நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 17 டிசம்பர், 2012

MARGAZHI THINGAL....மார்கழித் திங்கள்

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்
வாசல் எங்கும் பூத்துக் குலுங்கும் வண்ணக் கோலங்களுடன் மார்கழி துவங்கி விட்டது. இன்று மார்கழி இரண்டாம் நாள்.

மானிடர்களின் ஒரு வருட காலம், தேவர்களுக்கு ஒரு நாள். அதில், மார்கழி மாதம், தேவர்களின் அதிகாலையாக, பிரம்ம முகூர்த்தமாகக் கருதப்படுகிறது. பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று அருளியிருக்கிறார்.

("ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: ||")

சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால், தனுர் மாதம் எனச் சிறப்பிக்கபடும் மார்கழி மாதத்தில், ஓசோன் மிக அதிக அளவில் அதிகாலையில்  பூமியில் பெறப்படுகிறது.  ஓசோன் வாயுவின் நன்மைகளை நாம் அடைவதற்காகவே, அக்காலத்தில், ஆண்கள், விடிகாலையில், தெருக்களில், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பாசுரங்களைப் பாடி, இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டுமென்றும், பெண்கள், அதிகாலையில் வீட்டு வாசல்களில் பெரிய கோலங்களிட வேண்டுமென்றும் வழக்கங்கள் ஏற்பட்டன.

இயல்பாகவே குளிர் மிகுந்த இக்கால கட்டத்தில், விடிகாலையில், வாசலில் பெரிய கோலங்களிட்டு, நடுவில், சாணத்தில் பூசணிப்பூவை வைத்து, பின், வீட்டு நிலை வாசல்படிகளில் விளக்குகள் ஏற்றுவது நம் சம்பிரதாயம். பனியை விரட்டுவதற்கும், இருள் பிரிய சற்று நேரமாவதால், தெருக்களில் நடமாடுவோருக்கு வெளிச்சம் தருவதற்காகவும் இதைச் செய்கிறோம். கார்த்திகை மாதம், மாலை வேளைகளில் வீட்டு நிலைப்படியில் விளக்கு ஏற்றுவதைப் போல், மார்கழி அதிகாலையில் செய்ய வேண்டும். கோலங்களின் நடுவில்  வைக்கப்படும் சாணத்தை உபயோகித்து, எருவராட்டிகளைத் தட்டி,  தைப் பொங்கல் திருநாளில்,பொங்கல் செய்யும் போது உபயோகப்படுத்துவார்கள்.

பீடு உடைய மாதங்களுள்(பீடை மாதம் அல்ல) ஒன்றான மார்கழி, இறைவழிபாட்டுக்கு மிக உகந்த மாதம். அதிகாலையில், பெரும்பாலான கோவில்கள் திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் தினந்தோறும் நடைபெறுகிறது.

நமது இந்து தர்மத்தின், முக்கிய விரத நாட்களான, வைகுண்ட ஏகாதசி, மற்றும் ஆருத்ரா தரிசனம் இரண்டும், இம்மாதத்தில் வருகிறது. எல்லா வைணவத் திருத்தலங்களிலும் பகல்பத்து, இராப்பத்து உற்சவங்கள் துவங்கி நடைபெறுகின்றன. திவ்யப்பிரபந்தப் பாசுரங்கள்  இசைக்கப்படுகின்றன.

சைவத்திருத்தலங்கள் தோறும், சிவபெருமானுக்கு அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள்    பக்தியுடன்  ஒலிக்கின்றன.

(மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த 'திருப்பள்ளியெழுச்சி'க்கு இங்கு சொடுக்கவும்.)

பொதுவாகவே, நாம் செய்யும் வழிபாடுகள், நமக்கு மட்டும் நன்மை தருவதில்லை. நம்மைச் சுற்றி இருக்கும் பிரபஞ்ச வெளி முழுவதும், நாம் பாராயணம் செய்யும் பாசுரங்களின் ஒலி அலைகள் பரவுவதால், 'நெகடிவ் எனர்ஜி ' எனப்படும் எதிர்மறை பாவனைகள் நீக்கப்பட்டு, பாஸிடிவ் எனர்ஜி பரவுகிறது. இது உலகத்துக்கே மகத்தான நன்மை அளிக்க வல்லது. அதனாலேயே, கூட்டுப் பிரார்த்தனைகளுக்கும், சத்சங்கங்களுக்கும், நம் இந்து தர்மத்தில், பிரதான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பலர் கூடும் இடமான கோவில்களில், இந்த நேர்மறை சக்திகள் மிக அபரிமிதமான அளவில் நம்மை அடையும். அதனால் தான், கோவில்களில் வழிபாடு செய்யும் போது, ஒருமைப்பட்ட மனத்துடன், இறைச்சிந்தனைகளில்  மட்டுமே ஈடுபடவேண்டும் என்ற விதி இருக்கிறது.

