நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 9 மார்ச், 2013

SIVA LINGA MAHIMAI...சிவலிங்க மகிமை(சிவராத்திரி தின (10/3/2013)சிறப்புப் பதிவு)


நாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேச்வராய!
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை நகராய நம:சிவாய!!

திருகயிலை வாசனான எம்பெருமான் சிவனின் ஆராதனைக்குரிய தினங்களுள் முக்கியமானது 'மஹா சிவராத்திரி'.

சிவராத்திரி தினத்தில், சிவலிங்க பூசனையும், சிவ நாம ஸ்மரணையும், சிவமஹிமை கூறும் சிவமஹாபுராணம், இலிங்கபுராணம், திருமறைகள், திருமுறைகள் முதலியவை ஓதுதலும் மனித வாழ்வின் மேன்மைக்கு உதவும் முக்கிய சாதனங்களாகும்.

சிவலிங்கத்தின் மகிமை:
இவ்வுலகின் ஆதி தோற்றுவாய், இலிங்கமே என்று இலிங்க புராணம் போற்றுகிறது. இலிங்கம், பரப்பிரம்மத்தின்  உருவமில்லா நிலையைக் குறிப்பதாகும். இலிங்க உபாசனை, நிர்க்குணப் பிரதானம் என்று பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணபரமஹம்சரும் குறிக்கிறார். சிவலிங்கத் தோற்றமே, ஒரு விதையின் உருவம் போல் அமைந்திருப்பதைக் காணலாம். இவ்வுலகத் தோற்றத்திற்குக் காரணமான வித்தே இறைவன் என்பதன் குறியீடே சிவலிங்கமாகும். சிவலிங்கத்திலிருந்தே, அனைத்துத் தெய்வங்களும் தோற்றமாயின.

ஸ்ரீ விஷ்ணுவுக்கும் பிரம்மதேவருக்கும் இடையே, 'யார் பெரியவர்?' என்ற விவாதம் வந்த போது, சிவனார், விண்ணும் மண்ணும் அளாவிய பெரும் ஜோதிப் பிழம்பாக எழுந்தருளினார். விவாதத்தை நிறுத்தி விட்டு, இந்த ஜோதி லிங்கம் எங்கிருந்து உண்டானது என்பதை அறிவதற்காக, ஸ்ரீவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்துக் கொண்டு செல்ல, பிரம்ம தேவர், அன்னபட்சியின்(ஹம்ஸம்) ரூபம் எடுத்துக் கொண்டு, ஜோதியின் மேல் நோக்கிச் சென்றார். அந்த ஜோதிப் பிழம்பே இலிங்க ரூபமாக நிலை கொண்டதென்று  சிவமஹாபுராணம் போற்றுகிறது.

அவ்வாறு லிங்கோற்பவம்(இலிங்க உற்பத்தி) ஆன தினமே சிவராத்திரி.
அரியும் யானும் முன்தேடும்
    அவ்அனல்
கிரியெனும்படி நின்றதால்
    அவ்வொளி கிளர்ந்த
இரவதே சிவராத்திரி யாயின
    திறைவள்
பரவி உய்ந்தனர் அன்னதோர்
    வைகலில் பலரும்
----(கந்தபுராணம், தக்ஷகாண்டம்.)

இலிங்கம் பிரணவத்தின் ஸ்வரூபமே என்கிறார் திருமூலர் பெருமான்.
இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.(திருமந்திரம்)

பாணலிங்கம்:
திருக்கோவில்களில், சுயம்புலிங்கமாக சிவனார் எழுந்தருளியிருக்கும் தலங்களுக்கு தனிச் சிறப்பு உண்டு. அவற்றுள்ளும் தனிச்சிறப்பு மிக்கவை பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்கள். 

இல்லங்களில் வழிபாடு செய்யப்படும் இலிங்க உருவங்களில், பாணலிங்கத்திற்குத் தனிச் சிறப்பு உண்டு. இது நர்மதை நதியின் ஓங்கார குண்டத்திலிருந்து பெறப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின் சாளக்கிராம மூர்த்தம் போல், பாணலிங்கத்தில் எப்போதும் சிவசாந்நித்யம் நிறைந்துள்ளது. இதில் இயற்கையிலேயே பூணூல் அணிந்திருப்பது போன்ற(குறுக்காக) ரேகை படர்ந்திருக்கும். ஒரு பாணலிங்கம், 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்குச் சமம் என்று சொல்லப்படுகிறது. இதைப் பூஜை செய்வது சிவசாயுஜ்ய நிலையைப் பெற்றுத் தரும்.

