நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 26 அக்டோபர், 2013

SRI AHOI MATHA PUJA..AHOI ASHTAMI VRATH POOJA ..... PART 2...ஸ்ரீ அஹோய்/ஆஹோயி பகவதி மாதா பூஜை, ஆஹோய் அஷ்டமி விரத பூஜை பகுதி 2..(26/10/2013)


சென்ற பதிவின் தொடர்ச்சி..

இன்னொரு கதை:

இது பெரும்பாலும் முதல் கதையை ஒட்டியே அமைந்திருக்கிறது.

முன்னொரு  காலத்தில், ஒரு கிராமத்தில்,  மண்பாண்டங்கள் செய்யும் தொழிலை உடைய ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்தக் குடும்பத்தில் இரு மகன்கள். இருவரும் ஒரு இல்லத்திலேயே வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் இளைய மகன், தன் மனைவியிடம், 'தீபாவளிச் சந்தைக்காக‌, புதிய பானைகள் செய்து விற்பனை செய்ய வேண்டும். ஆகவே, நீ சென்று கொஞ்சம் மண் சேகரித்துக் கொண்டு வா' என்று அனுப்பினான். அவளும் ஒப்புக் கொண்டு, அருகில் இருந்த கானகத்திற்குச் சென்றாள்.

மண் சேகரிக்கக் குழி தோண்டிய போது தவறுதலாக, ஒரு குள்ளநரியின் ஏழு குட்டிகளைக் கொன்று விட்டாள். அவள் மிகவும் வருந்திய போது அவ்விடம் வந்த தாய் நரி நடந்ததை எல்லாம் அறிந்தது.மிகுந்த கோபத்துடன், 'நீ என் குடும்பத்தை அழித்தாய்..உன் குடும்பமும் இவ்வாறே ஆகும்' என்று சாபமிட்டது.

அந்தப் பெண், நிலைகுலைந்தாள். அழுதாள்.. நரியிடம் மன்னிப்பு வேண்டினாள். இறுதியில், 'நான் எதை வேண்டுமானாலும் செய்கிறேன், தயவு செய்து என் குடும்பத்தைக் காப்பாற்று' என்று கூறினாள்.

நரி, 'நீ உனக்குப் பிறக்கும் ஏழு குழந்தைகளை, அவை பிறந்ததும் கொண்டு வந்து தந்து விட வேண்டும். அவ்வாறு செய்வதாக சத்தியம் செய்.. என் சாபத்தை நான் திரும்பப் பெறுகிறேன்..' என்றது.

அந்தப் பெண்ணும் ஒப்புக் கொண்டாள். அவளுக்குப் பிறந்த ஏழு குழந்தைகளை, மனதைக் கல்லாக்கிக் கொண்டு, அவை பிறந்தவுடன் நரியிடம் சேர்த்தாள்.

ஒரு நாள் அவள் குடிசைக்கு ஒரு முனிவர் வந்தார். மிக வருத்தம் தோய்ந்த அவள் முகத்தைப்  பார்த்து விட்டு, பரிவோடு அவளிடம் காரணம் கேட்டார். அந்தப் பெண், மனத்துயரத்தோடு தன் குறையை அவரிடம் கூறினாள்.

அந்த முனிவர், வரும் அஹோய் அஷ்டமி தினத்தன்று, உபவாசம் இருந்து, அஹோய் மாதாவை பிரார்த்தனை செய்து, பூஜித்து விரத நிறைவு செய்யக் கூறினார். அன்னை அவள் குழந்தைகளைக் காப்பாள் என்று ஆறுதல் கூறினார்.

அந்தப் பெண்ணும் அவ்வாறே விரதம் இருந்து, விரத நிறைவும் செய்தாள். அன்னை மனம் மகிழ்ந்தாள். நரியிடம், 'உன் துயரத்திற்கு ஈடாக அவளும் துன்பப்பட்டு விட்டாள்..அவளது குழந்தைகளைத் திரும்பக் கொடு.. என்று கட்டளையிட்டாள். நரியும் அவ்வாறே செய்தது.

அந்தப் பெண், தன் ஏழு குழந்தைகளையும் திரும்பப் பெற்று மன மகிழ்ந்தாள்.

