நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

ஆறாதாரமும் மூலாதாரமும்.



'அரிது அரிது மானிடராதல் அரிது. என்பது ஔவையின் திருவாக்கு. மானிடப் பிறவிதான், இறைவனோடு ஆத்மாவை ஐக்கியப்படுத்த உதவும் அரிய பிறவியாகும். மனித உடலில், சூட்சும வடிவில் ஆறு ஆதாரச் சக்கரங்கள் உள்ளன.அவை,

1.மூலாதாரம்,
2.சுவாதிஷ்டானம்,
3.மணிபூரகம்,
4.அநாகதம்,
5. விசுத்தி,
6.ஆஜ்ஞை. என்பன.

ஆஜ்ஞா சக்ரத்திற்கு மேல் தலை உச்சியில்,ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூ வடிவில் சஹஸ்ராரம் அமைந்துள்ளது. இது பிரபஞ்ச வெளியோடு தொடர்புடையது. பிரமரந்திரம் வழியாக ஸ‌ஹஸ்ராரத்தை அடையலாம். இதை அடையும் போது பேரானந்த நிலை கிட்டும்.

ஸ்ரீசக்கர வடிவம், இவையனைத்தையும் உள்ளடக்கியது.

மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டாநே ஹ்ருதி மருத-மாகாஸ-முபரி
மநோசபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே

தாயே, மூலாதாரத்திலிருக்கும் பூமி தத்துவத்தையும், மணிபூரகத்திலிருக்கும் ஜல தத்துவத்தையும், ஸ்வாதிஷ்டானத்திலுள்ள அக்னி தத்துவத்தையும், அநாஹத சக்ரத்திலுள்ள வாயுதத்துவத்தையும், விசுத்தி சக்கரத்திலுள்ள ஆகாசதத்துவத்தையும், ஆஜ்ஞா சக்ரத்திலுள்ள மனஸ்தத்துவத்தையும் பிளந்து கொண்டு போய், மேலே,ஆயிரம் தளமுள்ள ஸஹஸ்ராரமென்னும் தாமரை மலரில் நீ உன் கணவனோடு களிப்புற்றிருக்கிறாய். (ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர், சௌந்தர்ய லஹரி).

'குண்டலினி' என்பது, மனிதப் பிறவியை தெய்வாம்சம் பொருந்தியதாக்கும் சக்தி. இது மனிதரின் மூலாதாரச் சக்கரத்தில் இருக்கிறது. குண்டல என்ற வார்த்தைக்கு, சுருள் என்றொரு பொருளும் உண்டு. குண்டலினி சக்தி, மூன்றரை சுருளாக, சுருண்டு தன் வாலை வாயில் கவ்விக் கொண்டு தூங்கும் நாகமாகக் கருதப்படுகிறது. இது, மூலாதாரச்சக்ரத்தில், பிறப்புறுப்பிற்கு சற்றுக் கீழாக இருக்கிறது. இதன் மூன்று சுழல்கள், நம் மனதின் மூன்று நிலைகளை, அதாவது, விழிப்பு, ஆழ்ந்த தூக்கம், கனவு நிலையைக் (ஜாக்ரத், ஸ்வப்ன, ஸுக்ஷுப்தி) குறிக்கும். அரை சுருள், சமாதி (துரியா) நிலையைக் குறிக்கும்.


மூலாதாரச் சக்கரம், நான்கு இதழ் கொண்ட தாமரை வடிவானது. இதன் மையத்தில் தான், குண்டலினி சக்தி, கறுப்பு நிற லிங்கத்தைச் சுற்றிய‌ மஞ்சள் வண்ண‌ நாகத்தின் வடிவில் உள்ளது.

இது, மனித உடலில், பிறப்புறுப்பிற்கும் ஆசன வாய்க்கும் , இடையே அமைந்துள்ளது. இது பூ தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. நம் உடல் லேசாக, எடையற்றுப் போய்விடாமல் இருக்கக் காரணம், மூலாதாரச் சக்கரமே.

இதன் அதிதேவதை விநாயகர்.

