நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 27 டிசம்பர், 2012

ARUDRA DHARISANAM (28/12/2012)....அருணோதயத்தில் ஆருத்ரா தரிசனம்.......

ஆர்த்த பிறவித் துயர் கெட, நாம் ஆர்த்து ஆடும்
தீர்த்தன்; நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன்; இவ் வானும், குவலயமும், எல்லோமும்,
காத்தும், படைத்தும், கரந்தும், விளையாடி,
வார்த்தையும் பேசி, வளை சிலம்ப, வார் கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய, அணி குழல்மேல் வண்டு ஆர்ப்ப,
பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொன் பாதம்
ஏத்தி, இரும் சுனை நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!


உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய எம்பெருமான், இவ்வுலகனைத்தும் படைத்து, காத்து, மறைத்து, அருள் தந்து, பிரளயகாலத்தில் ஒடுக்கும் செயலனைத்தும் பிள்ளை விளையாட்டாகவே செய்கிறான். இப்பிரபஞ்ச இயக்கத்தை விளக்குவதே நடராஜமூர்த்தியின் திருநடனம்.

தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடும் எம்பிரானின் திருக்கூத்து, அவரது ஐந்தொழில்களுக்கு விளக்கமாக அமைகிறது. அவரது திருக்கரங்களில் இருக்கும் டமருகத்தில் ஒலி, ஸ்ருஷ்டி ஏற்படக் காரணமாக அமைகிறது, அபயக்கரம், ஸ்திதி எனும், காத்தல் தொழிலுக்கும், மற்றொரு கரத்திலிருக்கும் அக்னி, அழித்தல் தொழிலுக்கும், முயலகனின் மேல் ஊன்றியிருக்கும் வலது பாதம், மறைத்தல் தொழிலுக்கும், தூக்கிய திருவடி, முத்தியருளும் கருணைக்கும் விளக்கமாக அமைகிறது.

பஞ்சாட்சர மஹாமந்திரத்தின் ஸ்தூல வடிவமே நடராஜ மூர்த்தி. பிரபஞ்ச இயக்கத்தையே நடராஜப் பெருமானது திருநடனம் உணர்த்துகிறது. சமீபக் கண்டுபிடிப்பான, கடவுள்  அணு, அதன் அசைவு ஆகியவை நடராஜப் பெருமானது திருநடனத்தை ஒத்திருப்பதை உலகமே ஒப்புக் கொண்டுள்ளது.
நீரிச்வர வாதம் எனப்படும் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களும் நம்பும் விஷயம் விஞ்ஞானம்.  செர்ன் ஆய்வுக் கூடத்தின் அரங்கத்தில், 2004 ஜூன் 18 அன்று, 6 அடி உயரம் கொண்ட சிதம்பரம் நடராஜர் சிலை நிர்மாணிக்கப்பட்டது. இதன் காரணம், பின் வருமாறு.....(நன்றி: கடவுள் அணுவும் சிவனின் நடனமும் --எஸ்.குருமூர்த்தி, http://idlyvadai.blogspot.in/2012/07/blog-post_18.html).

ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பிரபல அமெரிக்க பௌதிக விஞ்ஞானி, 'The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics' (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்த்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு) என்கிற தலைப்பில் Main currents in Modern Thought என்கிற விஞ்ஞான சம்பந்தப்பட்ட பத்திரிகையில், சிவனின் நடனத்துக்கும், உப அணுக்களின் நடனத்துக்கும் உள்ள இணக்கத்தைப் பற்றி முதலில் விவரமாக எழுதினார்.

1975-ஆம் ஆண்டு இந்தக் கட்டுரையை ’The Tao of Physics' என்கிற தலைப்பில் ஒரு பெரிய புஸ்தகமாக அவர் எழுதினார். அது உலகிலேயே அதிகம் விற்ற புஸ்தங்களில் ஒன்றாகப் பிரபலமாகியது.

