நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 21 ஜூலை, 2012

பார்வதிக்குக் கங்கணமாய் ... மாயனுக்கு வண்ணப் பாயாய்...(நாக பஞ்சமி சிறப்புப் பதிவு)

குற்றமற்ற சிவனுக்குக் குண்டலமானாய்
கூறு திருமாலுக்குக் குடையுமானாய்
கற்றை குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்
கரவாமல் உள்ளங்களித்தாடு பாம்பே!

மண்டலத்தைத் தாங்குமிக வல்லமை கொண்டாய்
மாயனுக்குப் படுக்கைக்கு வண்ணப் பாயானாய்
கண்டபடை நடுங்கிடக் காட்சியும் பெற்றாய்
கண்ணே செவியாகக் கொண்டா யாடு பாம்பே 
(பாம்பாட்டிச் சித்தர்)


நமது இந்து தர்மத்தில் நாகங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் அளவிடற்கரியது. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவையாகக் கருதப்படும் நாகங்கள், விநாயகரின் பூணூல் மற்றும் உதரபந்தனமாகவும், ஸ்ரீமஹாவிஷ்ணுவின் படுக்கையாகவும், அம்பிகையின் சிறுவிரல் மோதிரமாகவும், விளங்குகின்றன. முருகப்பெருமானின் திருவடிகளின் அருகிலும் விளங்குகின்றன.
சிவனாரின் ஆபரணங்களாக விளங்குவது நாகங்களே. ஆயிரம் தலைகளும் ஆயிரம் நாவும் படைத்த சேஷநாகம், இப்பூவுலகைத் தன் ஒரு தலைப் பாரமாகத் தாங்குகிறது.

புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்

என்பது தமிழ் மூதாட்டியின் திருவாக்கு.

நாக வழிபாடு வேதகாலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. சிந்து சமவெளி நாகரிகக் கல்வெட்டுக்களில், பாம்புகள் உருவம் பதித்த சிற்பங்கள் காணப்படுகின்றன.

நாக வழிபாடு உலகெங்கிலும் பரவியிருந்ததென்றே கூறலாம். சீன,ஜப்பான், திபேத்திய புராணங்களிலும் நாக வழிபாடு குறித்துக் கூறப்படுகிறது. கம்போடியாவிலிருக்கும் ஆலய முகப்புகளில் நாக உருவங்கள் காணப்படுகின்றன. மூன்று அல்லது ஐந்து தலை நாகம் உள்ளவை, இந்துக்கோவில்களாகவும், ஏழு தலை நாக உருவம் உள்ளவை பௌத்த விஹாரங்களாகவும் கொள்ளப்படுகின்றன.

'சர்ப்ப' என்ற சொல்லுக்கு 'வேகம்' என்றும் ஒரு பொருள் உண்டு. வேகமாக ஊர்ந்து செல்லும் திறன் கொண்டதால், நாகங்களுக்கு சர்ப்பம் என்றும் பெயர் வந்தது.

நாகங்களின் தோற்றம் பற்றிய புராணக்கதை:
மரீசி முனிவரின் மைந்தராகிய காஸ்யப முனிவரை, தக்ஷப் பிரஜாபதியின் பெண்களான, கத்ரு, விநதை ஆகிய இருவரும் மணந்தனர்.   விநதைக்கு, சூரிய பகவானின் சாரதியாக விளங்கும், அருணன்ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் வாகனமான‌, கருட பகவான் ஆகிய இருவரும் மைந்தர்கள்.  கத்ருவுக்கு, ஆதிசேஷன்,வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், தனஞ்செயன், காளியன், தாகபுராணன், புஞ்சன் முதலான அஷ்டமாநாகங்களையும் சேர்த்து 105 நாகங்கள் பிறந்தன(சில நூல்களில் ஆயிரம் நாகங்கள் என்று சொல்லப்படுகிறது).

