நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

NAM THEGAME SRICHAKRAM.....ந‌ம் தேகமே ஸ்ரீசக்ரம்.


'சக்ர ராஜம்' என்று போற்றப்படும் ஸ்ரீ சக்ரத்தின் அமைப்பு பற்றி, தேவியின் திருவடி,பாகம் 2, ஸ்ரீ சக்ரத்தின் அமைப்பு பதிவில் எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக, இந்தப் பதிவினைக் கொள்ளலாம்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்

என்று பாடுகிறார் திருமூலர் பெருமான். நாம் வெளியே காணும் பிரபஞ்சமும் நம் உடலும் ஒன்றையே சுட்டுகின்றன.

'அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே!" ... என்று சட்டைமுனிவர் பெருமான் பாடுகிறார்.

இரத்தம், தோல், தசை, நரம்புகள் முதலியவற்றாலான   இவ்வுடலே பிண்டம் எனப்படுகிறது. இதில் தோல், இரத்தம், தசை நார்கள்,எலும்பு, மூளை என ஐந்தும் சக்திமூலங்கள் என்றும், ஜீவன், பிராணன், சுக்கில தாது, தேஜஸ் ஆகிய நான்கும் சிவமூலங்கள் என்றும் அறியப்படுகின்றன. சிவ, சக்தி மூலங்கள் சேர்ந்த தேகமே பிண்டம்.

அண்டம் எனப்படுவது, பஞ்சபூதங்கள்(நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்), ஈஸ்வர தத்துவம், சதாசிவ தத்துவம், சுத்த வித்யை, மாயை ஆகிய ஒன்பதின் தொகுப்பாகும். இதில் பஞ்சபூதங்களும் சக்தி மூலங்கள். மற்ற நான்கும் சிவ மூலங்கள் என அறியப்படுகின்றன.

ஆக, சிவ, சக்தி கோணங்கள்(மூலங்கள்) சேர்ந்த ஸ்ரீ சக்ரம், இந்த அண்டத்தையும், நம் உடலையும் ஒரு சேரக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

அண்ட பேரண்டங்களை எல்லாம் ஆட்டுவிக்கும் சக்தியே, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாக அருளாட்சி புரியும் ஸ்ரீ லலிதா பரமேச்வரி. நம் உடலிலும் உலகிலும் வியாபித்திருக்கும் மஹாசக்தி அவளே.

ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு படைப்பிலும் அன்னையவள் அருட்காட்சியை காணும் பேறு பெற்றோரே மகான்கள்.  அம்பிகையின் திருவடிகளின் பால் திடமான பக்தி இருப்பின், நம் வினை எத்தகையதாக இருந்தாலும் அது அவளது அருட்புனலால் அடித்துச் செல்லப்பட்டு நிலையான ஆனந்தப் பெருவாழ்வினை நமக்கு வழங்கும்.

இந்த மாபெரும் பிரபஞ்சத் தத்துவமே ஸ்ரீசக்ரம். நம் உடலும் ஸ்ரீ சக்ரமும் ஒன்றே.  நம் உடலுக்கும் ஸ்ரீ சக்ரத்திற்கும் உள்ள தொடர்பினை இந்தப் பதிவில் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.
1. ஸ்ரீ சக்ரத்தின் மையப்புள்ளியே பிந்து ஸ்தானம். இதில் அண்டமெல்லாம் படைத்து ஆட்கொண்டு அருள்செய்யும் அன்னை பராசக்தி ஆனந்த வாசம் புரிகிறாள். ஒன்றாய் அரும்பி பலவாய் விரியும் ஆதியும் அந்தமும் இல்லா அம்பிகை, சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணியாக அருளாட்சி செய்யும் இடமே பிந்து ஸ்தானம்.  இந்த பிந்து ஸ்தானம் சிவமூலமாக அறியப்படுகிறது. நம் உடலில், இந்த பிந்து ஸ்தானமே பிரமரந்திரம் எனப்படும் தலை உச்சி. நம் உடலில் அமைந்துள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களின்படி பார்க்கும் பொழுது,  ஆஜ்ஞை,(ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..6)  ஸ்ரீசக்ரத்தின் பிந்து ஸ்தானமாகக் கருதப்படுகிறது.