மார்கழி மாதத்தில், செய்யும் எந்த விதமான இறைவழிபாட்டுக்கும் மிக அதிகப் பலன் உண்டு. இதனாலேயே  கோவில்களில் இந்த மாதம் வழிபாடுகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

பாவை நோன்பு:
இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கொண்டாடப்பட்டு வந்த நோன்பு. கன்னிப் பெண்கள், நல்ல கணவனை அடைவதற்காகவும், மழை வளம் பெருக வேண்டியும் இந்த நோன்பு நோற்கப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள், பாவை நோன்பு நோற்றே, வைகுண்ட வாசனான எம்பெருமானைத் தன் மணாளனாக அடைந்தாள்.

இந்த நோன்பு நோற்கும் பெண்கள், அதிகாலையில், குளம், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீராடி, ஆற்று மணலில் அல்லது ஈர மணலில், ஒரு பெண்ணை (பாவை) போன்ற உருவம் செய்து, அதற்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள். சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள், பார்வதி தேவியாகவும், வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள், (காத்யாயினி) கௌரி தேவியாகவும் பாவையை வழிபாடு செய்வார்கள். நெய், பால் முதலியவை சேர்ந்த உணவை உண்ணமாட்டார்கள். மையிட்டு மலர்கள் சூட்டி அலங்காரம் செய்து கொள்ள மாட்டார்கள்.  மனதை நல்வழியில் செலுத்துவர்.
இவ்வாறு மார்கழி முப்பது நாளும் நோன்பிருந்து, வழிபாடு செய்வார்கள். நோன்பு நிறைவுற்ற பின், முன்போல் அலங்காரம் செய்து கொண்டு, நெய், பால் முதலியவை சேர்ந்த உணவுகளைச் சாப்பிடுவார்கள்.

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவையும், மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவையும், தலைவி,தன் தோழியரை ஒவ்வொருவாராக எழுப்பி, பாவை நோன்பு நோற்க அழைத்து, நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி வழிபாடு செய்வதாகவே அமைந்துள்ளது. பாவை நோன்பு நோற்கும் முறைகளும், நோற்பதால் அடையும் பலன்களும் அவற்றில் அற்புதமாக எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன.

பாவை நோன்பு பற்றிய குறிப்பு ஸ்ரீமத் பாகவதத்திலும் உள்ளது. ஸ்ரீமத் பாகவதத்தில் , ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷி பின்வருமாறு கூறுகிறார்.

"ஹேமந்த ருதுவின் துவக்க காலமான மார்கழி மாதத்தில், கோகுலத்துப் பெண்கள், ஹவிஸ்ஸை மட்டும் ஆகாரமாகக் கொண்டு, காத்யாயனி விரதத்தை அனுஷ்டித்தார்கள். அப்பெண்கள், அருணோதய காலத்தில் எழுந்து, யமுனை நீரில் நீராடி, யமுனைக் கரையில், மணலால் காத்யாயனி உருவத்தை அமைத்து, சந்தனத்தாலும், வாசனைப் புஷ்பங்களாலும் தூப தீபங்களாலும் அக்ஷதை மற்றும் சிறந்த நிவேதனங்களாலும், பூஜையைச் செய்தார்கள்.

'தேவி காத்யாயனி!, மஹாமாயே!, மஹா யோகினி!, அனைத்தையும் ஆளும் ஈஸ்வரியாகிய  உனக்கு நமஸ்காரம். நந்த கோபனின் குமாரனையே கணவனாக அருளுவாய்' (காத்யாயனி மஹாமாயே  மஹாயோகே மஹேஸ்வரீ, நந்தகோப சுதம்  தேவி பதிம் மே குருதே நம:) என்ற மந்திரத்தை ஜெபித்தவாறே அவர்கள் பூஜை செய்தார்கள்."

இந்த மந்திரத்தை திருமணமாகாதவர்கள் தினந்தோறும் இயன்ற தடவைகள் ஜெபிக்க, அம்பிகையின் அருளால் விரைவில் திருமணம் கைகூடும்.

மார்கழியில், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி  போன்ற திவ்யப் பாசுரங்களைப் பாராயணம் செய்வது மிக மிக நல்லது. இல்லங்களிலும், அதிகாலை மிக விரைவில் நீராடி, எட்டு மணிக்குள் பூஜை செய்வது குலதெய்வத்தின் அருளைப் பெற்றுத் தரும். விரிவாகப் பூஜை செய்ய இயலாவிட்டாலும், பூஜை அறையில், விளக்கேற்றி, தினம் ஒரு பாசுரத்தைப் பாடி வழிபாடு செய்து, இயன்ற நிவேதனம் செய்து வந்தாலே போதுமானது. இயன்றவர்கள், தினம் சர்க்கரைப்பொங்கல் அல்லது வெண்பொங்கல் நிவேதனம் செய்யலாம்.