அஷ்டமாநாகங்களுள் ஆதிசேஷனே முதல்வராகக் கருதப்படுகிறார். மஹாவிஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்து அவருக்குப் படுக்கையாகும் பாக்கியம் பெற்றவர் இவர். ஸ்ரீ மஹா விஷ்ணுவின் திரு அவதாரங்கள் தோறும் அவருக்குத் தொண்டு செய்வதற்காகத் தானும் அவருடன் அவதாரம் செய்தார்.

இராமாவதாரத்தில், லக்ஷ்மணன் என்ற திருநாமம் தாங்கிய இளையாழ்வாராகவும், ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் பலராம மூர்த்தியாகவும் அவதரித்து அருளினார். மேலும், பதஞ்சலி முனிவராகவும், ஸ்ரீ ஆதிசங்கரரின் குருவான, கோவிந்த பகவத் பாதராகவும், ஸ்ரீ ராமானுஜராகவும் திரு அவதாரம் செய்தது, ஆதிசேஷனே என்பது புராணம்.

அஷ்டமாநாகங்களில் ஒன்றான வாசுகி நாகமே, அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும், பாற்கடலைக் கடைந்த போது, கயிறாக உதவியது. அதன் பின், வாசுகி நாகம், சிவனாரைக் குறித்துத் தவமிருந்து அவருக்கு ஆபரணமாகும் பேறு பெற்றது.



தேவர்களும், அசுரர்களும், அமுதம் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடையும் நிகழ்வு நடந்த போது, ஸ்வபானு என்ற அசுரன் சூரிய சந்திரர்களுக்கு இடையில் தேவனைப் போல் உருமாறி அமர்ந்து அமுதம் பருகிவிட்டான். இதை உணர்ந்த திருமால், சக்ராயுதத்தால் அவன் தலையைத் துண்டிக்க, தலையும் உடலும் வெவ்வேறானது. ஆனால் அமுதம் பருகியதால் அவன உயிருடனிருக்கவே, தலைக்குக் கீழும், உடல் பகுதிக்கு மேலும் நாக உருவங்கள் ஏற்பட்டன. அந்த உருவங்களே, ராகு பகவானும் கேது பகவானும் எனப் பெயர் பெற்று, கயிலை நாதனைத் நோக்கித் தவமிருந்து, கிரகபதவியை அடைந்தார்கள்.

ஒருவரின் ஜாதகரின் கர்ம பலன்களுக்கேற்ப அவரது ஜாதகத்தில் ராகுபகவானும் கேது பகவானும் இடம் பெறுகின்றனர். புத்திர தோஷம், கால சர்ப்ப தோஷம் போன்றவை, ஜாதகத்தில் சர்ப்பக் கிரகங்களான இவர்கள் இருவரின் நிலை பொறுத்தே ஏற்படுகிறது. மோட்ச காரகன் எனப் போற்றப்படும் கேதுபகவானின், அதி தேவதையான, விநாயகப் பெருமானை, இடையில் நாகம் இருப்பதைப் போன்ற(உதர பந்தனமாக) உருவில் வழிபடுவோருக்கு, கேது பகவான் அருளால் புத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

நாகங்கள் இறையுருவங்களில் இடம் பெற்றிருப்பதற்கு ஸ்தூல,(நேரடி), சூக்ஷ்ம(மறைமுக) காரணங்கள் உள்ளன. திருமுருகனின் திருவடியில் இடம் பெற்றிருக்கும் நாகம் அகந்தையைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. மாரியம்மன் தலையில் குடையாக இருக்கும் ஐந்து தலை நாகம், ஐம்புலன்களையும், பஞ்ச பூதத் தத்துவங்களையும் குறிப்பதாகும்.

காரைக்கால் அம்மையாரின் திருப்பதிகம் ஒன்று, சிவனாரின் கழுத்தில் இருக்கும் அரவை நோக்கிப் பாடுவதாக அமைந்துள்ளது. இதில்,

"திருமார்பில் ஏனச் செழு மருப்பைப் பார்க்கும்!
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும்! - ஒருநாள்
இது மதி என்று ஒன்றாகத் தேறா(து)!
அது மதி ஒன்று இல்லா அரா!"