செர்ன் ஆய்வு கூடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சிவனின் சிலையின் பீடத்திற்கு அருகிலுள்ள ஒரு பலகையில், ப்ரிட்ஜாப் காப்ரா தன்னுடைய ’The Tao of Physics'புஸ்தகத்தில் எழுதிய சில வரிகள் இது:

"ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்தியக் கலைஞர்கள், உலோகங்களில் நடராஜரின் நடனத்தை அழகாகச் சித்திரித்தனர். நம் நவீன காலத்தில் பௌதிக விஞ்ஞானிகள், மிகவும் நுண்ணிய தொழில் நுட்பத்தின் மூலமாக இசைவுடன் கூடிய பிரபஞ்சத்தின் (அணுக்களின்) நடன வகைகளைச் சித்திரிக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தின் (அணுக்களின்) நடனம், நவீன பௌதிகத்தையும், ஹிந்து சமயக் கலைகளையும், பண்டைய புராணங்களையும் இணைக்கிறது... நவீன விஞ்ஞானம், சீராக இணைந்து செயல்படும் படைப்பு மற்றும் அழிப்பு இரண்டும் (தோன்றி மாறும் பருவ காலங்கள், பிறந்து இறக்கும் ஜீவராசிகள் மட்டுமல்லாமல்) உயிரில்லாத வஸ்துகளுக்கும் பொருந்தும். உயிரில்லாத ஜட வஸ்துகளும் தோன்றி மறைகின்றன என்று நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. ஆகவே, நவீன பௌதிக விஞ்ஞானிகளுக்கு சிவனுடைய நடனமே உப அணுக்களின் நடனம்”.

காப்ராவுக்கு பசிபிக் கடல் கரையில் ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாகத்தான் அவர் நடராஜரின் நடனத்துக்கும், அணு விஞ்ஞானத்துக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்ந்தார். கடலைப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு கடல் அலைகள், சூரிய கிரணங்களின் அலைகள், சிந்தனை அலைகள் எல்லாமே ஒரே சீரான (அணு விஞ்ஞான) நடனத்தின் பிரதிபலிப்பாகப் பட்டது. ‘எப்படி இந்தியச் சித்தர்கள் படைப்பைப் பிரிக்க முடியாத, எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நடப்பாகப் பார்த்தார்களோ, அப்படியேதான் நவீன பௌதிக விஞ்ஞானமும் பிரபஞ்சத்தைக் காண்கிறது’ என்று கூறினார் காப்ரா.
nataraja-theory-of-creation-3
http://www.tamilhindu.com/2010/01/adimudi-kaanaa-athisayam-a-dimension-of-the-universe/
ஆருத்ரா தரிசன மகிமை:
பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் பரந்தாமனின் படுக்கையான ஆதிசேஷப் பெருமானின் திருவுள்ளத்தில் ஒரு ஆவல் தோன்றியது. இவ்வுலகனைத்தையும் இயக்கும்  பரம்பொருளான சிவபெருமானின் திருநடனத்தைக் காண வேண்டும் என்பதே அது. இதை அறிந்த ஸ்ரீமந் நாராயணனும், அவர் ஆவல் நிறைவேற திருவருள் புரிந்தார்.

அதன்படி, இப்பூவுலகில் பதஞ்சலி முனிவராக அவதரித்த ஆதிசேஷன், எம்பெருமானை நோக்கித் தவம் இயற்ற, சிவனார் அவர் முன் தோன்றி, தில்லைச் சிற்றம்பலத்தை(சிதம்பரத்தை) அடையுமாறு கூறி, அங்கு அவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் தன் திருநடனக்காட்சியை அருளுவதாக வரமளித்தார். அவ்வாறே, உலகெலாம் மகிழ, தன் ஆனந்த நடனத்தை தில்லையில் நடத்தியருளிய தினமே, மார்கழி, திருவாதிரை நன்னாள்.

கோவில் என்ற சொல், சிறப்பாக, இரண்டு ராஜர்கள் கோவில் கொண்டுள்ள திருத்தலங்களை மட்டுமே குறிக்கும். ஒன்று, நடராஜப் பெருமான் கோவில் கொண்டுள்ள சிதம்பரம். மற்றொன்று, ஸ்ரீ ரங்கராஜர் கோவில் கொண்டுள்ள ஸ்ரீரங்கம். பஞ்சபூத க்ஷேத்திரங்களில், ஆகாய க்ஷேத்திரம் சிதம்பரம்.

சிதம்பரம் என்ற சொல், எம்பெருமானது திருக்கோவிலையும், தில்லை என்பது ஊரின் பெயரையும் குறிக்கும். சித்+அம்பரம்=சிதம்பரம் . “சித்” என்பது அறிவு. “அம்பரம்” என்பது “பரவெளி” அதாவது ஞானவெளி.  அறிவைப் பயன்படுத்தி, ஆன்மாக்களின் உண்மை நிலை அறியும் போது, அந்த ஞானம் கைகூடும்போது, அந்த  ஞானவெளியில் இறைவன் ஆனந்தக் கூத்தாடுகிறான் என்பதே தத்துவம்.