அன்னை குண்டலினி ரூபமாக இருக்க, பிள்ளையும் கூட இருக்கிறார். எந்தச் செயலையும் ஆரம்பிக்கும் முன் வழிபட வேண்டிய விநாயகர், இந்தச் சக்ரத்தின் அதிதேவதை. சாக்த தத்துவத்தில், விநாயகருடன், தாகிணி தேவியும், அதிதேவதையாக அறியப்படுகிறாள்.

அதனாலேயே, விநாயகர் அகவலில்,

"மூலாதாரத்தின் மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே" என்று ஔவையார் குறிப்பிடுகிறார். கால் என்பதற்கு (மூச்சுக்) காற்று எனவும் பொருள் கொள்ளலாம்.

மகாகவி பாரதி, தன் விநாயகர் நான்மணி மாலையில்,

கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பல வாம்: கூறக் கேளீர்;
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;

என்று குண்டலினி விழிப்புற விநாயகரின் அருள் அவசியம் என்பதை வலியுறுத்துகிறார்.



யோக நெறிகளை உட்பொருளாகக் கொண்ட விநாயகர் அகவல்.

முறையாக, ஒரு குருவைக் கொண்டு, பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியைக் கற்று, யோகசாதனையில் தேர்ச்சி பெற்றால், குண்டலினி சக்தியை விழிப்புறச் செய்து, அச்சக்தியை, ஆறு ஆதாரச் சக்கரங்களின் வாயிலாக, மேலேற்றி, கடைசியில் பிரமரந்திரம் வழியாக, ஆயிரம் இதழ் கொண்ட சஹஸ்ராரக் கமலத்தை அடையச் செய்து, அங்கு சிவ சக்தி ஐக்கியஸ்வரூபத்தை தரிசித்து பிறவிப் பயன் எய்தலாம்.
ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?

என்பது பத்திரகிரியாரின் திருவாக்கு. இதில் தூங்காமல் தூங்குவது என்பது மனிதப் பிறவி குண்டலினி யோகத்தில் சித்தி அடைந்து இறைநிலையை அனுபவித்தலையே குறிக்கும்,

சாக்தத்தில், சக்தியே குண்டலினி ரூபமாக இருக்கிறாள். குண்டலினியை இழந்தால் சிவனும் சவம் போலவே கருதப்படுவார் என்பதை ,

"சிவோபிசவதாம் யாதி குண்டலின்யா விவர்ஜித: "

என்னும் தேவிமகாத்மிய ஸ்லோகத்தின் மூலம் அறியலாம்.

"மஹாசக்தி: குண்டலினீ பிஸதந்து தனீயஸீ" என்கிறது லலிதா சஹஸ்ரநாமம்.


"மூலாதாரைக நிலயா ப்ரஹ்மகிரந்தி விபேதினீ" (லலிதா சஹஸ்ரநாமம்).

மூலாதாரத்திலிருந்து குண்டலினி ரூபமாகப் புறப்படுகிற அன்னை, ப்ரஹ்மக்ரந்தியை அறுத்துக்கொண்டு, மேலேறுகிறாள் என்பது இதன் உட்பொருள்.

விபேதினீ என்றால் அறுப்பவள். ஆறு ஆதாரச் சக்கரங்களுக்கும் நடுவில் சில முடிச்சுகள் உள்ளன. இடகலை, பிங்கலை ஆகிய இரண்டும் நடுத்தண்டில் சந்திக்கும் இடத்தில் இந்த முடிச்சுகள் (க்ரந்திகள்) இருக்கும். இவற்றை அறுத்தால் தான், குண்டலினி மேலேழும்ப முடியும். அதனை அறுப்பவள் அம்பிகையே.

ஆறு ஆதாரச் சக்கரங்களும் அக்னி கண்டம், சூர்யகண்டம், சோமகண்டம் என மூன்று கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. முதலிரு சக்கரங்கள் அக்னிக் கண்டம் எனப்படும். அடுத்த இரு சக்கரங்கள், சூர்யகண்டம், அதையடுத்த இரு சக்கரங்கள் சோம கண்டம் எனப்படும். அக்னிக் கண்டத்திற்கும் சூர்யக் கண்டத்திற்கும் இடையில் வருவதே பிரம்மக் கிரந்தி. நம் பூர்வ ஜென்மங்களில் நாம் செய்த கர்மாவின் பலனாக, நம் ஆன்மாவில் உள்ள வாசனைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும். பிரம்மகிரந்தி அறுபடும் போது, சிருஷ்டி வாசனையிலிருந்து விடுதலை கிட்டும்.