இதில் நாக உரு, மனித வேட்கைகளுக்குக் குறியீடாகச் சொல்லப்படுகிறது. பெருமான், பிறைச் சந்திரனைத் தன் தலையில் சூடி இருக்கிறார். மார்பில் வெண்பன்றிக் கொம்பை மாலையாக அணிந்திருக்கிறார். கழுத்திலிருக்கும் நாகம், மேலும், கீழும் பார்த்து, எது உண்மையான சந்திரன்(மதி) என்று மதி(அறிவு) மயங்குகிறதாம்.அது போல், மனித உயிர்களும், உலக இன்பங்களால் மதி மயங்குவதாகக் கொள்ளலாம்.

சூக்ஷ்மமாகப் பார்த்தோமானால், நாகங்கள் ஞானத்தின் குறியீடுகள். குண்டலினி, மனித உடலில், நாக உருவில் உறைந்திருக்கிறது. சிவனார் உடலில் நாகாபரணங்கள் இருக்கும் இடங்களில் முக்கியமான ஆதாரச்சக்கரங்கள் உள்ளன. "நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி" என்று விநாயகர் அகவலில் குறிப்பிடுகிறார் தமிழ் மூதாட்டி.

நாகங்கள், பாதாள லோகமான நாக லோகத்தில் வாழ்வதாக ஐதீகம். புற்றுக்கள் தோறும், அம்பிகையே உறைகிறாள். கருமாரி அம்மன் கோவில்கள் பலவும், புற்றுக்களை ஆதாரமாகக் கொண்டே அமைந்திருக்கின்றன. புன்னை நல்லூர் மாரியம்மன், புற்றுமண்ணால் செய்யப்பட்ட திருமேனியே ஆவாள்.
ஆதி சுப்பிரமணியர், குகே, கர்நாடகா
ஆந்திர, கர்நாடக, வடமாநிலங்களில், ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி, நாக உருவில் வழிபடப்படுகிறார். ஞானசக்தியாக விளங்குபவர் என்பதால் இவ்வாறு வழிபடப்படுகிறார்.
 
புத்திரபாக்கியத்திற்காகச் செய்யப்படும் பூஜை, நாகப்பிரதிஷ்டையாகும். நாக உருவங்களை, கல்லில் வடித்து, முறையாக நியமங்களை கடைபிடித்து, அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்ய நாக தோஷங்கள் விலகுகின்றன.

நாக சதுர்த்தி/ நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்கள் கொண்டாடப்படுவதன் காரணம்:

ஆந்திர மற்றும் வடமாநிலங்களில் இவ்விரதங்கள் பிரசித்தி பெற்றது. சிராவண சுக்ல சதுர்த்தி மற்றும் பஞ்சமியன்று நாகசதுர்த்தி/பஞ்சமி, மற்றும் கருடபஞ்சமி விரதங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

இது தொடர்பான புராணக்கதையின் படி, கத்ருவும் விநதையும், ஒரு நாள் நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்த போது, வானில்,பாற்கடலில் திருமகளோடு உதித்த, இந்திரனின் குதிரையாகிய, 'உச்சைஸ்சிரவஸ்'  சென்று கொண்டிருந்தது.

