நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 4 அக்டோபர், 2013

NAVARATHIRI (5/10/2013 TO 14/10/2013).....நவராத்திரி..



அன்பர்களுக்கு வணக்கம்.

எங்கும் நிறைந்திருக்கும் அன்னை சக்தியின் மகிமை போற்றும் 'சாரதா நவராத்திரி' வரும் ஐந்தாம் தேதி முதல் துவங்குகின்றது. நவராத்திரியின் மகிமை குறித்தும் பூஜை முறைகள் குறித்தும் மிக விரிவாகவே சென்ற வருடப் பதிவுகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

சென்ற வருடத்திய நவராத்திரி பதிவுகளின் சுட்டிகளுக்குக் கீழே சொடுக்கவும்..

1. நவராத்திரி மகிமை.

2. கொலு வைக்கும் முறை.

3. நவராத்திரி கோலங்களும் நிவேதனங்களும்.

4. நவராத்திரி பூஜா முறைகளும் பலன்களும்.

வருடம் முழுதும் நாம் முப்பெருந்தேவியரின் அடி தொழுது போற்றுகின்றோம். ஆயினும் சாரதா நவராத்திரி தினங்களில் முப்பெருந்த் தேவியருக்கான பூஜைக்கென்றே மும்மூன்று நாட்கள். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஸ்வரூபிணியான அம்பிகையின் திருப்பாதங்கள் தொழுது பூஜிப்பதற்காக, நம் முன்னோர்கள் மூன்று மூன்று தினங்களை குறித்திருக்கிறார்கள். வருடம் முழுதும் பூஜிக்க முடியாதவர்கள் கூட, அந்த தினங்களில் அம்பிகையைத் தொழுதால், அதிக வரம் பெறலாம். வருடம் முழுதும் நலம் பெறலாம்.

நேரமிருப்பவர்கள் விரிவாக சஹஸ்ரநாம பூஜை, நிவேதனம் என்று செய்யலாம். நேரமில்லாதவர்களுக்காக, இந்தப் பதிவில் சில எளிய முறை பூஜைகளைச் சொல்லியிருக்கிறேன். பணிக்குச் செல்லும் பெண்கள் அதிகமாகி விட்ட இந்தக் காலத்தில், சுமார் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்குள் இந்தப் பூஜைகளைச் செய்து விடலாம்.

ஐந்து முகக் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கை ஏற்றிப் பூஜிக்கலாம். விளக்கில் இரண்டு முகம் ஏற்றியும் பூஜிக்கலாம். பொதுவான பூஜை முறைகளை முதலிலும், ஒவ்வொரு தேவிக்கும் உரிய நாமாவளிகளை தனியாகவும் தந்திருக்கிறேன். பொருத்தமாகச் சேர்த்துக் கொண்டு பூஜிக்கவும்.

சங்கல்ப மந்திரத்தில், அந்தந்த தேவியரின் பெயரைக் கூறிக் கொண்டு பூஜிக்கவும். ஸரஸ்வதி பூஜை அநேகமாக இரண்டு நாட்கள் தீபத்தில் செய்வோம். மஹாநவமியன்று சாஸ்த்ரோக்தமாக புஸ்தக மண்டலத்தில் செய்வதே சிறந்தது. சிலர் மூல நக்ஷத்திரத்திலேயே புத்தகங்கள் வைப்பார்கள். அச்சமயத்திலும் புத்தகங்களிலேயே அம்பிகையை ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும்.

பூஜை முறை(பொது).

விநாயகர் வந்தனம்.(கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக் கொள்ளவும்)

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே ( என்று சொல்லி நெற்றிப் பொட்டில் ஐந்து முறை குட்டிக் கொள்ளவும்).

சங்கல்பம்:
மமோ பார்த்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், ஸ்ரீ துர்க்கா/லக்ஷ்மி/ ஸரஸ்வதி ப்ரஸாதேந, மம ஸகல க்லேச நிவ்ருத்தி த்வாரா ஸர்வாபீஷ்ட சித்யர்த்தம், அஸ்மின் தீப மண்டலே துர்க்கா/லக்ஷ்மி/ ஸரஸ்வதி பூஜாம் கரிஷ்யே. என்று கூறி, புஷ்பம் அக்ஷதையை வடக்காகச் சேர்க்கவும்.

