நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 1 நவம்பர், 2013

DIWALI(2/11/2013)...SRI LAKSHMI GUBERA PUJA..தீபாவளி... ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜை.


அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!!

கருணைக் கடலான திருமகள், திருமாலை மணந்த தினமாக, தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது. அன்றைய தினம், திருமகளையும், செல்வத்துக்கு அதிபதியும், சிறந்த சிவபக்தனுமான குபேரனையும் வழிபடுவது, சிறப்புகள் பல தர வல்லது.

ஸ்ரீலக்ஷ்மி, பொருட்செல்வம் மட்டுமல்லாது நம் வாழ்விற்குத் தேவையான சகல நலன்களையும் அள்ளி வழங்கும் அன்னை. அஷ்டலக்ஷ்மியாக அருள் மழை பொழியும் அவளே, தீப ஒளித் திருநாளில், குத்து விளக்கின் முத்தொளியில் தீப லக்ஷ்மியாகப் பிரகாசிக்கின்றாள்.

தீபாவளி கொண்டாடும் முறைகள் பற்றி என் சென்ற வருட, தீபாவளிப் பதிவில் எழுதியிருக்கிறேன். பதிவுக்கு இங்கு சொடுக்கவும்.

எண்ணற்ற தீபங்கள், பொன்னொளி வீசும் நன்னாளில், ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜையைச் செய்வது மிக நல்லது. எளிய முறையில், இந்தப் பூஜையைச் செய்யும் முறையை இப்போது காணலாம்.

பூஜை விதிகள்:

1.பூஜையை காலை அல்லது மாலை வேளையில் செய்யலாம்.  பூஜை செய்யும் போது, வெளியில் இருக்கும் இறைத்திருவுருவங்களுக்கு மட்டுமல்லாமல், நம்முள் உறைந்திருக்கும் இறைவனுக்கும் சேர்த்தே பூஜை 
செய்கிறோம். ஆகவே, பூஜை செய்யும் போது, நல்ல முறையில் அலங்கரித்துக் கொண்டு பூஜையில் அமர வேண்டும்.

ஸ்ரீலக்ஷ்மி பூஜை செய்வதற்கு அமரும் போது, சிவப்பு, பிங்க், அல்லது மஞ்சள் நிற உடை உடுத்திக் கொண்டு அமர்வது சிறப்பு.

2.ஸ்ரீலக்ஷ்மி, விநாயகர் திருவுருவங்கள் அல்லது படங்களை, சுத்தமாகத் துடைத்து, சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கவும். குபேர யந்திரத்தையும் துடைத்து, அலங்கரிக்கவும்.

ஒரு பலகையில், கோலமிட்டு, சிவப்பு/மஞ்சள்/பச்சை  நிறத் துணியை விரித்து, அதில் லக்ஷ்மி தேவி, விநாயகர் திருவுருவங்களை வைக்கவும். விநாயகருக்கு வலப்புறமாக லக்ஷ்மி தேவி இருக்க வேண்டும். திருவுருவங்கள், கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்க வேண்டும். வெள்ளி, தங்க நாணயங்கள் இல்லத்தில் இருக்குமாயின் அவற்றையும் தனித் தட்டில் பூஜைக்கு வைக்கலாம். வடக்குப் பார்த்தாற்போல் ஒரு கோலமிட்ட சிறு பலகை/ ஒரு தாம்பாளம் வைத்து அதில் குபேர யந்திரம் வைக்கவும். யந்திரம் இல்லாவிட்டால், ஸ்ரீலக்ஷ்மி குபேரரின் படம் வாங்கி வைத்து, யந்திரத்தை, அரிசி மாவினால் கோலமாக வரையலாம்.

ல‌க்ஷ்மி தேவியின் முன்பாக, ஒரு சிறு தட்டில், அரிசி,பருப்பு, மங்கலப் பொருட்கள் நிரம்பிய பித்தளை/தாமிரச் செம்பை வைத்து, அதை, மாவிலை, மஞ்சள் பூசிய தேங்காய் முதலியவற்றால் அலங்கரிக்கவும். படங்களுக்கும் கலசத்துக்கும் பூமாலைகள் அல்லது சரங்கள் சாற்றவும்.

ல‌க்ஷ்மி தேவி, விநாயகர் திருமுன்பாக, இரு உயரமான குத்து விளக்குகளை வைத்து, நெய்யால் தீபமேற்றவும். குபேரருக்கு அருகிலும் ஒரு சிறு காமாட்சி விளக்கு வைத்து, நெய் தீபம் ஏற்றவும்.

பூஜை துவக்கும் முன்பாக, ஊதுபத்தி ஏற்றி வைத்து, நறுமணம் கமழும் சூழலை உருவாக்க வேண்டும்.

3. பூஜைக்கு, சிவந்த நிற மலர்கள், காசுகள் பயன்படுத்துவது நல்லது. நாணயங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். புதிய நாணயங்கள் பயன்படுத்த இயலுமாயின் செய்யலாம்.

