நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 25 ஜூலை, 2012

VARALAKSHMI VRATHAM...PART 2, வளம் பெருக....வரம் தருக.... வரலக்ஷ்மி (இரண்டாம் பகுதி)




மாதா பிதா த்வம் குருஸத்கதி: ஸ்ரீ:
த்வமேவ ஸஞ்ஜீவந ஹேதுபூதா |
அந்யம் ந மந்யே ஜகதேக நாதே
த்வமேவ ஸர்வம் மம தேவி ஸத்யம் ||

நமது தொன்மையான கலாசாரத்தின் அழகே இம்மாதிரி பண்டிகைகளை, பழமை மாறாமல், புதுமையும் கலந்து கொண்டாடுவதில் தான்  இருக்கிறது. பழங்காலத்தில், ஆடம்பரமின்றி, எளிமையாக அதே சமயம் நியமங்கள் மாறாமல் கொண்டாடப்பட்டு வந்த இந்தப் பண்டிகையில், காலத்திற்குத் தகுந்தபடி, சில மாறுதல்கள் ஏற்பட்டன. 

உதாரணமாக, முன்பு வீட்டு மட்டோடு இருந்த இந்தப் பண்டிகை, இப்போது அக்கம்பக்கத்தவரை வேறுபாடின்றி அழைத்து, விழா போல விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாவிலை கிடைக்காத இடங்களில், பிளாஸ்டிக் மாவிலை தோரணத்தோடு, செயற்கை பூ மாலைகள் அணிந்து, சிரித்த முகத்தோடு கொலுவிருக்கிறாள் தேவி. தன் மக்களின் நிலை அவளறியாமல் யார் அறிவார்?.

உள்ளத்தில் ஊற்றெடுக்கும் பக்தியொன்றைத் தவிர தன் மக்களிடம் யாதொன்றையும் எதிர்பாரா தயாபரியல்லவா ஸ்ரீ?

ஸ்ரீ வைணவத்தில், 'தாயார்' என்றே துதிக்கப்படும் அன்னையானவள், நாம் படுகின்ற துன்பத்தை, பெருமாள் உகக்கும் வண்ணம் ஏற்றிச் சொல்லி, அவர்
கடைக்கண் பார்வை, நம்மீது பட்டு, நம் துன்பங்கள் நிவர்த்தியாகும் வண்ணம் அருள்புரிகிறாள்

வரலக்ஷ்மி விரதத்தன்று, அம்பிகையை தங்கள் வீட்டு மணப்பெண் போல அலங்கரித்து, அழைத்து, பூஜித்து, கொண்டாடி, பின் மறுநாள் பாடல்களால் மகிழ்வித்து,  'அடுத்த வருடம் மீண்டும் வந்து நல்லருள் புரிய வேண்டும்' என்ற வேண்டுதலோடு மாமியார் வீட்டுக்கு வழியனுப்பி வைக்கும் வரை இந்தப் பண்டிகை நீளுகிறது. 

விரத தினத்தன்று காலை உபவாசம் இருந்து, பக்தியுடன் நியமமாகப் பூஜிக்க வேண்டும்.

பூஜையறையில்,

அலங்காரம் செய்யப்பட்ட, இடத்தில் ஒரு கோலமிட்ட மணையை வைத்து, ஒரு வாழை இலையைப் போட்டு, அதன் மேல் நெல்லைப் பரப்பி, அதன் மேல் மற்றொரு வாழை இலையைப் போட்டு அதன் மேல் அரிசியைப் பரப்பி வைக்கவும். ஒரு குழிவான வெள்ளி அல்லது பித்தளைத் தாம்பாளத்திலும் அரிசியைப் பரப்பி வைக்கலாம். கூஜா மாதிரியான பாத்திரத்தில் கலசம் வைப்பதாயிருந்தால் இவ்வாறு செய்யலாம். கலசம் அசையாதிருக்கும்.
  • ஒரு சிறு தட்டு அல்லது வெற்றிலையில், மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும். அட்சதை தயாரித்துக் கொள்ளவும்.
  • வாசனைச் சந்தனத்தைக் கரைத்து வைக்கவும். தாழம்பூ குங்குமம் பயன்படுத்துவது சிறந்தது.
  • ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, விநாயகருக்குத் தனியாகவும், அம்பிகைக்குத் தனியாகவும் வைக்கவும். தேங்காய், பழங்களையும்,  அம்மாதிரியே வைக்கவும்.
  • பூக்களைத் தயாராக வைக்கவும். ஸ்வாமி படங்களுக்கு சரங்களைச் சாற்றி, வீட்டுப் பெண்களும் தலைக்குப் பூ வைத்துக் கொள்ளவும். தாம்பூலம் தருவதற்குத் தனியாக பூ எடுத்து வைத்துக் கொள்ளவும். 
  • விளக்கு, தீபக்காலில் திரியிட்டு நெய்/எண்ணை ஊற்றி வைக்கவும். கற்பூரத் தட்டில் கற்பூரம் வைக்கவும். ஊதுபத்தி/ தசாங்கம் எடுத்து வைக்கவும்.
  • காலையில் அம்மனை அழைப்பதானால், அதற்குத் தேவையான, விளக்கு முதலியவற்றை அந்த இடத்தில் எடுத்து வைக்கவும். 
  • நோன்புச் சரடில் 9 முடிச்சுக்களிட்டு, பூவையும் சேர்த்து முடிந்து வைக்கவும்.
  • அம்பிகைக்குச் சாற்ற, மாலை, கஜவஸ்திரம், புடவை/ரவிக்கைத் துணி போன்றவற்றையும் தயார் நிலையில் வைக்கவும்.

