நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 24 ஜூலை, 2012

VARALAKSHMI VRATHAM ....PART 1, வளம் பெருக..வரம் தருக... வரலக்ஷ்மி(முதல் பகுதி)


ஸூவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ:
ஸூதான்ய வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
கல்யாண வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
விபூதி வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:

(அனுதினமும் திருவிளக்கேற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது)

அகில உலகெலாம் காக்கும் அன்னையான ஸ்ரீமஹாலக்ஷ்மி, வேண்டும் வரங்களைத் தரும் வரலக்ஷ்மியாக, நம் இல்லங்கள் தோறும் அருள் மழை பொழிய, தானே உகந்து வருகை புரிந்து வரம் பல தரும் நன்னாளே 'வரலக்ஷ்மி விரத'மாகக் கொண்டாடப்படுகிறது. ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் அனைவராலும் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, தமிழகத்தில் சில குறிப்பிட்ட குடும்பங்களில் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்தப் பண்டிகையின் அழகியலையும், அதில் பொதிந்திருக்கும் தத்துவார்த்தங்களையும் உணர்ந்ததால், மெல்ல, மெல்ல, தமிழகத்திலும் இந்தப் பண்டிகை கொண்டாடும் வழக்கம் பரவி வருகிறது.

ஒவ்வொரு வருடமும், ஆடி அல்லது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளியன்று இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம் வரலக்ஷ்மி விரதம், வரும் வெள்ளிக்கிழமை,(27:7:2012) அன்று கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ மஹாலக்ஷ்மி வரலக்ஷ்மியாக, நமக்கு வரங்களை அள்ளி வழங்க இப்பூவுலகுக்கு வரும் நன்னாளில், அன்னையை நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளச் செய்து, நியமமுடன் பூஜித்து, பக்தியுடன், அம்பிகையைப் போற்றும் துதிகளைச் சொல்லி மனமுருக வணங்கினால், நாம் கேட்கும் வரங்கள் மட்டுமல்லாது, நம் அனைவருக்கும் அன்னையாகிய அந்த ஜகன்மாதா, இக பர சுகங்களையெல்லாம் வழங்குவது திண்ணம்.

ஸ்ரீ ஆளவந்தார் அருளிய மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்
வரலக்ஷ்மி விரதம் மூன்று நாட்கள் பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். சிலர் இரண்டு நாட்களாகவும் கொண்டாடுகிறார்கள்.

விரதத்திற்கு முன் தினம் தயார் செய்து கொள்ள வேண்டியவை:

1.பூஜை செய்யும் இடத்தில், கிழக்குப் பார்த்தாற்போன்ற சுவரில் அம்மன் படம் வரைய வேண்டும். வரலக்ஷ்மி என்பது கஜலக்ஷ்மிதான். ஆகவே, அம்மன் படம் கஜலக்ஷ்மி படமாக இருப்பது நல்லது. படம், பொதுவாக, மாவிலையுடன் கூடிய கலசத்தை வரைந்து நடுவில் அம்மன் முகம், சுற்றிலும் தோரணங்களுடன் மண்டபம், கலசத்தின் அருகில், விளக்கு, கண்ணாடி, சீப்பு, மஞ்சள் கிழங்கு, குங்குமச் சிமிழ், மைக்கூடு, அம்மானை, கழக்கோடி எல்லாம் இருப்பதாக வரைவது சம்பிரதாயம். சிறியதாக இன்னொரு படம், வாசற்படிக்கருகில், அம்மனை அழைக்கும் இடத்திலும் வரைவது வழக்கம்.

தற்போது வரலக்ஷ்மி அம்மன் படங்களை வாங்கி ஒட்டி விடுகிறார்கள்.

2. வீட்டு வழக்கப்படி, முகம் வைத்தோ, செம்பில் முகம் வரைந்தோ, அல்லது மஞ்சள் பூசிய  தேங்காயில் முகம் வரைந்தோ பூஜிக்கலாம்.



                                 

