நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

PALALA GOWRI, POLALA AMAVASA VIRTHAM( 5/9/2013)....பல கௌரி (பலால கௌரி, போலால அமாவாசை) விரதம்


அன்பர்களுக்கு வணக்கம்!

நம் கலாசாரத்தில், அழகியலோடு கூடிய பலவிதமான பண்டிகைகள், விரதங்கள் கொண்டாடப்படுகின்றன.  ஒவ்வொரு பண்டிகை/ விரதத்துக்கும் பின்புலமாக, இறைநம்பிக்கையை வலுப்படுத்தும் கதைகள் சொல்லபடுகின்றன. பெரும்பாலும் கணவர், குழந்தைகள் மற்றும் குடும்ப நலன் வேண்டி செய்யப்படுவதாகவே இந்த விரதங்கள் இருக்கின்றன.

நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடப்படும் இத்தகைய பண்டிகைகள் மற்றும் விரதங்களைக் கண்டறிந்து சொல்வதே இம்மாதிரி பதிவுகளின் நோக்கம்.  நம் நாட்டின் பெருமைப்படத்தக்க கலாசாரப் பின்புலத்தை அறிவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

நமக்குத் தேவையான நன்மைகளைப் பெறும் பொருட்டு, பலவிதமான கௌரி விரதங்கள், பூஜைகள் கொண்டாடும் வழக்கம் நம் பாரம்பரியத்தில் இருக்கிறது. கௌரி தேவி வேண்டும் வரங்களை அருள்பவள். வெண்ணிறத்தை கௌவர்ணம் என்று சொல்வது வழக்கம். சிவனாரிடமிருந்து மின்னலெனத் தோன்றிய வெண்ணிற ஒளியே கௌரி தேவியாக உருப்பெற்றதென புராணங்கள் கூறுகின்றன.

வெண்ணிறமாக இருப்பதாலும் மலைகளின் மேல் தங்கி அருள் புரிதலாலும் 'கௌரி' என அழைக்கப்பட்ட கௌரி தேவிக்கு, 108 விதமான ஸ்வரூபங்கள் உள்ளன. அவற்றில் சிறப்பான சில வடிவங்களைத் தேர்ந்தெடுத்து, அந்தத் திருவடிவங்களைப் போற்றும் முகமாக கௌரி விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன.

கேதார கௌரி, சம்பத் கௌரி, ஸ்வர்ண கௌரி, கஜகௌரி என பலவிதமான கௌரி விரதங்கள் இருக்கின்றன. திருமண முகூர்த்தத்திற்கு முன்பாக, மணமகள், கௌரி பூஜை செய்வது  பல சமூகங்களில் இன்னும் வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில்,  இந்தப் பதிவில், ஆந்திர, கர்நாடகா மாநிலங்களிலும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படும் பலகௌரி விரதத்தைப் பற்றிப் பார்க்கலாம்.இது போலால அமாவாசை விரதம், பலால கௌரி விரதம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது.

விரதம் அனுஷ்டிக்கப்படும் தினம்:
ஒவ்வொரு வருடமும் சிராவண(ஆவணி) மாத அமாவாசை தினத்தன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வருடம், 5/9/2013, வியாழனன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. வட இந்திய மாநிலங்களில், பிதோரி அமாவாசை, பய்ல் போலா அமாவாசை என்றும் அழைக்கப்படும் இந்த விரதம், சந்திரமானன பஞ்சாங்கத்தின்படி, சிராவண மாத கடைசி தினம்(அமாவாசை) அன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

யார் விரதம் அனுஷ்டிக்கலாம்?
இந்த விரதம், பார்வதி தேவியால், தேவேந்திரனின் மனைவி இந்திராணிக்கு உபதேசிக்கப்பட்டது. அறிவும் ஆரோக்கியமும் நிறைந்த புத்திர பாக்கியம், இந்த விரததை அனுஷ்டிப்பதால் கிட்டும்.

