நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 1 டிசம்பர், 2014

KANNANAI NINAI MANAME.. PART 6....கண்ணனை நினை மனமே!!.. பகுதி 6.. பகவத் ரூப வர்ணனை!..(தொடர்ச்சி..).

குதூகலத்தை அளிக்கும் பரந்தாமனின் திவ்ய ரூபம், பட்டத்திரியை முழுமையாக ஆட்கொண்டதில் வியப்பென்ன?!... இப்போது, பரிபூரணனின் திருவுருவம், பட்டத்திரியின் மனத்திரையில் முழுமையாக உருக்கொண்டு விட்டது. கேசாதிபாதமாக வர்ணித்தவருக்கு, சட்டென்று பொறி தட்டியது!.. ஆ!!.. பிராட்டியின் சிறப்பைச் சொல்ல வேண்டாமோ?!. பெருமானின் கருணை வடிவே  பிராட்டியாய் அவன் திருமார்பில் கொலுவிருக்க, ஸ்ரீ யை சேர்த்தல்லவோ ஸ்ரீநிவாசனை தியானிக்க வேண்டும்?!..

செல்வத் திருமங்கை, அன்பனை விட்டு அணுவளவும் அகலாதவள்!.. திருமகளின் இந்தத் தன்மையையே, பட்டத்திரி, சிறப்பித்துப் பாடுகின்றார் முதலில்!..

தத்தாத்³ருʼங்மது⁴ராத்மகம்ʼ தவ வபு​: ஸம்ப்ராப்ய ஸம்பன்மயீ
ஸா தே³வீ பரமோத்ஸுகா சிரதரம்ʼ நா(அ)ஸ்தே ஸ்வப⁴க்தேஷ்வபி | 
தேனாஸ்யா ப³த கஷ்டமச்யுத விபோ⁴ த்வத்³ரூபமானோஜ்ஞக
ப்ரேமஸ்தை²ர்யமயாத³சாபலப³லாச்சாபல்யவார்தோத³பூ⁴த் ||  

(​ "உமது திருமேனியில் வாசம் செய்யும் நாயகியான லக்ஷ்மீ தேவி, அதில் மன மகிழ்வெய்தி, அதில் நிலைத்திருப்பதால், அவள் வேறிடத்தில், தன் பக்தர்களிடம் கூட நிலைத்திருப்பதில்லை. அதனால் அவளுக்கு சபலா (நிலையற்றவள்) என்ற பெயரல்லவா தோன்றியிருக்கிறது!!.. ).

" இந்தக் கூற்றுக்கு இன்னொரு அடையாளமும் கூறுகின்றேன் கேள்!.. ல‌க்ஷ்மி தேவி,  உம்மை எப்போதும் தியானித்து, நாம சங்கீர்த்தனம் செய்யும் அடியார்களிடம்   'இவர்கள் என் கணவரைப் பற்றி அன்றோ கூறுகின்றார்கள்' என மகிழ்ந்து,  நிலைத்திருக்கிறாள்!.." ( இதிலிருந்து,அப்படி செய்யாதவர்களிடம் தான் அவள் நிலையாய் இருப்பதில்லை என்பது புலனாகிறது).

அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங் கை யுறைமார்பா,
நிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே, ( ஸ்ரீநம்மாழ்வார்).

" பார்க்கும் போதெல்லாம், புதிது புதிதான அழகுடன் விளங்கும் தங்கள் திருவுருவம் (பற்றிய விவரணைகள்), கேட்பவர்களை மறுபடி கேட்கத் தூண்டி, மனதைப் பரவசப்படுத்தி, அங்கங்களில் ரோமாஞ்சனம் உண்டாக்கி, ஆனந்தக் கண்ணீர் பெருகச் செய்கிறது!.." என்று திருவுருவச் சிறப்பினை விளக்குகின்றார் பட்டத்திரி.

சிந்திக்கும் திசைக்கும் தேறும்கை கூப்பும் திருவரங் கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும், ஆங்கே மழைக்கண்ணீர் மல்க வந்திடாய் என்றென்றே மயங்கும்,
அந்திப்போ தவுணன் உடலிடந் தானே அலைகடல் கடைந்தவா ரமுதே,
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல்செய் தானே(ஸ்ரீநம்மாழ்வார்).
 பகவானைப் பற்றிக் கேட்டாலும், நினைத்தாலும் ஏற்படும் இத்தகைய பரவச நிலை, பக்தியில் கனிந்து பக்குவம் பெற்ற அடியார்களுக்கே ஏற்படும்..ஆகவே, பட்டத்திரி, பக்தியோகத்தின் மகிமையினை அடுத்துப் பாடத் துவங்குகிறார்.