2.ஸ்ரீ சக்ரத்தின் எட்டாவது ஆவரணமாகிய த்ரிகோணம்(முக்கோணம்) 'ஸர்வ ஸித்தி ப்ரத சக்கரம்' என்ற பெயருடன் விளங்குவதைப் பார்த்தோம். இது ஸ்ரீ சக்ரத்தின் 43வது முக்கோணம்.

இதில் 'அதிரஹஸ்ய யோகினிகள்' எனத் துதிக்கப்படும் மஹா காமேச்வரி, மஹா வஜ்ரேஸ்வரி, மஹா பகமாலினி என்ற திருநாமங்களுடன் கூடிய தேவிகள் வீற்றிருக்கிறார்கள். இவர்களின் நாயகியாக, 'திரிபுராம்பா' என்ற திருநாமத்துடன் கூடிய தேவி ரத்தின சிம்மாசனத்தில் அருளுகிறாள்.

'அதி ரஹஸ்ய யோகினிகள்' மூவரும் முறையே, இச்சாசக்தி, ஞானசக்தி கிரியாசக்தி, ஸ்வரூபிணியாக விளங்குகிறார்கள். ஸாதகனின் நியாயமல்லாத இச்சைகளை, (விருப்பங்களை) நீக்கி, ஞான ஆற்றலை மேம்படுத்தி, அம்பிகையின் அருளாற்றலைப் பெற தகுதிப்படுத்தும் சக்திகள் இவர்கள்.

நம் உடலில் தலை(சிரசு) த்ரிகோணமாக உருவகிக்கப்படுகிறது. யோக நெறியில் பார்க்கும் போது 'இந்திர யோனி'(உள்நாக்குப் பகுதி) த்ரிகோணம் என்று கருதப்படுகிறது.

அம்பிகை சிவ சக்தி ஸ்வரூபிணியாக இருப்பினும், ஸ்ரீ சக்ரத்தில், சிவகோணங்கள், சக்தி கோணங்கள் என இருப்பதை அறிவோம். இந்த த்ரிகோணம், சக்தி அம்சமுள்ளதாகக் கருதப்படுகிறது.

3.ஸ்ரீ சக்ரத்தின் ஏழாவது ஆவரணமான, எட்டுக்கோணங்களை உடைய ஸர்வ ரோக ஹர சக்கரத்தில் வாக்தேவதைகள், ரஹஸ்ய யோகினிகளாக வசித்து வருகிறார்கள். இவர்களின் தலைவியாக, திரிபுரஸித்தா தேவி மஹாபீடத்தில் அருளுகிறாள்.

இந்த ரஹஸ்ய யோகினிகள், ஜனனம் மரணம், பந்தபாசங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு காரணமாக இருக்கிறார்கள். ஆன்மாவின் ஞானமற்ற தன்மையே 'ரோகம்' எனக் குறிக்கப்படுகிறது. இந்த ரோகத்தை(நோயை) நீக்கி, 'அஹம் பிரம்மாஸ்மி' என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதால் இது 'ஸர்வ ரோக ஹர சக்கரம்' எனப் பெயர் பெற்றது.

ரஹஸ்ய யோகினிகளிடமிருந்தே, காவியம், இசை, நாடகம் முதலியவை தோன்றுவதால் இவர்கள் 'வாக்தேவதைகள்' என அழைக்கப்படுகிறார்கள். 'அ' முதல் 'க்ஷ' வரையிலான அக்ஷரங்களின் தோற்றத்திற்குக் காரணமானவர்கள் இவர்களே. ஆகவே இவர்கள், 'மாத்ருகா ஸ்வரூபிணிகள்' எனவும் துதிக்கபடுகிறார்கள்.