ஆகவே திருமணமான மங்கையர், புத்திரப் பேறு வேண்டியும், குழந்தைகள் இருப்போர், தம் குழந்தைகளின் நலனுக்காகவும் இந்த விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.

இந்த விரதம், தென்னிந்தியாவில், குழந்தைகளைக் காக்கும் கௌரி தேவியாகிய‌ பார்வதி தேவியின் ஒரு அம்சமாகிய போலெரம்மா, போச்சம்மா என்ற பெயர்களால் வழங்கப்படும் தேவியைக் குறித்துச் செய்யப்படுகின்றது.  தமிழ்நாட்டில் இந்த தேவி,  சீதலா தேவி என்ற  வழங்கப்படும் மாரியம்மனைக் குறிக்கின்றாள். அம்மை, வைசூரி முதலிய கொடிய நோய்கள் குழந்தைகளை அண்டாது காக்கும் மகிமையுள்ள தேவி இவள்.

வட நாட்டின் சில பகுதிகளில் துர்காதேவியை குறித்தும்,64 யோகினிகள்,  பிரம்மாணி, வைஷ்ணவி, மாஹேஸ்வரி, கௌமாரி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய‌ சப்த மாத்ருகா தேவியரைக் குறித்தும் இந்த விரதம் செய்யப்படுகின்றது.

விரதம் அனுஷ்டிக்கப்படும் விதம்:

இது, 'சீதலா சப்தமி'என்று சில வட மாநிலங்களிலும், 'சீதலா சஷ்டி' என்று ஒரிசாவிலும் வழங்கப்படும் விரதங்களைப் போன்றே அனுஷ்டிக்கப்படுகின்றது.  'பிதா, பித்' என்றால்  மாவு என்று பொருள் சொல்லப்படுகின்றது. மாவினால் ஆன தேவியின் உருவம் வைத்துப் பூஜிப்பதால், இது பிதோரி அமாவாசை விரதம் என்று அழைக்கப்படுகின்றது. 64 யோகினிகளைப் பூஜிக்கும் வழக்கம் இருக்கும் இடங்களில், 64 சிறிய உருவங்கள், (கோதுமை அல்லது அரிசி)மாவினால் செய்து பூஜிக்கின்றார்கள்.

பெண்கள் தனித்தனியாக, தம் இல்லங்களிலோ அல்லது அம்மன் திருக்கோயில்களில் ஒன்று கூடியோ இந்த விரதத்தை நடத்துவார்கள்.

தேவி போச்சம்மாவின் திருவுருவப்படம் அல்லது அன்னையின் கோயிலின் படம் ஒன்று, பூஜையறையில் வரையப்படுகின்றது. மாவினால் திருவுருவங்கள் வைத்துப் பூஜிக்கப்படும் வழக்கமுள்ளவர்கள் அவ்வாறு வைத்துப் பூஜிக்கிறார்கள். பின், தூப தீப ஆராதனைகள் செய்து ஷோடசோபசார பூஜைகள் செய்யப்படுகின்றது. கௌரி அஷ்டோத்திரம் (சொடுக்கவும்), துர்கா ஸ்துதி, பவானி அஷ்டகம் முதலியவை சொல்லித் துதிக்கின்றார்கள்.

அம்மை, வைசூரி முதலிய கொடிய நோய்களை விரட்டும் மகிமையுள்ள சீதலாஷ்டகம், சீதலா தேவி ஆரத்தி முதலியவற்றைப் படிக்க கீழே சொடுக்கவும்.

1.சீதலாஷ்டகம்.

2.சீதலாதேவி ஆரத்தி.

அன்றைய தினம், குழந்தைகளுக்கு மங்கள ஸ்நானம் செய்வித்து, புத்தாடை அணிவிக்கிறார்கள். விரத பூஜை முடிவில், நோன்புச் சரடுகள் வைத்து வழிபட்டு, தம் குழந்தைகள் நலன் வேண்டி அவர்களது கரங்களில் கட்டி, அவர்களது நலனுக்காக வேண்டுவார்கள்.

