நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

DEITY’S POSTURES IN TEMPLES ..ஆலயங்களில் இறைவனின் திருவடிவங்கள்


நம் பாரத தேசத்தில், நம் கலாசாரத்தையும் வரலாற்றுச் சிறப்புகளையும் இவ்வுலகுக்கு எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடியாகத் திகழ்பவை கோயில்கள். ஆண்டவன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களின் சிறப்புகள் சொல்லில் அடங்குவதில்லை.

இறைவன் தூணிலும் துரும்பிலும் இருப்பவராயினும், ஆலயம் என்னும் உயரிய கட்டுமானத்தில் இறை சக்தியை பூரணமாக எழுந்தருளச் செய்து வழிபடுவதற்கு பல அருமையான காரணங்கள் இருக்கின்றன.

கோயில்களின் கலசங்களை ஸ்தாபனம் செய்யும் பொழுது, அவற்றின் அடியில், நவதானியங்கள், நவரத்தினங்கள் முதலியவற்றை வைத்து,அவற்றின் மேல் கலசஸ்தாபனம் செய்வார்கள். இந்தக் கலசங்கள், இடி விழுந்தால் அவற்றின் பாதிப்பை ஏற்றுக் கொள்ளும் தன்மையுடையவை. அக்காலத்தில், கோயில் கோபுரத்திற்கு மேல் வீடுகளின் உயரம் இருக்கக் கூடாதென்று கட்டுப்பாடுகள் உண்டு.

அது போல், மூலஸ்தானத்தின் மேல் இருக்கும் விமானமும் பிரத்தியேகமான அமைப்பை உடையது. பிரபஞ்சத்தின் அதி உன்னதமான தெய்வீக சக்தியை ஈர்த்து நமக்கு அளித்து நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றும்  மகிமை பொருந்தியவை ஆலய விமானங்கள்.விமானங்களுள், தூங்கானை மாடம்(கஜபிருஷ்ட விமானம்), இந்திர விமானம் போன்ற பல அமைப்புகள் உண்டு.

அது போல், ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தங்களின்   வடிவங்களுக்கும் ஆழ்ந்த பொருளுண்டு. சிற்ப சாஸ்திரம், மிகவும் நுணுக்கமான முறையில் ஒவ்வொரு இறை மூர்த்தங்களுக்கும் பிரத்யேகமான ஆசன முறைகளை வடிவமைத்திருக்கிறது. இவற்றில் பல, யோகாசனத்திலும், நாட்டிய சாஸ்திரத்திலும் கையாளப்படுகின்றன.

இந்தப் பதிவில் , ஆலயங்களில் இறை மூர்த்தங்கள் எழுந்தருளியிருக்கும்  பொதுவான‌ சில திருவடிவங்களைக் குறித்துக் காணலாம்.


ஸ்தானகம்
ஆலயத்தில் இறை மூர்த்தங்கள் சமஸ்திதியில் நின்று அருள் புரியும் திருவடிவையே 'ஸ்தானகம்' என்கின்றோம். இதை 'சமபாத ஸ்தானகம்' என்றும் கூறுவது வழக்கம். ஸ்ரீமஹாவிஷ்ணுவின் நின்ற திருக்கோலத் திருமேனிகள் இவ்வாறே பெரும்பாலும் அமைக்கப்படுகின்றன. ஸ்ரீகுருவாயூரப்பனின் திருமேனி அழகான உதாரணம். இறைவன் திருமேனியில் எவ்வித வளைவுகளுமில்லாமல், சமச்சீராக இருக்குமாறு அமைப்பார்கள்.மிகுந்த வரப்பிரசாதியான அம்பிகை திருமேனிகளும் இவ்வாறு அமைந்திருப்பதைப் பார்க்கலாம். மிகுந்த கனிவோடு, வேண்டுவோர்க்கு வேண்டுவன நல்கும் சாந்த மூர்த்தியாக இறைவன் எழுந்தருளுகிறார் என்பதன் வெளிப்பாடே  ஸ்தானகத் திருக்கோலம்.






லலிதாசனம்:
இறைமூர்த்தங்களைப் பொறுத்தவரை, ஆசனம் என்றாலே பீடத்தில் அமர்ந்துள்ள நிலை என்றே பொருள்படும். ஒரு  காலை மடித்து, பீடத்தில் நேராக ஊன்றி, பின் மறு காலை, சற்று மடித்தாற் போல் பக்கவாட்டில் வைத்து, சௌகரியமாக அமர்ந்தாற் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் திருவடிவே லலிதாசனம். பால கணபதியின் திருவடிவம், இந்த நிலையிலேயே அமைந்துள்ளது.புத்த பகவானின் திருவடிவங்கள் சிலவும் இந்த நிலையிலேயே அமைந்துள்ளன.


ஒரு காலை மடித்து நேராக ஊன்றி, மறுகாலை தொங்கவிட்டு, திருமேனி ஒரு புறமாக நளினமாக சாய்ந்து இருக்கும் திருக்கோலமும் லலிதாசன வடிவே. புத்தமத வழிபாட்டுக் கடவுள்களில் ஒன்றான, வசு தாராவின் திருவடிவம் இதற்கு உதாரணம்.