நம் உடலில், 'நெற்றி' அஷ்ட கோணத்தைக் குறிக்கிறது. இதுவும் சக்தி மூலமே. யோக நெறியில், ஆதாரச்சக்கரங்களின் வழி பார்க்கும் போது, விசுத்தி,  (ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..5) ஸ்ரீசக்ரத்தின் அஷ்டகோணத்தைக் குறிப்பதாக அமைகிறது.

4. ஸ்ரீ சக்ரத்தில், 'அந்தர்த்தசாரம்' என்ற உள்பத்து கோணம் 'ஸர்வ ரக்ஷாகர சக்கரம் என்ற பெயர் பெற்றுத் திகழ்கிறது. இது ஆறாவது ஆவரணமாக அமைந்துள்ளது. இங்கு 'நிகர்ப்ப யோகினிகளும்' அவர்களின் நாயகியாக, 'திரிபுராமாலினியும்' வீற்றிருந்து அருளுகிறார்கள். இதுவும் சக்தி மூலமாகக் கருதப்படுகிறது.

நம் உடலில், இரு புருவங்களின் மத்தியில் உள்ள பகுதி,  உள்பத்து கோணத்தைக் குறிப்பதாக அமைகிறது. ஆதாரச் சக்கரங்களில், அநாஹதம் (ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..4) ஸ்ரீசக்ரத்தின் உள்பத்து கோணத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

5. ஸ்ரீசக்ரத்தில், ஐந்தாவது ஆவரணமான, வெளிப்பத்து முக்கோணங்கள் 'பஹிர்த்தசாரம்' என அழைக்கப்படுகின்றன. இதில் வாசம் செய்யும் 'குலோத்தீர்ண யோகினிகளுக்கு' 'திரிபுராஸ்ரீ' என்ற திருநாமமுடைய தேவி தலைவியாக இருக்கிறாள். இந்த அம்பிகை, தங்கமயமான சிம்ம வாகனத்தில் வீற்றிருந்து அருளுகிறாள். இந்த சக்கரம், சத்குருவை அடையும் மார்க்கத்தைக் காட்டுவதாகவும், குரு சிஷ்யப் பரம்பரையின் முக்கியத்துவத்தை விளக்குவதாகவும் அமைந்திருக்கிறது. சத்குரு ஒருவரே, பரப்பிரம்ம ஸ்வரூபியாகிய தேவியை அடையும் மார்க்கத்தைக் காட்ட வல்லவர். ஆகவே, குருவை அடைதல், ஞான மார்க்கத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

குலோத்தீர்ண யோகினிகளை, குலம், உத்தீர்ணம், யோகினிகள் என்று பதம் பிரிக்கலாம். இதில் குலம் என்பது, ஞான மார்க்கத்திற்குத் தேவையான குரு சிஷ்யப் பரம்பரையே. உத்தீர்ணம் என்பது நல்ல முறையில் விருத்தி செய்வது. யோகினிகளை தேவிகள் எனக் கொள்ளலாம். ஆக, குரு சிஷ்யப் பரம்பரையின் விருத்திக்கு அருளுவதால் இந்த தேவிகளுக்கு இத்தகைய திருநாமம் ஏற்பட்டது எனக் கொள்ளலாம். சிஷ்யனுக்கு எப்படி குரு முக்கியமோ அப்படியே, குருவுக்கும் நல்ல சிஷ்யர்கள் அவசியம். இந்த ஐந்தாவது ஆவரண பூஜை, அப்படிப்பட்ட சத்சிஷ்யர்களை குருவிடம் சேர்ப்பிப்பதோடு, குரு சிஷ்ய இணக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. இதுவும் சக்தி மூலமாகக் கருதப்படுகிறது.