மார்கழி மாத அதிகாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணம், சிவ சஹஸ்ரநாமப் பாராயணம் செய்வதை நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கத் துவங்கினால் அது நம்மைச் சுற்றி இருக்கும் சூழலையே மாற்றும் அற்புதத்தைச் செய்யும். சுத்தமான மனம் ஒன்றே இறைவன் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது. நாம பாராயணம், நாம சங்கீர்த்தனம் இரண்டும் நம் உள்ளும் புறமும் சுத்தம் செய்து, இறைவனிடம் நம்மை ஒன்றச் செய்யும் சக்தி படைத்தவை. மார்கழி மாதத்தில் இவ்வாறு பாராயணம் செய்யத் துவங்கினால், இறையருளால், தொடர்ந்து பாராயணம் செய்யும் வழக்கத்தை நாம் பின்பற்ற முடியும்.
சம்பாசஷ்டி:
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி 'சம்பாசஷ்டி' (சம்ஹார சஷ்டி) என்று சிறப்பிக்கப்படுகிறது. சஷ்டி திதி முருகப்பெருமானுக்கு உகந்த தினம் என்றாலும், சம்பாசஷ்டி விசேஷமாகப் பைரவருக்கு உகந்த தினமாக சிறப்பிக்கப்படுகிறது. இதன் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை பின்வருமாறு.....

மல்லாசுரன், பத்மாசுரன் என்னும் இரு அசுரர்கள் உயிரினங்களை மிகுந்த துன்பத்துக்கு உள்ளாக்கினர். மக்கள் படும் துயர் தாளாத மலைமகள், சிவனாரிடம் முறையிட, அவர் தம் நெற்றிக் கண்ணில் இருந்து பைரவரை அவதரிக்கச் செய்தார். பைரவர், அவ்விரு அசுரர்களையும் சம்ஹரித்த நாளே சம்பாசஷ்டி. இவ்வருடம் சம்பாசஷ்டி நாளை(டிசம்பர் 18) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பைரவருக்கு, வடைமாலை, முந்திரி மாலை, ஏலக்காய் மாலை முதலியவை சாற்றி, மிளகு தீபம், பூசணி தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு. ஒரு மஞ்சள் துணியில், ஐந்து, ஏழு என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மிளகுகளை வைத்து முடிச்சிட்டு, அதைத் திரியாக்கி, நல்லெண்ணை அல்லது இலுப்ப எண்ணை விட்டு, அகல் விளக்கு ஏற்றுவதே மிளகு தீபம்.  வெண்பூசணியை இரண்டாக வெட்டி, நடுவில் இருக்கும் விதையை நீக்கி விட்டு, ஒரு சிறு குழி போலச் செய்து, அதில் நல்லெண்ணை அல்லது இலுப்பை எண்ணையை ஊற்றி, திரியிட்டு தீபம் ஏற்றுவது பூசணி தீபம்.

இவ்வாறு வழிபாடு செய்வதால், தீராத நோய் நீங்குதல், கடன், எதிரிகள், ஏவல், சூனியம் முதலியவை நீங்குதல் ஆகியவை கிட்டும். பால் பாயசம் செய்து நிவேதனம் செய்ய குழந்தை பாக்கியம் உண்டாகும்.


வழிபாடுகளுக்கு உகந்த மாதமான மார்கழியில், இறைவழிபாட்டினை முறையாகச் செய்து, இறையருளால்,

வெற்றி பெறுவோம்!!!!

2 கருத்துகள்:

  1. மார்கழி திங்கள் அல்லவா என
    மாதத்தின் முதல் நாளே எதிர்பார்த்தோம்

    திருப்பள்ளி எழுச்சியினை நாம்
    திகைக்கும் படி பாரதியும் பாடிஉள்ளார் (பாரதமாதாவிற்கு)

    கிருத்துமசுவை தொடர்ந்து வரும்
    ஏகாதசியின் சிறப்பு பதிவினை எதிர்நோக்கி

    பதிலளிநீக்கு
  2. /////
    அய்யர் said...
    மார்கழி திங்கள் அல்லவா என
    மாதத்தின் முதல் நாளே எதிர்பார்த்தோம்//////

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் என் மேலான நன்றிகள். இணையக் கோளாறால் தாமதமாகிவிட்டது. மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..