  • அர்க்யப் பிரதானத்திற்காக, காய்ச்சாத பால் ஒரு சிறு பாத்திரத்தில் வைக்கவும்.
  • பாத்யம் முதலானவைக்காக, தனியாக ஒரு சிறு பாத்திரம் வைக்கவும். 
  • மணி, முதலான பூஜை சாமான்களை எடுத்து வைக்கவும்.
  • அம்பிகையின் பஞ்சாமிர்த ஸ்நான உபசாரத்திற்காக, ஒரு பாத்திரத்தில், பால், தேன், நெய், தயிர், வெல்லம் ஆகியவை சேர்த்து வைத்துக் கொள்ளவும். பழம் சேர்க்கும் வழக்கம் பின்னால் தான் வந்தது.
  • ஸ்வர்ண புஷ்பத்துக்காக, ஒரு வெள்ளி அல்லது ஒரு ரூபாய் நாணயம் வைக்கவும்.
  • ஒரு தட்டில் மஞ்சள், குங்குமம் கரைத்து ஆரத்தி நீர் தயாரிக்கவும். நடுவில் இரண்டு நெய் தீபங்களை/ ஜோதி விளக்குகளை வைத்து ஆரத்தி எடுப்பது சிறப்பு.
  •  7 அல்லது 16 மா விளக்குகளைச் செய்து நடுவில் ஜோதித்திரி வைத்து எல்லாவற்றையும் ஒரே தட்டில் வைத்து ஆரத்தி எடுக்கலாம்.
  • பாயசம், கொழுக்கட்டை, வடை, இட்லி, மஹா நைவேத்தியம் முதலான நிவேதனப் பொருட்களைத் தயாரித்து வைத்துக்கொள்ளவும்.

பூஜையின் போது:

மிகுந்த பக்தி சிரத்தையுடன், சந்தோஷமான மனநிலையில் செய்வது முக்கியம்.

நம் வீட்டுப் பெண்ணாக அம்பிகையைப் பாவித்து, உபசாரங்கள் செய்ய வேண்டும். 

அம்மனை காலையில் அழைக்கும் வழக்கம் இருந்தால், அழைக்கும் இடத்துக்கு அம்மன் கலசத்தை கொண்டு வைத்து, விளக்கேற்ற வேண்டும். அம்மன் கிழக்குப் பார்த்தது போல் இருக்க வேண்டும்.

பூ, அட்சதை தூவி, ஸ்தோத்திரங்களைக் கூறி வழிபாடு செய்ய வேண்டும். தூபம் காட்டி, வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி, ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும். "லக்ஷ்மி ராவே மா இன்டிகி' (லக்ஷ்மி தேவியே!!, எம் இல்லத்திற்கு வருவாய்)என்று அம்பிகையை வரவேற்று, வீட்டுப் பெண்கள் அனைவரும் கலசத்தை மெதுவாகத் தூக்கி வந்து பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும்.

அம்பிகைக்கு இரு புறமும் விளக்கேற்றி வைக்க வேண்டும். ஐந்து முகக் குத்து விளக்கில், ஐந்து முகங்களும் ஏற்றினால், அது திருக்கோவில் கருவறையில் இருக்கும் தெய்வ சாந்நித்யத்தைக் கொடுப்பதாக ஐதீகம். எனவே, ஐந்து முகக் குத்து விளக்கு ஏற்றலாம்.