சிவலிங்க பூஜையின் மகிமை:
அரியும் அயனும் தத்தம் இருதயத்தில் எப்போதும் சிவபூஜையே செய்கின்றார்கள் என்று சிவமஹாபுராணம் கூறுகிறது. எப்பேர்ப்பட்ட துக்கம் வரினும், சிவபூஜை செய்ய அது ஒழிந்து போகும். ஜென்ம ஜென்மாந்திரப் பாவங்களையும் தீர்க்க வல்லது சிவபூஜையே ஆகும்.

சிவனாருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்று ஒருவர் நினைத்த மாத்திரத்தில், தன் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களிலிருந்து விடுபடுவார். சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தவர், தன்னோடு சேர்த்து, தன் எட்டுத் தலைமுறை பித்ருக்களையும் புனிதப்படுத்தி, சிவசாயுஜ்யம் பெறச் செய்வார்.

தேவர்களும் பூஜிக்கும் இலிங்க ரூபத்தின் அபிஷேகத்திற்கு, அபிஷேகப் பொருட்களை அளிப்பவர், ஆயிரம் பசுக்களைத் தக்கவருக்குத் தானம் செய்த புண்ணியப் பலனைப் பெறுவர்.

சிவலிங்கத்தை மனமார ஒருவர் பூஜிப்பாராயின் அவர் தேவர்களும் அடைதற்கரிய போகங்களை அனுபவித்து, இறுதியில் சிவசாயுஜ்ய நிலையை அடைவார் என்று சிவமஹாபுராணம் கூறுகிறது.

சிவராத்திரி மகிமை:
'சிவ' என்ற சொல்லே 'மங்களம்' என்பதைக் குறிக்கும். சிவராத்திரி என்றாலே மோக்ஷம் தருவது என்றே பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவராத்திரிகளில், மாத சிவராத்திரி, யோகசிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, மஹாசிவராத்திரி என்று ஐவகை உண்டு. இதில் மகாசிவராத்திரி விரதமே மிகப் பெரும் வழிபாடாகக் கொண்டாடப்படுகிறது.

மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து  பெறும் எல்லா வகை நலனையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

திங்கட்கிழமையன்று, அமாவாசை திதி அறுபது நாழிகையும் இருந்தால் அது யோக சிவராத்திரி எனச் சிறப்பிக்கப்படும். அது சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் மிக உகந்த தினமாகக் கருதப்படுகிறது.
வரும் திங்கட்கிழமை(11/3/2013) அமாவாசை திதி வருகிறது. அன்று அஸ்வத்தப் பிரதட்சணம்/அமாசோம விரதம் செய்வது மிகச் சிறந்த நன்மைகளைத் தரும். அதன் விதிகளைப் பற்றி, அஸ்வத்தப்(அரசமர) பிரதட்சணம், அமாசோம விரதம் பதிவில் எழுதியிருக்கிறேன்.

ஒரு முறை கயிலையில் விளையாட்டாக, எம்பெருமானது திருவிழிகளைத் தம் திருக்கரங்கள் கொண்டு மூடினார் உமாதேவியார். அகில உலகமும் இருண்டது. இக்குற்றத்திற்குப் பிரயச்சித்தமாக, ஆகம விதிகளின் படி, சிவனாரை, உமாதேவியார் வழிபட்ட தினமே மஹா சிவராத்திரி.

தேவர்களும் அசுரர்க‌ளும், பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை உலகைக் காக்க வேண்டி சிவனார் அருந்தினார்.  உடனே,அருகிருந்த உமாதேவியார், தம் திருக்கரத்தினால், சிவனாரின் கழுத்தை பிடித்து, விஷத்தை எம்பெருமானின் திருக்கழுத்திலேயே நிறுத்தினார். அகில உலகத்துக்கும் அன்னையான அம்பிகை, எம்பெருமானை மட்டும் காக்க வேண்டியா அவ்வாறு செய்தார்?, எம்பெருமான் இவ்வுலகமுழுவதிலும் வியாபித்திருப்பவர். ஈரேழு பதினாலு உலகங்களும் எம்பெருமானின் திருவுருவே. எம்பெருமானுக்குள்ளேயே அனைத்து ஜீவராசிகளும் வாசம் செய்கின்றன. ஆகவே ஆருயிர்களுக்கெல்லாம் அன்னையான அம்பிகை அவ்வாறு செய்தார். அதனாலேயே, எம்பெருமானுக்கு 'திருநீலகண்டன்' என்ற திருநாமம் உண்டாகியது. இந்த இறைலீலை நிகழ்ந்த தினமே சிவராத்திரி. அன்றைய தினத்தில் தேவாதி தேவர்களும் எம்பெருமானைப் பூஜித்து வழிபட்டனர்.

சிவராத்திரி தினத்தன்று, ஒரு வில்வமரத்தின் மேல் அமர்ந்திருந்த குரங்கு, இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து, வில்வ இலைகளைப் பறித்து, அந்த மரத்தின் கீழே போட்டுக் கொண்டிருந்தது. அந்த மரத்தடியில் அச்சமயம், சிவனாரும் உமையம்மையும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். குரங்கு அறியாமல் செய்த பூசனையை ஏற்று, சிவனார், மறுபிறவியில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப்  பிறக்க அருள் செய்தார்.