பின்னர், தீபத்தை ஏற்றவும்.
'தீபம் ஜ்யோதிர் பரப்ரஹ்மம்
தீபம் சர்வ தமோபஹம்
தீபேன சாத்யதே சர்வம்
தீப ஜ்யோதிர் நமோஸ்துதே.' என்று சொல்லி விளக்கேற்றவும் அல்லது

வழிபட வேண்டி நானும்
நின்னையே மனதில் பதித்து
திருவிளக்கு ஏற்றி வைத்தேன்
விழுமிய தீபந்தன்னில்
விளங்க நீயும் வாராய்
ஓம் ஸ்ரீ தேவி! என்றும் சொல்லலாம்.

பின்னர், புஷ்பம், அக்ஷதை எடுத்துக் கொண்டு,

அஸ்மின் தீப மண்டலே, ஸ்ரீ துர்க்கா தேவீம் / ஸ்ரீமஹாலக்ஷ்மீம் / ஸ்ரீமஹா சரஸ்வதீம் ஆவாஹயாமி, (என்று தீபத்தின் பாதத்தில் சமர்ப்பிக்கவும்)

பாத்யம் சமர்ப்பயாமி (அம்பிகையின் திருவடிகளை அலம்புவதாகப் பாவித்து, சிறு கிண்ணத்தில் உத்தரணியால் நீர் சேர்க்கவும்)

அர்க்யம் சமர்ப்பயாமி (அம்பிகையின் திருக்கரங்களை அலம்புவதாகப் பாவித்து, சிறு கிண்ணத்தில் உத்தரணியால் நீர் சேர்க்கவும்).

ஆசமநீயம் சமர்ப்பயாமி(அம்பிகைக்கு, அருந்துவதற்கு நீர் தருவதாகப் பாவித்து, சிறு கிண்ணத்தில் உத்தரணியால் நீர் சேர்க்கவும்)

ஸ்நாநம் சமர்ப்பயாமி(அம்பிகைக்கு ஸ்நாநம் செய்விப்பதாகப் பாவித்து,சிறு கிண்ணத்தில் உத்தரணியால் நீர் சேர்க்கவும்)

ஸ்நாநாநந்திரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி(சிறு கிண்ணத்தில் உத்தரணியால் நீர் சேர்க்கவும்)

வஸ்த்ரார்த்தம் புஷ்பாணி சமர்ப்பயாமி (பூக்களை திருவிளக்கின் பீடத்தில் சமர்ப்பிக்கவும்..இயன்றால் ரவிக்கைத் துண்டும் சாற்றலாம்)

கந்தம் சமர்ப்பயாமி(சிறு பூவால் சந்தனம் தோய்த்து, திருவிளக்கில் சமர்ப்பிக்கவும்)

குங்குமம் சமர்ப்பயாமி(குங்குமம் சமர்ப்பிக்கவும்)

சர்வோபசாரார்த்தம் அக்ஷதாம் சமர்ப்பயாமி(அக்ஷதை சேர்க்கவும்)

(குங்குமம் ஸமர்ப்பயாமி -க்கு அடுத்ததாக, ஆபரணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி அலங்க்ரணார்த்தம் புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி புஷ்பை: பூஜயாமி எனச் சொல்லிய பின்னர், நாமாவளி கூறுவதும் வழக்கத்தில் இருக்கிறது. --இதனை நினைவூட்டிய சகோதரர் உயர்திரு.விஎஸ்கே அவர்களுக்கு மிக்க நன்றி)

(பின் கீழே கொடுத்திருக்கும் நாமாவளிகளைக் கூறி, புஷ்பமோ, அக்ஷதையோ, குங்குமமோ கொண்டு அர்ச்சிக்கவும்)

அதன் பின், 

ஊதுவத்தி ஏற்றிக் கொண்டு, 'தூபம் ஆக்ராபயாமி' என்று விளக்கிற்கு சுற்றிக் காட்டவும். 

 ஒரு அகல் விளக்கில் அல்லது தீபக் காலில் தீபம் ஏற்றி, ''தீபம் தர்ஸயாமி' என்று விளக்கிற்கு சுற்றிக் காட்டவும்.