பூஜைக்குத் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு பூஜைக்கு அமரவும். கரங்களை சுத்தம் செய்து கொண்டு, திருவிளக்கு ஏற்றவும். விளக்கு ஏற்றும் போது மனதுள் லக்ஷ்மி தேவியைத் தியானித்து, 'ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி' என்று சொல்லி ஏற்றவும்.

குபேரனின் திருவுரு முன்பாக, பதினோரு விளக்குகள் ஏற்றுவது சிறப்பு.

முதலில் விநாயகர் துதியைச் சொல்லி, விநாயகருக்கு, மலர்/அருகம்புல் தூவி வழிபாடு செய்யவும். பின்பு, ஸ்ரீலக்ஷ்மி தேவியை மனதுள் உருவகித்து, தியானித்து, விக்ரகத்தில் எழுந்தருளப் பிரார்த்திக்கவும்.

வெள்ளி தங்க நாணயங்களுக்கு, பாலால் அபிஷேகம் செய்து, அதன் பின் நீரால் அபிஷேகம் செய்து, துடைத்து பொட்டு வைத்து, மலர்கள் சமர்ப்பிக்கலாம்.

ஸ்ரீலக்ஷ்மி தேவிக்கு உபசார பூஜைகள் செய்யவும். விவரங்களுக்கு எளிய முறை பூஜை பதிவினைக் காண்க..

ஸ்ரீலக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி, சிவந்த நிற மலர்கள் அல்லது காசுகளால் அர்ச்சனை செய்யவும்.

பூஜையின் போது பாராயணம் செய்ய, விஸ்வஸார தந்த்ரோக்த ஸ்ரீலக்ஷ்மீ கவசத்திற்கு இங்கு சொடுக்கவும்.

அதன் பின், ஸ்ரீகுபேரனுக்குப் பூஜை செய்ய வேண்டும். குபேர யந்திரத்தின் மீது, படத்தில் காட்டியபடி நாணயங்கள் வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை வைக்கும் போதும் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வைக்கவும். ஒவ்வொரு கட்டத்திற்கும், புஷ்பம், அக்ஷதை சமர்ப்பிக்கவும்.

"ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய 
தனம் தான்யாதி பதயே தனதான்ய ஸம்ருத்திம் மே 
தேஹி தேஹி தாபய ஸ்வாஹா"

அதன் பின் குபேர அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யவும்.

தூப, தீப ஆராதனைகள் செய்து, நிவேதனம், தாம்பூலம் சமர்ப்பிக்கவும். நிவேதனமாக இனிப்புகள் சமர்ப்பிப்பது நல்லது. பாலினால் செய்யப்பட்ட இனிப்புகள் அல்லது பாயசம் விசேஷமாகக் கருதப்படுகின்றது.

கையில் பூ, அக்ஷதை எடுத்துக் கொண்டு, மும்முறை ஆத்மபிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிக்கவும். தேவியிடம் மனம் உருகப் பிரார்த்திக்கவும்.

மங்கலமான பாடல்களைப் பாடிக் கொண்டு ஆரத்தி எடுக்கவும்.

பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக, தேவியிடம், மன்னிப்புக் கோரி, பூஜையை நிறைவு செய்யவும்.

புனர் பூஜை;

மறு நாள், திருவுருவங்களுக்கு, தூப தீபம் காட்டி, இயன்றவற்றை நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கி நமஸ்கரித்து, புஷ்பம் அக்ஷதை போட்டு, இருப்பிடம் எழுந்தருளப் பிரார்த்தித்து, சிறிது வடக்காக நகர்த்தி வைக்கவும்.

மனம் ஒன்றி, இம்மாதிரி பூஜைகள் செய்வது, நிச்சயம், குடும்ப ஒற்றுமை, மன அமைதி முதலியவற்றைத் தரும். ஒற்றுமையான, சச்சரவுகளற்ற குடும்பத்தில், திருமகள் நித்தமும் வாசம் செய்கிறாள். நமக்குத் தேவை என்பதே ஏற்படாத வண்ணம் நல்லருள் புரிகின்றாள்.

அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

இறையருளால் எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழப் பிரார்த்திக்கிறேன்.

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்....

8 கருத்துகள்:

  1. மிகவும் சிறப்பான பகிர்வு... நன்றி...

    இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. தீபாவளி திருநாளில்
    திரு நிறைந்து அமைய நல்வாழ்த்துக்கள்..

    கந்த புராணத்தை உங்கள் நடையில்
    கேட்க பிரியபடுகிறோம்..

    "ஆன்மிக அலைவரிசை"
    ஒளி(லி) பரப்புமா எங்கள் விருப்பங்களை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமுருகன் திருவருளை வேண்டுகிறேன் ஐயா!!. கூடிய விரைவில் முயற்சிக்கிறேன். தங்கள் அன்பான நல்வாழ்த்துக்களுக்கு என் பணிவான நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. அகல் விளக்கில் நெய்யூற்றி, தீபமேற்றலாம்.. தீபத்தை, பூஜையறையில், குபேரனின் திருமுன் வைத்து ஏற்றி பூஜை செய்யலாம்.. குபேரனின் திசையாகிய வட திசையில் ஏற்றுவது சிறப்பு என்று சொல்கிறார்கள்..

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..