விரதம் இருக்கும் முறை:

Alpana
விரதம் இருக்கும் பெண், அதிகாலையில் எழுந்து, நீராடி,  பூஜையறையில் தேவியின் திருமுன் அமர்ந்து சங்கல்பம்(உறுதி) செய்து கொள்ள வேண்டும். ' அம்மா, இன்று முழுவதும் உணவு உண்ணாமலும் நீர் பருகாமலும் உன்னை நினைத்து உபவாசம் இருக்கிறேன்.. இன்று இரவு நட்சத்திரங்களைத் தரிசித்த பின்னரே விரதம் நிறைவு செய்வேன்..உன் பெருங்கருணை, இந்த விரதத்தை நிறைவேற்றி வைத்து, என் குழந்தைகளைக் காக்க வேண்டுகிறேன்..' இவ்வாறு கூறிப் பிரார்த்தித்த பின், நாள் முழுதும் உபவாசம் இருக்க வேண்டும்..

சில குடும்பங்களில் சந்திரோதயம் ஆன பின்னரே விரத நிறைவு செய்தல் வழக்கத்தில் இருக்கிறது.

மாலையில், பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஒரு சுவரில், அஹோய் மாதாவின் திருவுருவப் படத்தை வரைய வேண்டும். அஷ்டமி தினத்தைக் குறிக்கும் வகையில் எண் கோண வடிவத்தை வரைந்து அதனுள் அன்னையின் திருவுருவம் வரைய வேண்டும்.  ஏழு மகன்கள், மருமகள்கள் உருவங்களும், சிங்கம், நரி போன்றவற்றின் உருவங்களும், அஹோய் விரதக் கதையினை நினைவுபடுத்துவது போல்  வரையப்படுகின்றன. தற்போது இது கடைகளில் படங்களாக விற்பனை செய்யப்படுகிறது. அதையும் வாங்கி வந்து பூஜையில் வைக்கிறார்கள்.

படத்தின் முன் 'அல்பனா' எனப்படும் கோலங்கள் வரைகிறார்கள்..

பின், அன்னையின் திருமுன், ஒரு மர முக்காலி அல்லது தரையில், முழு கோதுமை பரப்பி வைக்கிறார்கள். ஒரு நீர் நிரம்பிய கலசம், தானியத்தின் மேல் வைக்கப்படுகின்றது.  கலசத்தைச்  சுற்றிலும் மஞ்சள் தோய்க்கப்பட்ட சிவப்பு நிற நூல் சுற்றப்படுகின்றது. கலசம், மண் பானையிலும் வைக்கலாம்.

கலசம், மண்ணால் செய்யப்பட்ட மடக்கு ஒன்றினால் மூடப்படுகின்றது.. அதன் மேல் மண்பானை(சிறியது) ஒன்று வைக்கப்படுகின்றது. இதுவும் நீரால் நிரப்பப்பட்டு மடக்கால் மூடப்படுகின்றது..

ஒரு தட்டில் அந்தப் பகுதியின் பிரபலமான தானியங்கள்(அ) கோதுமை, நெற்கதிர்கள் வைக்கப்படுகின்றன.

நிவேதனங்களாக, எட்டு பூரிகள், எட்டு புவா(மால்புவா), ஹல்வா, வேகவைக்கப்பட்ட கொத்துக் கடலை முதலியன வைக்கப்படுகின்றன.

புவா செய்முறைக்கு இங்கு சொடுக்கவும்..

இன்னொரு தட்டில்,  வாயணம் மற்றும் மாமியாருக்கான ஒரு அன்பளிப்பு/பணம் தயாராக வைக்கப்படுகின்றது. பூஜை முடிந்ததும், இதை மாமியாருக்கு அளித்து வணங்க வேண்டும்..

சிலரது குடும்ப வழக்கப்படி, பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு அன்பளிப்புப் பணம் தர வேண்டும். அந்த வழக்கமுள்ளவர்கள், குழந்தைகளுக்குத் தரும் பணத்தையும் அன்னையின் முன் வைக்கிறார்கள்.
பூஜையின் முக்கிய அம்சமே, அன்னைக்குச் சமர்ப்பிக்கும் மாலை. அவரவர வழக்கப்படி, பூக்கள், தானியங்கள், ரூபாய் நோட்டுக்கள், வெள்ளி/தங்க‌ மணிகளால் ஆன மாலை சமர்ப்பிக்கிறார்கள். இது பெரும்பாலும் அவரவர் தொழிலை ஒட்டியே அமைகிறது. ரூபாய்கள், வெள்ளி/தங்க மணி மாலைகள், தலைமுறை தலைமுறையாக கை மாற்றப்பட்டு, பூஜைக்கு உபயோகப்படுத்தப்படுகின்றது. சிலர் ஒவ்வொரு வருடமும் புது மாலை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சிலர் ஏதாவது நேர்ந்து கொண்டு அது நடந்தால், புதிய மாலை செய்து சாற்றுகிறார்கள்.