கலசத்திற்குத் தேவையான பொருட்கள்:
  • பித்தளை, தாமிர, அல்லது வெள்ளிச் செம்பு/குடம்.
  • அம்மன் முகம்.
  • கலசத்திற்குக் கட்டும் பாவாடை அல்லது புடவை.
  • வீட்டு வழக்கப்படி, நீர் விட்டுக் கலசம் வைப்பதாயிருந்தால், அதில் சேர்க்க வேண்டிய, வாசனை கலசத் திரவிய பாக்கெட்.
  • ரிசிக் கலசமாயிருந்தால், அரிசி கால்படி, காதோலை கருமணி 2செட், வெற்றிலை, களிப்பாக்கு,இரண்டு மஞ்சள்கிழங்கு, ஒரு எலுமிச்சம்பழம், நாணயம். சிலர் உலர்பருப்பு, பழங்களையும் சேர்ப்பார்கள். அரிசியுடன் பாசிப்பருப்பு கலப்பதும் உண்டு.
  • மாவிலைக் கொத்து.
  • மஞ்சள் பூசிய தேங்காய்.
  • அம்மன் ஜடை மற்றும் அலங்கார சாமான்கள்.
பூஜை சாமான்கள்:
  • வாழை மரம், வாழை இலை.
  • அரிசி, நெல் (கலசத்தை வைப்பதற்கு).
  • மந்தஹாஸம் (இருந்தால்) அல்லது மண்டபம் போல் அமைக்கத் தேவையான பொருட்கள்.
  • மாக்கோல மாவு
  • தேங்காய், வெற்றிலை பாக்கு
  • பழங்கள்(வாழைப்பழம், மாதுளம் பழம்,விளாம்பழம், கொய்யா பழம், பேரிக்காய், (மேலும் சில வகைப்பழங்களையும் வாங்கலாம்)
  • தாம்பூலம் கொடுக்க கிஃப்ட் சாமான்கள், மங்கலப் பொருட்கள்.
  •  பூக்கள்: தொடுத்த சரம், அம்பிகைக்குப்போடுவதற்குச் சிறிய மாலை, பூஜைக்கு உதிரிப்பூக்கள் முதலியவற்றை வாங்கிக் கொள்ளவும். தாழம்பூ அம்பிகைக்கு மிக உகந்தது. செண்பகப்பூ, தாமரைப்பூ, ஆகியவற்றை பூஜைக்குப் பயன்படுத்துவது சிறந்தது
  • நோன்புச் சரடு(அம்மனுக்கும் சேர்த்து ஒற்றைப்படையில் வாங்கவும்).
  • நைவேத்தியங்கள் செய்வதற்கான காய்,மற்றும் மளிகைப் பொருட்கள். 
பொதுவாக, தமிழகத்தில், தேங்காய் கொழுக்கட்டை, உளுந்து கொழுக்கட்டை, எள்ளுக்கொழுக்கட்டை, பருப்புக் கொழுக்கட்டை முதலிய நால்வகைக் கொழுக்கட்டைகள், வடை, பாயசம், பச்சரிசி இட்லி முதலியவை செய்வது 
வழக்கம். அதற்கேற்றாற் போல், அரிசி மாவு, பூரணங்கள், பச்சரிசி இட்லிக்கு அரைப்பது போன்றவை முதல் நாளே செய்து கொள்ளலாம்.

தெலுங்கு, கன்னட வழக்கப்படி, போளி, பிசைந்த சாத வகைகள், சேமியா பாயசம் முதலியவை செய்கிறார்கள்.

  • கறுப்புக் கலக்காத ரவிக்கைத் துணி(அம்மனுக்குச் சாற்ற).சில வீடுகளில் புடவை எடுத்து சமர்ப்பிக்கிறார்கள்.
  • கஜ வஸ்திரம்(பஞ்சை தடிமனாகத் திரித்து, குங்குமத்தில் சிறிது நீர் தொட்டு, விரலால், நடுநடுவில் அழுத்தினால் வெண்பஞ்சு உருண்டைகளால் ஆன மாலை போல் வரும்(கீழுள்ள படத்தில் காட்டியது போல்).

முதல் நாள் செய்ய வேண்டிய வேலைகள்:
வீடு, பூஜை அறையை மெழுகி, ஸ்வாமிபடங்களைத் துடைத்துப் பொட்டு வைத்து, பூஜை சாமான்களைத் தேய்த்து, பஞ்சபாத்திர உத்தரிணி, தூபக்கால், தீபக்கால், பஞ்சமுக ஆரத்தி போன்றவற்றைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
பூஜை செய்யும் இடத்தில், மந்தஹாஸம், அல்லது கழிகளை நட்டு, மேற்புறத்தில் ஒரு பட்டுத் துணியைப் போட்டு, பந்தலாகச் செய்து வாழைமரம் கட்டலாம். அல்லது ஒரு ஸ்டூல்/சிறிய மேசையைத் திருப்பிப் போட்டும் பந்தல் அலங்காரம் செய்யலாம். 

பந்தல் போட்டிருக்கும் இடத்தில் பெரிதாக மாக்கோலம் போட்டு காவி இடவேண்டும். ஒரு சின்ன பலகையிலும், அம்மனை அழைக்கும் இடத்திலும் சின்னதாகக் கோலம் போட வேண்டும். பூஜையறையிலும் போடவேண்டும்.
கலசம் தயாரித்தல்;
 தாமிரச் செம்பாக இருந்தால், அதிலேயே முகம் வரையும் வழக்கம் இருந்தால், சுற்றிலும், சுண்ணாம்பைத் தடவிக் காய வைத்து, முகம் வரையலாம். இல்லாவிட்டால், செம்பில்/குடத்தில் சந்தனம் குங்குமம் இடவும்.
அம்மன் முகத்தை, நன்றாகத் துடைத்து, சந்தனம் குங்குமம் வைக்கவும். நகைகள் அதிகம் இல்லாத முகமாக இருந்தால், மென்மையாகத் தேய்த்து சுத்தம் செய்து, பின் விபூதியை மென்மையான துணியால் தொட்டுக் கொண்டு முகத்தைச் சுத்தம் செய்ய, பளிச்சிடும். கண்களுக்கு மை இட்டு திருஷ்டிப் பொட்டு வைக்கவும்.