'பாற்கடலில் உதித்ததன் காரணமாக,  அந்தக் குதிரை எவ்வளவு வெண்ணிறமாக இருக்கிறது பார்' என்று விநதை வியக்க, நாகங்களின் தாயான கத்ரு, தன் சகோதரி விநதையின் மேல் கொண்ட அசூயையின் காரணமாக, அதன் வால் கருநிறமுடையது வேண்டுமென்றே விநதையிடம் வாதம் செய்தாள். தான் அதை நிரூபித்தால், விநதை அவளுக்கு அடிமையாக வேண்டும் என பந்தயம் வைத்தாள். விநதையும் ஒப்புக் கொள்ள, அதை நிரூபிப்பதற்காக, தன் குழந்தைகளான, கருநாகங்களை, அதன் வாலில் சுற்றிக் கொள்ளும்படிச் செய்தாள். இதற்கு சம்மதிக்காத வாசுகி முதலான நாகங்களை, தாகத்தால் தவிக்குமாறும், ஜனமேஜய மஹாராஜாவால் சர்ப்பயாகம் நடைபெறும் பொழுது அதில் வீழ்ந்து மடியக் கடவதென்றும் சபித்தாள்.{ஜனமேஜய மஹாராஜாவால் சர்ப்ப யாகம் செய்யப்பட்ட இடம், கர்நாடகாவில் சிக்மகளூர் டவுனில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் ஹீரேமகளூர் பிரதேசத்தில் அமைந்துள்ள கோதண்ட ராமஸ்வாமி கோவில். இங்கு, சர்ப்ப யாகம் செய்யப்பட்டதன் நினைவாக, ஜனமேஜயனால் எழுப்பப்பட்ட ஒரு கல்தூண் உள்ளது. இந்தத் தூணை,  நாக பஞ்சமி அன்று தரிசனம் செய்ய நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.}

பிரம்மதேவரை இதன் காரணமாகச் சரணடைந்த நாகங்களை அவர், 'யாயவர் வம்சத்தில் தோன்றும் ஜரத்காரு மஹரிஷிக்கு உங்கள் சகோதரியைத் திருமணம் செய்து கொடுத்தால், அவர்களுக்குப் பிறக்கும் புதல்வன் உங்களைக்  காப்பான்' என்று வரமளித்தார். {நாகங்களின் தாகத்தைத் தணிப்பதற்காகவே புற்றுக்குப் பாலூற்றி வழிபடும் முறை ஏற்பட்டது. நாக பஞ்சமி தினத்தன்று, நாகதேவதைகளான, அனந்தன், வாசுகி, குக்ஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க் கோடன், குளிஜன், பத்மன் ஆகியோரின்  திருப்பெயர்களைச்  உச்சரித்துக் கொண்டே  பாம்புப் புற்றிற்கு பால்   ஊற்றி வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.

புத்திர பாக்கியம் கிடைக்க அனந்தனையும்,புத்திரி பாக்கியம் கிடைக்க, வாசுகியையும், பலம் பெற தக்ஷகனையும், குஷ்ட ரோக நிவாரணம் பெற கார்க்கோடகனையும், நற்குணங்களைப் பெற, பத்மனையும், நோயிலிருந்து நிவாரணம் பெற, கங்கு பாலனையும் சீதளத்தினால் ஏற்படும் பாதிப்பு விலக குளிஜனையும் பூஜிக்க வேண்டும் என புராணங்கள் கூறுகின்றன.}

பிறகு,கருட பகவான், தன் தாயின் அடிமைத் தளை நீக்குவதற்காக, தேவலோகம் சென்று, இந்திரனுடன் போரிட்டு, அமுதக்கலசத்தைக் கொண்டு வந்து தன் தாயை மீட்டார். 

ஆகவே, இவ்விரதம் அன்னையர், தங்கள் குழந்தைகள் நலன் வேண்டிச் செய்ய வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த விரதமாயிற்று.

இது தொடர்பான, விரிவான புராணக் கதைகள் மற்றும் தெளிவான பூஜை முறைகளுக்கு, சகோதரர் ஸ்ரீகணேஷின் வலைப்பூவிற்குச் செல்ல கீழ்க்கண்ட சுட்டிகளைச் சொடுக்கவும். சகோதரர் பூஜை முறைகளை அருமையாக, மிகத் தெளிவாகத் தந்திருக்கிறார். இவை மூன்று பகுதிகளாக வெளியாகியுள்ளன.


சகோதரர்கள் நலன் காக்க வேண்டியே பெரும்பாலும் இந்த விரதம் அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாகச் சொல்லப்படும் கர்ண பரம்பரைக்கதை.