ஆசன பூஜை, கண்டா பூஜை விக்னேஸ்வர பூஜை முதலான பூர்வாங்க பூஜைகளைச்   செய்து விட்டு,  அம்பிகைக்கு ஷோடசோபசார பூஜைகள் செய்ய வேண்டும்

பூஜைகள் செய்யும் போது, மனம் ஒன்றி, அதன் அர்த்தம் தெரிந்து செய்வது 
சிறப்பு.

ஷோடசோபசார (16 வகை உபசார) பூஜையின் பொருள்:

நம் இல்லத்திற்கு வரும் விருந்தினரை எப்படி உபசரிப்போமோ அதே முறையிலேயே உபசார பூஜைகள் அமைந்துள்ளன.

தியானம்: திருப்பாற்கடலில் உதித்த திருமாலின் தேவியாம் வரலக்ஷ்மியை, கஜலக்ஷ்மியாக மனதுள் தியானம் செய்ய வேண்டும்.

தோரஸ்தாபனம்: நோன்புச் சரடுகளை, அம்பிகையின் பாதங்களில் சமர்ப்பித்தல்.

ஆவாஹனம்: அம்பிகையை, நம் இருப்பிடத்தில், கலசத்தில் எழுந்தருளப் பிரார்த்தித்தல்.

ஆசனம்: அம்பிகைக்கு அமர்வதற்காக இருக்கை அளித்தல். மனதுள், அநேக ரத்ன கசிதமான சிம்மாசனத்தில் தேவியை அமர்விப்பதாகப் பாவிக்க வேண்டும்.

பாத்யம்: நம் இல்லத்தில் எழுந்தருளியிருக்கும் தேவியின் திருவடிகளை நீரால் அலம்புவது. உத்தரிணியில் சிறிதளவு நீர் எடுத்து, தேவியின் திருவடிகளை அலம்புவதாகப் பாவித்து, சிறு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.

அர்க்யம்: தேவியின் அருள் வழங்கும் திருக்கரங்களை நன்னீரால் அலம்புவதாகப் பாவித்து பாத்திரத்தில் நீர் சேர்க்க வேண்டும்.

ஆசமனீயம்: தேவி அருந்துவதற்காக நீர் சமர்ப்பிப்பது. உத்தரிணியால் பாத்திரத்தில் நீர் சேர்க்க வேண்டும்.

மதுபர்க்கம்: தேவிக்கு தேன் அல்லது தேனும் தயிரும் கலந்து சமர்ப்பிப்பது.

பஞ்சாம்ருதம்:

பயோததி -க்ருதைர் -யுக்தம் சர்க்கரா மது -ஸம்யுதம் | 
பஞ்சாம்ருதம் க்ருஹாணேதம் வரலக்ஷ்மி நமோsஸ்து தே ||

என்ற மந்திரத்தை உச்சரித்து, தேவிக்கு, பால், தயிர், நெய், வெல்லம், தேன் கலந்த பஞ்சாம்ருதத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதில் ஒரு மாபெரும் தத்துவம் அடங்கி உள்ளது. 

