நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 19 செப்டம்பர், 2013

PITHRU VAZHIPAADU( MAHALAYA PAKSHA (20/9/2013 TO 4/10/2013) SPECIAL POST)... பித்ரு வழிபாடு (மஹாளய பக்ஷம்..(20/9/2013 TO 4/10/2013).


அன்பர்களுக்கு வணக்கம்...

ஒவ்வொரு வருடமும், புரட்டாசி மாதம், பௌர்ணமியை அடுத்து வரும் பதினைந்து தினங்களும் மஹாளய பக்ஷம் என்று வழங்கப்படுகிறது. பித்ரு வழிபாடு எனப்படும் மூதாதையர், நீத்தார் வழிபாடு செய்ய உகந்த தினங்களாகப் போற்றப்படும் இந்த தினங்களின் சிறப்பைப் பற்றியும், சுவதா தேவியைப் பற்றியும், மிக விரிவாகவே சென்ற வருடப் பதிவொன்றில் சொல்லியிருக்கிறேன். சுட்டிக்கு கீழே சொடுக்கவும்.

1. மஹாளய பக்ஷம்.

'மறந்ததை மஹாளயத்தில் விடு' என்னும் சொல்லுக்கேற்ப, பித்ருக்களுக்கு உரிய திதியில் நீத்தார் கடன் நிறைவேற்ற மறந்தோர் மஹாளய பட்சத்தில் செய்யலாம். மஹாளய பக்ஷத்தின் பதினைந்து தினங்களும் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போதைய சூழலில், ஏதாவது ஒரு திதியில், அநேகமாக தந்தையார் மறைந்த திதியில் மட்டும் செய்கின்றனர்.

இவ்வாறு ஒரே ஒரு திதியில் செய்யப்படும் சிரார்த்தம் 'சக்ருன் மஹாளயம்' என்று அழைக்கப்படுகின்றது.

இந்தப் பதிவில், மஹாளய பக்ஷத்தின் முக்கிய தினங்களாகக் கருதப்படும் மத்யாஷ்டமி, அவிதவா நவமி மஹாபரணி, வியதீபாதம், கஜச்சாயா யோகம் மாக ஸ்ரார்த்தம் ஆகியவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

மத்யாஷ்டமி. 
மஹாளய பக்ஷத்தின் பதினைந்து தினங்களில் மத்தியில் அதாவது முன் ஏழு, பின் ஏழு தினங்களுக்கு நடுவில் வரும் அஷ்டமி திதியே மத்யாஷ்டமி.  மஹாளய பக்ஷத்தில், வேறு திதிகளில் செய்ய சௌகரியப்படாதோர் மத்யாஷ்டமியில் செய்யலாம். இந்தத் திதியின் சிறப்பு, திதி, வார, நக்ஷத்திர தோஷங்கள் எதுவும் இதற்கு இல்லை என்பதே.

வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி திதியில் மறைந்தவர்களுக்கும், பௌர்ணமி திதியில் மறைந்தவர்களுக்கும், மத்யாஷ்டமியில் சிரார்த்தம் செய்யலாம். பௌர்ணமி திதியில் மறைந்தவர்களுக்கு, மஹாளய அமாவாசையும் சிரார்த்தம் செய்ய உகந்ததே.

மத்யாஷ்டமியில் திருவாதிரை நக்ஷத்திரம் சேர்ந்து வருமாயின் அது ஆருத்ராஷ்டமி என்று அழைக்கப்படுகின்றது. அன்றைய தினத்தில், பித்ரு காரியங்கள் மட்டுமின்றி, சிவபூஜை செய்வது மிகச் சிறப்பான பலனைத் தருகின்றது.

பொதுவாக, சிரார்த்தம் செய்ய ஏற்ற தலங்கள் என்று பலவற்றை நாம் அறிந்திருப்போம். ஆனால் அஷ்டமி சிரார்த்தத்துக்கு ஏற்ற இடம் எது தெரியுமா?. மதுரை அருகில் இருக்கும் அழகர் கோவில் திருத்தலத்தின் மலை மேலிருக்கும்(பழமுதிர் சோலை) நூபுர கங்கைத் தீர்த்தக் கரையே அந்த இடம்.

மத்யாஷ்டமி திதிக்கு அடுத்து வரும் நவமி திதி, அவிதவா நவமி என்று சிறப்பிக்கப்படுகின்றது. சுமங்கலியாக இறைவனடி சேர்ந்த பெண்களுக்கு அன்றைய தினம் சிரார்த்தம் செய்வது மிகுந்த புண்ணியம் தரும் செயலாகக் கருதப்படுகின்றது. அவர்கள் புண்ணிய லோகம் அடைந்து அம்பிகையின் ஸ்வரூபத்தைப் பெறுவதால், அவர்களை அம்பிகைக்கு சமமாகவே மதிக்கின்றது நம் சம்பிரதாயம். சிரார்த்தம் செய்வதோடு, அன்றைய தினம் அன்னதானம் செய்வதும், சுமங்கலிகளுக்கு உணவளித்து, மங்கலப் பொருட்கள் தாம்பூலமாகத் தருவதும் மிக விசேஷமானதாகும்.

மஹாபரணி:

 மஹாளய பக்ஷத்தில், பரணி நக்ஷத்திரம் அபரான்ன‌ காலத்தில் வரும் போது செய்யப்படுவது பரணி சிரார்த்தம் .