"கர்மம், ஞானம் என்ற இரண்டு யோகங்களையும் விட , பக்தி மேலானதென்று யோகீச்வரர்கள் புகழ்கின்றார்கள்.. அழகின் இருப்பிடமாக உள்ள தங்கள் மேல் ஏற்படும் பிரேமையால் விளைவதாகிய பக்தி, எளிதில் கைகூடுவதாகவே உள்ளதல்லவா?!..பற்றற்று கடமைகளைச் செய்வதான கர்மயோகம் நெடுநாட்கள் கழித்தே பலனளிக்கும். உபநிஷத ஞானத்தினால் உண்டாகும் ஞானயோகம், இந்திரியங்களுக்குப் புலப்படாதது.. மனதால் அடைய மிகவும் கடினமானது..உம்மிடம் வைக்கப்படும் அன்பு வடிவான பக்தியே, இனிமையானதும் உயர்ந்ததும் ஆகும்!.."

"மிகுந்த கஷ்டத்தைக் கொடுக்கும் கர்மத் தொகுதிகளை அனுஷ்டித்து, ஞான மார்க்கத்திற்கோ, பக்தி மார்க்கத்திற்கோ தகுதி பெறுகின்றனர் சிலர். அதனால் பலன் ஒன்றுமில்லை.. உமது தியானத்தால் உள்ளத்தில் நெகிழ்வு உண்டாகாமையால், வேதாந்தம், தர்க்கம் முதலியவற்றில் ஈடுபட்டு, பிரம்ம ஸ்வரூபமாக‌ உம்மை சிந்தித்து, பல பிறவிகள் எடுத்து உம்மை அடைகின்றனர்.."

"ஸ்ரீஅப்பனே!..உம்மிடம் ஏற்படும் பக்தியானது, உமது லீலைகள் நிரம்பிய கதைகளாகிற அமுதப்  பிரவாகத்தில் மூழ்கி விளையாடுகின்றது! (அதாவது, பக்தி, பகவானது லீலைகளைச் சொல்லும் கதைகளைக் கேட்பதால் உண்டாகி, உள்ளத்தை பரிபக்குவ நிலைக்கு உயர்த்துகிறது). அதனால், மாசற்ற ஞானம் சித்தியாகி, பிறவிப் பயனை வெற்றியுடன் அடைய இயலுகின்றது... உம்முடைய திருவடிகளில், அன்பெனும் ரஸத்துடன் கனிந்த பக்தியே எனக்கு உண்டாகட்டும்!.." என்று பிரார்த்திக்கிறார் பட்டத்திரி..

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்
கண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி,
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி,
திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே. (ஸ்ரீ நம்மாழ்வார்).

நம் தினப்படி வழிபாட்டின் போது, 'த்வயி பக்திம் அசஞ்சலாம்' என்று வேண்டுகிறோம்.. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், பகவானே!.. உன் மேல் அசையாத பக்தி வேண்டும் !!!!!.. பக்தியால் ஆகாதது என்ன?.

( இன்னும் தியானிப்போம்!).

வெற்றி பெறுவோம்!..
அன்புடன்

பார்வதி இராமச்சந்திரன்.



படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

10 கருத்துகள்:

  1. அவளுக்கு சபலா என்ற பெயர் அல்லவா தோன்றியிருக்கிறது. //

    இதே போன்றதொரு கருத்தினை ராம பக்தர் ரஹீம் தனது தொஹாவிலே சொல்லியும் இருக்கிறார். அதை வ்யங்க்ய வர்ணனை என்றும் சொல்லுவர்.

    கமலா ஸ்திர் ந ரஹீம் கஹு, ய ஜானத் சப் கோயி
    புருஷ புராதன கே வதூ க்யோன் ந சஞ்சலா ஹோயி .

    லக்ஷ்மி தேவி (அதாவது செல்வம் ) யாரிடமும் ஸ்திரமாக தங்குவதில்லையாம்.
    காரணம், அவளது கணவன் ஆதி மகா புருஷன் (மிகவும் வயதானவன் !) (ஒரு வேளை ) அதனால் தானோ என் சஞ்சல மனதுடையவளாக இருக்கக் கூடாது ?

    சுப்பு தாத்தா.
    தங்களது நாரயணீயம் எனக்கொரு வரப்பிரசாதம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் உவகை தந்தது!.. ரொம்ப ரொம்ப நன்றி தங்களுக்கு!..

      நீக்கு
  2. //KANNANAI NINAI MANAME.. PART 6....கண்ணனை நினை மனமே!!.. பகுதி 6.. பகவத் ரூப வர்ணனை!..(தொடர்ச்சி..).//

    Superb !

    பதிலளிநீக்கு
  3. பக்தி வழிபாடிருந்தால் முக்தி தானாகவே கிடைக்கும். மிக்க அழகான வர்ணனைகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர்ந்த வருகைக்கும் ஆசிகளுக்கும் ரொம்ப நன்றி அம்மா!..

      நீக்கு
  4. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும்,பகவானே உன்மேல் அசையாத பக்தி வேண்டும். இதேதான் நானும் வேண்டுகிறேன். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் உளமார்ந்த பிரார்த்தனை, அனைவருக்கும் அந்நிலையைப் பெற்றுத் தரட்டும்!..மிக்க நன்றி அம்மா!..

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..