சிவராத்திரி விரதம் இருக்கும் முறை:
சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டும் உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று காலை நீராடி, இறைவனை நினைத்து, விரதம் நன்முறையில்    நிறைவேறப்  பிரார்த்திக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, இறைச்சிந்தனையில் இருக்க வேண்டும். மாலையில் வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வில்வத்தால்  பூஜை செய்ய வேண்டும். இரவு நான்கு காலங்களிலும் பூஜை செய்ய வேண்டும். சிவராத்திரி இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையே லிங்கோற்பவ நேரம் எனப்படுகிறது. ஆகவே நான்கு காலங்களிலும் பூஜை செய்ய முடியாதவர்கள், லிங்கோற்பவ காலத்திலாவது பூஜை செய்ய வேண்டும். இயலாதவர்கள், கோவிலில் நடைபெறும் நான்கு கால வழிபாடுகளிலும் பங்கு கொள்ளலாம்.

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ருத்ராபிஷேகம், என்பது சிவனாருக்கு செய்யப்படும் அபிஷேகம். மந்திரபூர்வமாகச் செய்யப்படும் இது மிகச் சிறப்பு வாய்ந்தது. ருத்ராபிஷேகத்தைப் பற்றிய விவரங்கள் அறிய இங்கு சொடுக்கவும். இதை இல்லத்தில் செய்ய இயலாவிட்டால், ஆலயங்களில் செய்யலாம். சிவராத்திரி அன்று ருத்ராபிஷேகம் செய்வது மிகச் சிறப்பு.

மறு நாள் காலை பாரணை செய்து விரத நிறைவு செய்ய வேண்டும். இல்லத்தில் பூஜை செய்திருந்தால், புனர் பூஜை செய்து, சிவனாரை உத்யாபனம் செய்ய வேண்டும்.

சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்:
யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். மற்ற விரதங்கள் அனைத்தும் கடைபிடித்தவருக்கு மட்டுமே நன்மை தரும். ஆனால் சிவராத்திரி விரதம், கடைபிடித்தவருக்கு மட்டுமின்றி அவரது தலைமுறைக்கே ஈடு இணையற்ற புண்ணியத்தைத் தரும்.

ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்தால் அவர் சிவசாயுஜ்ய நிலையை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.

அர்ஜூனன் சிவராத்திரி விரதத்தைக் கடைபிடித்தே பாசுபதாஸ்திரம் பெற்றான். கண்ணப்ப நாயனார் தம் கண்களை சிவனாரின் திருமேனியில் அப்பி, தம் அசையாத பக்தியால் முக்தி பெற்ற தினமும் சிவராத்திரியே. சிவராத்திரி விரத மகிமையாலேயே, அம்பிகை இறைவனின் உடலில் சரிபாதியைப் பெற்றார். சிவபெருமான், மார்க்கண்டேயருக்காக, காலனை உதைத்து, காலகண்டேசுவரர் என்ற திருநாமம் பெற்றதும் சிவராத்திரி தினத்தன்றே.

அவனருள் பெறாது முத்தி அடைந்தனர் இல்லை அல்லால்
அவனருள் இன்றி வாழும் அமரரும் யாரு மில்லை
அவனருள் எய்தின் எய்தா அரும்பொருள் இல்லை ஆணை
அவனல திறைவன் இல்லை அவனைநீ யடைதி என்றான். (கந்த புராணம்)
சிவராத்திரி தினத்தன்று, எம்பெருமானைப் பூஜித்து, சிவனருளால்,

வெற்றி பெறுவோம்!!!!

படங்கள் நன்றி:கூகுள் படங்கள்.

5 கருத்துகள்:

  1. மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து பெறும் எல்லா வகை நலனையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது./

    மஹாசிவராத்திரி பற்றி சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. /////இராஜராஜேஸ்வரி said...
    மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து பெறும் எல்லா வகை நலனையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது./

    மஹாசிவராத்திரி பற்றி சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்./////


    தங்களின் அருமையான கருத்துரைக்கு என் மனமார்ந்த நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  3. சிவராத்திரி பற்றிய, விரதம் பற்றிய பயனுள்ள தகவல்களுக்கு நன்றி பார்வதி.

    ஓம் நமசிவாய. சிவாய நம ஓம்.

    பதிலளிநீக்கு
  4. /////கவிநயா said...
    சிவராத்திரி பற்றிய, விரதம் பற்றிய பயனுள்ள தகவல்களுக்கு நன்றி பார்வதி.

    ஓம் நமசிவாய. சிவாய நம ஓம்./////

    வருக, வருக. தங்கள் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..