மூலாதாரம்புஜாரூடா பஞ்சவக்த்ராஸ்தி ஸம்ஸ்திதா
அங்குசாதி ப்ரஹரணா வரதாதி நிஷேவிதா. (லலிதா சஹஸ்ரநாமம்)

மூலாதாரத்தில், தேவி, செந்நிறத்தினளாக,ஐந்து முகங்களோடு கூடியவளாக அமர்ந்திருக்கிறாள், தனுசு, புஷ்பபாணம், அபய, வரத ஹஸ்தத்துடன் இருக்கிறாள். உயிர்களிடத்தில், எலும்பு ரூபத்தில் இருக்கிறாள்.வரதா முதலிய மூன்று சக்திகள் தேவியின் பரிவாரமாக உள்ளார்கள்.

லலிதா சஹஸ்ரநாமத்தை மனம் ஒன்றி பாராயணம் செய்தால், ஸஹஸ்ராரக் கமலத்தில் ஒரு துளி அமிழ்தம் விழுவதாகக் கூறப்படுகிறது. யோகிகளுக்கும், ஞானிகளுக்கும் இது மழை போல் பொழியுமாம்.

சக்தியை முழுமுதல் கடவுளாக வழிபடும் சாக்தத்தில் ஸ்ரீவித்யா உபாசனா முறை குண்டலினி யோகத்தைத் தன்னுள் அடக்கியது.

சௌந்தர்யலஹரியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர், மூலாதாரச் சக்ர மகிமையை
தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயா
நவாத்மாநம் மந்யே நவரஸ-மஹாதாண்டவ-நடம்
உபாப்யா-மேதாப்யா-முதய-விதி-முத்திஸ்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநகஜநநீமத் ஜகதிதம்

என்று புகழ்கிறார். இதன் பொருள்,

"தேவியே! உன்னுடைய மூலாதாரமென்னும் சக்கரத்தில் சிருங்காரம் முதலிய 9 ரஸங்கள் பொருந்திய நடனம் புரிகின்ற மஹாபைரவமென்னும் உன் ரூபத்தைத் தியானம் செய்கிறேன். ஊழிக்காலத்திற்குப் பின் மறுபடியும் தோன்றுகிற உலகத்தில், மஹாபைரவர், மஹாபைரவி என்னும் நீங்கள் இருவரும் கருணையால் ஒன்றாக‌ இணைந்து, ஜீவர்களுக்குத் தாயும் தந்தையுமாகிறீர்கள்.

சிவயோகமும் குண்டலினியும்


முசுகுந்த சக்கரவர்த்தியால் ஸ்தாபிக்கப்பட்ட 'சப்த விடங்க ஸ்தலங்கள்', ஸஹஸ்ராரத்தைச் சேர்த்து ஏழு ஆதாரச் சக்கரங்களை சூட்சுமமாக விளக்குகின்றன. இவ்வேழு ஸ்தலங்களிலும் நடராஜப் பெருமானின் ஏழுவித நடனங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. இவை ஒவ்வொன்றும் குண்டலினி சக்தி மேலேறும் நிலைகளையே குறிக்கின்றது.

சப்த விடங்கத் தலங்களும் நடனங்களும்:
1.திருவாரூர் - அஜபா நடனம்,
2.திருக்குவளை - பிருங்க நடனம்,
3.திருக்காறாயில் - குக்குட நடனம்,
4.திருமறைக்காடு - ஹம்ச பாத நடனம்,
5.திருநாகை - பராவர நடனம்
6.திருநள்ளாறு - உன்மத்த நடனம்,
7.திருவாய்மூர் - கமல நடனம்

ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி
இவற்றில் திருவாரூர் மூலாதார க்ஷேத்திரமாகக் கருதப்படுகிறது. திருவாரூர் தியாகராஜஸ்வாமியின் கோவிலில் விளக்கேற்றிய பின் தான் அனைத்து இல்லங்களிலும் விளக்கேற்றுவார்கள். 'திருவாரூரில் பிறக்க முக்தி' என்பது பிரபலமான வாக்கியம். தியாகராஜரின் தேவியான, கமலாம்பிகை அம்பாள் யோக நிலையில் அமர்ந்து அருளுவது இத்தலத்தின் சிறப்பு.