சில வித்தியாசமான நிவேதனங்கள் இந்த பூஜையின் போது படைக்கப்படுகின்றன.

தாலிகாலு பரவான்னம்(அரிசி மாவினால் செய்யப்பட்ட சேவையை உபயோகித்துச் செய்யப்படும் பாயசம்) பில்லாலு(அரிசி மாவினால் செய்யப்படும் சப்பாத்தி) முதலிய நிவேதனங்கள் விசேஷமாகக் கருதப்படுகின்றன.

சற்று வித்தியாசமான இவற்றின் செய்முறையின் லிங்க் கொடுத்திருக்கிறேன். நீங்களும் செய்து பாருங்கள்.

நிவேதனங்கள் (சொடுக்கவும்).

போலால அமாவாசை விரதக் கதை:
ஒரு ஊரில் ஏழு அண்ணன் தம்பிகள் வசித்து வந்தார்கள். அனைவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் இருந்தன. கடைசித் தம்பிக்கு ஏழு குழந்தைகள். அந்தக் குடும்பத்தின் ஏழு மனைவிமார்களும், போலால அமாவாசை விரதத்தை அனுஷ்டிக்க ஆவல் கொண்டனர். ஆனால் சோதனையும் வேதனையும் சேர்ந்தது போல், ஒவ்வொரு வருடமும், கடைசித் தம்பியின் ஒரு குழந்தை இறைவனடி சேர்ந்தது. அதனால், ஒவ்வொரு வருடமும் இந்த விரதம் அனுஷ்டிப்பது தடை பட்டது. இம்மாதிரி நிகழும் போது ஒரு வருடத்திற்கு எந்தப் பண்டிகையும் கொண்டாடக் கூடாதென்பது சம்பிரதாயம்.

அண்ணன் மனைவியர் அறுவரும், கடைசி ஓரகத்தி, தன் குழந்தைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளாததே இதற்குக் காரணம் என்று நினைத்தனர். சமயம் வாய்க்கும் போதெல்லாம் இதைச் சொல்லிக் காட்டி அவளை மன வேதனைப்படுத்தினர்.

ஏழாவது வருடம். கடைசி தம்பியின் ஒரு குழந்தை மட்டுமே உயிரோடு இருந்தது. அவன் மனைவி, மிகுந்த கவனமுடன் அதைப் பராமரித்து வந்தாள்.ஆனால், விதி செய்த சதி, போலால அமாவாசை தினத்தன்று, காரணம் தெரியாமல் திடீரென அந்தக் குழந்தையும் மரித்தது.

இந்தப் பேரதிர்ச்சியால் அவள் செய்வதறியாமல் திகைத்தாள். இந்த வருடமாவது போலால அமாவாசை விரதம் கொண்டாட, அவள் ஓரகத்தியர் செய்திருக்கும் ஏற்பாடுகளை அவள் அறிவாள். இது தெரிந்தால் நிச்சயம் பெரும் பிரச்னை வெடிக்கும். புத்ர சோகத்திற்கென அழுவதா அல்லது ஓரகத்தியரின் கொடுமைக்கு அஞ்சுவதா என அவளுக்குத் தெரியவில்லை.

திடீரெனத் தோன்றிய உணர்வினால், மனதைத் திடப்படுத்திக் கொண்டு, குழந்தையை மறைத்தாள். தானும் கோயிலுக்குச் சென்று, விரதத்தில் கலந்து கொண்டு, அம்பிகையை விழிகளில் நீர் பெருக, பூஜை செய்தாள்.

கருணைக் கடலான அம்பிகை, அந்தப் பெண்ணுக்கு கருணை புரிய திருவுளம் கொண்டாள்.