'நைவேத்யம் நிவேதயாமி' (இயன்றவற்றை நிவேதிக்கவும்)

தாம்பூலம் சமர்ப்பயாமி( வெற்றிலை பாக்கு, பழம் சமர்பிக்கவும்.

கற்பூர நீராஜனம் சமர்ப்பயாமி( கற்பூர ஆரத்தி காட்டவும்)

பிரதக்ஷிண நமஸ்காரான் சமர்ப்பயாமி(என்று புஷ்பம் அக்ஷதை எடுத்துக் கொண்டு மூன்று முறை ஆத்ம பிரதக்ஷிணம் செய்து சமர்ப்பிக்கவும்)

மேற்கூறிய உபசாரங்களை, அதே மந்திரங்களைக் கூறித் தான் செய்ய வேண்டுமென்பதில்லை. அம்பிகை அன்புருவானவள். 'அம்மா' என்ற ஒரு சொல் போதும் உலகனைத்தையும் ஈன்ற அந்த தயாபரியை உருகச் செய்ய. 'அம்மா, எழுந்தருள்வாய், அம்மா, இந்த உபசாரத்தை ஏற்றுக் கொள்வாய்' என்று உள்ளம் உருகிச் சொல்லும் ஒவ்வொன்றையும் அந்த ஸ்ரீமாதா கட்டாயம் பிரத்யக்ஷமாக ஏற்கிறாள்.
நாமாவளிகள்: ஸ்ரீதுர்க்கா தேவி.
  1. ஓம் துர்க்காயை நம:
  2. ஓம் மகா காள்யை நம:
  3. ஓம் மங்களாயை நம:
  4. ஓம் அம்பிகாயை நம:
  5. ஓம் ஈஸ்வர்யை நம;
  6. ஓம் சிவாயை நம:
  7. ஓம் க்ஷமாயை நம:
  8. ஓம் கௌமார்யை நம:
  9. ஓம் உமாயை நம:
  10. ஓம் மஹாகௌர்யை நம:
  11. ஓம் வைஷ்ணவ்யை நம:
  12. ஓம் தயாயை நம:
  13. ஓம் ஸ்கந்த மாத்ரே நம:
  14. ஓம் ஜகன் மாத்ரே நம:
  15. ஓம் மஹிஷ மர்த்தின்யை நம:
  16. ஓம் சிம்ஹ வாஹின்யை நம:
  17. ஓம் மாகேஸ்வர்யை நம:
  18. ஓம் த்ரிபுவனேச்வர்யை நம:

ஸ்ரீ மஹாலக்ஷ்மி
  1. ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நம:
  2. ஓம் வரலக்ஷ்ம்யை நம:
  3. ஓம் இந்திராயை நம:
  4. ஓம் சந்திர வதனாயை நம:
  5. ஓம் சுந்தர்யை நம:
  6. ஓம் சுபாயை நம:
  7. ஓம் ரமாயை நம:
  8. ஓம் பிரபாயை நம:
  9. ஓம் பத்மாயை நம:
  10. ஓம் பத்மப்ரியாயை நம:
  11. ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம:
  12. ஓம் சர்வ மங்களாயை நம:
  13. ஓம் பீதாம்பர தாரிண்யை நம:
  14. ஓம் அம்ருதாயை நம:
  15. ஓம் ஹரிண்யை நம;
  16. ஓம் ஹேம மாலின்யை நம;
  17. ஓம் சுபப்ரதாயை நம:
  18. ஓம் நாராயணப்ரியாயை நம:

ஸ்ரீ சரஸ்வதி தேவி.
  1. ஓம் சரஸ்வத்யை நம:
  2. ஓம் சாவித்ர்யை நம:
  3. ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம:
  4. ஓம் ஸ்வேதா நநாயை நம:
  5. ஓம் ஸூரவந்திதாயை நம:
  6. ஓம் வரப்ரதாயை நம:
  7. ஓம் வாக்தேவ்யை நம:
  8. ஓம் விமலாயை நம:
  9. ஓம் வித்யாயை நம:
  10. ஓம் ஹம்ஸ வாகனாயை நம:
  11. ஓம் மஹாபலாயை நம:
  12. ஓம் புஸ்தகப்ருதே நம:
  13. ஓம் பாஷா ரூபிண்யை நம:
  14. ஓம் அக்ஷர ரூபிண்யை நம:
  15. ஓம் கலாதராயை நம:
  16. ஓம் சித்ரகந்தாயை நம:
  17. ஓம் பாரத்யை நம:
  18. ஓம் ஞானமுத்ராயை நம:
இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி பொருந்தியன. மனதை ஒரு முகப் படுத்தி வழிபட, தேவியின் கருணையால் எல்லா நலன்களும் விளையும்.

