நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 7 செப்டம்பர், 2013

MUZHU MUTHARKADAVUL (VINAYAKA CHATHURTHI SPECIAL POSTING(9/9/2013) ...முழு முதற்கடவுள்(விநாயக சதுர்த்தி சிறப்புப் பதிவு.)



அன்பர்களுக்கு வணக்கம்.

'முழுமுதற் கடவுள்' என்று குறிக்கப்படும் விநாயகரைத் துதிக்கும் 'விநாயக சதுர்த்தி' நன்னாள், நம் பாரத நாடெங்கும் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்படுகின்றது. விநாயகரைப் பற்றிய செய்திகளுடன், விநாயக சதுர்த்தி பூஜை செய்யும் முறை பற்றி என் சென்ற வருட பதிவுகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சுட்டிகளுக்கு கீழே சொடுக்கவும்.



3.விநாயக சதுர்த்தி பூஜை.  (பகுதி 3)

'முழுமுதற்கடவுள்' என்ற பதம், பொதுவாக, ஆதி அந்தமில்லா பரம்பொருள் ஒன்றையே குறிக்கும்.  அப்படிப் பார்க்கும் போது, ஷண்மதங்கள் ஒவ்வொன்றும், தத்தமது முக்கியக் கடவுளரையே 'முழுமுதற்கடவுள்' என்று போற்றுகின்றன. ஆனால் பொதுவில் 'முழுமுதற்கடவுள்' என்றதும் நினைவுக்கு வருபவர், ஞானமூர்த்தியாகிய விநாயகரே ஆவார்.

அண்டமனைத்தும் விநாயகரில் அடங்கியிருப்பதன் குறியீடே அவரது பெருத்த வயிறு. மேலும் அனைத்து தெய்வங்களாலும் உபாசிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டவர் இவரே.

உமாதேவியார், முருகன், பிரம்மா, இந்திராதி தேவர்கள், மன்மதன், ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணிதேவி, ஆதிசேஷன், சந்திரன், அங்காரகன்(செவ்வாய்), அகத்தியர், காசிபர் முதலான முனிவர்கள்  என, விநாயகரைத் தொழுது அருள் பெற்றோர் பலர். இது ஒன்றே, அவரே முழு முதற்கடவுள் என்பதைத் தெளிவாக விளக்கும்.

பார்க்கவ புராணமாகிய விநாயக புராணம், இந்த விருத்தாந்தங்களை பெரும் சுவையுடன் விளக்குகிறது. அதிலிருந்து சில பகுதிகளைச் சுருங்கக் காணலாம்.

உமாதேவியார் விநாயகர் அருள் பெற்றது.

இமவானின் மகளாக, பார்வதி தேவி என்ற திருநாமத்துடன் உமாதேவி வளர்ந்து வருகையில், சிவனார் கங்கையை மணக்கும் முன் தம்மை மணந்திட வேண்டுமென்று நினைத்து, முறையாக, விநாயக சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து, தன் மனோரதம் நிறைவேறப் பெற்றார்.

முருகப் பெருமான் விநாயகர் அருள் பெற்றது:

வள்ளி திருமண சமயத்தில், முருகப்பெருமானுக்கு விநாயகர் செய்த உதவி நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் விநாயக புராணம், நமக்குத் தெரியாத வேறொரு செய்தியையும் விளக்குகின்றது. சூரபன்மனை வெல்வதற்காக, கிருஷ்ணா நதி தீரத்தில், ஷண்முகர், விநாயகரைக் குறித்துத் தவம் இருந்து, அதன் பலனாக, ஸ்ரீவிநாயகரது அருளும் அவரது மயில் வாகனமும் கிடைக்கப் பெற்றார்.  அந்த இடமே, 'மோர்காம்' என்று வழங்கப்படும், ஸ்ரீமயூரேச விநாயகர் கோயில் கொண்ட திருத்தலமாகும். அதன் பின்னரே முருகப்பெருமான், திருக்கயிலை அடைந்து, சிவனார் ஆணைப்படி, தேவசேனாபதி ஆனார்.

பிரம்மா விநாயகர் அருள் பெற்றது:

முதன்முதலில் சிருஷ்டியைத் தொடங்கு முன், பிரம்மதேவர், விநாயகரை வழிபட மறந்துவிட, அதன் பலனாக, அவர் சிருஷ்டி செய்தவை யாவும் குறைபாடுள்ளவையாக அமைந்து விட்டன. அதன் பின், அவர், விநாயகரைத் தொழுது, அவர் அருளால் சிருஷ்டியை முறையாகச் செய்து வரலானார்.

இந்திராதி தேவர்கள், விநாயகரை உபாசித்தது:

விநாயக பக்தனான, பலி என்னும் அசுரன், தேவாதி தேவர்களையும் போரில் வென்றான். அதன் காரணமாக, மிகுந்த அலைப்புண்ட தேவர்கள், இறுதியில் நாரத முனிவரின் ஆலோசனைப்படி கணபதியை உபாசிக்க, பின் அவர் அருளால், இழந்த சொர்க்கத்தை மீண்டும் அடைந்தனர்.