அன்று இரவு, அனைவரும் தூங்கிய பின், இறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு ஊருக்கு வெளியில் இருக்கும் போலெரம்மா கோயிலுக்குச் சென்றாள் அந்தப் பெண். அம்பிகையிடம் முறையிட்டு, கதறி அழுதாள். அச்சமயம், இரவு பத்தி உலாத்துதல்(ஊர் எல்லையை காவலுக்காகச் சுற்றுதல்) செய்வதற்காக, அம்பிகை விக்ரக உருவிலிருந்து வெளிப்பட்டாள். ஏதும் அறியாதவள் போல், அந்தப் பெண்ணிடம் வந்து, அவள் அழுகைக்கான‌ காரணம் கேட்டாள்.

அழுது கொண்டே அந்தப் பெண் தன் நிலையைக் கூறி விட்டு, 'இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. குழந்தையின் நிலையைச் சொன்னால் பெரும் பிரச்னை வெடிக்கும். குழந்தையைப் பாதுகாக்காததோடு, குழந்தை இறந்த செய்தியை மறைத்து விரதம் செய்தது தவறு என்று குற்றம் சாட்டுவார்கள். இதை சொல்லாமல் விட்டால், நாளைக்குக் குழந்தை எங்கே என்று கேட்டால் என்ன பதில் சொல்வேன்? என்று கதறினாள் அந்தப் பெண்.

அம்பிகை போலால அமாவாசை விரதப் பலனைத் தர திருவுளம் கொண்டாள். மந்திர அக்ஷதையை அவளிடம் கொடுத்து, இறந்த பாலகன் மீதும், மற்ற ஆறு குழந்தைகள் புதைக்கப்பட்ட இடத்தின் மீதும் தூவி, அவர்களது பெயரைச் சொல்லி அழைக்குமாறு கூறி விட்டு மறைந்தாள். அன்னையின் ஆணைப்படி செய்தாள் அந்தப் பெண்.

என்ன ஆச்சரியம்!. இறந்த எழுவரும் உறங்கி எழுந்ததைப் போல் உயிர்பெற்று வந்தனர். அந்தப் பெண்ணின் ஆனந்தம் தாளமுடியாததாக இருந்தது. பெருமகிழ்வுடன், அனைத்து குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இல்லம் சேர்ந்தாள் அவள்.

குழந்தைகளோடு அவளைக் கண்ட அனைவரும், அதிசயித்து விசாரிக்க, நடந்ததைக் கூறினாள் அந்தப் பெண். அனைவரும் அன்னையின் அருள்மழையை வியந்து போற்றினர். தம் குழந்தைகளின் நலனுக்காக 'போலால அமாவாசை விரதத்தை' தொடர்ந்து செய்யத் துவங்கினர். அது முதல் இந்த விரதம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

வட இந்தியாவின் சில பகுதிகளில், இது பிதோரி அமாவாசையாகக் கொண்டாடப்படுகின்றது என்பதை முன்பே பார்த்தோம். இந்தக் கொண்டாட்டம், நமது மாட்டுப் பொங்கலை பெரும்பாலும் ஒத்திருக்கின்றது.

அன்றைய தினம், உழவர்கள், தங்கள் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் முகமாக, அவற்றை அலங்கரித்து வழிபடுகின்றனர். மறுநாளிலிருந்து, விதை விதைத்தலும், நிலத்தை உழுதலும் ஆரம்பமாகும்.

போலா அமாவாசைக்கு முன் தினம், மாடுகளின் மூக்கணாங்கயிறுகள் அவிழ்க்கப்படுகின்றன. மஞ்சள், கடலை எண்ணை கலந்த கலவை கொண்டு அவை குளிப்பாட்டப்படுகின்றன. தமிழ்நாட்டில் செய்வது போல், அவற்றின் உடலெங்கும் வண்ண, வண்ணப் பொட்டுக்கள் வைத்து, கொம்புகளுக்கு வண்ணமடித்து, மலர்கள், வண்ணக் காகிதங்கள் இவற்றால் அலங்கரிக்கின்றனர்.

அதன் பின், மாடுகளை நிறுத்தி வழிபாடு செய்து, கிச்சடியை உணவாகத் தருகின்றனர். மாலை வேளைகளில் மாடுகளின் ஊர்வலமும் நடக்கின்றது

சில மாநிலங்களில், இந்த தினத்தை ஒட்டி விளையாட்டுப் போட்டிகளும் நடக்கின்றன.