கலசச் செம்பில்/குடத்தில், கலசச் சாமான்களைச் சேர்க்கவும்.

நீர்க்கலசமாயிருந்தால், செம்பு/குடத்தில் நீர் சேர்த்து, வாசனைக் கலச திரவியங்களை(பச்சைக்கற்பூரம், விளாமிச்சை வேர், ஜாதிக்காய், ஏலக்காய் முதலியன சேர்ப்பது வழக்கம். இப்போது இது சின்ன பாக்கெட்டுகளில் கிடைக்கிறது)சேர்க்கவேண்டும்

அரிசிக் கலசமாயிருந்தால், செம்பு/குடத்தில், முன்பு கூறிய அரிசி, வெற்றிலை முதலிய சாமான்களைச் சேர்க்கவும்.

அதன் மேல் மாவிலையை வைத்து,  அதன் மேல் மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து, அதன் மேல் முகத்தை வைத்துக் கட்டவும். கலசம் வைக்கும் போது, மாவிலை ஒன்று தாழம்பூ மடல் ஒன்று என்று மாற்றி மாற்றி வைத்து அலங்கரிக்க அழகு மிளிரும்.

கலசத்திற்குப் பாவாடையைக் கட்டவும். சிலர் காதோலை கருமணியில் ஒரு செட் கலசத்திற்குள்ளும் மற்றொன்றை கலசத்தில் கழுத்தில் கட்டுவார்கள். ஜடை, பூச்சூட்டி அலங்கரிக்கவும். நகைகள் போட்டு வைக்கலாம்.

சிலர் அம்மனுக்கு தாழம்பூவால் ஜடை தைத்து அலங்கரிப்பார்கள். தாழம்பூ ஜடையில் கத்தி ஜடை, பெட்டி ஜடை என்று இருவகை இருக்கிறது. வெளிப்புறம் மடலின் நுனி வருமாறு தைப்பது கத்தி ஜடை. உட்புறம் மடக்கி வைத்துத் தைப்பது பெட்டி ஜடை. வாழை மட்டையில் பூக்களை வைத்தும் ஜடை தயாரிக்கலாம்.பூவால் பாவாடை தைத்து அணிவிக்கலாம்.
 
இப்போது விதவிதமான அலங்கார சாமான்கள் கிடைக்கின்றன. அவற்றை உபயோகித்தும் அலங்கரிக்கலாம். அலங்கரிக்கத் தெரியவில்லை என வருந்த‌ வேண்டாம். மனப்பூர்வமான பக்தி இருந்தால் போதும். அலங்காரம் தானாக அழகாக அமையும். எளிமையான அலங்காரத்தில் கூட அம்பிகையின் அழகு கொலுவிருக்கும்.
 
திருமணமான பெண்கள், வரலக்ஷ்மி நோன்பு எடுப்பதானால், திருமணமான முதல் வருடம், நோன்பு எந்த மாதத்தில்(ஆடி அல்லது ஆவணி) வந்தாலும் எடுக்கலாம். ஏதாவது காரணங்களினால் அந்த வருடம் எடுக்க முடியாமல் போய்விட்டால், பிறகு எந்த வருடம் ஆவணி மாதத்தில் நோன்பு வருகிறதோ அந்த வருடமே நோன்பு எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு முதன் முதலில் செய்யும் நோன்பு 'தலை நோன்பு' ஆகும். 