ஆதி சேஷன் விநாயகரை உபாசித்தது:

முன்பொரு முறை,  ஆதி சேஷன், சிவனாரின் சிரத்திலிருக்கிறோம் என்றெண்ணி கர்வமடைந்த க்ஷணத்தில், பூவுலகுக்குத் தள்ளப்பட்டார். பூவுலகுக்குத் தள்ளப்பட்ட வேகத்தில், அவரது தலை பூமியில் மோதி ஆயிரம் பிளவாக ஆகியது. அவரது மகத்துவங்கள் யாவும் மறைந்தது. அதன் பின், நாரத முனிவரின் ஆலோசனைப்படி, கணேச மந்திரத்தை உபாசித்தார். அதன் பலனாக, சிவனார் சிரத்தில் ஐந்து தலைகளோடு அமர்ந்திருக்கவும், ஆயிரம் பிளவுகளும் ஆயிரம் சிரங்களாகி, பூவுலகைத் தாங்கவும், ஒரு தலையோடு கூடிய உருவினனாக, விநாயகப் பெருமானுக்கு உதரபந்தனமாக(இடுப்பில் இருக்கும் கயிறு) விளங்கவும் அனுக்கிரகிக்கப் பெற்றார்.

ஸ்ரீகிருஷ்ணர், விநாயகர் அருளால், தமக்கு நேர்ந்த அபவாதம் நீங்கப் பெற்றதை 'சியமந்த்கோபாக்கியானம்' விவரிக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரது தர்மபத்தினியாகிய ஸ்ரீருக்மணி தேவி, தம் புதல்வன் பிரத்யும்னன், சம்பராசுரனுடன் யுத்தம் செய்யச் சென்று வெகு காலமாகியும் திரும்ப வராததால், நாரதர் ஆலோசனைப்படி, கணேச மந்திரத்தை, விநாயக சதுர்த்தி அன்று விதியுடன் ஜபம் செய்தார். அதன் பலனாக, சதுர்த்தியிலிருந்து ஆறாவது தினத்தில், பிரத்யும்னன் வெற்றியுடன் வந்து சேர்ந்தான். 

இவ்வாறாக, மனிதர்கள் மட்டுமல்லாது தேவர்களும் விநாயகரை உபாசித்து நன்மையடைந்தனர்.

விநாயக சதுர்த்தி பூஜையில் அருகம்புல், எருக்கம் மாலை, வன்னி இலை மூன்றும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அனலாசுரன் கதை அருகம்புல்லின் முக்கியத்துவத்தை விளக்குவது போல், வன்னி இலையின் முக்கியத்துவத்தை விளக்கும் அற்புதக் கதை ஒன்று விநாயக புராணத்தில் இருக்கிறது.

பிரம்ம தேவர், காயத்ரி தேவி, சாவித்ரி தேவி என்னும் தன் மனைவியர் இருவருள், காயத்ரி தேவியை மட்டும் அழைத்துக் கொண்டு, சஹ்யாத்ரி மலைச் சாரலில் ஒரு வேள்வியைத் தொடங்கினார். செய்தியைக் கேள்வியுற்ற சாவித்ரி தேவி, கடும் கோபமுற்று, வேள்விக்கு வந்த இந்திராதி தேவர்களை நோக்கி, 'நீங்கள், இந்த வேள்விக்கு எவ்விதம் உடன்படலாம்?' எனக் கேட்டாள். சரியான பதில் வராது போகவே, அவர்கள் அனைவரையும் நீராக உருமாறுமாறு சபித்து விட்டாள். செய்வதறியாது திகைத்த அவர் தம் தேவிமார்கள், பின்,  பிரம்ம தேவர்    ஆலோசனைப்படி, வக்ரதுண்ட கணபதியை பல காலம் உபாசித்தனர். ஆனால் அவர் பிரத்யக்ஷமாகவில்லை.

அதன் பின், ஆகாயத்திலிருந்து எழுந்த அசரீரி வாக்கின்படி, வன்னி இலைகளால் விநாயகரை அர்ச்சித்தனர். விநாயகரும் அவர்கள் முன் தோன்றி, தேவர்களது சாபத்தை நீக்கினார். அதன் பின், தேவர்களனைவரும், மந்தார மரத்தடியில், ஹேரம்ப விநாயகரை பிரதிஷ்டித்து பூஜித்தனர். பிரம்மாவும், பன்னிரண்டு ஆண்டுகள், ஹேரம்ப விநாயகரை வன்னி இலையால் பூஜித்து, அதன் பலனாக, தம் யாகத்தை மீண்டும் தொடங்கி நிறைவேற்றினார்.