வேறு சில மாநிலங்களில், பசுவுக்கும் காளை மாட்டுக்கும் மழை வேண்டி திருமணம் செய்கிறார்கள். மனிதர்களுக்குச் செய்வது போலவே அனைத்துச் சடங்குகளும் நடைபெற்று, கோவில்களைச் சுற்றி பிரதக்ஷிணமாக மாடுகளை அழைத்துச் செல்கின்றார்கள்.

இந்த அமாவாசை தினத்தன்று பித்ருவழிபாடு மிக விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.  ஆகவே அன்றைய தினம் தர்ப்பணம் முதலியவை செய்வதும் மிக நல்லது.

தொன்று தொட்ட நம்பிக்கைகளின் விளைவாக எழுந்த இந்த விரத பூஜைகள், ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்வோருக்கு அளவில்லாத நற்பலன்களைத் தருவது கண்கூடு.

இம்மாதிரியான விரதங்கள் செய்யும் வழக்கமில்லாதவர்களும் இந்தக் குறிப்பிட்ட தினங்களில் தங்களால் இயன்ற இறைவழிபாட்டினை மேற்கொண்டு நலமடையலாம்.

இறையருளால்

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

10 கருத்துகள்:

  1. சிறப்பான பகிர்வு... அமாவாசை விரதக் கதை பரவசம்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

      நீக்கு
  2. கோவட்ச துவாதசி பற்றி எழுதுவீர்கள் என
    (கோமாதவுடன்) ஆவலுடன் காத்திருந்தேன்

    உங்களின் நேர அருமையை எண்ணி
    உங்களுக்கு மின்னஞ்சல் வேண்டுகோள் வைக்கவில்லை

    எனினும் உங்கள் செயல்
    எழுத்து எண்ணங்கள் பரவசமூட்டுகிறது

    வாழ்க..
    வளமுடன் வளர்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவத்ச துவாதசிக்கு இன்னும் நாள் இருக்கே. இருந்தும் பதிவு போன வருஷம் எழுதிய லிங்க் தந்திருக்கேன். உங்க கோமாதா கிட்டவும் சொல்லிடுங்க...
      http://aalosanai.blogspot.in/2012/11/nandini-viratham-11112012.html

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

      நீக்கு
  3. கேட்டறியாத ஒரு விரதம் குறித்த தகவல்களுக்கு நன்றி. கெளரி விரதம் தெரியும். இது தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி அம்மா!

      நீக்கு
  4. அறியாத, ஆனால் அரிதான தகவல். ராஜஸ்தானியர் இதை மிகவும் விசேஷமாக கொண்டாடுகிறார்கள் என்று அறிகிறேன். இந்த அமாவாசைக்காக லீவில் ஊருக்கு செல்லுதல் சகஜமாக காண்கிறேன். ஆனால் விவரம் கேட்டதில்லை. சகோதரியின் கட்டுரை இது பற்றியும், மேலும் இது போல் மற்ற மாநில விரத பண்டிகைகள் பற்றியும் அறியும் ஆவலை தூண்டுகிறது. சகோதரியின் விவரமான பதிவுக்கும், சீதலாஷ்டகம், சீதலா தேவியின் ஆரத்தி க்ஷேத்ரயாத்ரா வலைப்பூ பதிவு லிங்க் கொடுத்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரரின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
      இறையருளும், தங்களைப் போன்றோர் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கமும் வழிகாட்டுதலுமே பதிவுகளின் சிறப்புக்குக் காரணம். மீண்டும் என் நன்றிகள் சகோதரரே!

      நீக்கு
  5. சிறப்பான் அமாவாசை விரதம் பற்றி அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வார்த்தைகள் மேன்மேலும் எழுத எனக்கு ஊக்கமூட்டுகின்றன. மிக்க நன்றி அம்மா!.

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..