நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

NAVA DURGA DEVIYAR... PART: 2, நவதுர்கா தேவியர், பகுதி 2




சென்ற பதிவின் தொடர்ச்சி........

சென்ற பதிவில், நாம் நவதுர்கையரில், வனதுர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை, சாந்தி துர்கை, சாபரீ துர்கை ஆகியோரைப் பற்றிப் பார்த்தோம். இந்தப் பதிவில், நாம் ஜ்வாலா துர்கை, லவண துர்கை, தீப துர்கை, ஆசுரி துர்கை ஆகியோரைப் பற்றிப் பார்க்கலாம்.

ஜ்வாலா துர்கை:

ஸ்ரீ லலிதாம்பிகைக்கும் பண்டாசுரனுக்கும் இடையே நிகழ்ந்த பெரும் போர் இரவு பகலாகத் தொடர்ந்தது. இரவு நடந்த போர், அசுர சேனைக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. ஏனெனில், அசுரர்களுக்கு இரவு நேரத்தில் பலம் அதிகம். அதனால் அவர்கள், சக்தி சேனையை வஞ்சித்து போர் புரியலாயினர். இதைக் கண்ட, மந்த்ரிணீ தேவியாகிய ராஜ சியாமளாவும், தண்டினி தேவியாகிய வாராஹியும், ஸ்ரீ லலிதாம்பிகையிடம் முறையிட, அம்பிகையும், 'ஜ்வாலாமாலினி' என்ற மஹாசக்தியை அழைத்தாள்.
இந்த மஹா சக்தி அக்னி ரூபமானவள். அவளிடம், நூறு யோஜனை விஸ்தாரமுள்ள பூமியை வளைத்துக் கொண்டு, முன்னூறு யோஜனை உயரம் இருக்கும்படியான, அக்னி பிரகாரம்(வஹ்னி பிரகாரம்) அமைக்குமாறு கட்டளையிட்டாள். மேலும் அந்தப் பிரகாரத்தில், ஒரு யோஜனை தூரம் அளவுக்கு வாயிற்படிக்காக, ஜ்வாலையில்லாமல்  இருக்கட்டும் என்றும் கூறினாள். அன்னையின் ஆணையினை ஏற்று, இவ்வாறு பிரகாரம் அமைத்து உதவிய மஹாசக்தியே ஜ்வாலா துர்கையாக அறியப்படுகிறாள்.  இந்த துர்கையின் உதவியால், இரவு நேரத்தில் நடந்த போரில் பெரும் பிரகாசம் கிடைத்தபடியால், அசுரர்களின் வஞ்சனைப் போரை சக்தி சேனை எளிதில் முறியடித்தது.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் இந்நிகழ்வை,

'ஜ்வாலாமாலினி காக்ஷிப்த வஹ்னிப்ராகார மத்யகா'

என்று துதிக்கிறது.

லவண துர்கை:
கிருத யுகத்தில், மது என்ற பெயருடைய அசுரன் ஒருவன் இருந்தான். மிக நல்ல குணங்களுடைய அவன், சிவனை நோக்கிக் கடுமையான தவம் இருந்து,  அவர் சூலத்தை வரமாகப் பெற்றான். அந்தச் சமயத்தில், தன்னிடம் இருப்பது போல், தனக்குப் பின், தன் மகனான லவணனிடமும் அந்தச் சூலம் இருக்க வேண்டும் என்றும் சிவபெருமானிடம் வரம் பெற்றான்.

சிவனாரும், சூலம் கையில் இருக்கும் வரை, லவணனைக் கொல்ல யாராலும் இயலாது என வரமளித்தார்.

லவணன், தன் தந்தையைப் போல் அல்லாது, பல கொடுமைகள் புரிந்தான். ராவணனாலும் வெல்ல முடியாத மாந்தாதா சக்கரவர்த்தியை வெற்றி கொண்டான்.

இவ்வாறு அவன் கொடுமைகள் தொடர்ந்த சமயத்தில், ஸ்ரீராமர், அயோத்தியில் அரசு செலுத்திக் கொண்டிருந்தார். ரிஷிகளும், முனிவர்களும் அவரிடம் வந்து முறையிட, ஸ்ரீ ராமர், சத்ருக்னனை அழைத்து, லவணாசுரனை வென்று வரும்படி பணித்தார். சத்ருக்னன் போருக்குச் செல்லும் முன் ஸ்ரீ துர்கா தேவியை வழிபட்டார்.

ரிஷிகளிடமிருந்து, லவணாசுரனின் கையிலிருக்கும் சூலத்தைப் பற்றியும், அவன் வேட்டையாடும் சமயத்தில் சூலம் வைத்திருக்க மாட்டான் என்பதைப் பற்றியும் தெரிந்து கொண்ட சத்ருக்னன், அவன் வேட்டைக்கு வரும் சமயத்தில், அவனை வழிமறித்துப் போர் புரிந்து, ஸ்ரீ துர்கா தேவியின் அருளால் வெற்றி கொண்டார். அவ்வாறு, லவணனை அழிக்க உதவி புரிந்ததால் ஸ்ரீ துர்கைக்கு 'லவண துர்கை' என்னும் திருநாமம் ஏற்பட்டது.

