நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

ANGARAHA CHATHURTHI...அங்காரக சதுர்த்தி..(18/2/2014)..

 
 அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..

முழுமுதற்கடவுளான கணேசரைப் போற்றும் விரதங்களில் முதன்மையானது சதுர்த்தி விரதம்.. அதிலும் தேய்பிறை சதுர்த்தி 'சங்கடஹர சதுர்த்தி' என்றே சிறப்பிக்கப்படுவதை நாம் அறிவோம்..

மாசி மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி மிக முக்கியத்துவம் வாய்ந்தது.. பொதுவாக, செவ்வாய் கிழமை வரும் சங்கடஹர சதுர்த்தி 'அங்காரக சதுர்த்தி' என்றே போற்றப்படுகின்றது.. மாசி மாதம் வரும் சங்கடஹர சதுர்த்திக்கும் இந்த சிறப்பு உண்டு..

விரதம் தோன்றிய  புராணக் கதை:

பரத்வாஜ முனிவருக்கும், பூமா தேவிக்கும் பிறந்தவர் அங்காரக பகவான்.(பரத்வாஜ முனிவருக்கும், தேவலோகத்துப் பெண்ணான துருத்திக்கும் பிறந்து, பூமாதேவியால் வளர்க்கப்பட்டவர் என்றும்...அங்காரகன் சிவபெருமானின் வியர்வையிலிருந்து உதித்தவர் என்றும் புராணங்கள் உண்டு..)

பரத்வாஜ முனிவர், ஸ்ரீவிநாயகரின் பரம பக்தர்.. தந்தையின் வழியிலேயே மைந்தனின் மனம் சென்றது.. ஒரு நன்னாளில் தந்தையிடமே  கணநாயகரின் திருமந்திரத்தை உபதேசம் பெற்றுக் கொண்டார். தவறாது அதை ஜபித்து வரலானார்.. அகமும் புறமும் அம்பிகை பாலனின் திருவடி தொழுதது!.. 

அங்காரகனின் தீவிரமான தவம், கணபதியின் கருணையைப் பெற்றது.. அவர் முன் எழுந்தருளினார் விக்னேஸ்வரர்.. 'வேண்டுவன கேள்' என்று இன்மொழி பகர்ந்தார்..

அங்காரகர்,'தமது பெயரும் நினது பெயரோடு இணைத்து வழங்கப்படுதல் வேண்டும்' என்பதையே கோரிக்கையாக வைத்தார். ஆனால் கயிலை நாதனின் திருப்புதல்வர் கிரக பதவியையே அளித்தார்.. 

மேலும், அங்காரகனுக்கு உரியதாகிய செவ்வாய் கிழமை வரும் தேய்பிறை சதுர்த்திக்கு, 'அங்காரக சதுர்த்தி' என்றே பெயர் வழங்கப்படும் என்று வரமளித்தார். 

இந்த நிகழ்வு நடந்த தினம், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி..மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி, எந்தக் கிழமையில் வந்தாலும் அதுவும் 'அங்காரக சதுர்த்தி' என்றே வழங்கப்படும் என்ற ஆசியும் அளித்தார் ஏகதந்தர்..

சங்கடஹர சதுர்த்தி விரதங்களிலேயே மகிமை வாய்ந்தவை அங்காரக சதுர்த்தியும், மஹா சங்கடஹர சதுர்த்தியும்.. அதிலும் அங்காரக சதுர்த்தி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்,  அளவற்றவை..

செவ்வாய் பகவான் பூமி காரகன்.. கடன்களில் இருந்து நிவாரணம் தருபவன்.... ஆற்றலின் ஊற்றுக்கண் அங்காரகனின் திருவருளே!..ஜாதகத்தில் செவ்வாய் பகவானோடு ராகு/கேது பகவானின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றவர்கள் அங்காரக சதுர்த்தி விரதமிருப்பது மிக நல்லது..பொதுவாகவே இம்மாதிரி அமைப்புள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கலாம்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் தொடங்குபவர்கள், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியிலிருந்தே தொடங்குவது வழக்கம்..மாசி மாதம் தொடங்கி, தொடர்ந்து ஒரு வருடம், சங்கடஹர சதுர்த்தி விரதமிருப்பவர்கள் கடன் தொல்லையிலிருந்து முழுவதுமாக விடுபடுவர் என்கின்றன சோதிட நூல்கள்.

அங்காரக சதுர்த்தி விரதத்தினால் பெறப்படும் ஆன்மீக ரீதியிலான பலன்கள் குறித்து, பவிஷ்ய புராணமும் நரசிம்ஹ புராணமும் விளக்குகின்றன.. இந்த விரதம் இருப்பவர்கள், தமது இகலோக வாழ்க்கை நிறைவடையும் நேரத்தில், விநாயகப் பெருமானின் வாசஸ்தலமான ஸ்வானந்த லோகத்தை அடைகிறார்கள். ஆகவே, பிறவித் தளையிலிருந்தும் விடுபடுகின்றார்கள்.

விரதம் இருக்கும் முறை:

சதுர்த்தி விரதத்துக்கும் சந்திர பகவானுக்கும்  இருக்கும் தொடர்பு  நாம் அறிந்ததே!.... வர (சுக்ல பக்ஷ) சதுர்த்தி விரதம் மற்றும் சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருப்போர், மாலையில் சந்திரோதயம் ஆன பின்னரே பூஜைகள் மேற்கொண்டு விரதம் நிறைவு செய்ய இயலும்..

அங்காரக சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் நீராடி, கணபதியின் திருவுருவப் படம் அல்லது விக்கிரகத்தின் திருமுன்பாக, விளக்கேற்றி, சிறிய அளவில் நிவேதனம்(உலர் பழங்கள், இரு வாழைப் பழங்கள்.. இது போல் இருக்கலாம்) செய்து, ஆரத்தி காட்டி வழிபடவேண்டும்....விரதம் இருக்க சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்..

அன்று முழுவதும், முழு உபவாசம் இருப்பது சிறப்பு.. இயலாதோர் ஒரு வேளை உணவு அருந்தலாம்.. அதிகம் பேசாது விரதம் இருக்க வேண்டும். சந்திரோதய நேரம் வரை மௌன விரதம் இருப்பது சிறந்தது.

அன்று மாலையில் சந்திரோதய வேளையில் பூஜை தொடங்க வேண்டும்.. கணபதியின் திருவுருவப்படத்தை அல்லது விக்கிரகத்தை செந்நிற வஸ்திரம் கொண்டு அலங்கரித்து, பஞ்சோபசார/ஷோடசோபசார பூஜைகள் செய்ய வேண்டும்.. செந்நிறத்தாலான மலர்கள் சமர்ப்பிப்பது சிறப்பு!..21 தூர்வாயுக்ம பூஜை கட்டாயம் செய்ய வேண்டும்..மோதகம் முதலான நிவேதனங்கள் செய்யலாம்..

பூஜை நிறைவடைந்தவுடன், சந்திர பகவானுக்கும் அர்க்கியங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.. பிரசாதங்களை விநியோகித்த பின், விரதம் நிறைவு செய்யலாம்..

'ஸ்ரீ கணபதி அதர்வசீர்ஷம்' பாராயணம் செய்வது சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகின்றது..இயன்ற மற்ற துதிகளும் பாராயணம் செய்யலாம்..

அங்காரக சதுர்த்தி விரதம் இருப்போரின் அல்லல்கள், ஆனைமுகன் அருளால் நிச்சயம் அகன்று நல்வாழ்வு கிடைக்கும்!...

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..