கணபதி, எளிய பூஜையில் அகமகிழ்பவர். ஆத்மார்த்தமாக பக்தி செலுத்துபவர்களுக்கு, வேண்டுவன நல்கும் கருணைப் பெருங்கடல். பிள்ளையார் சுழி போட்டுத் துவங்கும் செயல்கள், பெருவெற்றியாக நிறையுமாறு செய்யும் வள்ளல்.

அமைதியாக, ஆத்மார்த்தமாக, முழு மனதையும் செலுத்தி, விநாயகரைப் பூஜிப்பதால், எப்படிப்பட்ட தீவினையும் மாளும். நம்மால் ஆன எதையும் விநாயகருக்கு நிவேதிக்கலாம்.

கணேச‌ பஞ்சரத்ன ஸ்லோகத்தைச் சொல்லி, விநாயக சதுர்த்தி அன்று விநாயகரைத் துதிக்கலாம். கீழே இருக்கும் காணொளி இணைப்பில் கணேச பஞ்சரத்னம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் காணொளியை வலையேற்றிய அன்பருக்கு நன்றிகள் பல.

கர்நாடகாவில், விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் கௌரி பூஜை செய்து கொண்டாடுகிறார்கள். கௌரி பூஜை செய்வது பற்றி, என்

1. ஸ்வர்ணகௌரி விரத பூஜை பகுதி 1(சொடுக்கவும்)

2. ஸ்வர்ணகௌரி விரத பூஜை பகுதி 2 (சொடுக்கவும்)

ஆகிய பதிவுகளில் விளக்கியிருக்கிறேன்.  குலதெய்வப் பிரீதி, இந்த தினத்தில் கௌரி பூஜை செய்வதால் ஏற்படும்.

மறு நாள் விநாயகரைப் பூஜித்து, பின் விஸர்ஜன தினத்தில், கௌரி, கணேசர் இருவரையும் சேர்த்து நீர் நிலைகளில் சேர்ப்பிக்கிறார்கள்.கர்நாடகாவில் இது மிகப் பெரிய பண்டிகை. தீபாவளி போல் புதிய ஆடைகள் அணிந்து கொண்டாடுகிறார்கள். வீட்டில் பிறந்த பெண்களுக்கு, 21 வகை மங்கலப் பொருட்களுடன் சீர் செய்கிறார்கள். அன்றைய தினம் அவர்களை உணவருந்தவும் அழைக்கிறார்கள்.

கணேஷ் சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் மஹாராஷ்டிராவில், விநாயக மூர்த்தங்களை, வீட்டுக்கு எடுத்து வந்து குறைந்தது ஒன்றரை நாள், அல்லது ஐந்து, ஏழு, பத்து தினங்கள் பூஜித்துக் கொண்டாடுவார்கள். பொதுவாக, சதுர்த்தி அன்று துவங்கி, அனந்த சதுர்த்தசி வரை மொத்தம் பத்து தினங்கள் விழா நடைபெறும். அழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபம் அல்லது பந்தலில் கணேச பிரதிமையை வைத்துப் பூஜிப்பார்கள்.

முதல் நாள் பூஜை, நாம் செய்வது போல், கணேச மந்திரங்கள் சொல்லி நடத்துவார்கள். அதன் பின், கணேசரின் பிரதிமை வீட்டில் இருக்கும் வரை, காலை, மாலை இரு வேளையும் ஆரத்தி நடைபெறும். வீட்டில் உள்ளோர், விருந்தினர் அனைவரும் அதில் பங்கு பெறுவர். அதன் பின், பூ, மஞ்சள் குங்குமம் ஆகியவற்றை, கணேசரின் பிரதிமை மீது தூவி வழிபாடு செய்வர். கொப்பரைத் தேங்காய், வெல்லம் சேர்த்த பிரசாதம் விநியோகிக்கப்படும்.

சதுர்த்தி தினத்தன்று மட்டும், ஐந்து முறைகள் ஆரத்தி நடக்கும்.

ஆரத்திகள் மந்திர புஷ்பாஞ்சலியுடன் நிறைவு பெறும்.

குழுவாகச் சேர்ந்து, பெரிய பந்தல்களில், மிகப் பிரம்மாண்டமான பிரதிமைகளைச் செய்து பூஜிப்பதும் வழக்கம். பத்தாம் நாள் நிறைவில் பெரும் ஊர்வலமாக, கணேச பிரதிமைகள் எடுத்துச் செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்படும். பத்து தினங்களுக்கு மேலாக, பிரதிமைகளை வீட்டில் வைப்பதில்லை.

இந்தியத் திருநாடே கொண்டாடாடி வழிபடும் விநாயக சதுர்த்தி தினத்தன்று, ஸ்ரீவிநாயகரை உளமார வழிபடுவோம். வேண்டும் வரங்களைப் பெறுவோம்.

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..