மனித உடலில், கழுத்துப் பகுதி, வெளிப்பத்து முக்கோணங்களைக் குறிப்பதாக அமைந்திருக்கிறது. யோக நெறியில், மணிபூரகச் சக்கரம்,(ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..3) ஸ்ரீசக்ரத்தின் வெளிப்பத்து முக்கோணங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
6.ஸ்ரீசக்ரத்தில் நான்காவது ஆவரணமாகிய  சதுர்தச கோணம்(14 முக்கோணங்கள்), சக்தி சக்கரமாகும். இந்த பதினான்கு முக்கோணங்களும் பூபுரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே சாதகன், ஜீவ ப்ரஹ்ம ஐக்கியத்தை உணரும் ஆரம்ப நிலை. சதுர்தச கோணம், ஈரேழு பதினான்கு உலகங்களையும் குறிப்பதாக  அமைந்திருக்கிறது.

 மாயையை அகற்றி ஆத்ம ஞானத்தை அருளுவதால் 'ஸர்வ சௌபாக்கிய தாயக சக்கரம்' என்றும் அறியப்படும் இதில், 'ஸம்ப்ரதாய யோகினிகள்' என்னும் பதினான்கு சக்திகள் வசிக்கிறார்கள். இவர்களின் நாயகி, 'த்ரிபுரவாஸிநீ' தேவி. தக்ஷிணாமூர்த்தி என்ற திருநாமமுடைய பரமேஸ்வரனே ஆதிகுருவாக அறியப்படுகிறார். அவர் தாமாகவோ அல்லது  குருவடிவாகவோ தோன்றி, ஜீவன் ப்ரஹ்மம் இரண்டும் ஒன்றே என்ற பேதம் இல்லாத நிலையை அருளுவதே 'ஸம்ப்ரதாயம்' என்று அழைக்கப்படுகிறது. அதன் காரணமாகவே, இந்த சக்கரத்தில் வசிக்கும் சக்திகளுக்கு 'ஸம்ப்ரதாய யோகினிகள்' என்ற திருநாமம் ஏற்பட்டது. நம் உடலில் இதயப் பகுதி, சதுர்தச கோணத்தைக் குறிப்பதாக அறியப்படுகிறது. யோக நெறியில் சுவாதிஷ்டானச் சக்கரம்,  (ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..2)ஸ்ரீ சக்ரத்தின் சதுர்தச கோணத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

7. ஸ்ரீசக்ரத்தின் மூன்றாவது ஆவரணமாகிய எட்டிதழ் கமலம், அஷ்டதளபத்மம் எனப்படுகிறது. இது சிவமூலமாக அறியப்படுகிறது. 'ஸர்வ ஸம்க்ஷோபண சக்ரம்' என்றும் அறியப்படும் இதில், 'குப்ததர யோகினிகளான' எட்டு சக்திகள் வாசம் செய்கின்றனர். இவர்களின் நாயகி, 'த்ரிபுர ஸூந்தரி' என்ற திருநாமமுடைய தேவி. இந்த யோகினிகள் மிகவும் கண்டிப்பானவர்கள்.  இந்த தேவதைகளின் கட்டுப்பாட்டிலேயே, ப்ரகிருதி,மஹத் தத்வம், அகங்காரம், பஞ்ச தன்மாத்திரைகள், பஞ்ச பூதங்கள், கர்ம,ஞானேந்திரியங்கள், அந்தக‌ரணம், புருஷன்(ஆத்மா) ஆகிய யாவும் இருக்கின்றன. இந்த யோகினிகளைப் பற்றி இன்னும் சற்று விரிவாகப் பின்னொரு பதிவில் பார்க்கலாம்.

நம் உடலில், தொப்புள், ஸ்ரீசக்ரத்தின்  எட்டிதழ் கமலத்தைக் குறிக்கிறது. ஆதாரச் சக்கரங்களில் மூலாதாரம்,(ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..1)  ஸ்ரீசக்ரத்தின்  எட்டிதழ் கமலத்தைக் குறிக்கிறது.