ஸ்ரீ கமலாம்பிகை
சித்தமெல்லாம் சிவமான சித்தர்கள் பாடலில் யோகக் கலையின் அரிய இரகசியங்கள் யாவும் கொட்டிக் கிடக்கின்றன.

வடிவு பத்ம ஆசனத்திருத்தி மூல அனலையே
மாருதத்தினலேழுப்பி வாசலைந்து நாலையும்
முடிவு முத்திரைப் படுத்தி மூல வீணா தண்டினால்
முளரி ஆலயங் கடந்து மூல நாடி யூடுபோம்.
என்பது சிவவாக்கியர் வாக்கு.

இதில் மூல அனல் என்பது குண்டலினியைக் குறிக்கும். வீணா தண்டம் எனக்குறிக்கப் படுவது முதுகுத் தண்டு. பத்மாசனத்திலிருந்து, குண்டலினியை, முறையான, மூச்சுப் பயிற்சியினால், எழுப்பி, உடலின் ஒன்பது வாயிலையும் அடைத்து, யோகமுத்திரையில், ஸஹஸ்ராரக் கமலத்தை அடைந்தால், இறை தரிசனம் பெறலாம் என்பது பொருள்.

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே

(10ம் திருமுறை, திருமந்திரம், இரண்டாம் தந்திரம்,) என்று திருமூலர் குண்டலினி யோகத்தைப் பற்றிக் கூறுகிறார்.

மூலாதாரத்தின் இருப்பிடத்தை திருமூலர் இவ்வாறு கூறுகிறார்.

நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டு ஈசன் குடியிருந்தானே.
தேவாரத்தில் அப்பர் ஸ்வாமிகள்,


துஞ்சும் போதுந் துயிலின்றி ஏத்துவார்
வஞ்சின் றிவலங் கொண்மறைக் காடரோ
பஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந்
தஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே (தி.5. ப.9. பா.6)

என்று குண்டலினி சக்தியை ஐந்தலை நாகமாக உருவகப் படுத்துகிறார்.

திருமுருகனும் குண்டலினி யோகமும்



ஞானபண்டிதனான ஸ்ரீ முருகப் பெருமான், சித்தர்கள் பலருக்கு ஞானகுருவாகி நல்லுபதேசம் தந்தவன். முருக பக்தர்கள் பலரும் கௌலாச்சார ஸ்ரீவித்தை உபாசகர்கள் . சித்தர்களுள் முக்கியமானவரான, ஸ்ரீ போகர், கௌலாச்சார ஸ்ரீவித்தை உபாசகரே. பழனி முருகன் சிலையை நவ பாஷாணத்தினால் செய்த போகர் சித்த மருத்துவத்தில் சிறந்தவர். இவர் 'மகா சித்தர்' என்று புகழப்படுகிறார். இவர் சமாதி ஸ்ரீதண்டபாணி சன்னதிக்கு பின்புறம் உள்ளது.


ஸ்ரீ பாம்பாட்டிச் சித்தர் முருகனருள் பெற்றவரே. மருதமலையில் நாக உருவில் வந்து முருகனை இன்றும் இவர் தரிசனம் செய்வதாகச் சொல்லப் படுகிறது.
நாக உருவில் உள்ள குண்டலினியை மேலேற்றும் குண்டலினி யோகத்தைப் பற்றிய பாடல்களைப் பாடியதால், இவர் பாம்பாட்டிச் சித்தர் என அறியப்பட்டார். புன்னாகவராளி இராகத்தில் அமைந்த

'நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே! என்ற பாடல் மிகப் பிரசித்தமானது.

