நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 3 பிப்ரவரி, 2014

MUKUNDA CHATHURTHI....(3.2.2014)....முகுந்த சதுர்த்தி!!!!


அன்பர்களுக்கு வணக்கம்!

இன்றைய தினம் (3/2.2014, தை அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை சதுர்த்தி) 'முகுந்த சதுர்த்தி' யாக அனுசரிக்கப்படுகின்றது..

துவாபர யுகத்தில், ஸ்ரீவிநாயகர் அவதரித்த தினமான இன்று 'ஸ்ரீசித்தி விநாயகரு'க்கு பூஜைகள் செய்து வழிபடுவது சிறப்பானதாகக் குறிக்கப்படுகின்றது..

சியமந்தக மணியை அபகரித்ததாக, ஸ்ரீகிருஷ்ணருக்கு ஏற்பட்ட அபவாதம் நீங்க, இன்றைய தினம் ஸ்ரீவிநாயகரை வழிபட்டு அருள் பெற்றார். 

ஆகவே இது 'முகுந்த சதுர்த்தி' என்று சிறப்பிக்கப்படுகின்றது..

காஷ்மீரி பண்டிட்டுகள், துவாபர யுகத்தில், ஸ்ரீவிநாயகர் அவதரித்த தினமான  இன்றைய தினத்தை 'வரத சதுர்த்தி' யாகக் கொண்டாடுகின்றனர்..'சிவ சதுர்த்தி' என்ற பெயரிலும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்கின்றனர்.

இது தென்னிந்தியாவில் 'மாக சதுர்த்தி விரத' தினமாகக் கொண்டாடப்படுகின்றது.. இன்றைய தினம் முழுவதும் ஸ்ரீவிநாயகருக்கு உபவாசமிருந்து, மாலையில்,  மல்லிகை மாலைகள் சார்த்தி, எள் மோதகம் நிவேதித்து பூஜிப்பது விசேஷம்.. பூஜை முறைகள், விநாயக சதுர்த்தி பூஜை முறைகள் போலவே தான்.

ஸ்ரீவிநாயக சதுர்த்தி பூஜை முறைகளுக்கு இங்கு சொடுக்கவும்.

பருவ நிலைகளுக்கு ஏற்றவாறு, நமது பண்டிகைகளின் நிவேதனங்கள் அமைந்திருப்பது நம் தர்மத்தின் சிறப்பு.. அதையொட்டியே, தரையைத் துளைக்கும் தை பனிக் காலமான இப்போது,  ந‌ம் உடலில் உள்ள வெப்பத்தை அதிகரித்து, குளிரைத் தாக்குப் பிடிக்க உதவும் எள்ளால் ஆன பதார்த்தங்கள், இன்றைய தினத்தில் சிறப்பான நிவேதனப் பொருட்களாகின்றன.

மராட்டிய மாநிலத்தில் 'தில்(எள்) குண்ட்ட்' சதுர்த்தி என்று இது சிறப்பிக்கப்படுகின்றது.. இன்றைய தினம், எள்ளை ஊற வைத்து அரைத்த சாந்தைப் பூசி ஸ்நானம் செய்து விட்டு, பிறகு விரத பூஜைகளைச் செய்வது சிறப்பானதாகக் கருதப்பட்டு, கடைபிடிக்கப்படுகின்றது...'காணபத்ய மதத்தை'ப் பின்பற்றுவோர் (காணபதர்கள்.)கட்டாயம் இம்முறையில் வழிபடுகின்றனர்.

விரதக் கதை:

முன்னொரு காலத்தில், பெரும் செல்வாக்குடனான அரசன் ஒருவன் இருந்தான்.. அவனது  பட்டத்து ராணி ரத்னாவளி.

திடீரென்று ஒரு நாள், அவனது அரசு எதிரிகளால் முற்றுகையிடப்பட்டு, சூறையாடப்பட்டது.. அரசனும் அவனது மனைவியும் காட்டிற்குத் தப்பியோடினர்...

காட்டில், தமது துன்பச் சூழலை விலக்குமாறு இறைவனை மனமுருகிப் பிரார்த்தித்தாள் ராணி ரத்னாவளி. இயல்பாகவே பக்தி மிகுந்தவள் அவள். 

இறையருளால் மார்க்கண்டேய மஹாமுனியைத் தரிசித்தனர் தம்பதியர். தமது குறையைக் கூறி, அருள்புரிய வேண்டினர்.

முனிவர், தமது ஞான திருஷ்டியால், அரசன் முற்பிறவியில் ஒரு வேடனாகப் பிறந்து, மாக சதுர்த்தி விரதத்தையும், சங்கடஹர சதுர்த்தி விரதத்தையும் விடாது அனுசரித்து வந்தததையும், பின்னாளில் அவற்றைக் கைவிட்டதையும் உணர்ந்தார். அந்தப் பிறவியின் விரதப் பலனால் இப்பிறவியில் அரச போகம் கிட்டியது என்பதையும், பிறகு அவற்றைக் கைவிட்டதனால்,  அரச போகம் பறி போனது என்பதையும் அரச தம்பதிகளுக்கு எடுத்துரைத்தார்.

முனிவரின் அருளாணைப்படி, தம்பதிகள் இவ்விரு விரதங்களையும் மீண்டும் கடைபிடித்தனர்..

விநாயகப் பெருமானின் அருளால், இழந்த அனைத்து செல்வங்களையும் மீண்டும் பெற்றனர் அரச தம்பதியர்.

ஸ்ரீவிநாயகப் பெருமான், நமக்கு எல்லா நலமும் வழங்கி அருள்புரியப் பிரார்த்திக்கிறேன்!..

வெற்றி பெறுவோம்!!...

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..