பூஜை முடிந்ததும் யாரேனும் ஒருவருக்குத் தாம்பூலம் அளிப்பது சிறந்தது. இயலாதோர், மாலை வேளையிலேனும் அளிக்கலாம். இந்தப் பூஜையையும் மாலை வேளைகளில் செய்யலாம். தாம்பூலம் தரும் முறை (சொடுக்கவும்) பதிவு, தாம்பூலம் அளிப்பது குறித்து உதவக் கூடும்.

கொலு வைப்பது குறித்த டிப்ஸுக்கு இங்கு சொடுக்கவும்.

அன்பர்கள் அனைவரும் ஜகன்மாதாவின் பேரருளால் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழப் பிரார்த்திக்கிறேன்.

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

13 கருத்துகள்:

  1. மிகவும் பயனுள்ள பதிவு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வழக்கம் போலவே, கால‌த்துக்கேற்ற மிகவும் உபயோகமான பதிவு.
    வணங்குகிறேன்.

    குங்குமம் ஸமர்ப்பயாமி -க்கு அடுத்ததாக,

    ஆபரணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
    அலங்க்ரணார்த்தம் புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி
    புஷ்பை: பூஜயாமி

    எனச் சொல்லிய பின்னர், நாமாவளி கூறுவதும் வழக்கத்தில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் சிரம் தாழ்ந்த நன்றி!!.. தங்கள் கூற்றை நானும் ஆமோதிக்கிறேன். சுருக்கமான பூஜை என்பதாலேயே 'சர்வோபசாரார்த்தம்' சேர்த்தேன். தங்கள் கருத்தையும் பதிவில் தங்கள் பெயரிலேயே சேர்த்து விடுகிறேன். மீண்டும் தங்களுக்கு என் பணிவான நன்றி.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  3. சில இடங்களில் இந்த பழக்கம்
    சிறிதளவேனும் இருக்கிறதென்பது உண்மை.ஆனால்

    இதுக்கெல்லாம் பெண்களுக்கு
    இப்போ நேரமிருக்கா..

    அப்படி வைக்கும் வீடுகளில்
    அழைத்து பாடும் பழக்கமிருக்கா..

    அண்டை வீடுகளுக்கு கூட
    அப்பாயிண்ட்மென்டு வாங்க வேண்டிய சூழலில்

    இப்படி ஒரு பண்டிகை
    இந்தியாவில் இருந்தது என சொல்லும்

    காலம் நெடுந்தொலைவில்லை
    காலம் பதில் சொ(வெ)ல்லும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது இந்த பாடலின் முழு வடிவையும் ஒரு மடலாடல் குழுமத்தில் கண்டேன். தாங்கள் இருக்கும் இடத்தில் எப்படியோ தெரியாது. காவிரி பாயும் கர்நாடகத்தில், எல்லாம் நலமாக நடக்கிறது. வேலைக்குப் போய் வரும் பெண்களே மிக ஈடுபாட்டுடன் இதை எல்லாம் செய்கிறார்கள்.பார்க்கலாம் காலம் என்ன பதில் சொல்கிறது என்று :))))).

      நீக்கு
  4. பூஜை முறைகளைப் பற்றி அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  5. 'வேப்பிலை' சொன்னதற்கு ஒரு கருத்தும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இங்கே அமெரிக்காவில் இது செழித்து விளங்குகிறது எனப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துப் பகிர்விற்கு மனமார்ந்த நன்றி. கர்நாடகாவில் மிக அருமையாகக் கொண்டாடுகிறார்கள். யார் வீட்டுக்கு வரும்படி அழைத்தாலும், எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சென்று வருகிறோம். அம்பிகையின் அருளால் இது தழைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தங்களுக்கு மீண்டும் என் நன்றி.

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..