'ஆருத்ரா' என்பது திருவாதிரை நட்சத்திரத்தின் வடமொழிப்பெயர். ருத்ரனான சிவனாரின் நட்சத்திரம் ஆருத்ரா. மார்கழி மாதம் வரும் ஆருத்ரா நட்சத்திரம், பெரும்பாலும், சிவனாரின் குனித்த சடைமேல் ஒளிரும்  பனி தரும் திங்களான சந்திர பகவானின் கலைகள் முழுமையாகப் பிரகாசிக்கும் பௌர்ணமி நன்னாளிலேயோ அல்லது அதை மிக ஒட்டியோ வரும். ஆதிரை என்ற கற்புக்கரசியே வானில் சிவனருளால், திருவாதிரை நட்சத்திரமாகப் பிரகாசிக்கிறாள் என்பது நம்பிக்கை. அன்றைய தினம், விரதமிருந்து, எம்பெருமானுக்கு களியும், எழுகறிக்கூட்டும் நிவேதிப்பது அளவில்லா நற்பலன்களைப் பெற்றுத் தரும்.

 ,

திருவாதிரைக்குக் களி நிவேதனம் ஏன்?:
தில்லையில் சேந்தனார் என்னும் சிவபக்தர், விறகு வெட்டும் தொழிலைச் செய்து வந்தார். தினம் சிவ ஆராதனை செய்து, சிவனடியார்களுக்கு உணவளித்த பின்பே உணவு கொள்வார்.

இறைவன் அவரைச் சோதித்து, அவர் பெருமையை உலகுக்கு உணர்த்த எண்ணினார். ஒரு சமயம், திருவாதிரைத் திருநாளுக்கு முதல் நாள், நிற்காமல் தொடர்ந்து கடும் மழை பொழிந்தது. அதனால், சேந்தனாருக்கு விறகு வெட்டப் போக முடியவில்லை. விறகு வெட்டி விற்று வந்த பொருளைக் கொண்டே அவர் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை  நடந்து வந்தது. மிகுந்த கவலையுடன் இருந்த சேந்தனாரின் கவலையை அதிகப்படுத்தும் விதமாக, 'சம்போ மகாதேவா...' என்ற குரல் கேட்டது. ஒரு சிவனடியார், அவர் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். சேந்தனார் மனதில் 'இவருக்கு எவ்வாறு உணவளிப்பது?' என்ற கவலையிருந்தாலும், அவர், அதை வெளியே காட்டாது,  சிவனடியாரை மகிழ்வுடன் வரவேற்று உபசரித்தார். சேந்தனாரின் மனைவி, வீட்டில் இருந்த அரிசிமாவில் வெல்லம் சேர்த்து, களி செய்தார். அதை, இருவரும் மகிழ்வுடன் சிவனடியாருக்கு உண்ணக் கொடுத்தனர்.சிவனடியாரும் மகிழ்வுடன் விடைபெற்றுச் சென்றார்.

மறுநாள், தில்லையில், கோவில் கதவைத் திறந்த தில்லை வாழ் அந்தணர்கள், திருச்சன்னதியில் களி சிதறியிருப்பதைப் பார்த்து வியப்புற்றார்கள். அச்சமயம், இறைவனைத் தரிசனம் செய்ய வந்த சேந்தனாரும், அவர் மனைவியும், இதைக் கண்டு மகிழ்ந்து, அந்தணர்களிடம், தம் வீட்டுக்கு சிவனடியார் வந்த விபரம் கூற,  இது நடராஜப் பெருமானது திருவிளையாடலே என்பதை உணர்ந்த தில்லைவாழ் அந்தணர்கள், சேந்தனாரின் பக்தியின் பெருமை உணர்ந்து அவரை வணங்கினர்.

திருவாதிரைக் களியை உண்பவர்கள் சொர்க்கத்தையே அடைவர். அன்று விரதமிருப்பதோடு, இரவு கண்விழிப்பதையும் செய்வார்கள். திருவாதிரை விரதம், பெண்களுக்கு மிக நன்மை தருவது. எம்பெருமானது திருநடனம், அருணோதய காலத்தில் (அதிகாலை 4 மணி)  நடைபெற்றதாக ஐதீகம். ஆகவே, அருணோதய காலத்தில், எம்பெருமானுக்கு களி நிவேதனம் செய்ய வேண்டும். தானிய விருத்திக்காகவும், எல்லாம் இறைவனே என்பதை உணர்த்தும் பொருட்டும், எழுகறிக்கூட்டு(ஏழு காய்கறிகள் சேர்த்து செய்த கூட்டு) நிவேதனம் செய்கிறோம். பொதுவாக, நாட்டுக் காய்களை மட்டுமே சேர்ப்பது வழக்கம்.