ஒரு பெண்ணிற்கு ஐந்து சகோதரர்கள். அவர்கள் அனைவரும் விறகு வெட்டும் வேலையைச் செய்து வந்தார்கள். ஒரு நாள் அவர்கள் அனைவருக்கும் அந்தப் பெண், கஞ்சி எடுத்துப் போகும் போது, வானில், ஒரு கருடன் கவ்விக் கொண்டு சென்ற நாகத்தின் வாயிலிருந்து வெளிப்பட்ட விஷம், கஞ்சியில் விழுந்து விட்டது. அதைப் பருகிய காரணத்தால், அந்தப் பெண்ணின் சகோதரர்கள் மரணமடைந்தனர்.

தன் சகோதரர்களின் நிலையைக் கண்டு அழுது புலம்பி, அவள் இறைவனிடம் மன்றாட, உடனே, சிவனாரும் பார்வதியும் தோற்றமாகி, அன்று கருட பஞ்சமி தினமாதலால், கருடபகவானுக்குப் பூஜை செய்ய மறந்ததால் ஏற்பட்ட நிலை இது என்பதை விளக்கினர்.

அவர்கள் சொல்படி, அங்கேயே பூஜை செய்த அந்தப் பெண், நோன்புக் கயிற்றில் ஏழு முடிச்சிட்டு, புற்று மண், அட்சதை சேர்த்து, இறந்து கிடக்கும் அண்ணன்மார்களின் முதுகில் குத்த அவர்கள் உயிர் பிழைத்து எழுந்தனர்.

ஆகவே, இவ்விரதம் சகோதரர் நலன் வேண்டி சகோதரிகள் செய்யும் விரதமாயிற்று. இதற்காக, சகோதரர்கள், சகோதரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குகின்றனர்.

புத்திர பாக்கியம் பெறுவதற்கு மிக உகந்ததாகச் சிறப்பித்துக் கூறப்படும் விரதம் இது. இந்தப் பஞ்சமி தினப் பூஜையை, நாக பஞ்சமியன்று துவங்கி, தொடர்ந்து 12 மாதங்கள், சதுர்த்தியன்று ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, பின் பஞ்சமியன்று உபவாசமிருந்து நாக தேவதையைப் பூஜிக்க வேண்டும். ஐந்து, ஏழு என ஒற்றைப்படை எண்ணிக்கையில் பிராமண போஜனமும், அன்ன தானமும் செய்ய வேண்டும். ஒரு வருடம் முடிந்த பிறகு, விரதம் முடிக்கும் தினத்தன்று, தங்க, அல்லது வெள்ளி நாகர்களைத் தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்ரு கடன்கள் நிவர்த்தியாகின்றன.

விரத தினங்களை நியமத்துடன் பூர்த்தி செய்து, நாகபஞ்சமி விரதக் கதையைக் கேட்க வேண்டும். இவ்வாறு செய்வதால், சர்ப்ப தோஷங்கள் நீங்கி குலம் விருத்தி அடையும்.

நன்மைகள் கோடி பெற, நாகராஜரையும் கருடபகவானையும் தொழுதேத்தி,  நிறைந்த  வளங்களும் நிலையான‌ புகழும் பெற்று,

வெற்றி பெறுவோம்!!!!

2 கருத்துகள்:

  1. ஆஹா! அருமை அழகாக பல அபூர்வத் தகவல்களை எல்லாம் திரட்டி அருமையாக தொகுத்து தந்துள்ளீர்கள்...

    ''புவியோ அரவினுக் கோர் பாரம்
    அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்''

    எத்தனை பெரியவள் ஜெகன்மாதா!!!... என்பதைக் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை.

    அற்புதப் பதிவு பகிர்வுக்கு நன்றிகள் சகோதரியாரே!

    பதிலளிநீக்கு
  2. //ஜி ஆலாசியம் said...

    எத்தனை பெரியவள் ஜெகன்மாதா!!!... என்பதைக் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை.//

    தங்கள் மேலான வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..