சில குடும்பங்களில் வெள்ளியாலான அஹோயி செய்து வைத்திருப்பார்கள். இதை, பூஜையின் போது பால்,அக்ஷதை முதலியவற்றால் பூஜித்து, பூஜைக்குப் பின் நூல் கொண்டு கழுத்தில் டாலர் போல் அணிந்து கொள்வார்கள்.

பூஜையை, குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் அல்லது அக்கம்பக்கத்தோர் அனைவரும் சேர்ந்து செய்வது வழக்கம்.

பூஜை சந்தியா வேளையில் துவங்கப்படுகின்றது.. தூப தீபங்கள் முதலானவை சமர்ப்பித்து தேவி ஆராதிக்கப்படுகின்றாள்.

(ஸ்ரீ  அஹோய் மாதா ஆரத்திப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்..)

பூஜை முடிந்து, நிவேதனங்கள் சமர்ப்பித்த பின், ஏழு கோதுமை தானியங்களை கையில் எடுத்துக் கொண்டு விரதக் கதை கேட்கிறார்கள். வயதில் மூத்த பெண் 
கதை சொல்கிறார். கதை நிறைவில், 'அந்தக் குழந்தைகளைக் காத்தது போல், எங்கள் குழந்தைகளையும் காப்பாய் அன்னையே..' என்ற வேண்டுதலோடு நிறைவு செய்கிறார்கள்.

சின்னப் பானையில் இருக்கும் நீரை எடுத்துக் கொண்டு, நக்ஷத்திரங்களுக்கு/சந்திரனுக்கு அர்க்கியம் சமர்ப்பிக்கிறார்கள். அதன் பின் வாயணம், அன்பளிப்பு முதலியவை மாமியாருக்குத் தந்து, பாதம் தொட்டு வணங்குகிறார்கள்.

தங்கள் குழந்தை கையால், ஒரு தம்ளர் நீர் அல்லது பழரசம் அருந்தி விரதம் நிறைவு செய்கிறார்கள். பணம், இனிப்பு முதலியவை விநியோகிக்கப்படுகின்றன.

பெரிய பானையில் இருக்கும் நீரை நரகசதுர்த்தசி ஸ்நானத்திற்கு உபயோகிக்கிறார்கள்.

இவ்வாறு விரதமிருந்து பூஜிப்பவர்களது குழந்தைகளை, அன்னை கட்டாயம் காக்கின்றாள் என்பது உறுதியான நம்பிக்கை..

 அன்னையைப் பூஜித்து,

வெற்றி பெறுவோம்!!!

 அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி; கூகுள் படங்கள்

4 கருத்துகள்:

  1. Namaskaram Ma'am
    Thank you for your detailed enlightening posts.

    Are there any special shlokas or poojais or vratas exclusively for welfare of daughters? I am a mother to a beautiful daughter who I consider as God's blessing. However, I have been pestered time and again that I need to now have a son! My North Indian friends tell me that Ahoi Ashtami vrata is exclusively for mothers who have sons.

    Forgive me if I am wrong...but wherever I have looked, I could only find those targetted at sons although the shloka itself might say progeny but it is quite clear that satPUTRA labam is the ultimate objective in these! Santana Gopal vratam, Vansha vruddhikara durga stotram, putra prapti ashtakam etc are examples.

    Please enlighten me and other readers with scriptures and poojais and vratas specifically for long life and welfare of daughters.

    Thanks
    Pavithra

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks for your comment Ma'am.. In some parts of India, this pooja is performed for the welfare of sons...but generally, this is for the welfare of the children. There is no gender bias... More over, mother is common to both son and daughter.

      You can pray Ahoi Ma for the welfare of your Daughter..If possible, please do Kanya pooja during Sarada Navarathiri days..

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..