முதலில் அபரான்ன‌ காலம் என்றால் என்னவென்று பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் பித்ரு காரியத்திற்கென நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது (ராகு காலம், நல்ல நேரம் போல்). அதன்படி ஒதுக்கப்பட்ட நேரமே அபரான்ன‌  காலம். சுமார் இரண்டு மணி நேரம் வரும் இது, ஒவ்வொரு நாளும் மதியம் ஒன்றரை மணியிலிருந்து மூன்றரை மணி வரை நீடிக்கும்.

இந்த அபரான்ன‌ காலத்தில் பரணி நக்ஷத்திரம் வந்தால் அதுவே 'மஹாபரணி' தினம். இது பொதுவாக, மஹாளய பக்ஷத்தில் சதுர்த்தி திதி அல்லது பஞ்சமி திதியில் வரும். சில சமயம் திருதியை திதியிலும் வருவதுண்டு. ஆகவே, மஹாபரணி சிரார்த்தம் செய்ய எண்ணுவோர் திதி குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை.

பரணி நக்ஷத்திரத்திற்கு ஏன் இத்தனை சிறப்பு என்றால், இது பித்ருக்களின் அதிகாரியாகிய யமதர்மரால் ஆளப்படுவது. அதனாலேயே பித்ருபக்ஷத்தில் இது சிறப்புப் பெறுகிறது.

மஹாபரணி சிரார்த்தம், கயாசிரார்த்தத்திற்கு ஈடானது. மிகுந்த புண்ணிய பலன்களைத் தர வல்லது.

மஹாவியதீய பாதம்:

வியதீபாதம் என்பது இருபத்தேழு யோகங்களுள் ஒன்று. இந்த யோகம் மஹாளய பக்ஷத்தன்று ஏற்படும் போது அது மஹாவியதீபாதம் என்றழைக்கப்பட்டு பித்ரு காரியம் செய்வதற்கு சிறப்பான நேரமாகிறது(மார்கழி மாதத்தில் வரும் மஹாவியதீய பாதம் வேறு).

வியதீபாதம் என்ற யோகத்திற்கு உரிய தேவதை பிறந்தது குறித்த ஒரு புராணக் கதை உள்ளது.

தேவகுருவான பிரஹஸ்பதியின் மனைவி தாரை. அவளிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்டான் சந்திரன். அவனை கோபமாகப் பார்த்தார் சூரிய பகவான். பதிலுக்கு, சந்திரனும் பார்க்க, அந்த உஷ்ணப் பார்வைகளின் சங்கமத்தில் உதித்தவனே வியதீபாத புருஷன். இந்த தேவதைக்கு அதிபதி சிவபிரானாவார்.

கஜச்சாயா யோகம்:

பொதுவாக, இந்த யோகம் ஏற்படும் அமைப்பு ஒவ்வொரு வருடமும் வருவது அரிது. ஆனால் இந்த யோகம் அமையுமாயின் அது  பித்ருபக்ஷத்திலேயே அமையும். அந்த நேரத்தில் செய்யப்படும் தானங்கள், தரும காரியங்கள், பித்ரு காரியங்கள் இவற்றின் பலனை எழுத்தில் வடிக்க இயலாது. அவ்வளவு நன்மையான பலன்களைத் தர வல்லவை அவை.

சூரியன் ஹஸ்த நக்ஷத்திரத்திலும், சந்திரன் மக நக்ஷத்திரத்திலும் இருக்க, அன்று திரயோதசி திதி சேரும் போது இந்த யோகம் ஏற்படுகின்றது.

சூரியன், சந்திரன் இரண்டும் இணைந்து ஹஸ்த நக்ஷத்திரத்தில் காணப்படும் மஹாளய அமாவாசை தினமும் இந்த யோகத்தைத் தருவதாகச் சொல்லப்படுகின்றது. 

ஆயினும் இந்த யோகம் பகல் நேரத்தில் ஏற்படுமாயின் மிகுந்த வலிமையுள்ளது என்றும் இரவு நேரத்தில் ஏற்படுமாயின் வலிமையிழக்கின்றது என்றும் ஒரு கூற்று இருக்கின்றது.

மக நக்ஷத்திரத்திற்கு அதிபதி பித்ரு தேவதை. ஆகவே, மஹாளய பக்ஷத்தில் அந்த நக்ஷத்திரத்திற்கு மிகுந்த சிறப்பு உண்டு.

மாக ஸ்ரார்த்தம் என்பது, மக நக்ஷத்திரம் அபரான்ன‌ காலத்தில் இருக்கும் தினத்தில் வருவதாகும். இரண்டு தினங்களின் அபரான்ன‌ காலத்தில் மக நக்ஷத்திரம் வருமானால், எந்த தினத்தின் அபரான்ன‌ காலத்தில் மிக நீண்ட நேரம் மக நக்ஷத்திரம் இருக்கின்றதோ அதை மாக சிரார்த்த தினமாகக் குறிப்பது மரபு.

எந்த தினத்தின் அபரான்ன‌ காலத்தில் மக நக்ஷத்திரமும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்றதோ அந்த தினத்தை மாக திரயோதசி சிரார்த்த தினமாகக் கொள்கிறார்கள்.

பித்ரு வழிபாட்டுக்கு உரிய இந்த சிறப்பான தினங்களில் நீத்தார் கடன் செய்ய வேண்டுவோர் முறையாகச் செய்து,  அவர்களது ஆசிபெற்று,

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..