சுகாசனம்
இறைவனது திருமேனியில் எந்தவித வளைவுகளும் இல்லாமல், திருமேனி நேராக, எந்தப் புறமும் சாயாமலும் இருக்குமாறும், ஒரு காலை மடித்து, மறு காலை சாதாரணமாக தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் திருக்கோலத்திலும் இருக்கும் நிலையே சுகாசனம். இது பொதுவாக, சில சிவ,விஷ்ணு திருமேனிகளில் காணப்படுகிறது. சிவனாரின் திருவடிவங்களில் 'சுகாசன மூர்த்தி' என்ற திருவடிவம் மிகச் சிறப்புடையது. உமா தேவி, சிவாகமங்களது தத்துவங்களை உபதேசிக்குமாறு சிவனாரிடம் வேண்டிக்கொள்ள, அதற்கிணங்கி, சிவபெருமான் சுகாசனத்தில் அமர்ந்து உபதேசித்த திருக்கோலமே சுகாசன மூர்த்தி.சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் மூர்த்தங்களை வழிபடுவோர், வாழ்வின் எல்லா சுகங்களையும் அடைந்து இன்புறுவர்.



உத்குடிகாசனம்:
இறைவன் திருமேனி, ஒரு காலை நேராக மடித்து பீடத்தில் ஊன்றி, மறுகாலை நேராகத் தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் நிலையே உத்குடிகாசனம். இறைவன் திருமேனி நேராகவும் கம்பீரமாகவும் அமைந்திருக்கும். யோக தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீஅய்யனார் ஆகியோரது திருமேனிகள் இவ்வாறு அமைந்திருக்கக் காணலாம். மிகுந்த கட்டுப்பாட்டுடன் கூடிய வழிபாட்டு முறைகள் மேற்கொள்ள வேண்டிய இறையுருவங்கள் என்பதைக் குறிக்கும் ஆசனம் இது என்று கூறப்படுகின்றது.







யோகாசனம்:

இரு கால்களையும் மடித்து, ஒன்றுக்கொன்று குறுக்காகவோ, நேராகவோ பீடத்தில் ஊன்றி அமர்ந்திருக்கும் நிலையே யோகாசனம். இரு பாதங்களும், திருமேனியின் உடலோடு யோகப்பட்டத்தால் பிணைக்கப்பட்டிருக்கும். வலது கரம் ஞான அல்லது சின்முத்திரையோடும், மற்ற திருக்கரம், மணிக்கட்டு முழங்காலில் ஊன்றி, தண்டத்தைத் தாங்குவது போன்ற நிலையிலும் அமைந்திருக்கும். வாழ்வின் குறிக்கோளான பரம்பொருளோடு ஒன்றிணைந்த பேரானந்த நிலையை அருளும் மூர்த்தம் என்பதைக் குறிக்கும் ஆசனமே இது. சபரிமலை ஸ்ரீஐயப்பன் திருமேனி இதற்கு மிகச் சரியான உதாரணம். யோகிகளின் திருச்சந்நிதி சிலவும் இம்முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.யோகிகளின் மனநிலை மிகுந்த ஒழுங்கோடும் கட்டுப்பாட்டோடும் பேரானந்த நிலை குறித்த ஒருமித்த குறிக்கோளோடு இயங்குவது. பரம்பொருளோடு ஒன்றிணைந்த பேரானந்த நிலையில் அவர்களது நிலை(யோகநிலை) யோகாசனத்தில் அமர்ந்திருப்பதாகவே காணப்படுகின்றது.




பத்மாசனம்:
அநேகமாக, அனைவரும் அறிந்த ஆசனம் இது. தலை உச்சியில் அமைந்துள்ள சஹஸ்ர தள பத்மத்தை குறிப்பதான ஆசனம் இது. இதை கமலாசனம் என்றும் அழைப்பதுண்டு. இறைத் திருமேனி, தன் இரு கால்களையும் இரண்டு தொடைகளின் மீதும் குறுக்காக மடித்தபடி அமர்ந்திருக்கும் திருக்கோலமே இது.
காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன், கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை அம்மன் ஆகிய இருவரும் பத்மாசனத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கின்றார்கள். இறை மூர்த்தம் பிரபஞ்ச சக்தியின் ஒருங்கிணைந்த வடிவம் என்பதை உணர்த்தும் திருக்கோலம் இது.






வீராசனம்:
ஒரு காலை மடித்து, மறு தொடை மீது வைத்து மறு காலை நேராகத் தொங்கவிட்டாற் போல அமைந்திருக்கும் திருவடிவே வீராசனம். திருமேனி, நேராகவும் கம்பீரமாகவும் அமைந்திருக்கும். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் திருமேனி, ஸ்ரீவாராஹியின் திருமேனி இந்த திருவடிவிற்கு உதாரணம். இந்தத் திருவடிவம், ஞானம், வாக்குவன்மை,எடுத்த காரியங்களில் துணிவாக ஈடுபட்டு செயலாற்றும் தன்மை போன்றவற்றை அருளும் மூர்த்தங்கள் என்பதை குறிப்பதாகும்.

இறை மூர்த்தங்கள் திருக்கரங்களில் இருக்கும் முத்திரைகளுக்கும் விசேஷமான அர்த்தங்கள் உண்டு. அவற்றைக் குறித்து பின்னொரு பதிவில் காணலாம்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

வெற்றி பெறுவோம்!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

  1. ஸ்தானகம், லலிதாசனம், சுகாசனம், உத்குடிகாசனம், யோகாசனம், பத்மாசனம், என் ஒவ்வொன்றையும் படத்துடன் கூடிய விளக்கங்கள் மிகவும் சிறப்பு... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் மனமார்ந்த நன்றி டிடிசார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தொடர்ந்து வரும் தங்கள் அன்பான ஆதரவுக்கு என் பணிவான நன்றிகள் ஐயா!!!

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..