இறைவனை அடைய, பக்தி மார்க்கமே சிறந்தது. தூய்மையான இறை பக்தி நிலையை அடைய,
  • அமைதியான மனமே முதல் தேவை. பால் மன அமைதியைத் தரும்.
  • தயிர். இது பாலை, உறை உற்றி, அசையாமல் சில மணி நேரங்களுக்கு வைத்துப் பின் கிடைப்பது. பால் பொறுமையாக, பல மணி நேரங்கள், தனக்கு நிகழும் வேதிவினைகளைச் சகிப்பதாலேயே தயிர் கிடைக்கிறது. தயிர் நமக்கு உணர்த்துவது, பொறுமை, சகிப்புத்தன்மை என்னும்  மிக அரிய பெருங்குணங்கள்.
  • நெய், தயிரிலிருந்து, வெண்ணை எடுத்துப் பின் அதை உருக்குவதால் கிடைப்பது. தன்னை வெப்பத்தால் உருக்கினாலும், அதற்காக கோபிக்காமல், வாசனையுள்ள திரவமாக உருமாற்றம் அடைகிறது. அதனாலேயே, தீபங்களுக்கும், ஹோமத்திற்கும் பயன்படுத்துகிறோம். நெய் நமக்கு உணர்த்துவது, மன்னிக்கும் தன்மை என்னும் அரிய குணம்.
  • வெல்லம்: இது கரும்பு பல வித உருமாற்றம் அடைவதால் கிடைப்பது. தன்னையே தியாகம் செய்து, மிக இனிமையான பொருளாக உருமாறி நமக்குக் கிடைக்கிறது. தியாகம் என்னும் மிக உயரிய குணம், வெல்லம் நமக்கு உணர்த்துவது.
  • தேன்: தேனீ, மலர்கள் தோறும் பறந்து சென்று, துளித்துளியாகத் தேனைச் சேகரித்து வைக்கிறது. அந்தத் தேனை நாம் தான் உபயோகிக்கிறோம். தனக்கென வாழாது பிறர் நலம் நாடும், சுயநலமின்மையே, தேன் நமக்கு உணர்த்துவது.
அமைதி, பொறுமை,சகிப்புத்தன்மை, மன்னிக்கும் தன்மை, தியாக மனப்பான்மை, சுயநலமின்மை இவை யாவும் நிறைந்தவனே, முழுமையான மனிதன். இந்நிலை அடைந்தவருக்கே பக்தியும் இறையருளும் எளிதில் வசப்படும் இதுவே மானிடப்பிறவியின் நோக்கம்.

மறைமுகமாக, இவ்வைந்து குணங்களும் நமக்கு அருள வேண்டி, பஞ்சாமிர்தத்தைச் சமர்ப்பிக்கிறோம்.

ஸ்நானம்: அம்பிகையை நீராட்டுவதாகப் பாவித்து, பாத்திரத்தில் உத்தரிணி மூலம் நீர் சேர்ப்பது. இது 'சுத்தோதக ஸ்நானம்' (நன்னீரால் ஸ்நானம் செய்வித்தல்) என்றும் கூறப்படுகிறது.

வஸ்த்ரம்: அம்பிகைக்கு, ரவிக்கைத் துணி அல்லது புடவை சமர்ப்பிக்க வேண்டும்.

மாங்கல்ய ஸூத்ரம்: அம்பிகைக்கு திருமாங்கல்யச்சரடு சமர்ப்பித்தல்.

ஆபரணம்: இயன்ற பவுன், வெள்ளி ஆபரணங்களை தேவிக்குச் சமர்ப்பித்தல்.

கந்தம், குங்குமம்: தேவிக்கு, சந்தனம்,குங்குமம் சமர்ப்பித்தல்.

அக்ஷதை: அக்ஷதை சமர்ப்பித்தல்.

புஷ்பம்: பலவகைப்புஷ்பங்களைச் சமர்ப்பித்தல்.

இதன் பின், அங்க பூஜை (பாதாதி கேசமாக, தேவியின் ஒவ்வொரு அங்கத்திற்கும்(உடல் உறுப்புகளுக்கும்) பூஜை) செய்ய வேண்டும்.

பின் ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்திரத்தைக் கூறி பூஜை செய்ய வேண்டும். அதன் பின், தூப தீபங்கள் காட்டி, தேங்காயை உடைத்து, நைவேத்தியங்களைப் பக்தியுடன் சமர்ப்பிக்க வேண்டும். பழங்களின் மேல், ஒரு துளசித் தளத்தைப் போட்டு, சமர்ப்பிக்க வேண்டும்.  தாம்பூலத்தை நிவேதனம் செய்ய வேண்டும். ஸ்வர்ண புஷ்பமாக, நாணயத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இதை மறு நாள் அம்மனை வழியனுப்பிய பின், பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம் அல்லது திருக்கோவிலில் சமர்ப்பிக்கலாம்.

பானகம் வைப்பது மிக முக்கியம். 

கற்பூர ஆரத்தி காட்டி, கைநிறையப் புஷ்பங்களை எடுத்து, மும்முறை ஆத்மபிரதக்ஷிணம் செய்து தேவிக்குச் சமர்ப்பிக்கவேண்டும்.

அஷ்ட லக்ஷ்மியோடு, வரலக்ஷ்மியையும் சேர்த்து ஒன்பது லக்ஷ்மிகள். ஒன்பது லக்ஷ்மிகளுக்காக நோன்புச் சரடில் ஒன்பது முடிச்சுக்களிடுகிறோம். சரடுகளைப் பூஜித்து,  அம்பிகைக்கு ஒன்றைச் சாற்றி விட்டு, தேங்காய்,வெற்றிலை பாக்கு பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு, மந்திரங்களைச் சொல்லி, சரடைக் கட்டிக் கொள்ளவும். முதலில் வயதில் மூத்த பெண்மணிகளுக்கு மற்ற யாராவது கட்டி விட்டு, பின் அவர் கையால் மற்றவர்கள் கட்டிக் கொள்ளலாம்.