8.ஸ்ரீசக்ரத்தின், இரண்டாவது ஆவரணமாகிய பதினாறிதழ் கமலம், ஸர்வாசா பரிபூரகச் சக்கரம் என்ற திருநாமத்துடன் விளங்குகிறது. இதில், 'குப்த யோகினிகள்' என்ற திருநாமத்துடன் உள்ள பதினாறு சக்திகள் வசிக்கிறார்கள். சாதகன், இந்த ஜென்மத்தில் அனுபவித்தது போக மீதியுள்ள கர்மா நல்ல முறையிலான கர்மாவாக அமைய, இவர்கள் அருள்பாலிக்கிறார்கள். இவர்களின் நாயகி,'திரிபுரேசி' தேவியாவாள். இது சிவ சக்கரமாகும்.

நம் உடலில், இடுப்பு மற்றும் தொடைகள், ஷோடசதள பத்மமாக அறியப்படுகின்றன. யோக நெறியில், மூலாதாரத்திற்கும், பின் தொடைக்கும் இடைப்பட்ட பகுதி, ஷோடச தள பத்மமாகும்.

9.ஸ்ரீசக்ரத்தின் முதல் ஆவரணமாகிய மூன்று சதுரங்கள் கொண்ட பூபுரம், 'த்ரைலோக்கிய மோகனச் சக்கரம்' என்ற திருநாமத்துடன் விளங்குகிறது. இதில் வாசம் செய்யும், அஷ்டமா சித்திகள்,  ப்ராஹ்மீ, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவீ, வாராஹீ, மாஹேந்த்ரீ, சாமுண்டா, மஹாலக்ஷ்மீ ஆகிய அஷ்ட மாத்ருகா தேவிகள், ப்ரகட யோகினிகள்(பத்து முத்ரா சக்திகள்) முதலானோருக்கு  'த்ரிபுரா' என்ற திருநாமமுடைய தேவியே சக்ரேஸ்வரியாக விளங்குகிறாள். இது  சிவ சக்கரமாகும்

நம் உடலில், பாதங்கள், ஸ்ரீ சக்ரத்தின் பூபுரமாக அறியப்படுகிறது. யோக நெறியில், மூலாதாரத்தின் கீழ் உள்ள பகுதி, பூபுரமாக அறியப்படுகிறது.

பின்னொரு பதிவில், நம் மனதில் செயல்பாடுகளுக்கும், ஸ்ரீசக்ரத்திற்கும் இருக்கும் தொடர்பினை விரிவாகக் காணலாம்.

இறையருளால்,

வெற்றி பெறுவோம்!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

8 கருத்துகள்:

  1. /////sury Siva said...
    A commendable descriptive essay indeed.

    subbu rathinam/////

    Thanks a lot for your valuable comment sir...

    பதிலளிநீக்கு
  2. அப்பாடி! இத்தனையும் comprehend பண்ணி இவ்வளவு தெளிவாகவும் எழுதியிருக்கிறீர்கள்! மிக்க நன்றி. அன்னையின் அருள் உங்களுக்கு பூரணமாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை...

    பதிலளிநீக்கு
  3. /////கவிநயா said...
    அப்பாடி! இத்தனையும் comprehend பண்ணி இவ்வளவு தெளிவாகவும் எழுதியிருக்கிறீர்கள்! மிக்க நன்றி. அன்னையின் அருள் உங்களுக்கு பூரணமாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.../////

    தங்களுக்கு மிக்க நன்றி. இதை எழுதும் போது சிறிது யோசனையுடன் தான் எழுதினேன். தங்களின் பாராட்டு எனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. தங்களுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நம் உடலுக்கும் ஸ்ரீ சக்ரத்திற்கும் உள்ள தொடர்பினை சிறப்பாகப் பகிர்ந்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. ////இராஜராஜேஸ்வரி said...
    நம் உடலுக்கும் ஸ்ரீ சக்ரத்திற்கும் உள்ள தொடர்பினை சிறப்பாகப் பகிர்ந்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..////

    தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  6. Great work, thanks a lot . God will bless you.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..