கூறுகின்றார்.


இதிலிருந்து சீதையின் பணிவு,அன்பு முதலான பல நற்குணங்கள் புலப்படுகின்றன.

மற்றொரு நிகழ்வு..

ஸ்ரீராமருக்குப் பட்டாபிஷேகம் செய்ய தசரதர் நாள் குறிக்கின்றார்.. பட்டாபிஷேக தினத்தன்று, ஸ்ரீராமரின் மாளிகையை அடைந்த  அமைச்சர் சுமந்திரர் பெருவியப்படைகிறார். அங்கே சீதா தேவி, முற்றத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்.. ஒரு அரசனின் மகள், ஒரு சக்கரவர்த்தியின் மருமகள், இன்று பட்டமேற்கப்போகும் ராஜாராமனின் பட்டமகிஷியாகப் போகிறவள்...எளிமையாக முற்றம் பெருக்குவதைக் கண்டு பதைக்கிறார் அமைச்சர்.. ஆனால் சீதையின் பதிலோ எளிமையாக வருகிறது..'ஏன் இதனாலென்ன.. இன்று பட்டாபிஷேகம்.. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த திருநாள்.. இதில் பங்கு பெற வேண்டுமென்று அரண்மனை வேலையாட்களுக்கு மட்டும் ஆவல் இருக்காதா..அவர்கள் விரைவாக தத்தமது இல்லங்களுக்குச் சென்றால் தானே அழகாக அலங்கரித்துக் கொண்டு விழாவில் பங்கு கொள்ள இயலும்.. ஆகவே நானே அவர்களை அனுப்பிவிட்டேன். இது நமது இல்லம் அல்லவா.. இந்த வேலைகளை நானே செய்வதில் என்ன தவறு?!!'

அசோகவனத்தில் தன்னைப் படாத பாடு படுத்திய அரக்கியருக்கும் கருணை சுரந்தவர் சீதாதேவி..அவர் படாத துன்பங்களா மனித வாழ்க்கையில்..பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை மிக அருமையாக வாழ்ந்து காட்டியிருக்கும் ஜானகி தேவி அவதரித்த தினம் இன்று..

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினமே சீதா அஷ்டமி.. இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்கள் சிலவற்றிலும், தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் வைசாக சுக்ல நவமி தினம் சீதையின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகின்றது... எனினும் பெரும்பாலான பகுதிகளில் சீதையின் ஜெயந்தி உத்சவம் இன்று தான்..

இன்றைய தினம், ஸ்ரீ சீதா தேவிக்குப் பூஜைகள் செய்து வழிபடுவது மிக நல்லது..

இல்லங்களிலும், ஸ்ரீ சீதாராமரின் திருவுருவப்படத்திற்கோ அல்லது விக்ரகத்திற்கோ அபிஷேக ஆராதனைகள் செய்து, ஸ்ரீராமரின் அஷ்டோத்திரங்களைக் கூறி வழிபடலாம்.. அண்ணலின் திருநாமங்களைக் கூறியல்லவோ அனுமன் அசோகவனத்தில் அன்னையின் உயிர் காத்தான்!!...

திருக்கோயில்களில் இன்று விசேஷ வழிபாடுகள் செய்யப்படுவதால், கோயில்களுக்குச் சென்று ஸ்ரீ சீதாராமரை தரிசனம் செய்யலாம். இராமாயணம் பாராயணம் செய்வதும், ஸ்ரீராமஜெயம் எழுதுவதும் மிக நல்லது..

ஜானகி தேவியின் ஜன்ம தின உத்சவத்தில், அன்னையின் அருங்குணங்களைச் சிந்தித்து வணங்கி,  நலம் பெறுவோம்!..

வெற்றி பெறுவோம்!!!!!....

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்களுக்கு நன்றி: கூகுள் படங்கள்.

1 கருத்து:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..