பூஜைப்பலன் முழுமையாகக் கிடைப்பதற்காக, பூ,சந்தனம், ஒரு பழம் இவற்றுடன், பால் சேர்த்து, தேவிக்கு அர்க்யம் சமர்ப்பிக்கவும்.

தேவிக்கு ஆரத்திகள் காட்டி வழிபாடு செய்யவும்.
தேவியை, மனமாரப் பிரார்த்தித்து, பூஜையின் போது ஏதேனும் குற்றங்கள் ஏற்பட்டிருப்பின் மன்னிக்கக் கோர வேண்டும்.

வரலக்ஷ்மி விரத பூஜைக் கதையைப் பாராயணம் செய்யலாம். விரதப் பூஜைக் கதைப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்.

தலை நோன்பு எடுப்பவர்கள், இந்தப் பூஜையுடன், கிரஹப் ப்ரீதியும் சேர்த்துச்  செய்வது வழக்கம்.

வீட்டு உபாத்தியாயருக்கு, தாம்பூலம், தட்சிணையோடு, பிரசாதங்களை வழங்கி அவர் ஆசி பெறுதல் வேண்டும்.  பிரசாதங்களை விநியோகிப்பது முக்கியம். இயன்றவர்கள், அன்னதானம் செய்யலாம்.

விரத தினத்தன்று,  பூஜை செய்தவர்கள், பிரசாதங்கள், பலகாரம்(டிபன்) சாப்பிடுவதே வழக்கம்.

அன்று முழுவதும், மறு நாளும் தேவி நம்மோடு இருக்கிறாள். ஆகவே, இல்லத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவுவது முக்கியம். அம்மன் துதிப்பாடல்களைப் பாடி வழிபாடு செய்யலாம்.

சிலர், அன்று வெள்ளிக்கிழமையாக இருப்பதால், பெண்களை அழைத்துத்  தாம்பூலம் தருவது வழக்கம்.

மறு நாள், சனிக்கிழமை, சுருக்கமாகத் தேவிக்குப் புனர் பூஜை செய்து, மஹா நைவேத்தியம் (பச்சரிசிச் சாதம், பருப்பு, நெய் சேர்ந்தது), தாம்பூலம் நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். சில வீடுகளில் தயிர் சாதம் நிவேதனம் செய்வார்கள்.

புனர் பூஜை:

பூஜை செய்த மறுநாள் (சனிக்கிழமை), அம்பிகைக்கு, சுருக்கமாக, உபசார பூஜைகள் செய்ய வேண்டும். அம்பிகையை ஏற்கெனவே ஆவாஹனம் செய்து வைத்திருப்பதால், அர்க்யம், பாத்யம், ஆசமநீயம், தொடங்கி தூப,தீப, நிவேதனம் வரையிலான உபசாரங்களைச் செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்து, கைநிறையப் பூக்களை எடுத்து தேவிக்குச் சமர்ப்பித்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்ய வேண்டும்.

பிறகு 'க்ஷமா பிரார்த்தனையுடன்' (பிழைகளுக்கு மன்னிப்புக் கோரல்)பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இரவு, அம்பிகையை அரிசிப்பானைக்குள் வைக்கும் சமயத்திலேயே ஆரத்தி எடுக்க வேண்டும்.

பொதுவாக, புனர் பூஜை முடிந்தவுடன், ஆவாஹனம் செய்திருக்கிற தேவதையை, உத்யாபனம்  (தேவதையின் இருப்பிடத்தில் சேர்ப்பித்தல்)  செய்வது தான் முறை. ஆனால் இரவு வரம் கோரல் பாடல்கள் பாடி வரம் கேட்பது வழக்கத்திலிருப்பதால் இரவே உத்யாபனம் செய்கிறோம்.