அதிகாலையில் நீராடி, இறைவனை, அஷ்டோத்திர, சஹஸ்ரநாமங்களால் பூஜித்து, வாழை இலையில், களியும் கூட்டும் படைத்து, வெற்றிலை பாக்கு, தேங்காயுடன் நிவேதனம் செய்வது வழக்கம்.

திருவாதிரை நன்னாளில் பாராயணம் செய்ய, அருணாசலீசர் பதிகத்துக்கு இங்கு சொடுக்கவும்.

மதுரையிலும் அதைச் சார்ந்த பகுதிகளிலும், திருவாதிரை நன்னாளில் அதிகாலையில், இறைவனைப் பூஜித்து, களி நிவேதனம் செய்த பிறகு, பெண்கள், கழுத்தில் பூக்கோர்த்த மஞ்சள் சரடு அணியும் வழக்கம் உண்டு(காரடையான் நோன்புக்குச் செய்வது போல்). இவ்வாறு அணிவதால், சுமங்கலிப் பெண்கள் தாலிபாக்கியமும், கன்னிப் பெண்கள் நல்ல கணவரையும் இறையருளால் அடைவார்கள் என்பது ஐதீகம்.

திருவாதிரை விரதமிருப்பவர்கள், ஒரு வாய்க் களியை மட்டும் பிரசாதமாக உட்கொண்டு அன்று முழுவதும் உபவாசமிருந்து, மறுநாள் அதிகாலை பாரணை செய்வார்கள். திருவாதிரையன்று இரவு கண்விழிப்பது சிறப்பு.

திருவாதிரை நன்னாள், தில்லையில் மட்டுமல்லாது, சிவனார் உறையும் எல்லாத் திருத்தலங்களிலும் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. 'ஆதி சிதம்பரம்' என்று போற்றப்படும், திரு உத்திரகோசமங்கையில், மரகத நடராஜருக்கு, ஆண்டுக்கு ஒரு முறை, ஆருத்ரா தரிசன தினத்தன்றே, சந்தனக் காப்பு நீக்கப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டு, பின் மீண்டும் சந்தனக் காப்பு அணிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மட்டுமே, மரகத நடராஜரை மரகத கோலத்தில் தரிசிக்க முடியும். இவர் ஆதி நடராஜர் என்றும் அழைக்கப்படுகிறார்.

திருவாதிரை அன்று விரதமிருந்து, எம்பெருமானை வழிபட்டு, இறையருளால்,

வெற்றி பெறுவோம்!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

7 கருத்துகள்:

  1. ஓம் நம சிவாய
    தென்னாடுடைய சிவனே போற்றி.
    எ ந் நாட்டவற்கும் இறைவா போற்றி.

    அற்புதமான விளக்கங்கள் தந்து
    அரனைத் துதிக்க இன்று எம்
    இல்லங்களிலெல்லாம்
    உள்ளங்களிலெல்லாம்
    ஓர் தீபம் ஏற்றி இருக்கிறீர்கள்.

    அரனருள் யாவருக்கும் கிட்டிட‌
    நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்



    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  2. ////sury Siva said...
    ஓம் நம சிவாய
    தென்னாடுடைய சிவனே போற்றி.
    எ ந் நாட்டவற்கும் இறைவா போற்றி/////

    தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தங்கள் வாழ்த்துக்களும், தங்களைப் போன்றோர் தரும் ஊக்கமுமே என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. திருவாதிரை பற்றி அருமையான விளக்கங்கள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. /////இராஜராஜேஸ்வரி said...
    திருவாதிரை பற்றி அருமையான விளக்கங்கள்.. பாராட்டுக்கள்//////

    /////இராஜராஜேஸ்வரி said...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//////

    தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு


  6. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    01.01.2013
    kambane2007@yahoo.fr

    பதிலளிநீக்கு
  7. ///// கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...


    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    01.01.2013
    kambane2007@yahoo.f//////


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தங்களுக்கு என் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..