லவணம் என்றால் உப்பு என்றொரு பொருள் உண்டு. கடலில் எப்படி உப்பானது கரைந்திருக்கிறதோ, அப்படி, பக்தனை பக்திக்கடலில், உப்பைப் போல் கரையச் செய்து இறைவனிடம் லயிக்கச் செய்பவள் என்பதாலும் துர்கைக்கு லவண துர்கை எனப் பெயர் ஏற்பட்டதாகக் கொள்ளலாம்.



தீப துர்கை:
நம் அனைவருள்ளும், சித் சக்தியாக, உள்ளொளியாக இருந்து பிரம்ம ஞானம் அருள்பவளே தீப துர்கை.

இந்த துர்கையின் அருளாலேயே அஞ்ஞான இருளை விரட்ட இயலும். சம்சார பந்தத்தில் மூழ்கிக் கிடப்பவர்களைக் கரையேற்றும் அருட்கடல் இவளே.

நாம் அன்றாடம் தீபமேற்றும் போது, நம் மனதில் அடர்ந்திருக்கும் அஞ்ஞான இருளை விரட்டுமாறு அம்பிகையை வேண்டிக் கொண்டே தீபமேற்ற வேண்டும். நம் இல்லத்திலும் உள்ளத்திலும் தீபமாக ஒளிரும் ஜோதி ஸ்வரூபமே தீப துர்கை  என ஸ்ரீ தீப துர்கா ஜப விதானம் கூறுகிறது.

(நோய்களைத் தீர்க்கும் மகிமை வாய்ந்த, ஸ்ரீ துர்கை சித்தர் அருளிய ரோக நிவாரணி அஷ்டகத்திற்கு இங்கு சொடுக்கவும்.)

இந்த அம்பிகையை முறையாக உபாசிப்பவர்களுக்கு, அம்பிகையின் அருளால், தீப ஒளியில், முக்காலமும் தெரியும்  என்று கூறப்படுகிறது.

ஆசுரி துர்கை:
தூய்மையான வெண்மை நிறத்தவளாக ஆசுரி துர்கை தியானிக்கப்படுகிறாள். தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்த போது, திருமால் மோஹினி அவதாரமெடுத்து, அமுதத்தை அசுரர்கள் அடையாத வண்ணம் செய்து தேவர்களுக்கு வழங்கினார்.

இவ்வாறு, அமுதத்தை தேவர்களுக்கு வழங்கிய திருவுருவே ஆசுரி துர்கை எனப் போற்றப்படுகிறது. அசுரர்களை ஏமாற்றும் பொருட்டு வந்த மோஹினித் திருவுருவே ஆசுரி துர்கை என, ஸ்ரீ துர்கா பிரபாவம் கூறுகிறது. இந்த துர்கையை உபாசனை செய்பவர்களுக்கு அஷ்டமாசித்திகளும் வசமாகும் எனக் கூறப்படுகிறது.

இப்போது, இத்தனை துர்கை வடிவங்களுக்கும் ஆதாரமான, ஸ்ரீ மூலதுர்கையைப் பற்றியும் பார்க்கலாம்.

மூல துர்கையே, சர்வ தேவதைகளின் சக்தி அம்சங்கள் ஒருங்கிணைந்த வடிவமாகத் தோன்றியவள். ஸ்ரீ துர்கா மஹாலக்ஷ்மி, மஹிஷாசுரமர்த்தினி எனப் திருநாமங்கள் கொண்டவள். அனைத்து ஆபத்துகள், மற்றும் பயங்களிலிருந்து உயிரினங்களைக் காத்து ரக்ஷிப்பவள்.


ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில், ஸ்ரீ துர்கா உபாசனை, கன்ம மலத்தை ஒட்டியதாகக் கருதப்படுகிறது. கன்ம மலத்தை வெல்வதற்கு ஸ்ரீ துர்கா உபாசனையன்றி வேறொரு மார்க்கம் இல்லை. அதாவது, நாம் முன் செய்த வினைகளின் விளைவுகளையே பிறவிகள் எடுத்து அனுபவிக்கிறோம். இந்த வினைச் சுமை தீர துர்கை உபாசனையே உதவும்.

நாம் வேறொரு சந்தர்ப்பத்தில், ஸ்ரீ துர்கா தேவியின் மகிமைகளை இன்னும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹாகார நாரீ லாவண்யா ஹகாரபரதேவதா
நமோ வேதாந்த ரூபாயை துர்கா தேவ்யை நமோ நம:
நமோ பக்தாதுனும்பாது துர்கா ஸ்ரீ பரதேவதா
நமோ நமோ பகவதி த்ராஹிமாம் அபராதினம்.
(ஸ்ரீ துர்கா ஸஹஸ்ரநாமம்)

அம்பிகையின் அருளால்,

வெற்றி பெறுவோம்!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
ஆதார நூல்கள்: சிவமஹாபுராணம், ஸ்ரீ தேவி மஹாத்மியம், ஸ்ரீ தேவி பாகவதம், ஸ்ரீ துர்கா பிரபாவம்.

2 கருத்துகள்:

  1. சர்வ தேவதைகளின் அம்சமாக அனைத்து நலன்களையும் அருளும் துர்க்காதேவிபற்றிய அபூர்வமான தொகுப்புகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. ///// இராஜராஜேஸ்வரி said...
    சர்வ தேவதைகளின் அம்சமாக அனைத்து நலன்களையும் அருளும் துர்க்காதேவிபற்றிய அபூர்வமான தொகுப்புகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்../////

    தங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..