அன்று மாலை, அக்கம்பக்கத்தோரை அழைத்து, தேவி முன் வரம் கோரல் பாடல்களைப் பாட வேண்டும். யார் யாருக்கு என்ன வரம் வேண்டுமோ, அவர் பெயரைச் சொல்லி, வரம் கேட்டுப் பாடுவது வழக்கம். திருமணமாக வேண்டும், வேலை கிடைக்க வேண்டும் என்பதிலிருந்து, பாப்பாவுக்குப் பருப்பு சாதம் வேண்டும் என்பது வரை அமைத்துப் பாடுவது வழக்கம்.
 
அதன் பின், தேவிக்குச் சுண்டல் நிவேதனம் செய்து, வந்திருப்போருக்குத் தாம்பூலம் தந்த பின், ஆரத்தி எடுத்து, புஷ்பம் அக்ஷதை சமர்ப்பித்து, 'அடுத்த வருடம், கட்டாயம் நம் இல்லம் எழுந்தருளி அருள் மழை பொழிய வேண்டும்' என்ற வரம் வேண்டி, அம்பிகையை யதாஸ்தானம் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

மதுரை மாவட்டத்தில், தேவியைக் கலசத்தோடு அரிசிப்பானைக்குள் வைப்பார்கள். பானைக்கு முன், சிறு கோலமிட்டு, ஒரு சிறு விளக்கேற்றி, வெற்றிலை, பாக்கு, பழம், பால் வைத்து ஊதுபத்தி ஏற்றி வைப்பார்கள். பின் அரிசிப்பானை இருக்கும் அறைக்கதவை மூடி, சயனப்பாட்டைப் பாடுவார்கள். இவ்வாறு அரிசிப்பானைக்குள் கலசத்தை வைப்பதால், குடும்பத்தில் தானிய விருத்தி ஏற்படும் என்பது நம்பிக்கை.

அடுத்து வரும் வெள்ளிக் கிழமை அன்று கலசத்திற்கு உபயோகித்த அரிசி, தேங்காயை, பாயசமாகச் செய்து நிவேதிப்பது வழக்கம்.

முறையாகப் பூஜித்து வழிபடுவோருக்கு அன்னை வேண்டும் வரங்களைத் தருகிறாள்.ஆடம்பரமாகப் பூஜை செய்வதை விட, எளிமையும் ஆத்மார்த்தமுமாகப் பூஜிப்பதையே அன்னை விரும்புகிறாள். ஆகவே, எளிய பூஜை, இயன்ற நிவேதனங்கள், அளவிலா பக்தி இவற்றை அன்னைக்குச் சமர்ப்பிப்பது அன்னையை மகிழ்விக்கும். தாம்பூலத்திற்கு அனைவரையும் வேறுபாடில்லாமல் அழைத்துக் கொடுப்பதும், அது போல், யார் தாம்பூலத்திற்கு அழைத்தாலும் சென்று வருவதும் முக்கியம்.

வரலக்ஷ்மியை பூஜித்து, வரம் பல பெற்று,

வெற்றி பெறுவோம் !!!!

6 கருத்துகள்:

  1. Gr8 work parvathy! Thank u for posting this!!

    பதிலளிநீக்கு
  2. ஆஹா!!! தெய்வ கடாட்சம் நிறைந்தப் பதிவு...

    இதிலே பஞ்சாமிர்த விளக்கம் மிகவும் அருமை...
    அத்தனைப் பக்குவமும் ஒரு நல்ல பக்திக்கு வேண்டும் அதை பெற்று விட்டால் நிச்சயம் தேவி நமது இல்லம் வந்து நம்மோடு இருந்து நம்மை ஆசிர்வதிப்பால் என்பது சத்தியம். எத்தனை அழாகான உயரிய விளக்கம் அது... பக்திக்கு அடிப்படையான குணம் அது தான் என்பதை அழகாகச் சொல்லி யுள்ளீர்கள் சகோதரி. மிகவும் அருமையானப் பதிவு. அன்னையவள் அத்தனை கல்யாண குணங்களையும் கொடுத்து நம்மை ரட்சிக்க வேண்டும் என்று இந்த நன்னேரத்தில் வேண்டிப் பணிகிறேன்.

    பதிவிற்கும் பகிர்வுக்கும் நன்றிகள் சகோதரி....

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    வரலட்சுமி வந்து,
    மணம் நிறைவு தந்தது,
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. இவ்வளவு சிரத்தையுடனும் பணிவுடனும் நீங்கள் பகிர்ந்த விதத்தைக் கண்டே அன்னை மகிழ்ந்து போவாள் என்பதில் ஐயமில்லை. அருமையான விளக்கங்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. கருத்துரை தந்து ஊக்குவித்த அனைவரின் பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..