பூஜை செய்பவர் ஒவ்வொருவருக்கும் ஒரு அம்மன் முகம் இருப்பதால்(நோன்பு வழக்கம் இருந்தால், திருமண சீராக அம்மன் முகம் தருவது வழக்கம்), சில வீடுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட அம்மன் முகங்கள் இருக்கும். அவற்றை ஒரு கலசத்திலேயே வைத்துக் கட்ட வேண்டும். யாராவது புதிதாகத் திருமணமாகி தலை நோன்பு எடுப்பதாக இருந்தால் மட்டும், அவர் பூஜை செய்யத் துவங்கும் அம்மன் முகத்தைத் தனிக் கலசமாக அலங்கரித்து வைக்க வேண்டும்.  மறுவருடத்திலிருந்து ஒரேகலசமாக வைக்கலாம்.
சிலர் அம்மனை முதல் நாளே அழைக்கும் இடத்தில் அலங்காரம் செய்து வைப்பார்கள். அப்படியானால், அழைக்கும் இடத்தில் கோலமிட்ட மணையை
வைத்து ஒரு வாழை இலையை கிழக்கு மேற்காகப் போட்டு, அதில் ஆழாக்கு
அரிசியைப் பரப்பி, அதன் மேல் கலசத்தை வைத்து, அருகில் விளக்கேற்றி, பூ, அட்சதை போட்டு, வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்து, கௌரி கல்யாணம் பாடி வரவேற்பார்கள். மறு நாள் பூஜை செய்யும் இடத்திற்கு அழைத்து வந்து பூஜிப்பார்கள். சில வீடுகளில் முதல் நாள் கலசத்தை அலங்கரித்து வைத்து விட்டு மறுநாளே அம்மனை அழைப்பார்கள்.

சில வீடுகளில், முதல் நாள் பெண்கள் எண்ணை ஸ்நானம் செய்து, அம்மனின் நிவேதனத்திற்காக‌ மஞ்சள் பொங்கல் செய்து (துவரம் பருப்பு சேர்த்த பொங்கல்) வடகம் பொரிப்பார்கள்.  திருமகள் வருகையைக் குறித்து இவ்வாறு செய்வது வழக்கம். சில வீடுகளில் தலைநோன்பு யாராவது எடுப்பதாக இருந்தால் மட்டும் முன் தினம் இவ்வாறு செய்வார்கள்.

அவரவர் வீட்டுப் பெரியவர்களைக் கேட்டுக் கொண்டு குடும்ப வழக்கப்படி செய்து கொள்வது நல்லது.

பூஜை, புனர் பூஜை இவற்றை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

வெற்றி பெறுவோம்!!!

3 கருத்துகள்:

  1. I was waiting for this article. Thank u for posting this at the right time.

    பதிலளிநீக்கு
  2. அன்பிற்குரிய சகோதரி,

    பிரமிப்பாக இருக்கிறது.

    எவ்வளவு முயற்சி பண்ணி படங்கள் எல்லாம் சேகரம் பண்ணி தொகுத்து எழுதி இருக்கிறீர்கள்?

    உங்களை எப்படி வாழ்த்த?

    நிச்சயம் இறையருள் உங்கள் மீது அம்ருத தாரையாக பொழிந்து கொண்டே இருக்கணும் என்று பரமேஸ்வரனை வேண்டுகிறேன்.

    பிரமிப்புடன் கூடி, ஏக்கமாகவும் இருக்கிறது. உங்கள் அளவுக்கு பக்தி, முனைப்பு, dedication இதெல்லாம் கொண்டு இறைப்பணி ஆற்றும் நிலை எப்பொழுது எனக்கு வரும் என.

    இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல முன்னுதாரணம். ரோல் மாடல். வாழ்க வளமுடன்.

    இந்த பதிவினை போடு வீர்கள் (வரலக்ஷ்மி வ்ரதம்) பற்றி என ஒரு எதிர்பார்ப்புடன் வந்தேன். ஒன்றுக்கு இரண்டாக போட்டு இருக்கிறீர்கள்.

    இந்த பண்டிகைக்கு எப்படி வாழ்த்துவது என protocol தெரியவில்லை. ஏதோ எனக்கு தெரிந்தது மனதார சொல்லுகிறேன் அக்கா, சர்வ மங்களங்களும் நிறைந்து நீங்கள் வாழ வேண்டும் என பரமேஸ்வரனை, அம்பிகையை காமாட்சியை வேண்டுகிறேன்.

    இப்படியும் ஒரு புனித ஆத்மா இருக்கிறது என்பதை கண்டு வியந்து தங்களை தொலைவில் இருந்து வணங்கும் பல பேர்களில் நானும் ஒருவன்.

    ---

    வணக்கங்களுடன்,
    புவனேஷ்

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான விளக்கங்களுடன் கூடிய ஸ்ரீ வரலஷ்மி நோன்புப் பற்றிய பதிவு...
    அன்னையவள் அனைவருக்கும் அருளட்டும்...

    ///அலங்கரிக்க தெரியவில்லைஎன்றால் வருந்த வேண்டாம் மனதில் பக்தி இருந்தால் போதும்///
    மிகவும் அழகாகச் சொன்னீர்கள்.... அத்தனை சத்தியமான வாக்கியம்... பூஜையின் மூச்சு உண்மையானப் பக்தி... அன்னையின் அருள் பெற தீராத அன்பால் பொங்கிய பக்தி மிகவும் அவசியம் என்று அழகுற கூறிய வரிகள் முத்தாய்ப்பாய் இருக்கிறது...

    அன்னையவளின் வழிபாட்டு ஆலோசனை அருமை சகோதரி.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..