முருகனின் ஆறு படை வீடுகளும் ஆறு ஆதாரச் சக்கரங்களைக் குறிப்பன. ஞானசக்தியாகிய முருகப் பெருமானின் பல தலங்களில் சித்தர்கள் சித்தியடைந்துள்ளனர். பழனியில் போகர், திருப்பரங்குன்றத்தில் மச்சமுனிகள், எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஸ்ரீ மச்சமுனி
ஆறுபடை வீடுகளில் மூலாதாரத்துக்கான ஸ்தலம் முதல் படை வீடாகிய திருப்பரங்குன்றம். மன அமைதியே, யோகநெறிக்கான அடிப்படை. தேவசேனா தேவியைத் திருமணம் செய்தருளி மனமகிழ்வோடு இங்கிருக்கும் கந்தன், மன அமைதி தரும் தெய்வம். எனவே இது மூலாதாரத்திற்கான தலமாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீ அருணகிரிநாதர், நான்கு தாமரை இதழ் வடிவான மூலாதாரத்தை

ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி
வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி
ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு ...... மிந்துவாகை
(திருப்புகழ் - பழமுதிர்ச்சோலை) என்று பாடியுள்ளார். மேலும்

மூலா தாரமொ டேற்றி யங்கியை
ஆறா தாரமொ டோட்டி யந்திர
மூலா வாயுவை யேற்று நன்சுழி முனையூடே (திருப்புகழ், வைத்தீஸ்வரன் கோவில்) என்று குண்டலினி யோகத்தைப் போற்றியுள்ளார்.

முருக பக்தரும் சித்தருமான‌ ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் இயற்றிய துதிகள் மந்திர சித்தி வாய்ந்தவை. குறிப்பாக, சண்முக கவசம் பல அரிய பீஜ மந்திரங்களைத் தன்னுள் அடக்கியது. இதை குமாரஸ்தவம், பகை கடிதல் ஆகிய துதிகளைப் பாராயணம் செய்த பிறகே பாராயணம் செய்ய வேண்டும். துதிகளை முன்பின் மாற்றிப் படிக்கலாகாது.திருப்பரங்குன்றத்தில் இவர் அதிஷ்ட்டானக் கோவில் உள்ளது.

எதிர்பாரா ஆபத்துக்களிலிருந்தும் பிரச்னைகளிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளப் பாராயணம் செய்ய வேண்டிய சண்முக கவசம். இதன் தொடர்ச்சியை அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.

வெற்றி பெறுவோம்.!!!

8 கருத்துகள்:

  1. அற்புதத் தகவ்ல்களினை அழகாக பகிர்ந்தமைக்கு நன்றி!
    http://atchaya-krishnalaya.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. ஆஹா...அருமையான பதிவு...மிக்க நன்றி...நான் முன்பு தங்களிடம் வேண்டியபடி எனக்கு மிகவும் பிடித்த யோகக்கலை மற்றும் குண்டலினி பற்றி மிகவும் அருமையாகவும்,சிறப்பாகவும் தந்துள்ளீர்கள்...மீண்டும் எனது நன்றிகள் தங்களுக்கு...

    பதிலளிநீக்கு
  3. //tchaya said...
    அற்புதத் தகவ்ல்களினை அழகாக பகிர்ந்தமைக்கு நன்றி//

    தங்களுக்கு என் நன்றி

    பதிலளிநீக்கு
  4. // R.Srishobana said...
    ஆஹா...அருமையான பதிவு...மிக்க நன்றி...நான் முன்பு தங்களிடம் வேண்டியபடி எனக்கு மிகவும் பிடித்த யோகக்கலை மற்றும் குண்டலினி பற்றி மிகவும் அருமையாகவும்,சிறப்பாகவும் தந்துள்ளீர்கள்...//

    என்னை இவ்வாறு எழுதத் தூண்டிய தங்களுக்கும், சகோதரர், திரு. ஆலாசியம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  5. I happened to land here after seeing your article in Thiru.Subbiah vathiaar's blog.

    Great indeed.

    subburathinam
    http://pureaanmeekam.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. //I happened to land here after seeing your article in Thiru.Subbiah vathiaar's blog. //

    Thank you so much sir. your blog is very informative. Thanks.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் படைப்புகள் அருமை. இன்றைய தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டுதல்.


    முரளிகுமார்

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..